பக்கங்கள்

Tuesday, August 18, 2015

கடற்கரை – அன்றும் இன்றும்



                                                              
கோடை விடுமுறையில் வெளியூருக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேர்ந்து விட்டதில் என் மனைவி பாரதிக்கு வருத்தம் கலந்த கோபம். நான் என்ன செய்வது? அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை; விடுமுறை கிடைத்தவுடன் ரெயிலில் டிக்கட் கிடைக்கவில்லை! எல்.கே.ஜி. அட்மிஷன் கிடைப்பது, மெடிக்கல் காலேஜ் சீட் கிடைப்பது – இவற்றைப்போல் ரெயில் டிக்கெட் கிடைப்பது அதிகக் கடினமாயிற்றே!

வெளியூர் என்று நாங்கள் போக விரும்பிய ஊரை வெளியூராகவும் கருதமுடியாது. நானும் என் மனைவியிம் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்பின் பார்த்திராத இருவரும் கல்லூரிப் படிப்பிற்காக சென்னைக்கு வந்து, எப்படியோ அறிமுகமாகி, ஒருவரை ஒருவர் விரும்பி, அவள் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்து, இப்போது என் வேலையினால் சென்னையிலேயே தங்கிவிட்டவர்கள்.

ஆகையினால் எங்களின் வருடாந்திர சுற்றுலா என்பது எங்களின் பூர்வீக ஊருக்குப் போவதுதான்! திருச்சிக்கு சென்றதும் நான் என் வீட்டிலேயும், பாரதி அவள் வீட்டிலேயும் தங்கி விடுவோம். குழந்தைகளோ - (வருணா 8 வயது, தருண் 4 வயது) – இருதரப்பு தாத்தா பாட்டிகளின் ஆசைக்கேற்ப கால்பந்தைப் போல் உதைபட்டுக்கொண்டிருப்பர்.

இந்த வருடம் கால்பந்தாட்டம் நடைபெறாமல் போனதில் பெரியோர்களுக்கு வருத்தம். எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியே! ஏதோ, எங்களின் பூர்வீகம் கொடைக்கானலாகவோ, ஊட்டி மலைக்கிராமங்களாகவோ இருந்திருந்தால் நன்றாகவிருக்கும். திருச்சி வெயிலில் வறுக்கப்படுவதற்கும், சென்னை புழுக்கத்தில் வதங்கப்படுவதற்குமிடையே என்ன பெரிய வித்தியாசம்?

சில நாட்கள் எப்படியோ ஓடிவிட்டாலும், கோடை விடுமுறைக்கு எங்கும் போகவில்லையா?’ என்கின்ற அக்கறை மிகுந்த அக்கம்பக்க விசாரிப்புகளால் மனமுடைந்த பாரதி என்னிடம் சண்டையிடலானாள்.

“என்னங்க? இப்படியே வீட்டுல கிடக்குறதுக்கா விடுமுறை கொடுத்தாங்க? என்னால வெளிய தலை காட்ட முடியல. அவமானமா இருக்கு. நாம எங்கேயாவது போயே ஆகணும்!”

“எங்க போவது? அதான் யோசிட்டுப் பாத்துட்டோம்ல. அது மட்டுமில்லாம, அடிக்கிற வெயிலுக்கு ஏசியில படுத்துக் கிடப்பது சுகமா இருக்கு.”

“அது சரி. உங்கள கேட்டா குட்டையில கிடக்கிற எருமை மாடு கூட சந்தோஷமா இருக்குன்னு சொல்லுவீங்க!”

“இல்லைன்னு சொல்றீயா? என் காலேஜ் காலத்துல, இதோ இங்கிருந்து கொஞ்ச தூரத்திலேயே பாசி பிடிச்ச குட்டை இருந்தது. வெயில் நேரத்துல எருமை மாடுகள் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்துக்கிட்டே போவேன். அதுவும் அதுங்க தலைய மட்டும் வெளியே நீட்டிக்கிட்டு, அப்படியே சொக்கிப் போய்....”

“ஐயோ நிறுத்துங்க. எருமை மாடு கதையைப் பேசிக்கிட்டு... விட்டா ஸ்கூல் டைம்ல பாத்த பன்றிகளைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவீங்க! எருமையும், பன்றியும் உங்க கண்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு நான் என்னிக்காவது தெரிஞ்சுருக்கேனா? (!!)”

இப்படித்தான், அவள் அறியாமல் சில சமயங்களில் பேசிவிடும் வார்த்தைகளைக் கேட்டுவிட்டால் சிரிப்பு பீரிட்டு வந்துவிடும். சிரித்துவிட்டாலோ கதை தீர்ந்தது. பத்து ஈசல் பூச்சிகளை உயிருடன் வாயினுள் அடக்கி வைத்துக்கொண்டு, ஒன்றுமே நடவாது இருப்பதைப் போல் நடிக்க வேண்டும்.

“சண்டை வேண்டாம். எங்கே போகலாம்னு நீயே சொல்லு.”

பாரதியின் முகத்தில் உற்சாகம் வந்துவிட்டது. “தூரமா போக முடியாது. ரெண்டு, மூணு நாளைக்குப் போற மாதிரி எங்கேயாவது போகலாமா?”

“இரண்டு நாட்களுக்கு எங்கே போவது? ம்... பேசாம, இங்கேயே ஏதாவதொரு தீம் பார்க்குக்கு போகலாமா?”

“தீம் பார்க்கா? ஐயாவுக்கு மனசுல என்ன நினைப்பு? அங்கே போனா ஆகுற செலவுக்கு வெளிநாட்டுக்கே போயிட்டு வந்துடலாம்.”

அவள் நகைச்சுவைக்கு சிரிப்பதுபோல் ஏதோ செய்தேன்.

“இல்லைன்னா, ரெண்டு நாளைக்கு சினிமா, வெளியில சாப்பாடு... மறுபடியும் சினிமா... இப்படியே பொழுதைக் கழிப்போமா?”

“பணத்தை வீணடிக்காம நல்ல யோசனையா சொல்ல மாட்டீங்களா?”

எங்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் தருண் குறுக்கிட்டான்.

“அப்பா, பீச்சுக்குப் போகலாம்.”

எனக்குப் பிடித்திருந்தது. ”சூப்பர். இது நல்ல யோசனை. எல்லோரும் கிளம்பி பீச்சுக்குப் போகலாம்.”

மனைவியிடமிருந்து நான் எதிர்பார்த்த எதிர்ப்பு வராமலிருந்தது ஆச்சரியமாகவிருந்தது.

“ஆமாம். பீச்சுக்காவது போகலாம். அதுமட்டுமில்லாம...” அவளின் பார்வையை மெல்லிய அன்புடன் என்மேல் பரவவிட்டு, குழந்தைகளுக்குக் கேட்காத தணிந்த குரலில், “அந்தக் காலத்துல நீங்க என் கிட்ட பேசின அன்பான காதல் வார்த்தைகளை மறுபடியும் கேட்கணும் போலிருக்கு!”

என் நுண்ணறிவு அப்போதே எச்சரித்திருக்கவேண்டும். அதுவும் பழங்கால காதல் நாட்களில் மூழ்கிவிட்டது போலும்; அபாய மணியை அடிக்கத் தவறிவிட்டது.

பிள்ளைகளைத் தயார் செய்து, மின்விளக்குகளும் மின்விசிறிகளும் அணைக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்து, சமையல் எரிவாயு வால்வை மூடிவிட்டோமா என களேபரம் செய்து... ஒருவழியாக வீட்டின் கதவைப் பூட்டினேன். பூட்டை மூன்று முறை இழுத்துப் பார்த்தேன். அப்போதிலிருந்தே தொடங்கியது வினை;

“போதும், எவ்வளவு தடவை இழுத்துப் பாப்பீங்க?”

இரும்மா, நல்லா பாத்துக்குறேன்.விலையுயர்ந்த பூட்டு. 1500 ரூபாய் இருக்கும்.”

“அதுவும் சரிதான்... உள்ளே இருக்குற பொருட்களை விட இந்தப் பூட்டுதான் விலை ஜாஸ்தின்னு நினைக்குறேன். இன்னும் பத்து முறை இழுத்துப் பாருங்க...”

சரி, சரி வா...” எனக் கூறிக்கொண்டே அவர்களை அழைத்துச் சென்றேன். நான்கு பேர் என்பதால் மோட்டார் சைக்கிள் எடுக்க முடியாது. பீச்சுக்குப் போக இரு பேருந்துகள் மாறவேண்டும். குஷியில் குழந்தைகள் மறுப்பு ஏதும் சொல்லவில்லை.

கடற்கரையை அடந்தோம். மாலை நேரத்துக் கதிரவன் ஒளிக்கதிர்களால் அப்பிரம்மாண்டமான பிரதேசத்தை பிரகாசிக்கச் செய்தான். கடற் காற்று தழுவியதால் வெப்பம் கடுமையாகத் தோன்றவில்லை.

கடலுக்கு அருகில் செல்லாமல், மணலிலே உட்கார்ந்துகொண்டோம். குழந்தைகளை விளையாடச் சொல்லிவிட்டு, அன்பு ததும்பும் பார்வையுடன் என்னை கவனித்துக்கொண்டிருந்தாள் என் மனைவி.

“என்னம்மா? பார்வையெல்லாம் பலமாயிருக்கு?”

“சும்மாதான்... அந்தக் காலத்தை நினைச்சுப் பார்த்தேன். நாம காதலிக்கும்போது அடிக்கடி கடற்கரைக்கு வருவோமில்ல?”

“ஆமாம். கழுத கெட்டா குட்டிச்சுவரு. நாம வேற எங்க போகமுடியும்?”

முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, கண்களை அகல விரித்தபடியே கேட்டாள்.

“அப்போதெல்லாம் என்கிட்ட எவ்வளவு அன்பா பேசுவீங்க! என்னைப் பத்தி கவிதையெல்லாம் எழுதுனீங்க. ஞாபகமிருக்கா?”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “சீ... அதையெல்லாம் ஞாபகப்படுத்தாதே! உன்னை வெச்சு கவிதை எழுதுனதை நினைச்சா வெக்கமா இருக்கு!”

“அப்படின்னா? என்னைப் பத்தி கவிதை எழுதுனது உங்களுக்கு வெக்கக்கேடா?”

“சே, சே... அப்படியில்லை. என்ன சொல்ல வரேன்னா... ஹேய், அங்கே பையனைப் பாரு.”

“மழுப்புற வேலையே வேணாம். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.”

கிடைத்த இடைவெளியில் பதிலைப் பிடித்துவிட்டேன்.

“என் கவிதைகளை நினைச்சா வெக்கமா இருக்குன்னு சொன்னேன். ஒரு நல்ல கவிஞன் உன்னைப் பாத்திருந்தான்னா, அற்புதமான கவிதைகள் தமிழுக்குக் கிடைச்சிருக்கும்.”

ம்கூம்... சமாளிக்காதீங்க. எங்க, இப்ப என்னைப் பத்தி ஒரு கவிதை சொல்லுங்க.”

என்னம்மா, கல்யாணம் நடந்து இவ்வளவு வருஷமாச்சு. இப்ப போய் கவிதை சொல்லுன்னா...”

சிவக்கத் தொடங்கிய அவள் முகத்தைப் பார்த்ததும்,

“இரு... இரு... யோசிக்கிறேன்...ம்...”

அவளை உற்றுப் பார்த்தேன். கடற்காற்றில் கலைந்த முடிகளை ஒரு கையால் ஒதுக்கி சரி செய்தவள், அழகாகத்தான் இருந்தாள்.

