பின்னிரவுப் பொழுது; அந்த குறுகிய
தெருவின் இருமங்கிலும், பகலிலே நிழலை அள்ளித் தரும் மரங்கள் நிறைந்திருக்கின்றன. இரவினில் இலைகள்
அசையாவிடினும், பகலில் தரை
வெப்பம் ஏறாத காரணத்தினால் இரவுப் பொழுது குளிர்ந்திருக்கின்றது.
எங்கும் அசைவில்லை.
அந்தத் தெருவிலிருந்த ஒரு பழைய வீட்டின் பின்பக்கத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த
சிறிய குடியிருப்பு. சின்னஞ்சிறு சமையலறையைத் தவிர இருப்பது மேலும் ஒரே ஒரு அறைதான். உட்காருவது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாமுமே அங்கேதான். காரை பெயர்ந்த
சுவர்களைத் தவிர அந்த அறைக்கு ஒரு பெரிய ஜன்னல், மற்றபடி உயர்வாக குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை.
அந்த ஜன்னலை ஒட்டியபடி ஒரு கட்டிலும், அக் கட்டிலின் மேல்கிழிந்த, பழைய பஞ்சு
மெத்தையும் இருக்கின்றன. ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை மெத்தையில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தது. ஓரங்களிலும், நடுவிலும் ஆங்காங்கே கிழிந்திருந்த போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது. ஒருக்களித்துப்படுத்து,
வலது காலை சிறிது
மடக்கியும், இடது காலை
நீட்டியும், இரு கைகளையும்
முகத்தினருகே மடக்கி வைத்தபடியும், அந்தக் குழந்தை
ஆழ்ந்த நித்திரையிலிருந்தது
அக்கட்டிலை ஒட்டியபடி போடப்பட்டிருந்த மேஜையின் அருகே ஒரு மனிதன்
நின்றிருந்தான். அவனது துயரம் தோய்ந்த விழிகள், ஜன்னலின் வழியாகத் தெரிந்த முழுநிலவை
நோக்கிக்கொண்டிருந்தன. நிலவினில் எதையோ தேடுவதைப் போல் இருந்தது அவன் பார்வை.
சில நிமிடங்கள் கழிந்தன. மெதுவாக அவன் தனது பார்வையை இவ்வுலகுக்கு கொணர்ந்து,
பின் சத்தம் எழுப்பாமல்
அறையின் குறுக்கும் நெடுக்குமாக - குழந்தை எழுந்திருக்காமல் இருக்கும் பொருட்டு -
கால்களை தரையினில் அழுந்தாமல் வைத்து நடந்தான். ஒரு முறை நின்று நிலவையும்,
தெளிந்த வானத்தில்
படர்ந்திருந்த நட்சத்திரங்களையும் ஏக்கத்துடன் பார்த்தான். சில நொடிகள் கழிந்த
பின் மறுபடியும் நடந்தான். மனதின் எண்ணப் போராட்டத்தில் சிக்குண்டு, விடுபட வழி தெரியாமல் போராடிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் முகத்தில் சற்று தெளிவு வந்தது. மேஜையின் அருகே வந்தவன்
அங்கிருந்த ஒரு வெள்ளைத்தாளில் நடுங்கும் கையினால் பின்வருமாறு எழுதினான்.
“என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. வேறுவழி எதுவும் தெரியாததால் என்
முடிவை நானே தேடிக் கொள்கிறேன்.”
அக்கடிதத்தை மடித்து சட்டைப் பையினுள் வைத்தபடியே உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தையைப் பார்த்தான். அவன் முகத்தில் சிறுமலர்ச்சி தோன்றியது. குழந்தையின்
அழகால் அவன் மிகவும் கவரப்பட்டான்.
போர்வை குழந்தையின் உடலில் படிந்திருந்ததால், குழந்தையின் சின்ன உடலுக்கு இணங்க, போர்வையின் மேடு பள்ளங்கள் இருந்தன. நிலவின்
ஒளியில் அக்காட்சி மிகவும் அழகாக இருந்தது. அவனுக்கு ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது.