“தோணிடுச்சு... இதோ”

       இதயத்தின் இனிய இசையே
   
        காற்றில் அலையும்
   
        உன் முடிகளின்
   
        அசைவும்
   
        ஏழு ஸ்வரங்களில்தான் இசைக்கின்றன!


“எப்படியிருக்கு?”

வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டவள், கைவிரலால் மணலைக் கிளறி, சிறு கல்லை எடுத்து என் மீது செல்லமாக வீசினாள்.

“நல்லாயிருக்கு” என்று மட்டும் சொன்னாள்.

அப்பாடா, தப்பித்தேன்.

மாலை நேரச் சூரியன் பாரதியின் பொன்னிறத்தை மேலும் மிளிரச் செய்தான்.

“அப்போதெல்லாம் என் பின்னாடியே அலைவீங்க, ஞாபகமிருக்கா? ஒரே ஒரு பார்வைக்காகக் காத்துக் கிடப்பீங்களே! ஒரு நாள் உங்களைப் பாத்து சிரிச்சுட்டேன்னதுக்காகவே என்ன ஆட்டம் போட்டீங்க! எல்லாம் சரின்னு சொல்ற வரைக்கும்தான். அப்புறம் ஐயாவுக்காக நான்தான் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.”

“பாரதி, சும்மா சொல்லாதே. என்னிக்காவது ஒரு நாள் நான் லேட்டா வந்திருப்பேனா?”

கடலின் திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள். நான் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.
“எவ்வளவு காலம் ஓடிப்போச்சு. உங்கள நம்பி, காதலிச்சு, அலஞ்சு திரிஞ்சு, வீட்டில சண்டை போட்டு, கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சு... கனவு மாதிரி இருக்கு.”

“நீ சொல்றதும் சரிதான். கல்யாணத்துக்குத்தான் கஷ்டப்பட்டுட்டோம். அதுவும் உங்கப்பாவை சம்மதிக்க வெக்குறதுக்குள்ள போதும்னு ஆயிடுச்சு.”

“என் அப்பாவைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க. உங்க வேலை அப்போ சரியில்லை. அதனாலதான் வேணாம்னு சொன்னாரு.”

“ஏம்மா? இப்பவும் நான் அதே வேலையிலதானே இருக்கேன்!”

“வந்து... நான் கஷ்டப்பட்டு எங்கப்பாவை சம்மதிக்க வெச்சேன். என் கல்யாணத்துக்கு என்னென்னவோ திட்டமெல்லாம் வெச்சிருந்தாரு.”

விரல்களால் மணலைக் கோலமிட்டாள்.

“உங்களத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னப்ப ரொம்பவே ஆடிப் போயிட்டார். சம்மதம் வாங்குறதுக்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். ஆனா, கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பிறகு அவர்தானே எல்லா வேலையையும் செஞ்சாரு. உங்க வீட்டிலே என்ன வேலை செஞ்சாங்க?”

“அதுவும் சரிதான். நிறைய வேலை பார்த்தார்.”

அவளுக்கு உற்சாகம் திடீரென்று பீரிட்டுக் கொண்டு வந்துவிட்டது.

“என்னங்க, என் அப்பாவுக்கு பரிசா ஏதாவது செய்யணுங்க.”

“செய்யலாம், செய்யலாம்.”

“சுரத்தே இல்லாம பேசறீங்க? கண்டிப்பா ஏதாவது செஞ்சே ஆகணும். என்ன செய்யலாம், சொல்லுங்க?”

“என்ன செய்யலாம்? பேசாம அவருக்கு ஒரு... ஓங்கி மண்டையில ஒரு கொட்டு வைக்கறேன், பாரு!”

அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றவள், “என்ன சொன்னீங்க?”

“பின்னே பாரு அந்த மடையனை... டேய், ஏண்டா அக்கா மேல கல்லை தூக்கி எறிஞ்சே?”

“அக்காதாம்பா முதல்ல மண்ணை வீசுச்சு...”

வருணா அவள் தரப்பு நியாயத்தை சொன்னாள். “ஏம்பா, அம்மா மட்டும் உன் மேல கல்லை தூக்கி போடல?”

“கடவுளே, இரண்டு பேரும் வாங்க இங்க...”

“மாட்டோம். நீங்க கூட்டிட்டு வர்றதே என்னிக்கோ ஒரு தடவை. விளையாடிட்டுத்தான் வருவோம்.”

இரைய முயன்ற என்னை பாரதி தடுத்தாள். “விளையாடட்டும் விடுங்க. நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருப்போம்.”

“இன்னும் என்னம்மா இருக்கு பேச?”
பெண்களுக்கே உரித்தான, மூக்கை விடைத்துக்கொண்டு நோக்கும் பார்வையுடன், பொய்க் கோபத்தில் சிணுங்கினாள். “அப்போல்லாம் போகணும்னு சொன்னா, கையைப் பிடிச்சி, இழுத்து வெச்சி, கெஞ்சாத குறையா பேசுவீங்க. இப்போ என்ன?”

கொஞ்சிப் பேசித்தான் வழிக்கு கொண்டு வரவேண்டுமென்பது தெளிவானதால் நான், “என் கண்ணே, காதலிக்கும்பொழுது விட்டுப் பிரிவதற்கு யாருக்குதான் மனசு வரும்? நீ கிளம்பிப் போயிட்டபிறகு நான் என்ன சுவரு கிட்டயா பேச முடியும்? இப்போதான் நமக்கு கல்யாணமாயிடுச்சே! நான் எப்போ வேணுமின்னாலும் சுவர் கிட்ட பேச முடியும்! சீ... உளறுகிறேன் பாரு. நீ இப்போ என்கூடவே இருக்குறதுனால நான் எப்போ வேணும்னாலும் பேசலாம்; அதாவது நீ பேசிக்கிட்டிருக்காத நேரத்தில.... என்ன சொல்ல வர்றன்னா... சுண்டல் சாப்பிடுவோமா?”

என்னை கூர்ந்த பார்வையால் மேய்ந்தாள். “சரி”

தூரத்தில் சென்று கொண்டிருந்த சுண்டல் விற்கும் பையனை கைதட்டி அழைத்தேன். “சுண்டல், இங்க வா...”

எங்கள் குழந்தைகளும் ஓடிவந்துவிட்டனர்.

“அப்பா, எனக்கு முறுக்கு வேணும்.”

“முறுக்கெல்லாம் வேணாம்டா. எண்ணெய் பலகாரம்.”

மகன் அடம் பிடித்தான். “இல்ல, முறுக்குதான் வேணும். பாட்டி அனுப்பிச்ச முறுக்கெல்லாம் கடிக்கவே முடியலே.”

சுண்டல் பையன் குறுக்கிட்டான். “சார், எங்க முறுக்கு அப்படியிருக்காது. சும்மா, வெண்ணெய் மாதிரி கரையும். பக்குவமா சுட்ட முறுக்கு, சார்.”

என் இதயத் துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. பின்னே! பாட்டி என்று தருண் குறிப்பிட்டது என் மாமியாரை! பாரதியைப் பொருத்தமட்டில் அவள் அம்மாவின் சமையல் திருச்சியிலேயே பெயர் பெற்றது. அதனால்தானோ என்னவோ, திண்பண்டங்கள் திருச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிக்கடி சென்னைக்கு அனுப்பப்பட்டுவிடும்.

தலையைத் திருப்பி பாரதியைப் பார்க்க எனக்கு சற்றும் துணிவில்லை. சமாளித்தேன். “சரி, சரி. ரொம்ப பேசாதே. இரண்டு முறுக்கும், நாலு சுண்டலும் கொடு.”

பணத்தைக் கொடுத்துவிட்டு, ஒன்றுமே தெரியாதவன் போல் பாரதியைப் பார்த்து புன்னகைத்து சுண்டல் பொட்டலத்தை நீட்டினேன். என் கண்களைப் பார்த்துக்கொண்டே அவள், “ஏன்? நீங்க முறுக்கு வாங்கிக்கல?”

நானா வலையில் வீழ்வேன்!

“இதெல்லாம் சாப்பிட்டா வயிறு என்ன ஆகுறது? வீட்டுக்குப் போய் சாப்பிடுவேன். இந்தா சுண்டல்... எடுத்துக்க.”

இன்பச்சுற்றுலா அவளுக்கு அலுப்பையும், எரிச்சலையும் தரத் தொடங்கிவிட்டதை உணர்ந்தேன்.

“ம்... இப்பவும் சுண்டல்தானா? காதலிச்ச காலத்தில இருந்து இப்போ வரை நீங்க மாறவில்லை.”

“காதலுக்கு அழகே கடற்கரையும், சுண்டலுந்தாம்மா. இந்தக் காலத்துலேயும் பாரு. காஃபி ஷாப்புக்கும், ஷாப்பிங் மாலுக்குமா அலையுறாங்க. அங்கே என்ன இருக்கு? வெறும் தண்டச் செலவுதானே! அதுலேயா அன்பு வளரும்? முகத்தைப் பார்த்து பேசறது கூடக் கிடையாது. நல்ல வேளை. நாமெல்லாம் அப்போவே காதலிச்சுட்டோம்! நம்ம மொத்தக் காதல் செலவும் இன்னைக்கு ஒருமுறை காஃபி ஷாப்புக்கு போகுறதை விட குறைவாத்தான் இருக்கும்.”

நடக்காத ஒன்றை, அது நடந்தால் எப்படியிருக்கும் என்கின்ற கற்பனை ஆராய்ச்சியில் இறங்கி, அவ்வாராய்ச்சி முடிவுகளை வைத்து குத்துச் சண்டை போடுவதில் என் மனைவிக்கு நிகர் அவள்தான்!

“ஓஹோ, அப்படின்னா இந்தக் காலத்துல நாம காதலிச்சிருந்தா, நீங்க என்னை எங்க கூட்டிட்டுப் போயிருப்பீங்க?”

“ஏன்? இதே பீச்சுக்குதான்.”

“அப்புறமென்ன அந்தக் காலத்துலேயே லவ் பண்ணிட்டோம்னு ஒரு பெருமை?”

மூக்கில் விழுந்த இந்த நேர் குத்தில் நான் நிலை குலைந்துவிட்டேன். சீக்கிரமாக இடத்தைக் காலி செய்யவேண்டும். இல்லையெனில் தேர்ந்த குத்துச் சண்டை வீரனின் இடது, வலது குத்துக்களைப் போன்று, காலச்சக்கிரம் முன்னும், பின்னும் சுழன்று என்னை நாக் அவுட் செய்துவிடும்!

“நேரமாகுதம்மா.... குளிருது பார்”, கால்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியபடியே எழுந்தேன். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கூப்பிட்டேன்.

“வாடா போகலாம். ரொம்ப நேரமாச்சு.”

“அப்பா, எனக்கு அந்தக் காத்தாடி வேணும்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். காத்தாடி பீச்சுக் காத்துலதான் பறக்கும். வீட்டுல எல்லாம் பறக்காது.”

உதடுகளைச் சுழித்தபடியே அழுவதற்கு மகன் தயாரானான்.

“அழாதேடா. சாப்பிட ஏதாவது வாங்கித் தரேன்.”

“எனக்கு மக்காச்சோளம் வேணும்.”

“வாங்கித் தரேன், வா. போவோமா?”

காற்றில் படபடத்த புடவைத் தலைப்பை ஒரு கையால் பற்றி, இரு கைகளையும் சேர்த்துக்கட்டி என்னை முறைத்தாள். “அப்போ? அவ்வளவுதானா உங்க சுற்றுலா’? ஒரு சுண்டலும், மக்காச்சோளமும்?”

எனக்கு விளங்கவில்லை. “வேறென்னம்மா எதிர்பார்த்தே?”

“ஆமாம். எதிர்பார்த்ததுதான் தப்பு. இத்தனை நாள் கழிச்சு, நாம பழகின, தினமும் சந்திச்சிக்கிட்டிருந்த இடத்துக்கு வந்திருக்கோம். அன்பா, முன்ன மாதிரி, நாலு வார்த்தைகள் பேசுவீங்கன்னு நினைச்சது தப்புதான்!”

வாக்கியத்தின் அர்த்தம் பிடிபடாமல் குழந்தைகள் நின்றிருந்தனர். சற்று தூரத்தில் தெரிந்த சோளக்கடைக்கு இருவரையும் துரத்தினேன். பின்னாலேயே நானும் பாரதியும் மெதுவாக நடந்தோம்.

“பாரதி, ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கோம். கூட குழந்தைங்க வேற.... அதனாலதான்! அடுத்த முறை வரும்போது பாரு என் திறமையை! முழுநேரமும் காதல் வசனம்தான். எனக்கா வரலேன்னா கூட ஏதாவது புத்தகத்தைப் படிச்சாவது மனப்பாடம் செஞ்சுட்டு வர்றேன்.”

நல்லவேளையாக என் வீர முழக்கத்தின் கடைசி வரியை அவள் கவனிக்கத் தவறிவிட்டாள்.

“சீக்கிரம் வாங்க... அதுங்களை கடைக்காரன் ஏமாத்திவிடப் போறான். நமக்குன்னு புதுசா சுட்டு வாங்கணும்.”

கடையை அடைந்தோம். பாரதி, “இந்தாப்பா, புதுசா சுட்டுக் கொடு... தீஞ்சுப் போகக் கூடாது... பசங்களுக்கு மசாலா போடாதே...”

அவளை மகிழ்விக்கவேண்டுமென்று பாராட்டுதல்களைத் தெளித்தேன். “வாவ்... உனக்கு எல்லாம் தெரியுதே!”

சோளத்தைப் பார்த்துக்கொண்டே, பெருமையுடன் சொல்லிக்கொண்டாள். “ஆமாம், என் அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க!”

“அவங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இதென்ன கேள்வி? அவங்கள ஏமாத்தவே முடியாது. அவங்க வாங்கும்போது கரெக்டா சொல்லி வாங்குவாங்க...”

“வாங்கும்போதா? எங்க திருச்சி பீச்சுலயா?”

குளிர்ந்த கடற்காற்று மூளையை மழுங்கச் செய்துவிட்டது போலும்! பெரிய தவறை செய்துவிட்டேன். சற்றே பயத்துடன் பாரதியை ஏறிட்டுப் பார்த்தேன். சோளம் சுடும் இடத்திலிருந்து வரும் தீக்கதிர்களுக்கும், அவள் பார்வையின் பொறிகளுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. மருண்டு விட்டேன்.

“ஹி.. ஹி.. சும்மா கிண்டலுக்கு..”

இந்தப் பேச்செல்லாம் அவள் காதுகளில் விழவேயில்லை. மகனை இழுத்துக்கொண்டு போனாள். “கூட்டிட்டு வந்துட்டார், பெரிய வெளிநாட்டு டூர்! ஒரு சுண்டலுக்கும், சோளத்துக்கும் வாயப் பொளந்து கிட்டா இங்க வந்தேன்... வாடா போகலாம்...”

கடைக்காரப் பையன் இந்தக் களேபரத்தை பார்த்துவிட்டு கேட்டான். “ஏன் சார் அம்மா கோவிச்சுக்கிட்டுப் போறாங்க? எந்த பீச்சுலேயும் எங்க கடை மாதிரி வராது.”

“திருச்சி பீச்சை விடவா?, என்று அப்பாவியாக என் மகள் வினவினாள்.

“திருச்சியா? அங்க எப்போ சார் பீச் போட்டாங்க?”

என்னால் முடியவில்லை. பணத்தைக் கொடுத்துவிட்டு, மகளைத் தூக்கிக் கொண்டு கோபத்துடன் நடந்து கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்றேன். (ஓடினேன்). சாலையை அடைந்து அவள் நிற்பதற்கும், நான் அவள் அருகில் போவதற்கும் சரியாகவிருந்தது.

வாயைத் திறக்கவே துணிவில்லாமல் நின்றவன், சில நொடித்துளிகள் கழிந்தவுடன், “ஆட்டோவில் போகலாமா?” என்றேன். குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க, “சரி, சரி” என்று சொன்னார்கள்.

“ஆட்டோ”, எனக் கூப்பிட்டேன். வந்து நின்ற ஆட்டோ ஓட்டுனர் ஞாயமான தொகையைவிட ஐம்பது ரூபாய் அதிகம் கேட்டாலும், பேரம் பேசும் மனநிலையில் யாருமே அங்கு இல்லாததால், மறுபேச்சு இன்றி ஏறி உட்கார்ந்தோம்.

சென்னை நகரின் வாகன நெரிசல்களையும், கடைமுகப்புகளின் அலங்கார விளக்குகளையும் பார்த்துக்கொண்டே சென்றபோது, வண்ணங்களின் மாறுதல்களுக்கேற்ப, மனதில் எண்ணங்கள் ஓடின. ஒரே இடத்திற்கு வெவ்வேறு காலகட்டங்களில் செல்லும்பொழுது எவ்வளவு வித்தியாசங்களை உணர முடிகிறது. காலம் வெறுமனே கடந்து போவதில்லை. சில நினைவுகளை மறந்தும், சில நினைவுகளை அழியாமல் வைத்தும் செல்கிறது. இனிமையான நினைவுகள் நிலைத்து நிற்பதில் என்ன தவறு? பாரதியைக் குறை சொல்ல முடியாது. அந்த பசும் காதல் நினைவுகள் என்றென்றும் அவள் மனதில் நிலைபெற்றுவிட்டன. அவளைப் பொறுத்தவரையில் அந்த நினைவுகளுக்கு வயதாவதில்லை. அந்த நினைவுகளை இளமையாக வைத்திருப்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். ஆமாம், காதல் காலத்திற்கு அப்பாற்பட்டது.

ஆனாலும் ஏன் மனதில் ஏதோ நிரடிற்று. இவ்வளவு தெளிவுடனும், ஆக்க பூர்வமான முடிவுகளுடனும் என்னுடைய நாட்கள் நிறைவு பெறுவதில்லை. இருந்தாலும் என் மனவோட்டம் நிற்கவில்லை.

என் மனது திறந்து வைத்த ஜன்னல் போலும்! உள்ளே நுழைந்த எண்ணங்கள் அங்கேயே தங்காமல் மற்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதற்காக வெளியேறிவிட்டன. ஆனால் பாரதியின் மனதிலோ, முன்பின் அறியாத ஒருவனிடம் அன்பு செலுத்தி, எதிர்காலத்தையே அவனிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வாய்ந்த, அந்த அருமையான எண்ணங்கள் உள்ளேயே தங்கி பூட்டிவிடப்பட்டன!

பூட்டு...! சற்றே தயக்கத்துடன் கால்சட்டைப் பையைத் தடவினேன். வீட்டு சாவியைக் காணவில்லை!!

ஐயோ! எங்கே விழுந்திருக்கும்? மணலில் உட்காரும்போதா? எழுந்த போதா? சுண்டலுக்குப் பணம் கொடுத்த போதா? அல்லது சோளக் கடையில் இளித்துக் கொண்டிருந்த போதா?

இதயத் துடிப்பு எகிறி, சென்னை மாநகரின் மிக உயரிய இடத்தில் ஏறி நின்று கொண்டிருந்தது. ஏதோ... காஃபி ஷாப்பிலும், ஷாப்பிங் மாலிலும் செலவு செய்து விட்டு, அதன்பின் பூட்டை உடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாலும் பரவாயில்லை. வெறும் சுண்டலையும், மக்காச் சோளத்தை கண்ணில் காட்டியும், அதை விட மோசமாக - பசுமையான ஞாபகங்களை சிதைத்து விட்டு, ஆயிரத்து ஐநூறு ரூபாய் பூட்டை உடைக்க வேண்டும் என்கின்ற உண்மையை சொல்லப்போனால்? என்ன நடக்கப்போகின்றதோ!

வீட்டை அடைவதற்கு எவ்வளவு தாமதமாகின்றதோ அவ்வளவு நல்லது என வேண்டிக்கொண்டேன்.




**********************************************************************
ரா. பாரத்ராம்.

Saturday, August 8, 2015

நிலத்தில் தொலைந்த வாழ்க்கை

                   

“ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவன் செயல்களைப் பார்த்தாலே போதும். ஏனெனில், செயல்கள் கருத்துக்களிலிருந்து உருவாகின்றன. கருத்துக்கள் எண்ணங்களிலிருந்து உருவாகின்றன. எண்ணங்களின் தொகுப்பே மனம். ஆகவே, முன்பு குறிப்பிட்டதுபோல செயல்களைக் கண்டே ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முடியும்”

இம்மாதிரி அசட்டுத்தனமான கற்பனை ஆராய்ச்சிகளில், சென்னையின் ஏப்ரல், மே மாத இரவுப்புழுக்கத்தில் நான் ஈடுபடுவது வழக்கம். நான் என்கின்ற ‘செல்வகுமாரன்’, நல்ல படிப்பைப் படித்திருந்தாலும், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் - நான் படித்த பட்டப்படிப்புக்கு செய்த செலவை விட குறைந்த செலவிலேயே முடித்திருக்கக்கூடிய பட்டத்திற்கேற்ற வேலையைச் செய்து வருபவன்.

சென்னை மாநகரத்து மே மாத இரவுகள் பிரசித்தமானவை. அதுவும் என்னைப் போன்ற தகரக் கூரை வேயப்பட்ட சிறிய அறையில் வசிப்பவர்களுக்கு அந்த இரவுகளின் அருமை பெருமைகள் நன்கு விளங்கும். மின்சாரம் தடைப்பட்ட இரவுகளிலோ, கேட்கவே வேண்டாம்; மூளைக்கொதிப்பு சர்வ சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்று.

இத்தகைய பெருமை வாய்ந்த இரவு ஒன்றிலேதான் மேற்குறிப்பிட்டிருந்த ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தேன். சென்னைப் புழுக்கத்தின் சிறப்பு வாய்ந்த இரவுகளிலே, இப்படிப்பட்ட கருத்தாழமிக்க, அறிவு சார்ந்த எண்ணங்களில் ஆழ்த்திக் கொள்வதுதான் தூக்கத்தை வரவழைப்பதற்கான சிறந்த வழி.

“எண்ணங்களிலிருந்து கருத்துக்களும், கருத்துக்களிலிருந்து செயல்களும் வெளிப்படுவதால் – மனிதனின் செயலை மேம்போக்காகவல்ல, கூர்மையாகக் கவனிக்க வேண்டியது முக்கியம் – அதிலிருந்து அவன் குணநலன்களைத் தெரிந்து கொள்ளலாம்... நல்லவன் அல்லது கேட்டவன் என்பது அவனவன் செயல்களைப் பொறுத்துத்தானே தீர்மானிக்கப்படுகின்றன!

ஆனால், தனிப்பட்ட மனிதனின் கடமைகள் என்றிருக்கின்றனவே! அக்கடமைகளை அவன் செய்துதானே ஆகவேண்டும்! அப்படியென்றால், கடமைக்காகச் செய்யப்படும் செயல்களை வைத்து அவனின் உண்மை குணத்தை அறிய இயலுமா?