இக்காட்சியை ஒரு ஓவியன் பார்த்தால் இதை ஒரு அழகான சித்திரமாக வரைந்திருப்பான்
என்று நினைத்து மகிழ்வடைந்தான். மனதில் எண்ணவோட்டம் ஓடியது.
‘அது சரிதான். எல்லாக் குழந்தைகளும் அழகுதானே! உண்மையான அழகு உள்ளத்தில்தான்
இருக்கின்றது என்றால் - வன்மம் வாய்ந்த, சூழ்ச்சியால் சூழப்பட்ட உலகின் உண்மையை அறியாத தூய உள்ளம் அமையப்பெற்ற
குழந்தைகள்தானே அழகு!’
இவ்வெண்ணம் தோன்றி மறைந்தவுடன் அவன் நெற்றியில் சுருக்கம் உண்டாயிற்று. மெலிய
நடுக்கம் உடல் முழுதும் பரவிச் சென்றது. எந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியூட்டியதோ
அந்த எண்ணமே பெரும் பயத்தை விளைவித்தது. கலவரமடைந்த அவன் முகம் சுருங்கி கண்களில்
நீர்திரையோடியது. எண்ணங்கள் தோன்றின. "இப்படியா முடிவது? இல்லையில்லை.." இந்தக் கேள்விக்கான விடையை
அவன் எங்கோ தேடினான்.
சிறிது நேரத்தில் சட்டென்று முகத்தோற்றம் மாறியது. கடவுளிடமிருந்து ஆணை
கிடைத்தது போலிருந்தது. சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்து கிழித்தெறிந்தான்.
கைகளால் முகத்தை மூடியபடி அமர்ந்தான். கைவிரல்களுக்கிடையே சூடான கண்ணீர்த்துளிகள்
வழிந்தன. அவன் எண்ணமிட்டான்.
“என்னதான் செய்வது? அதையா..? எதற்காக இந்நாள் வரை போராடினேனோ அதைக்
கைவிடுவதா? முடியாது....
ஆனால் என்ன வழியிருக்கின்றது? நான் அனுபவித்த
அதே வாழ்க்கையை என் குழந்தைக்கும் கொடுப்பதா? இல்லை... ஆனால்... துணையில்லாத இந்த அபலக்
குழந்தை...? கடவுளே! தயவு செய்து என்னை மன்னித்துவிடு! எனக்கு வேறு வழி
தோன்றவில்லை. இரக்கமும், கருணையும்
சிறிதுமில்லாத உலகம் இது. இழிநிலையில் கிடந்து, மனம் உழன்று துன்புறுவதைவிட, நான் செய்வதே சிறந்ததாக இருக்கும். கடவுளே..
இப்பாவச் செயலிற்காக நரகத்தில் நான் எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி. பொறுத்துக்கொள்கிறேன்!”
தீர்க்கமுடன் மற்றொரு வெள்ளைத்தாளில் - இம்முறை கைகள் மட்டுமல்ல.. உடலும்,
மனதும் சேர்ந்து நடுங்க -
எழுதினான்.
“எங்களின் இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணமல்ல. இக்கொடிய உலகம் எங்களுக்குத்
தந்து கொண்டு, என் குழந்தைக்கு
தரப்போகும் துன்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்ளவே, இந்த பாவத்தை நான் செய்யப் போகிறேன். வாழ்க்கை
தரும் வேதனைகளை விட மரணம் தரப்போவது மோசமாக இருக்க முடியாது. கடவுள் என்னை
மன்னிக்கட்டும்...!”
இந்த வரிகளுடன், கையொப்பமிட்டுவிட்டு
காகிதத்தை சட்டைப் பையில் வைத்து விட்டு குழந்தையைப் பார்த்தான். நேரம்
வந்துவிட்டது என்பது அவனுக்கு விளங்கியது. இனி காரியத்தை செய்ய வேண்டியதுதான்!
******************************************************
இவன் யார்? எதற்காக
இப்படியெல்லாம் மனிதத்தன்மையற்று இருக்கிறான்? இந்த கேள்விக்கான விடைக்கு இவனின் வாழ்க்கையை
நாம் சற்று தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. வாருங்கள் பின்னோக்கி போவோம்.