உதாரணத்துக்கு, விருப்பத்திற்கு மாறாக ஒரு கடமையைச் செய்ய நேர்ந்தால்? அல்லது, கடமையைச் செய்யாமல் இருந்தால்? அவனுள்ளுள் இருக்கும் உண்மையான எண்ணங்கள் என்னவாகத்தான் இருக்கும்?

தூக்கம் தெளியலானது. முரண்பட்ட கருத்துக்களால் என் மனம் அமைதியிழந்தது. இரு வேறு துருவங்களான கருத்துக்களும் தங்களுக்கு சாதகமான, நடந்த உண்மைச் சம்பவங்களை ஞாபகத்தில் கொணர்ந்து, தங்களின் வெற்றியை உறுதி செய்ய முற்பட்டன. நான் வாழ்வில் பார்த்த ஒரு மறக்கமுடியாத நிகழ்வு நினைவுக்கு வந்து மனப்போரைத் தற்காலிகமாக நிறுத்தச் செய்தது. உறக்கம் முற்றிலும் கலைந்துவிட்டது.

என் வாழ்வில் பார்த்த சம்பவத்தை, நடந்ததை நடந்தபடியே கூறுகிறேன். ஒரு மனிதரின் செயல்களை வைத்து அவரின் நல்ல அல்லது கெட்ட குணநலன்களை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:


எங்கள் ஊரின் பெயர் கிருஷ்ணாபுரம். சுமாரான மக்கள்தொகை. எங்கள் ஊரின் அருகே ஆறுகள் எதுவும் இல்லை. எக்காலத்திலோ இருந்த ஏரிகளும் கொஞ்சகொஞ்சமாக அழிந்துவிட்டன. நிலத்தடி நீரும் பூமியின் அடியாழத்திற்குச் சென்றுவிட்டது. அதனால் நிலங்கள் பொதுவாகத் தரிசாகவே கிடக்கும்.

ஆனால் கிருஷ்ணாபுரத்திற்கு வேறு சிறப்புகளிருந்தன. அந்த ஊரை ஒட்டி ஒரு இரசாயனத் தொழிற்சாலை இருக்கின்றது. சுற்று வட்டாரத்திலிருந்து கணிசமான மக்கள் அத்தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அடுத்ததாக, கிருஷ்ணாபுரம் பக்கத்து மாவட்டங்களை இணைக்கும் சாலைச் சந்திப்பிலிருந்தது. கிருஷ்ணாபுரத்தின் விவசாயச் சந்தை புகழ் மிக்கது. பிரதி வாரம் நடக்கும் சந்தையில் அடுத்திருந்த மாவட்ட ஊர்மக்கள் நிறைய பேர் ஒன்று கூடி தானியங்களையும், காய்கறிகளையும் விற்பனை செய்வர். சண்டைசச்சரவுகள் எப்போதாவது வந்துபோய்க்கொண்டிருந்தாலும், அச்சிறிய ஊரின் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு இருக்கும். யார் கொளுத்திப் போட்டது என்று தெரியவில்லை. புகையாக முதலில் இருந்தாலும் பின்பு எல்லோர் மனதையும் (சிலரின் வயிறுகளையும்) எரியச் செய்யும் செய்தி ஒன்று பரவத் தொடங்கியது. அதாவது, கிருஷ்ணாபுரத்தில் அரசாங்கம் ஒரு பெரிய காய்கறி அங்காடியை நிறுவ முடிவெடுத்துள்ளது என்பது. அரசல் புரசலாக இருந்த செய்தி, பின் ஊர் மக்கள் எல்லோரும் தலையில் அடித்து சத்தியம் செய்யும் அளவிற்கு உறுதியானது. சுற்றியிருந்த ஊர்களின் மக்களும் – கிருஷ்ணாபுரத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்று – தலையில் அடித்துக்கொண்டனர்.

உள்ளூரில் விளையும் காய்கறிகள், அக்கம்பக்க மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், பிற மாநிலங்களில் விளையும் விசேஷ ரகங்கள், ஏன், வெளிநாடுகளில் விளையும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளும் அந்தப் பெரிய காய்கறி அங்காடியில் குவிக்கப்படும் எனவும் செய்தி பரவியது.

கிருஷ்ணாபுரத்தில் எவனையாவது நிறுத்தி கடல் எந்தத் திசையில் இருக்கின்றது எனக் கேட்டுப் பாருங்கள்; பதில் தெரியாமல் விழிப்பான். ஆனால், இவர்களுக்கெல்லாம் வெளிநாட்டு பதப்படுத்தப்பட்ட காய்கறிகளைப் பற்றிய செய்தி பரப்பும் திறன் மட்டும் எங்கிருந்து வருகிறது என்பது புரியாத புதிர்.

காய்கறி அங்காடிக்கான இடத்தையும் அரசாங்கம் தேர்வு செய்துவிட்டதாகவும் நம்பப்பட்டது. இதுதான் அந்த இடம் என எல்லோரும் கைகாட்டிச் சொன்னது – ஊரின் எல்லையில், பிரதான சாலைக்கு சற்றே தள்ளியிருந்த பரந்த, பிரமாண்டமான புறம்போக்கு நிலம். அந்த நிலத்தின் எல்லைக்கு முன்பாக, அதாவது எட்டிப் பார்க்கும் தூரத்தில், ஏற்கனவே சில சிறிய கடைகள் இருந்தன. அந்த கடைகளின் வியாபாரம் பிரதான சாலையின் போக்குவரத்தை நம்பியிருந்தது. ஆனால் புறம்போக்கு நிலத்திற்கு அருகில் தனியார் நிலம் ஏதுமில்லை – ஒரே ஒரு இடத்தைத் தவிர; சுமார் பத்தாயிரம் சதுர அடி அளவான அந்த இடத்தின் உரிமையாளர் வைரவன்.

வைரவன் அந்த ஊரிலேயே பிறந்து, வளர்ந்து, கணக்காளராக பணி புரிந்து, ஒய்வு பெற்று வாழ்பவர். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒன்று மட்டும் சொன்னால் போதும்; முரட்டுத்தனமான பிடிவாதக்காரர். அதுவும் எப்படி? முயலுக்கல்ல - அவர் முடிவெடுத்துவிட்டால் யானைக்கும் மூன்று கால்கள்தான்! இறைவனின் திருவிளையாடலால் கிருஷ்ணாபுரத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த - விளைச்சலுக்கு சற்றும் பயனில்லாத – நிலத்தை, தந்தையின் உயிலின் மூலம் தன் பெயருக்கு கிடைக்கப் பெற்றவர். கிருஷ்ணாபுரத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் சொன்னதுபோல் – ‘வானத்தைப் பார்த்துக் கொண்டு சாலையில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் நடந்தவர், கல் தடுக்கி விழுந்து கண் முன்னே புதையல் மூட்டையை கண்டது போல!

இதோ, அக்காலத்தில் நடந்தவைகளெல்லாம் உங்கள் முன்:

தன்னுடைய ஓட்டு வீட்டினுள்ளிருந்து வெளிய கிளம்பிய வைரவன் வாசற்படியில் நின்று குலதெய்வத்தைக் கும்பிட்டுக் கொண்டார். “கடவுளே, இன்னிக்கு எல்லாம் நல்லபடி நடக்கணும்...” உள்ளே எட்டிப் பார்த்து, “ஏய், நான் போயிட்டு வரேன்.”

தெருவில் இறங்கி நடந்தவருக்கு முன்பாக பொன்னுசாமி வந்து கொண்டிருந்தார். “என்னப்பா வைரவா, முக்கியமான விஷயமா? “

“ஒண்ணுமில்லைண்ணே! என் நிலம் வரைக்கும் ஒரு நடை போயிட்டு வரலாம்னுதான்...”

“என்ன ஆளுய்யா நீ? நிலம் என்ன அங்கிருந்து ஒடியாப் போயிடப்போகுது? தினம் ஒரு முறை 
பார்த்துட்டு வரலேன்னா உனக்கு மட்டும் பொழுது சாயாதோ?”

வைரவன் எதுவும் காதில் விழாதது போல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர எந்தப் பதிலையும் கூறவில்லை. இது அவரின் பழக்கம். கேட்க விரும்பாத, பதில் சொல்ல விரும்பாத பேச்சுக்கள் நடக்கும்போதெல்லாம் தானாகவே முகம் திரும்பிவிடும். ஆனால், திமிர்த்தனமும், அலட்சியமும் முகபாவங்களில் தெரியாமல் பார்த்துக்கொள்வதில் திறமைசாலி!

ஆனால் பொன்னுசாமி இவரை நன்கு புரிந்தவர். ‘வேலையை பார்த்து போ’ என நினைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும் பேசவேண்டியது முக்கியமான விஷயமாயிற்றே! அதனால் சங்கடத்துடன், “சரி, உன் மகன் பேசுறானா உன்னோட? திருவிழாவுக்கு கூட வரல போலிருக்கே?”” என்றார்.

“அவன் அம்மாகிட்ட தினமும் போனில் பேசுறான். என்கிட்டே எப்போயாவதுதான் பேசுவான்.”

“இருக்கட்டும்..உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். நம்ம செங்குட்டுவன் தெரியுமில்ல.....அதாம்பா, என் தங்கை மகன். அவன் என்கிட்டே நேத்து பேசினான். அவனுக்குத் தெரிஞ்சவங்களாம், ரொம்ப நாணயமானவங்கன்னு சொல்றான். உன் நிலம் அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சாம். மத்தவங்க தருவதைவிட அதிக விலை தரோம்னு சொல்றாங்களாம். நீ என்ன சொல்றே? உன்கிட்ட பேசச் சொல்லவா?”

வைரவன் கடகடவென்று சிரித்தார். பின்பு நிமிர்ந்து நின்று கூறினார்.

“அண்ணே! நான் உங்ககிட்டே ஏற்கனவே சொல்லிட்டேன். என் நிலம் எக்காரணத்துக்காகவும் விற்பனைக்கில்லை. ஏதோ, பெரியவராச்சேன்னுதான் உங்களிடம் பொறுமையா பதில் சொல்றேன். வேறு யார் என்கிட்டே இப்படிப் பேசினாலும் என்னுடைய பதில்ல இவ்வளவு கண்ணியமிருக்காது!”

“ம்.. கேட்டது தப்புதாம்பா! நல்ல விலை உனக்கும் கிடைக்கட்டுமேன்னுதான் பேசினேன். இனிமே உன்கிட்ட நிலத்தைப் பத்தி வாயைத் திறக்க மாட்டேன். அப்புறம் பார்ப்போம்.”

வைரவன் மேலே நடந்தார். பொன்னுசாமி வைரவன் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். “டேய் கந்தா, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுடா.. என்ன வெயிலப்போ!”

செம்பில் தண்ணீருடன் வந்த கந்தப்பன், “என்ன சித்தப்பா, யாரிடமோ பேசிக்கிட்டு இருந்தமாதிரி தோணுது!”

“கிண்டல் பண்ணாதேடா! நானே நொந்து போயிருக்கேன். என்ன திமிரா பேசுறான்! வைரவனுக்கு இருக்குற பிடிவாதத்தைப் பாரு... நல்ல விலைக்கு வாங்க ஆள் இருக்குன்னு சொன்னா, அடிக்காத குறைதான்!”

“அவரைப் பற்றி தெரியாதா உங்களுக்கு? அந்த நிலத்தை என்னமோ மடியில கட்டிக்கிட்டு திரியிற மாதிரியில்ல பேசுவாரு. பூனை குட்டி போட்ட மாதிரி!”

“பொல்லாத நிலம்... ஒரு பைசாவுக்கு தேறாத நிலமா இருந்ததுடா...! சுத்தி சின்ன சின்னக் கடைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அரசாங்க அங்காடி வரப்போகுதுன்னு தகவல் பரவுவதற்கு முன்னாடி இதை வாங்க ஒரு இளிச்ச வாயன் கிடைச்சிருப்பானா?”

“அதெல்லாம் அப்போ! இன்னைக்கு மதிப்பு தானா வந்திடுச்சுல்ல. அங்கேயிருந்த நிலங்களைக் கொடுத்துட்டவன் எல்லாம் இப்போ தன்னைத்தானே கரிச்சுக் கொட்டிகிட்டுல்ல சாவறானுங்க! ஏன், என்னப்பனுக்கே சில வருஷங்களுக்கு முன்னாடி அங்கே நிலமிருந்ததே! சில நூறு ரூபாய்களுக்கில்ல வித்துட்டாரு. எல்லாம் விதிதான்...”

“அட போடா... பொல்லாத விதியைக் கண்டுட்ட... அவனுக்கு பணம் தேவைப்படல, அதனால விக்கல. இக்கட்டான சூழ்நிலையில நாம வித்துட்டோம். சந்தோஷப்படுடா... பிரதான சாலையில் இருக்கிற வேற சில நிலங்களை அரசாங்கம் எடுத்துக்கப்போதுன்னுதானே பேசிக்கிறாங்க. புறம்போக்கு நிலத்துக்கும், இவன் நிலத்துக்கும் நடுவுல ஓடுற சாக்கடை வழியால்தானேடா வைரவன் தப்பிச்சான். சாக்கடை வழியை மூடமுடியுமா? இதுக்கெல்லாம் விதிதான் காரணம்னா, அவனுக்கு ஆரம்பித்துலேயிருந்தே விதி துணை செஞ்சிருக்குதுன்னுதானே அர்த்தம்?”

கந்தப்பன் ஒன்றும் சொல்லவில்லை. ‘தலை தப்பியது’ என்று எண்ணி பெருமூச்சு விட்டுக்கொள்வதே அவனுக்கு நல்லதாகப் பட்டது.

இதற்குள் வீட்டினுள்ளிருந்து வெளிய வந்த, கந்தப்பனின் மனைவி சரசு எனப்படும் சரஸ்வதி, “வாங்க மாமா, நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். என்ன இருந்தாலும் உங்களையேவா அலட்சியப்படுத்தி பேசுவது?”

அவளுக்கே உரிய வம்பு இழுக்கும் உரத்த குரலில் தொடர்ந்தாள். “தனக்கு தலையில கொம்பு முளைச்சிட்டுதுன்னு நினைக்கிற மனுஷன்னா ஏன் உடம்பு சரியில்லாம வீட்டுல இருக்குற மருமகனை கொஞ்சமும் கவனிக்காம இருக்குறாரு?”

“என்னம்மா சொல்ற? பெருமாளுக்கு உடம்பு சரியில்லையா?”

“ஆமாம் மாமா... கேக்குறதுக்கு நாதியில்லாத ஒருத்தனைப் பிடிச்சு, கல்யாணம் செஞ்சு, வீட்டுலேயே வெச்சிகிட்டாரு. அதுக்காக? பெருமாளுக்கு ஏதோ வயித்து வலியாம்! நம்ம கமலம்மா சொன்னா... அவனை ஏறெடுத்தும் பாக்கிறதில்லையாம் இவரு!”

பொன்னுசாமி மலைப்புடன், “ஏற்கனவே மகனோட சண்டை..!. போனவன் போனவன்தான். இப்போ வீட்டிலேயே இருக்கும் மருமகனுடனுமா? ஒரே பொண்ணாச்சே! அநியாயமா இருக்கே! ஏனாம்?”

“யாருக்குத் தெரியும். அனாதைப் பயதானே! கேள்வி கேட்க யாருமில்லையே... என் சொந்தத்திலேயே ஒரு நல்ல இடம் இருந்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். முடியாதுன்னுட்டாரே!”

சரஸ்வதியின் கோபத்தின் நியாய தர்மங்கள் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இழந்தவர்களின் உரையாடல்கள் இவ்வாறிருக்க, இழக்காதவர் தன் நிலத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். வைரவனின் நிலத்தின் ஒரு மூலையில் சிறிய மரம் ஒன்றிருந்தது. மற்றபடி எல்லாம் கள்ளிச் செடிகள்தான்! அவர் மரத்தின் நிழலிலே ஒதுங்கி நின்று நிலத்தைப் பார்வையிடலானார்.

“என் அதிர்ஷ்டம்தான்! இப்படியொரு அருமையான இடத்தில் எனக்கு நிலம் இருக்கிறது என்பதை நினைத்தாலே பெருமகிழ்ச்சியாக உள்ளது. அருமை... அதுவும், அங்காடி செயல்படத் தொடங்கிவிட்டால் இந்த நிலத்தின் விலை, இல்லை... இல்லை... மதிப்பு, இரட்டிப்பாகிவிடும். அப்போது என் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். எப்படியும் சாலை விரிவாக்கமும் நடந்துவிடும். பின்னே... போக்குவரத்து அதிகமாகிவிடுமல்லவா! பிரதான சாலையும் வந்துவிடும். புதுக்கடைகள் முளைக்கும். பேருந்து இந்த வழியாகச் செல்லும். நிச்சயம்...! காய்கறி அங்காடிக்கு பேருந்து வசதி இல்லாமல் எப்படி? வந்துவிடும். ஒருக்கால், இங்கு வரப்போகும் பேருந்து நிறுத்தத்திற்கு என் பெயர்கூட வைக்கப்படலாம்... அதெப்படி? எதற்காக என் பெயர் வைக்கப்படவேண்டும்? ம்... வாய்ப்புள்ளது. என் கனவான, ஏதோ ஒரு தொழிலை இங்குத் தொடங்கி, பிரம்மாண்டமான கட்டிடத்தைக் கட்டி, உதாரணத்திற்கு ஒரு ஹோட்டல்... வைரவன் ஹோட்டல்! அப்போது பேருந்து நிறுத்தத்திற்கு அந்தப் பெயரே வைக்கப்படலாமே!”

அக்கொடும் வெயிலிலும் தென்றல் வீசுவதைப் போன்ற உணர்வுடன், சுகமான நினைவுகளுடன் நின்றிருந்தார்.

வைரவன் பேராசைக்காரரல்ல.. ஆனால், தனது வாழ்வில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் வருமென்பதை அவர் இந்த ஜென்மக் கனவுகளில் மட்டுமல்ல, முந்தைய ஜென்மக் கனவுகளிலும் கண்டிருக்கமாட்டார்.

உண்மை என்னவென்றால், பணம் சம்பாதிக்கும் திறமைகள் அவருக்கு வாழ்வில் என்றுமே இருந்ததில்லை. நல்லவனாக இருந்தால் மட்டுமே போதும்; புண்ணியங்கள் தேடி வந்துவிடும் என நம்பியிருந்தவர். நிலம் என்னும் வழியால் அதிர்ஷ்டம் வந்துவிட்டவுடன் தான் நினைத்திருந்த, நினைத்துக்கொண்டிருக்கும் எல்லாமே சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அசைக்க முடியாத பிடிவாத குணம் அவருடன் பின்னிப்பிணைந்துவிட்டது.

அவருடைய மனைவி காமாட்சி என்னதான் கருத்து வேறுபட்டாலும், கடைசியில் கணவன் பேச்சையே கேட்டு நடப்பவள் என்பது அவருக்கு கிடைத்த மற்றொரு கொடுப்பினை.

சற்று தூரத்திலிருக்கும் கடைக்காரன் குமரன் நடந்துவந்தான். “என்ன சார்? சௌக்கியமா?”

“இருக்கேன். வியாபாரம் எப்படிப் போகுது?”

“பரவாயில்ல சார். மார்கெட் வந்துடட்டும். அப்புறம் நல்லா போகும்கிற நம்பிக்கையில இருக்கேன்.:

“நிச்சயம் நல்லாத்தான் போகும். மொத்த ஏரியாவும் வளந்திடுமில்ல!”

“ஆமாம் சார். ஆனா, உங்களுக்கு கிடைச்ச மாதிரி கிடைக்குமா? தங்கம் சார்... சொக்கத் தங்கம்...”

வைரவன் பூரிப்பில் நின்றிருந்தார்.

“நிலத்த எவனாவது விலைக்கு கேட்டா கொடுத்துறாதீங்க, சார். இன்னைக்கு லட்சங்கள்... மார்க்கெட் வந்துடட்டும், அப்புறம் கோடிகள்... விக்கிறதா இருந்தா, பொறுத்திருங்க!”

உயிரிலும், நரம்புகளிலும் ஊறியிருந்த ஆசையை அடுத்தவன் வாயால் கேட்கும்போது யார்தான் முகத்தில் மலர்ச்சியைக் காட்டாமல் இருக்கமுடியும்? இளித்தார்.

“விக்கிற எண்ணமே இல்லை. என்னிக்கிருந்தாலும் நானே ஏதாவது செய்யுறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்.”

“அப்படியே... நீங்க நினைக்கறதுதான் சரி. காம்ப்ளெக்ஸ் ஏதாவது கட்டினா, எனக்கு ஒரு கடை ஒதுக்கிடணும். பெரிய ஆளுங்கல்லாம் வந்து கேப்பாங்க, அப்போ இந்த ஏழைய மறந்துரக் கூடாது.”

புன்னகையுடன் சொன்னார். “இதச் சொல்லணுமா? உனக்குத்தான் முதல்ல...”

ஏமாற்றித் திரிபவர்களின் வார்த்தைகளில் மறைந்துள்ள வஞ்சகங்களை கொஞ்சமும் புரிந்து கொள்ள இயலாத வைரவனுக்கு என்னவோ அந்நொடியே இங்கு ஒரு காம்ப்ளெக்ஸ் முளைத்துவிட்டதாகவும், அந்த ஊர் பெரிய மனிதர்களெல்லாம் வரிசையில் நின்று கடை கேட்டு மண்டாடுவதைப் போலவும் நினைப்பு.

இரண்டு மணி நேரங்களுக்கும் குறைவில்லாமல் அங்கேயே நின்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். தெருவில் நடக்கும்பொழுது கண்ணில் படும் மனிதர்களெல்லாம் தன்னைப் பற்றியே – அந்த நிலத்துக்கு உரிமையானவர் என்பதால் – பெருமையாகப் பேசிக் கொள்வதைப் போல் அவருக்குத் தோன்றியது.

வைரவனுக்கு மகனின் நினைவு வந்தது. “‘நிலத்திலேயே தொழில் செய்... என்ன தொழில் என்பதை முடிவு செய்துகொள்; சிறிது காலத்திற்கு வேண்டுமானால் எங்கேயாவது அத்தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுவிட்டுப் பின் இங்கேயே வந்து நமது நிலத்திலேயே தொடங்கு”’ என்றெல்லாம் வாதிட்டிருந்தார். அவனோ “சென்னைக்குத் தான் போவேன், பொறியாளனாகத்தான் (!!) பணி புரிவேன்” என எதிர் வாதம் புரிய, பெரிய சண்டை வெடித்து, இனி இங்கு வரவே மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு சென்றுவிட்டான்.