அவன் பெயர் கண்ணன். அவன் அநாதை விடுதியில் பிறந்து வளர்ந்தவன். முதல் வரியிலேயே
தவறு இருக்கிறதென்று ஆராய வேண்டாம்! குப்பைத் தொட்டியிலோ, ரயில் பெட்டியிலோ அல்லது ரோட்டோர
பிளாட்பாரத்திலோ , எங்கு
கிடந்திருந்தாலும், அழுக்குத்
துணியில் சுற்றப்பட்டு, ஈக்கள் மொய்த்து,
எறும்புகளால்
கடிக்கப்பட்டு, கதறிக்கொண்டிருந்த
குழந்தையை, சுத்தப்படுத்தி,
அரசாங்க கோப்புகளில்
விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அக்குழந்தை எங்கு
ஒப்படைக்கப்படலாம் என்பதில் ‘சிறு ஆராய்ச்சி’
நடத்தி, பின்பு எங்கு கொண்டு வரப்படுகின்றதோ – அதுதான் அக்குழந்தையின் பிறப்பிடம். அதன்
வாழ்க்கை அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது.
கண்ணனின் உண்மையான கிடந்தவிடம் எதுவென்பது அவனுக்குத் தெரியாது. சிறு வயதில்
அந்த எண்ணமே மனதில் எழவில்லை. பெரியவனானான பிறகோ அதைப் பற்றி ஆர்வமில்லாது போனது. அதைவிட மேலாக உயிரை கொடுத்தவனைப் பற்றியும், உடலை வயிற்றில் வளர்த்தவளைப் பற்றியும் (தந்தை,
தாய், என்றும் சொல்லலாம்), எள்ளளவும் அக்கறையில்லை. கிடந்த இடத்தைப்
பற்றியே கவலைப்படாதவன், அவ்விடத்தில்
கிடத்திவிட்டுப் போனவளைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?
ஆனாலும், அமைதியான இரவு
நேரங்களில், சில சமயங்களில்
ஆழ்ந்த வருத்தம் ஏற்படுவதுண்டு. அனாதையாக இருப்பதற்காகவல்ல. உறவு ஏதுமில்லை
என்பதற்காகவல்ல; தன்னை
வீசிவிட்டுப் போனதிற்கான காரணத்தினை எண்ணுவதால்! இந்தப் பரந்த எழில்மிகு உலகினை
ஒருமுறை கூட பார்த்திராத, கண்களைத்
திறக்கக்கூட முடியாத சின்னஞ்சிறு குழந்தையை எதற்காக கடாசிவிட்டுப் போகவேண்டும்?
கடவுளும் தவறிழைப்பதாக
படிக்கிறோம். ஆனால், பலமேயில்லாத,
தொட்டால் துவண்டுவிடும்
இளந்தளிர் என்ன தவறிழைத்ததற்காக வீசியெறியப்பட வேண்டும்? இந்த எண்ணம் வருகையில் அவன் முகம் குலுங்கும்;
கண்ணீர் தானாக வழியும்!
அந்த அநாதை விடுதியைப் பற்றி குறிப்பிட விசேஷமாக எதுவுமில்லை; ஒன்றே ஒன்றைத் தவிர! அது உண்மையிலேயே சேவை மனம் கொண்ட ஒருவரால் நடத்தப்படுவது! அவரது சொந்த வருமானத்தின் ஒரு
பகுதியிலிருந்து விடுதி நிர்வகிக்கப்படுவதே அதற்கு சாட்சி. அந்த உண்மை ஒன்றே
போதும் – நம்பகத்தன்மையை
உறுதிப்படுத்த!
ஒரு சிறிய நகரத்தின் எல்லையிலே அந்த விடுதி செயல்பட்டது. அப்பகுதியில்
விளைநிலங்கள் எல்லாம் ‘நிலை நிலங்களாக’
உருமாற்றப்பட்டுவிட்டன. ‘மனைகள்; என அழகாக அழைக்கப்பட்டாலும், விற்றபின்னே ஒரு குடிசைகூட அங்கு கட்டப்படாமல் ‘நிலையாக’ வருடக்கணக்கில் அவை காத்துக்கிடப்பதைப்
பார்க்கும்பொழுது மனைகள் என்பதைவிட ‘நிலை நிலங்கள்’ என்று
போற்றப்படுவதுதானே பொருத்தம்!