“உருப்படாதப் பய” மனதிற்குள் திட்டினார். “பொன் விளையிற பூமி. இத விட்டுட்டு... அதெல்லாம் தானே வழிக்கு வந்துவிடுவான்.” சிரிப்பு வந்தது. “வரட்டும், கடைசியில எப்படியும் இங்க வந்து சேருவானில்ல... அப்போ நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி நல்லா கேக்குறேன்.”

வைரவனின் மகளின் பெயர் லக்ஷ்மி. பார்ப்பதற்கு மீனாட்சி அம்மனைப் போன்ற தெய்வாம்சம் உடையவள். லக்ஷ்மி எனச் சொல்லிவிட்டு ‘மீனாட்சி அம்மனைப் போன்று’ என உவமானம் சொல்வதற்கு மன்னிக்கவும். வேறு வழியில்லை; அவள் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் என்றுமே கிட்டியதில்லை. அன்பு காட்டுவதும், தியாக உள்ளமும், துன்பங்களைப் பொறுமையுடன் – தன்னுடைய விதி என நினைத்துக்கொண்டு – தாங்கிச் செல்லும் குணங்களே போதும் என்று இறைவன் அவளைப் படைக்கையில் முடிவெடுத்துவிட்டார் போலும். பணம் என்னும் வாழ்வின் அதிமுக்கியமான ‘குணத்தை’ அவளுக்குக் கொடுக்கவில்லை.

மனதை அறுக்கும் சோகங்களைத் தாங்கிச் செல்ல அவள் பழகியிருந்தாள். இப்படிப்பட்ட பெண்கள் வெளிப்பார்வைக்கு சாதாரணமானவர்களாகவும், எவ்வித சிறப்பியல்புகள் இல்லாமலும் காணப்படுவர். அவர்களை உண்மையிலேயே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், துயரங்களின் சாயல்களைக் கண்களில் தேடவேண்டும். அவை தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அக்கண்களில் வெளிப்படும் கொடுந்துயரை உணரக்கூடிய திறன் பெற்ற எந்த மனிதனும் அக்கண்களைப் பார்த்தவுடன் எதற்காகவோ கூசிப் போவான்; வெட்கித் தலை குனிவான்.

அவருக்கு மருமகனைப் பற்றி நினைவு வந்தது. அவன் அவரது தோல்வி. நினைக்க கஷ்டமாகத்தான் உள்ளது; ஆனால் அவரைப் பொறுத்தவரை அவன் ஒரு தோல்விதான்.

மகன் பிரிந்து சென்றவுடன், தனக்கேற்ற மருமகனைத் தேர்ந்தெடுப்பதில் வைரவன் அதிக அக்கறை காட்டினார். உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாதவனாகவும், பெரிய படிப்பு, நல்ல வேலை என்பது போன்ற - ஆண்களுக்குத் தன்மானத்தை தூண்டக்கூடிய - விஷக் கிருமிகளால் பாதிக்கப்படாத ஒருவனைத் தேர்ந்தெடுத்தார்.

பெருமாள் வைரவனுக்கு மருமகனாவதற்காகவே பிறந்தவன். அனாதை ஆசிரமத்திலே வளர்ந்தவன். இரசாயனத் தொழிற்சாலையில் ஏதோ ஒரு வேலை செய்பவன். அது என்ன வேலை என்பது நினைவிலில்லை, ஆனால் அது மேலதிகாரர்களால் பந்தாடப்படுவதாகவும், கீழ் நிலைத் தொழிலாளர்களால் கிண்டலுக்கும், அலட்சியத்துக்கும் ஆளாகும் பொறுப்பு என்பது மட்டும் கிருஷ்ணாபுரத்திற்கே தெரியும்.

தனக்கு அடங்கிய மருமகனைத் தேர்ந்தெடுத்தற்கு காரணமே, அவன் எதிர்காலத்தில் அவருக்குச் சொந்தமான, பெருமை வாய்ந்த நிலத்தில் ஏதாவது தொழில் செய்வான் என்பதுதான். அரசாங்கமும், எல்லோரும் சொல்வது போல், அங்காடியைத் திறந்துவிட்டால் அங்கு என்ன வியாபாரம் செய்தாலும் பொன்னும், பொருளும், கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பதில் திண்ணமாகவிருந்தார். என்ன கடை, என்ன வியாபாரம்? அதெல்லாம் முக்கியமில்லை. அந்த இடம்... அதுதான் முக்கியம்! அங்கு என்ன செய்தாலும் ‘கூரை பிய்த்துக்கொள்ளும்’ என்பது உறுதி. பெற்ற பிள்ளைதான் புத்தியில்லாதவனாகிவிட்டானே! மருமகனாவது கனவை நிறைவேற்றுவான் என நினைத்திருந்தார்.

லக்ஷ்மிக்குத் திருமணம் நடந்து ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். வைரவனுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்படும் வகையில், அவருடைய மருமகனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. முதலில் சாதாரண வயிற்று வலியாகவும், எப்போதாவது வருவதாகவும் இருந்தது. 

மாதங்கள் கழிய, அடிக்கடி வலி வருவது வாடிக்கையாயிற்று. வைரவனுக்கு இவன் எப்படி தன் பிறவிக்கனவை நிறைவேற்றுவான் என்பதில் சந்தேகம் தோன்றி மனதை வருத்தியது.

வைரவன் தினமும் நிலத்திற்கு சென்று வந்துகொண்டிருந்தார். சில மாதங்கள் சென்றன. மாவட்ட அங்காடிக்கான முறையான, அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னமும் வரவில்லை. ஆனால், வைரவனின் நிலத்தின் மதிப்பு ஏறிக்கொண்டே போனது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நிலத் தரகர்கள் அந்தந்த நாளில் அவர்களுக்குத் தோன்றும் விலையைச் சொல்லி மதிப்பை ஏற்றிக்கொண்டிருந்தனர். வைரவனின் நம்பிக்கைக்கு உரியவனாகி விடவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். பாவம்... அவர்களுக்குத்தான் அவரை முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், விலையை சகட்டுமேனிக்கு இவர்கள் ஏற்ற, வைரவனின் விற்கக்கூடாது என்கின்ற வைராக்கியமும் ஏறிக்கொண்டே போனது.

அப்போது ஒரு துரதிர்ஷ்டமான நாளில், பெருமாளை அவனுடன் பணி புரியும் தொழிலாளர்கள் தூக்கிக் கொண்டு வந்தனர். வேலை செய்துகொண்டு இருந்தவன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டானாம்.

இப்பேற்பட்ட துன்பங்களை எந்நேரத்திலும் எதிர் நோக்கியிருந்தவள் போல லக்ஷ்மி ஒடி வந்தாள். கணவனைப் படுக்க உதவி செய்தவள், கைகளை உதறிக்கொண்டு சமையலறையினுள் ஓடினாள்; நாட்டுக் கஷாயம் தயார் செய்ய.

அன்றிலிருந்து பெருமாளால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது. லக்ஷ்மி என்னதான் மேலும், மேலும் சிரத்தையுடன் கணவனுக்குச் சேவை செய்தாலும் வயிற்று வலி குறைந்தபாடில்லை.

கிருஷ்ணாபுரத்தில் சிறிய அரசாங்க மருத்துவமனை இருந்தது. ஆனால், அதை மருத்துவமனை என அழைப்பதற்குப் பதிலாக மருத்துவமனையாக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது எனச் சொல்லுதலே பொருத்தம். லக்ஷ்மி கணவனை அங்கே சென்று காட்டி வந்தாள். நோயின் தீவிரம் முதலில் யாருக்கும் தெரியவில்லை. சாதாரண மருந்துகளால் குணப்படுத்தமுடியாது என்பதை உணர்ந்தவுடன், மருத்துவர் மாவட்டத் தலைநகர் மருத்துவமனைக்கு செல்வதே ஒரே வழி என அறிவுறுத்தினார்.

லக்ஷ்மி தந்தையிடம் இதை தெரிவித்தாள். “நீங்க துணைக்கு வாங்கப்பா” என அழைத்தாள்.

வைரவன் வேறு சிந்தனைகளில் மூழ்கியிருந்தார். இப்பொழுது நிலத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்வது அவருக்கு முக்கியமாயிற்று.

“நீயே போயிட்டு வா... கிட்ட தானே. தேவைன்னா அடுத்த முறை நான் வரேன்!”

துணைக்கு யாருமில்லை; அதற்காகச் சோர்ந்துவிடமுடியுமா? அடுத்த வீட்டு பெண்ணை துணைக்கு வரச் சொல்லி, கணவனை அழைத்துக்கொண்டு, அவள் இதுவரை சென்றிராத பெரிய ஊருக்குச் சென்றாள்.

மருத்துவர் அனுபவம் மிக்கவர். அவன் வயிற்றைத் தொட்டுப் பார்த்ததிலேயே நோயின் தீவிரத்தை உணர்ந்துவிட்டார். சில பரிசோதனைகளை உடனடியாக செய்வதற்கு எழுதிக் கொடுத்தாலும், பரிசோதனைகளின் முடிவுகள் எவ்வாறிருக்கும் என்பதைத் தெளிவாக தெரிந்திருந்தார்.

பரிசோதனைகளை முடித்துக்கொள்வதற்குள் மாலை வந்துவிட்டது. ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது. நல்ல வேளையாக, துணைக்கு வந்திருந்த அடுத்த வீட்டு அக்காவின் உறவினர் வீடு அருகிலேயே இருந்தது. அங்கேயே தங்கிக் கொண்டனர்.

அடுத்த நாள் அவர்கள் இருவராலும் விளங்கிக்கொள்ள முடியாத காகிதக் கத்தைகளுடன் மருத்துவரை சந்தித்தனர்.

“உங்க கூட யாரும் வரலீயா?” என்றார்.

“இல்லைங்க, ஐயா..”

“ம்.. இது கொஞ்சம் முத்திப் போயிருக்கே! ஏன் முதலிலேயே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வரவில்லை?”

என்ன பதில் சொல்வது, மௌனத்தையும், கண்ணீர்த் துளிகளையும் தவிர.

மருத்துவர் தொடர்ந்தார்.

“இதோ பாருங்க... உங்களுக்கு வயித்துல கட்டி உருவாயிருக்கு... (சில புரிந்து கொள்ள முடியாத, நினைவில் வைத்துக் கொள்ள முடியாத வார்த்தைகளைச் சொன்னார்) அதுவும் கவனிக்காம விட்டுட்டதினால கொஞ்சம் பெரிசாயிருச்சு. உடனடியாக அறுவை சிகிச்சை செஞ்சுக்குறது நல்லது. சொல்லப் போனா... அதுதான் ஒரே வழி. இங்க இருக்குற வசதியை விட சென்னை ஆஸ்பத்திரியில வசதி அதிகம். கொஞ்சமாவது சான்ஸ்… (தவறை உணர்ந்து சட்டென்று நிறுத்திக் கொண்டார்)”

லக்ஷ்மிக்கும், பெருமாளுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. லக்ஷ்மி மட்டும், “அங்க யாருமே தெரியாதே ஐயா” என்றாள்.”

“அப்படியா... இங்கேயே செஞ்சுக்கனும்னா ஒரே ஒரு தனியார் மருத்துவமனையில வசதி இருக்கு. ஆனா, அதுக்கு எப்படியும் மூணு லட்சத்துக்கு குறையாம செலவாகுமே. யார் கண்டா? கூட ரெண்டு, மூணு லட்சமும் தேவைப்படலாம்... நோயை வளர விட்டுட்டீங்களே! என்ன வேலையில இருக்கீங்க?”