விடுதியின் உரிமையாளர் (எல்லோரும் அவரை ‘ஐயா’ என்றுதான் அழைப்பார்கள்), விளை நிலத்தை
மனைகளாக விற்காமல், கட்டடத்தை
எழுப்பி, அநாதைக்
குழந்தைகளுக்கு கூரையை அமைத்துக் கொடுத்துவிட்டார். அவருடைய இந்த மேலுலக புண்ணிய,
ஆனால் பூலோக பாவ செயலை
எண்ணி அவர்தம் குடும்பத்தினருக்கு வருத்தமே!
வீணாக கிடக்கும் நிலத்தில் பயிர்கள்
வளராவிடினும், இளங்குழந்தைகளாவது
வளரட்டுமே என்பது அவரின் எண்ணம்; குடும்பத்தினருக்கோ.
‘ஏதோ! தலைப்பாகையோடு
போயிற்றே’ என்று திருப்தி.
பின்னே! இந்த மனிதர் பயிர்கள் வளரும் மற்ற நல்ல நிலங்களை விட்டு வைத்தாரே என்ற
நிம்மதிதான் அது.
சிறு வயதில் கண்ணனுக்குத் தெரிந்ததெல்லாம் கடவுள் அவனை படைத்திருக்கிறார் என்பதும், தினமும் நீரும் உணவும் கிடைக்க வழி
செய்திருக்கிறார் என்பது மட்டுமே. அதற்காக அவருக்கு தினமும் பிரார்த்தனை செய்ய
வேண்டுமென்பது அவனுடைய கடமை என்பதை அவன் உணர்ந்திருந்தான். அந்த பிரார்த்தனை ‘சடங்கும்’ அவனுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
முன்பே கூறியதுபோல அந்த விடுதியை நடத்தியவர் நல்லவர். எவ்வித விளம்பரத்தையும்
விரும்பாதவர். அவ்விடுதியின் கொள்கைகளும் எளிமையானவை. குறைந்த அளவில்தான், அதாவது ஐயா தரும் பொருளுதவிக்கு ஏற்புடைய
வகையில்தான் குழந்தைகள் அங்கே சேர்க்கப்படுவர். அதிகமான குழந்தைகளை சேர்த்துவிட்டு
பின் நன்கொடை என்ற பெயரில் அங்குமிங்கும் அலைவதெல்லாம் ஐயாவிற்கு பிடிக்காது..
அந்த விடுதியின் தனிச்சிறப்பே அதுதான்.
விடுதியின் குறிக்கோளும் எளிமையானது. முடிந்தவரை குழந்தைகளை நல்லபடியாக
வளர்த்து, அருகிலேயே இருந்த
ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு வ்ரை படிக்கவைத்து, தேறிவிட்டபின்னர், ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ள உதவி செய்வது;
அதாவது ஓட்டுனர், மின்சார பழுது பார்ப்பது, தையற்கலை, பிளம்பர்...சுறுங்கக்கூறின் பத்தாவது தேறிய
பின் விடுதியை விட்டுச்சென்று வேலை செய்து பிழைத்துக்கொள்வது அவரவர் கடமை. நடத்தை
சான்றும், உதவி செய்ய
வேண்டி ஒரு கடிதமும் ஐயா கொடுத்துவிடுவார். அதற்குப்பின் எக்காரணத்தை முன்னிட்டும்
ஐயா அவர்களின் உதவி கிடைக்காது.
நல்லதுதானே! உலகத்தில் அடுத்து வரவிருக்கும் அனாதைகளை அவர் பார்த்துக்கொள்ள
வேண்டாமா?
கண்ணனைப் பொருத்த மட்டில் அவனுக்கு அனாதை விடுதியில் கிடைத்த உறவுகளாக இருவரை
சொல்லலாம். ஒருவன் அவனுடைய வாழ்க்கை முழுதும் வரப்போகின்ற நண்பன். அவன் பெயர்
கேசவன்.