“வேலைக்குப் போறத நிறுத்திட்டாருங்கய்யா...”

“அப்போ ஒரே வழி சென்னைக்குப் போறதுதான். உடனடியா கவனிக்கணும். இன்னைக்கே கிளம்பிப் போனீங்கனா கூட நல்லது... சொல்லிட்டேன்.”

இருவரும் வெளியே வந்து நின்றனர். லக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறந்தது முதல் கிருஷ்ணாபுரத்திலேயே வாழ்ந்தவள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் திருமணம் நடந்துவிட்டது. அதனால் படிப்பறிவும் அதிகமில்லை. (அதுதான் பணக்காரியாகப் போறீயே! உனக்கு எதுக்குப் படிப்பு – தந்தை சொன்னது!) சென்னையிலே அவர்களுக்குத் தெரிந்தவர் யாருமில்லை. குழப்பமும், பயமும் போட்டி போட்டு அவளை வாட்டி எடுத்தன. 

துணைக்கு வந்தவள்தான், “கவலைப்படாதே, லக்ஷ்மி... உன் அப்பா ஏதாவது செய்வார். ஒரு காபி குடி. காலையிலேயிருந்து ஒண்ணுமே சாப்பிடலையே! ஊருக்குப் போவோம் முதலில்” என்றாள்.

லக்ஷ்மிக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவள் தந்தைதான்.

லக்ஷ்மி சொன்ன விவரங்களை வைரவன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே கேட்டார். ஏற்கனவே அவர் மனதில் மாப்பிள்ளையின் மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது; தோல்வி பயம் வேறு. அவர் எரிச்சலுற்றார். தவறான முடிவெடுத்துவிட்டோமோ – அதாவது நிலத்தை வைத்து பிழைக்க முடியாதவனுக்கு லக்ஷ்மியைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டோமோ – என்பது மனதை காயப்படுத்தியது. பெருமாளின் ‘உடல் நிலை அறிக்கை’ அவரைத் துன்பத்துக்குள்ளாக்கியது. அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் தளர்ச்சியடைந்தன. மகனும் இல்லை, இப்போது மருமகனும் ‘உபயோகமில்லை’...

லக்ஷ்மி கண்ணீருடன் பேசியதைக் கேட்டு முடித்துவிட்டு, வைரவன் சொன்னார்.

“பாரும்மா... நம்மளால சென்னையில போய் மாசக் கணக்கா (மாசக்கணக்காகும் என மருத்துவர் சொல்லவில்லை) தங்குறது முடியாத காரியம். அதேபோல் லட்சக்கணக்குல செலவு செய்ய நமக்குக் கொடுப்பினையில்லை! உன் அப்பாவின் நிலைமை உனக்கே தெரியும். மறுபடி ஒருமுறை அதே ஆஸ்பத்திரிக்குப் போவோம். இங்க இருக்குற யாருக்காவது அங்கே வேலை செய்யுற மருத்துவரை தனிப்பட்ட முறையில தெரியுமான்னு விசாரிக்கிறேன்... நீ கவலைப்படாம இரு..”

தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சு கூறி லக்ஷ்மிக்குப் பழக்கமில்லை. அதுமட்டுமில்லை, இந்த கஷ்டத்தை எப்படி தீர்ப்பது என்பது அவளுக்கு சற்றும் புரியவில்லை. மனித வாழ்க்கையில் மிக மோசமான தருணம் இது; இந்தச் சமயத்தில்தான் குருட்டு நம்பிக்கைகள் ஆக்கிரமித்து தவறான பாதையில் வழி நடத்தத் தொடங்கும்.

கணவனுக்கு மருந்து கொடுத்துவிட்டு, அன்புடன் தலையைக் கோதி விட்டாள். மருந்தின் சக்தியைவிட அவள் அன்பின் மகத்துவம் மிகுதியானதென்பதால் பெருமாள் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

ஒரு வாரம் பறந்துவிட்டது. வைரவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. சிலரிடம் விசாரித்தார் என்பது உண்மைதான். ஆனால் முழுமனதுடனும், அவசரத்தை உணர்ந்தும் நடந்து கொள்ளவில்லை. பெருமாள் வயிற்று வலியினால் துடிக்கலானான். ஒவ்வொரு நாளையையும் கடந்து போவது தாங்க முடியாத வேதனையைத் தந்தது. சிறு வயதிலிருந்து துன்பங்களைப் பார்த்தவன் என்பதினால் எவ்வளவோ பொறுத்துக்கொண்டான். வாய்விட்டு கத்தாமல் – அம்மா, அம்மா, என்று வாய்க்குள்ளேயே முனகித் துடித்தான்.

கருவில் படுத்திருக்கும் குழந்தையைப் போன்று வயிற்றை மடக்கி, கைகளையும் கால்களையும் சுருக்கி, முடங்கிக் கிடந்து அவன் துவளுவதைக் காணும்போது லக்ஷ்மியின் மனது துடித்துப் போகும். ஆண்டவனை வேண்டி, இரவு முழுதும் கண்ணீர் வடியக் கிடந்தாள். நாளை பொழுது விடிந்தவுடன் நல்லது நடந்து விடும்; தன்னைப் பெற்ற தந்தை ஏதாவது செய்துவிடுவார் என்கின்ற நம்பிக்கை மேலோங்கிக் கிடந்தாள்.

பொன்னுசாமி வைரவனின் வீட்டிற்கு வந்தார்.

“தம்பி, நான் கேள்விப்பட்டது உண்மையா? மருமகனுக்கு உடம்புக்குச் சுகமில்லையாமே?”

வைரவனுக்கு அவருடன் பேசுவது பிடிக்கவில்லை. என்ன செய்வது? வீடு தேடி வந்துவிட்டாரே!

வெறுப்பான குரலில், “ஆமாண்ணே! கொஞ்சம் கஷ்டப்படறாரு! ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போனா தனியார் மருத்துமவமனைக்கு போங்கன்னு சொல்றாங்க! லட்சக்கணக்கில செலவு பண்ணுங்கன்னு சொல்றான்... அவ (மகளின்) தலை எழுத்து!”

“என்னப்பா நீ இப்படிப் பேசுற? உன் நிலத்தை வித்துறேன்! உயிருக்கு மிஞ்சியா நிலமும், பணமும்? நானே நல்ல ஆளுங்களா அழைச்சுட்டு வரேன். உடல்நல விஷயங்கள உடனுக்குடன் கவனிச்சிடனும்..”

இவர்களின் பேச்சை வீட்டிற்கு உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த லக்ஷ்மிக்கு கண்களில் பிரகாசம் தோன்றியது. இப்படி ஒரு வழியிருப்பது கனவிலும் அவளுக்குத் தோன்றியிருக்கவில்லை. கடவுளைப் போல் தந்தையை நினைத்திருந்தவள், “கடவுளுக்கு இது தெரியாமல் போய்விட்டதே” என நினைத்தாள்.

ஆனால் வெளியே வைரவன் எரிச்சலுடன், “அண்ணே, எத்தனை முறை சொல்லிட்டேன்... அந்த நிலத்த பத்தி மட்டும் பேசாதீங்க!”

அதற்கு மேலும் தொடர்ந்த அவர்களின் உரையாடல் லக்ஷ்மிக்கு கேட்கவில்லை. அந்த அபலைப் பெண்ணிற்கு சற்று முன் காதில் விழுந்த சொற்கள் மட்டுமே மனதில் உருண்டன.

தன்னைப் பெற்றவர் ஏன் அப்படிச் சொன்னார்? இந்த கேள்வி எதிரொலித்தது. தந்தையின் முரட்டுப் பிடிவாதம் அவள் அறிந்ததே! ஆனால் ஒரு உயிரைவிடவா சொத்தை உயர்த்தி நினைப்பது? இருக்கவே முடியாது... நம்புவதற்கு முடியவில்லை!

வாக்குவாதப் பேச்சு வார்த்தை முடிந்து உள்ளே வந்த தந்தையின் காலில், நெற்றி தரையில் இடிக்கும்படியாக விழுந்தாள்

“அப்பா, எனக்கு இது தோணவில்லையே! தயவு செய்யுங்கப்பா... அந்த நிலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று எனக்குத் தெரியும். ஆனா... தயவு பண்ணுங்கப்பா... கண் முன்னாடியே, வதைந்து. சிதைந்து என் கணவன் துடிப்பது நெஞ்சைப் பிளக்குதப்பா... நாங்க ரெண்டு பேரும் உங்க காலடியில் நாயாக் கிடப்போம்பா.. நிலத்த வித்து இவரைக் காப்பாத்துங்கப்பா... கருணை வையுங்க கடவுளே!”, புலம்பியபடியே அழுது தரையில் தலையை ஓங்கி இடித்து அழுதாள்.

வேற்றாரிடம் அனல் கக்கும் பேச்சை முடித்துவிட்டு வந்திருந்த வைரவனுக்கு சொந்த மகளின் செய்கை கருணைக்கு மாற்றாக கோபத்தை உண்டாக்கியது.

“எழுந்திரு... தேவையில்லாம ஆர்ப்பாட்டம் பண்ணாத. நான்தான் சொன்னேனில்ல, இரண்டு நாட்களுக்குப் பொறுத்துக்கோ! நல்ல மருத்துவரிடம் கூட்டிட்டுப் போறேன்.”

லக்ஷ்மியின் அம்மா, எதிர்பாராதவிதமாக, லக்ஷ்மிக்குத் துணை வந்தாள். “நிலம் போனாப் போகட்டும். பொண்ணு இப்படி அழறாளே. ஏதாவது செய்யுங்களேன்.”

வைரவன் மனைவியை அடிக்கப் பாய்ந்தார்.

“அறிவு கெட்டவளே... குடும்பம் நடத்துறவளா நீ? இதே ஊருல எப்படியெல்லாம் கூனிக்குறுகி நடந்திருக்கேன்? உன் மகன் படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்? இன்ஜினியரா ஆக்குனேனே, கொஞ்சமாவது நன்றி இருக்கா அவனுக்கு? இங்கேயே வந்து ஏதாவது செய்யடான்னு எவ்வளவு சொன்னேன்? கேட்டானா? இன்னைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதையை வந்து பாக்கணும். எதுக்காக எனக்கு இப்போ ஊரில மரியாதை தராணுங்க? என் மகன் படிப்புக்கா? இல்லை, அந்த நிலத்துக்காகத்தான் மரியாதை.”

தொடர்ந்தார். “நிலத்த எனக்காகவா வெச்சிருக்கேன்? நாளைக்குப் பொறக்கப்போகும் பேரப் பிள்ளைகளுக்காக காப்பாத்துறேன். அந்த மாதிரி இடத்துல தவம் செஞ்சாலும் நிலம் கிடைக்குமா? நம்ம பேரப்பிள்ளைங்க கடையைக் கட்டியோ, திருமண மண்டபத்தைக் கட்டியோ... எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும், நினைச்சுப் பார்த்தாயா? என்னுடைய ஒரு நாள் கனவா இது? பேச வந்துட்ட.. போடீ.!”

உடல் நடுங்க, அவர் முடிக்கும்வரை காத்திருந்த லக்ஷ்மி தேம்பினாள். “கொஞ்சம் கருணை செய்யுங்கப்பா... மொத்தமா இல்லைன்னாலும் பாதியாவது, இல்ல, இன்னமும் குறைவாகவோ... நமக்கு தேவையான பணத்துக்கு..” அவளால் பேசமுடியவில்லை.