மற்றொருவர் அங்கு தோட்ட வேலை, சில எடுபிடி
வேலைகளைச் செய்யும் ஒரு கிழவர். அவரின் பெயர் என்னவென்று கண்ணனுக்கு தெரியாது.
ஆனால் அவர் அவனின் ‘தாத்தா’ என்ற உறவாக மாறிவிட்டார். கண்ணன், கேசவன் இருவருக்கும் அந்த தாத்தாதான்
வெளியுலகைப் பற்றி எடுத்துரைப்பவர். அது மட்டுமல்ல, தோட்ட வேலையில் இருவரும் அவருக்கு துணை
செய்யும்போது நல்ல கதைகளை எல்லாம் சொல்வார். அதனாலேயே குழந்தைகளுக்கு அவரை மிகவும்
பிடிக்கும்.
கண்ணனுக்கு வெளியுலகின் மாயாஜால தந்திரங்களை, ஏமாற்றுதல்களை கதைகள் மூலமாக அறிமுகப்படுத்திய
புண்ணியம் அந்த பெரியவரையே சாரும்! பள்ளிகளில் அதை பற்றியெல்லாம் எப்போது
பேசுகிறார்கள்? குழந்தைகளின்
அபாரமான கற்பனைத் திறனை வளப்படுத்துவதில் பள்ளிகளுக்கு நேரமில்லை.
கண்ணனும், கேசவனும் எந்த
சந்தேகங்கள் இருந்தாலும் தாத்தாவிடம்தான் உரிமையுடன் கேட்பார்கள். பல சமயங்களில், குழந்தையின் சந்தேகங்கள் மனிதனின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைவிட அற்புதமானவை.
அவை நேர்மையான, ஒளிவு மறைவற்ற,
தூய்மையான கேள்விகள்.
அந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பது சுலபமில்லை.
தாத்தாவோ எந்நேரமும் ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பார்.
கண்ணன் அவருடன் ஒட்டிக்கொண்டு, அவருக்கு சிறு சிறு
வேலைகளை அவனாகவே செய்து, கேள்விகளால் அவரை
துளைத்தெடுப்பான். அவரும் சளைக்காமல் கெள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார்.
கண்ணனும், கேசவனும் எழுந்து
நடக்கும் பருவம் வந்த போது, அவர்கள் இருவர்
மட்டுமே விடுதியில் இருந்தனர். மற்ற குழந்தைகளெல்லாம் பள்ளிக்கு சென்றுவிடுவர்.
இந்த இருவரும் அமைதியான, சொல் பேச்சைக்
கேட்கும் குழந்தைகளாக இருந்ததினால் ஆயாக்களுக்கும் இவர்கள் மேல் சற்றே
பிரியம்தான். மதியம் தூங்கி எழுந்தவுடன் இரு குழந்தைகளும் தாத்தாவின் அருகிலேயே
சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
கண்ணனுக்கு எப்போது பேச ஆரம்பித்தான், எந்த வார்த்தையை முதலில் பேசினான் என்பதெல்லாம் நினைவில் இல்லை. வீட்டுக்
குழந்தையாக இருந்திருந்தால் 'அம்மா' என சொல்லியிருக்கும். அங்கே எல்லோரும்
ஆயாக்கள்தானே! கிழிந்து போன ஏதாவது புத்தகத்தை காண்பித்து அம்மா என்று சொல்லிக்
கொடுத்திருக்கலாம்.யாருக்குத் தெரியும்? அழுதால் அம்மா
வருவாள் என்றிருந்தால் அனாதையும் அழுதிருக்கும். இந்தக் குழந்தை அழுவதை கவனிக்க
யாரிருக்கிறார்கள்?
ஆனால், சிறு வயதில் அவன்
அதிகம் பேசிக் கொண்டது தாத்தாவுடனும், தோழனுடனும்தான் என்பதில் எந்த ஐயமுமில்லை. பெரியவனான பிறகு யோசித்துப்
பார்த்தால் தாத்தாவுடன் கேட்ட கேள்விகள், அதற்கு அவர் சொன்ன பதில்கள் - இவைதான் சிறு வயது ஞாபகங்களாக வருகின்றன.
ஒருமுறை அவர் செடி நடும்போது "இது என்ன தாத்தா?" என்று கேட்டதற்கு, "இதுவா மகனே, வேப்பமரத்தின் கன்று. உன்ன மாதிரிதான். இப்போ சின்ன பிள்ளையாக இருந்தாலும் பின்னாடி பெரிய மரமாகி நிறைய நிழலும், காக்கா குருவிங்களுக்கு கூடு கட்ட இடமும் கொடுத்து நம்மள வாழவைக்கும். அப்போ நான் இருக்கமாட்டேன். ஆனால் இப்போவே யாராவது வெச்சாதானே அப்போ வளர்ந்திருக்கும்."
"அப்போ நீங்க எங்கே போயிருப்பீங்க, தாத்தா?"
தாத்தா இவனை பார்த்தார். அந்த சின்னஞ்சிறு உள்ளத்தின், மிக எளிமையான, அதே சமயம் புரிய வைப்பதற்கு மிகக் கடினமான விடையை எப்படி சொல்வது என்று யோசித்தார்.
ஆரம்பமே தெரியாத இந்த சிறிய உயிருக்கு முடிவை எப்படி சொல்வது? என்னதான் முடிவு? அது எவனுக்குத்தான் தெரியும்!
குழந்தையே கேட்டது, "வானத்துக்குப் போயிடுவீங்களா?"
"யார் உனக்கு இதை சொன்னது?"
"ஆலு ஆயாதான் சொன்னாங்க. என் அப்பா அம்மாவெல்லாம் அங்கதான் இருக்காங்களாம். எனக்கு அங்க போக பிடிக்கல." குழந்தை அண்ணாந்து பார்த்தது. "காணாம போனவங்கள நான் எங்க கண்டுபிடிக்கறது!"
தாத்தாவின் முகம் வாடிப் போயிற்று.
குழந்தையின் முதுகில் கை வைத்துச் சொன்னார்.
"யாரு, அலமேலுவா? அவ கிடக்கிறா...உனக்கு என்னடா ராஜா.. உலகமே உனக்கு உறவுதான். இந்த மரம், செடி, நல்ல மனுஷங்க...எல்லாமே உனக்கு உறவுதான். என்னுடைய குடும்பம், என்னுடைய சொத்து, என்னுது, என்னுதுன்னு பேராச புடிச்சு அலையுறானுங்களே.. அவனுங்க போகட்டும் வானத்துக்கு."
தாத்தா குனிந்து நிலத்தைப் பார்த்து பேசினார்.
"நானுந்தான் பெத்தேன். என்னிக்கு அப்பனே பாரம்னு நினச்சானுங்களோ, அன்னிக்கே முடிவு செஞ்சு வெளியே வந்தேன். இதோ.. வேல செய்யுறேன், சோறு திங்கறேன். இதுதான் எனக்கு பெருமை."
தான் பேசுவது குழந்தைக்கு புரியாது என்பதை உணர்ந்து, அதை அணைத்துக்கொண்டு உறுதியான குரலில் சொன்னார்.
"நீ வானத்துக்குப் போக மாட்டே. உனக்கு இங்க தான் வாழ்க்கை. நல்லவனா இரு. உண்மைய பேசு. அது போதும். மரம்,செடி மேல அன்பு வை. இந்தா...இந்த செடிக்கு தண்ணீ ஊத்து. இதுங்க நம்மள ஏமாத்தாதுங்க. கடவுள் மனுஷனுங்கள படைக்கறதுக்கு முன்னாடி இந்த இயற்கையதான் படைச்சிருப்பான். நமக்கு முன்னாடி வந்தது மரமும் செடியும். ஆனா, நாம போடுற ஆட்டமும், பாட்டமும், அநியாயங்களும், பித்தலாட்டங்களும்.... எதுவுமே இதுங்களுக்குத் தெரியாது. கண்ணால பாக்குற கடவுள்தான் இந்த இயற்கை. அதை ரசி. வாழ்க்க நல்லா இருக்கும்."