கண்ணீர் கண்களில் மட்டுமல்ல, உடல் முழுதும் வழிந்ததுபோல் நடுங்கினாள்.

“கருணை காட்டுங்கப்பா...என் தெய்வமே! எங்களை வாழ வையுங்கப்பா... நான் செத்தாலும் பரவாயில்லை, என் கண் முன்னே அவர் துடிக்கலாமா? நீங்க என்னை எப்படி வளர்த்தீங்கன்னு கொஞ்சம், தயவு செஞ்சு, நினைச்சுப் பாருங்க. என் கணவன் சாகிறதை நான் எப்படி...? கடவுளே... என் கடவுளே...” தேம்பல் அதிகமானதால் அவளால் மேலே பேச முடியவில்லை.

பல நாள் கட்டிய கோட்டையை ஒரே நாளில் தகர்க்க முடியுமா? அதுவும் வைரவன் கட்டிய கோட்டையை!

“இதோ பாரு. இரண்டு நாள் பொறுத்துக்கோ. எல்லாத்தையும் சரி செஞ்சுடறேன். ஆனா, நிலைத்த விக்கிற பேச்சே கிடையாது.”

வைரவனுக்கு தானாகவே ஏதாவது நடந்துவிடலாமென்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்.

“லக்ஷ்மி...” என நடுங்கும் குரலில் அழைத்தான், அவள் கணவன். இந்தப் பேச்செல்லாம் அவன் காதுகளில் விழுந்து கொண்டுதானிருந்தன.

லக்ஷ்மி பாய்ந்து அவனிடம் சென்றாள். தலையைத் தடவிவிட்டாள். அவன் மெலிதாக, கடினத்துடன் பேசினான். “ஒன்றும் கவலைப்படாதே. இவ்வளவு நாள் பொறுத்தாச்சு. உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன்.”

தன்மானம் அவனுக்கும் இருந்தது. வைரவனின் பேச்சைக் கேட்டதும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, மனைவியை கட்டின புடவையுடன் அழைத்துக்கொண்டு..... ம்... எங்கே போவான்? தெருவிலும் சரி, இந்த வீட்டினுள்ளும் சரி – அவனுக்கு கிடைக்கும் மரியாதை என்னவோ ஒன்றுதான். வீட்டினுள் இருந்தால் லக்ஷ்மிக்காவது பாதுகாப்பு; தெருவினில்?

தன்மானத்துடன் இருக்க தனித்தகுதி வேண்டும் போலிருக்கின்றது. அந்தத் தகுதியுமில்லாத அவனால் என்ன செய்ய முடியும்?

அந்த அபலைப் பெண்ணும் என்னதான் செய்வாள்? நோயில் அவதியுறும் கணவனிடத்தில் மேலும் அன்பைக் காட்டுவதைத் தவிர அவளுக்கு வேறென்ன திறனிருக்கின்றது?

இது நடந்து, சரியாக, இரு நாட்கள் கழித்து பெருமாள் இறந்து போனான். எப்போது அவன் உயிர் பிரிந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. நடு இரவு வரை வலியினால் துடித்தவனை அன்பினால் தூங்க வைத்த லக்ஷ்மி காலைப் பொழுது விடிந்தவுடன் தொட்டுப் பார்க்கையில் உடல் முழுவதுமாக குளிர்ந்திருந்தது.

“ஐயோ....” எனப் பெருங்குரல் எழுப்பியபடியே அவள் சரிந்து உட்கார்ந்துவிட்டாள். அவள் அதன்பின் எதுவும் பேசவில்லை. அந்தச் சிறிய அறையின் ஒரு இருண்ட மூலையையே அவளின் விழிகள் பார்த்துக்கொண்டிருந்தன.

லக்ஷ்மியின் வாயிலிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. சேதி கேட்டு ஓடோடி வந்த அண்ணன் தந்தையிடம் சண்டை போட்டு விட்டு, தங்கையினிடத்தில் வந்து தேற்ற முயன்றான்.  ஆனால் அவர்களெல்லாம் லக்ஷ்மியின் கண்களுக்குத் தெரிந்தால்தானே!

சடங்குகள் முடிந்தன. ஒரு முழு நாள் கழிந்திருக்கும். சலனமற்றுக் கிடந்த லக்ஷ்மி திடீரென்று எழுந்து நின்றாள். அந்த இருண்ட மூலையில் விடை கிடைத்தாற்போல் கண்களில் ஒளி வந்தது. எதைப் பற்றியும் யோசியாமல் வீட்டிற்கு வெளியே ஓடினாள். அவள் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

வீட்டிலிருந்து ஓடியவள் கடைத் தெருவைத் தாண்டி, தந்தையின் நிலத்தில், அவள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த நிலத்தில் வந்து நின்றாள். ஒடிந்து கிடந்த நீண்ட குச்சி ஒன்றை கையில் எடுத்து அங்கிருந்த புதரை நிரவியும், குத்தியும், விலக்கியும் பார்க்கலானாள். மனம் ஒன்றி, வாழ்க்கையின் மொத்த விடையுமே அங்கே கிடப்பது போல்... மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தாள்.

அலங்கோலமாக இப்படி அலையும் பெண்ணிடத்தில்தான் நம் சமூகம் தனித்த அக்கறை காட்டுமே! தெருவில் நின்று கொண்டும், அங்கிருந்த கடை வாசல்களில் நின்று கொண்டும், அந்தப் பரிதாபத்துக்குரிய, இழிவு நிலையின் உச்சத்திற்குத் தள்ளப்பட்ட அந்த பெண்ணை வேடிக்கை பார்க்கலானர், கேலியும், கிண்டலுமாய்...

செய்தி லக்ஷ்மியின் தாயாருக்குச் சென்று சேர்ந்தது. நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடிவந்து, மகளிடம் சென்றவள், “ஐயோ, என் கண்ணே... உன் நிலைமை இப்படியாயிருச்சே! இங்க என்னம்மா செய்யுற? வா வீட்டுக்குப் போகலாம்.”

லக்ஷ்மி தீர்க்கமான பார்வையால் தாயை ஒரு முறை பார்த்துவிட்டு குச்சியால் நிலத்தில் தேடுவதைத் தொடர்ந்தாள்.

“கடவுளே... என்ன பாவம் செஞ்சுது என் பொண்ணு? வாம்மா... வீட்டுக்குப் போயிடலாம். இங்க என்ன செய்யுற?”

லக்ஷ்மி நிமிர்ந்து தாயையும், கூடியிருந்த கூட்டத்தையும் பார்த்து, வாழ்வில் இதுவரை அவள் பேசியிராத உரத்த, தெளிவான குரலில் சொன்னாள்.

“என் புருஷன, என் வாழ்க்கையை, இதோ இந்த நிலத்துலதான் எங்கேயோ தவற விட்டுவிட்டேன். ஆமாம்... இங்கதான் எங்கேயோ என் வாழ்க்கை இருக்கு... உங்க கண்ணுக்கு தெரியாது. போங்க. நான் கண்டு பிடிச்சிட்டுதான் வருவேன்... கை தவற, தெரியாம -  இல்லையில்ல, தெரிஞ்சே விட்டுட்டேன்... அது இங்கதான் எங்கேயோ இருக்கு! என் வாழ்க்கை இல்லாமல் நான் எப்படி வாழ முடியும்? கண்டுபிடிச்சே ஆகணும். போயிடுங்க... நீங்க எல்லோரும் போயிடுங்க...”

அவளின் தாய் விக்கித்து நின்றாள்.

பேராசை பிடித்து, பண வெறி கொண்டு, ஏமாற்றியும் ஏமாறியும் திரிந்து, மனசாட்சியை மறந்து வாழும் இந்தக் கேடுகெட்ட சமூகத்திற்கு லக்ஷ்மியின் வாழ்க்கை எப்படி கண்ணுக்குத் தெரியும்?

அதன்பின் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடிவிட்டன. பார்த்தால் கையெடுத்துக் கும்பிடும் தெய்வாம்சத்துடன் இருந்த லக்ஷ்மி இன்றைக்கு உருக்குலைந்து போய்விட்டாள். கண்கள் இடுங்கி, கன்னங்கள் ஒட்டி, பற்களெல்லாம் முன் நீட்டி, உதடுகள் வெடித்து... பாவம்! வீட்டிலுள்ளவர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டால் அந்த நிலத்துக்கு ஒடி வந்துவிடுவாள். தொலைந்து போன வாழ்க்கையைத் தேடிப் புலம்புவாள். ஆனால் இப்போதெல்லாம் யாரும் அவளை மரியாதைக் குறைவாகவோ, ஏன், பரிதாபமாகக்கூடவோ பார்ப்பதில்லை.

இன்னொன்று தெரியுமா? அரசாங்க காய்கறி அங்காடி இன்னமும் கிருஷ்ணாபுரத்திற்கு வரவில்லை. சீக்கிரம் வந்துவிடும் என்றுதான் பேசிக்கொள்கிறார்கள். வைரவன் சாய்வு நாற்காலியில் அமர்வது அதிகமாகிவிட்டது.

காலம் அப்படியே சென்று விடுமா என்ன? ஒவ்வொருவரையும் மாற்றும் சக்தி காலத்துக்குத்தான் உண்டு என்பார்கள். காலமே லக்ஷ்மியையும், அவள் தாயாரையும்தான் மாற்றியது. முதலில் தாயார் போய் சேர்ந்தாள். லக்ஷ்மியின் முகம் இன்னமும் குறுகி, ஒடுங்கி, புத்தி பேதலித்து போனாள். வெளியே ஓடுவது நின்று விட்டது. இருட்டு அறையிலேயே அடங்கிக் கிடந்தவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை உற்றுப் பார்த்தால் தான் தெரியும். அவளை கவனிக்க வேலைக்கார கிழவியைத் தவிர யாருமில்லை.

முடிவில் வைரவனும் காலமானார். இறந்து போவதற்கு முன் அவரின் மனதில் என்ன எண்ணங்கள் இருந்தன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய மனிதரின் சாவு அல்லவா! கூட்டம் அதிகமாக வந்தது. அவரின் வாழ்க்கையை விட அவரிடம் இருந்த சொத்துகள், நில மதிப்பு மற்றும் பிணத்திற்கு எவ்வளவு மாலைகள் விழுந்தன என்பவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

வேலைக்கார கிழவி லக்ஷ்மியிடம் பிணத்தை பார்க்க வருமாறு கெஞ்சினாள். லக்ஷ்மியிடம் எந்த உணர்ச்சி மாற்றமுமில்லை. இருட்டு மூலையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் வாழ்க்கை இனி அங்கேதான்.

உற்றார் உறவினரெல்லாம் வந்து சேர்ந்த பின் பிணம் எடுக்கப்பட்டது. கொடுத்த காசுக்கு, சாராயத்தை குடித்து விட்டு வந்த இளம் காளைகள் பிண ஊர்வலத்தின் முன்னே குத்தாட்டம் போட்டனர்.

விதியைப் பாருங்கள். சுடுகாட்டுக்கு வைரவனின் நிலத்தை ஒட்டிய சாலையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். நாலு பேர் தூக்கி சென்ற பாடை ஆடியபடியே சென்றது.

அவரின் நிலத்தைக் கடக்கும்போது, வைரவனின் இருகிப் போன பிணத்தின் முகம் இடமும் வலமும் ஆடியதைப் பார்க்கும்போது, 'விற்க மாட்டேன், விற்க மாட்டேன் என்று சொல்வதைப் போன்றே இருந்தது.


*****************************************************************************

ரா. பாரத்ராம்.
22/04/2020