குழந்தைக்கு அப்போது விளங்கியதெல்லாம் தான் வானத்துக்கு போகமாட்டோம் என்பதுதான்.
கிழவரின் மற்ற வார்த்தைகளின் அர்த்தம் புரிய பல வருடங்களானது. வானம் பார்க்க நன்றாகவிருக்கும். அதை ரசிக்கலாம். ஆனால் அதற்கு போவதென்றால்...வாழ்ந்து தீர்த்த நமக்கே பிடிக்காதென்றால் தொடக்கமே தெரியாத குழந்தைக்கு பிடிக்குமா?
கேசவனும் தாத்தாவுடன் தான் இருப்பான். ஆனால் அவன் விளையாட்டுப்பிள்ளை. சேட்டை செய்யாவிடினும், எந்நேரமும் துருதுருவென்று இருப்பான். அதனால் தாத்தாவுடன் ஒரே இடத்தில் சற்று நேரம் அமைதியுடன் இருப்பது அவனுக்கு கடினம். சொல்லப்போனால் இப்படி இருப்பவர்கள்தான் பெரிதான பிறகு வாழ்க்கையில் என்ன நடந்தாலும், வருவது வரட்டும் என்று கடந்து போவர். கண்ணனைப் போன்ற யோசிக்கும் திறனும், அன்பை உணரும் இயல்புடைய குழந்தைகளே பாசத்தின் வலையில் சிக்கி, சுற்றியிருக்கும் உயிர்களின் துன்பத்தைக் கண்டு துவளுபவர்களாக இருப்பார்கள். உலகத்தின் மோசமான தலைவிதி இது.
விடுதிக்கு சில சமயங்களில் வசதி படைத்த, அல்லது, புண்ணியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர், குழந்தைகளுக்கு உணவு விருந்து அளிப்பர். பல காரணங்களுக்காக விருந்து தருவார்கள் என்றாலும் அதில் முக்கியமானதும், கண்ணனுக்கு விருப்பமில்லாததும் என்னவென்றால் பிறந்த நாள் கொண்டாட்டம் (அதாவது விருந்தினரின் பிறந்த நாள். ஒருவரின் பிறந்த நாளுக்காக அவரின் குடும்பம் குழுமமாக வந்து விருந்தளிப்பது).
அந்த விழாவிற்கு என்று சில சடங்குகளும் உண்டு. குழந்தைகள் காலையிலேயே குளித்துவிட்டு, கிழிசலில்லாத உடையை அணிந்து கொண்டு விருந்தினர்க்காக காத்திருக்க வேண்டும். அவர்கள் வந்தவுடன் முகமன் கூறி வரவேற்பதும், அவர்கள் விடைபெறும்போது நன்றி சொல்வதும் கட்டாயம். அனாதைகளைவிட வசதியாக இருக்கும் அவர்கள், தங்களின் படியிலிருந்து இறங்கி வந்து, உதவி செய்கிறார்கள் என்ற மனநிறைவு விருந்தினர்க்கு ஏற்படவேண்டும் என்ற கடமை விடுதியிலிருக்கும் அனைவருக்கும் உண்டு. 'இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்' எனும் கூற்றை கேலிக்கூத்தாக்கும் நாள் அது.
கண்ணன் ஒருமுறை நண்பனிடம் கேட்டான்.
"ஏண்டா, அவங்க பிறந்த நாளுக்கு சாப்பாடு போடுறாங்களே, இங்க இருக்குற நம்ம பிறந்த நாளுக்கும் சாப்பாடு போட்டா நாம இன்னும் நிறைய நாளுக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாமே!"
அந்தச் சிறுவனுக்கும் புரியவில்லை. "தெரியலடா...நாம பெருசானா போடுவாங்க போல."
பெரிதான பிறகு, குழந்தைப்பருவத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் இது போன்ற சிறு சிறு நினைவுகளே கண்ணனுக்கு வந்தன.
அது இறைவனின் கைங்கரியமே! இறைவனுக்குத் தெரியும். தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, இயலாமையால் பொறுத்துப் போகும் பண்பு மட்டும் குழந்தைகளுக்கு இல்லாவிடின் உலகத்தில் மக்களின் எண்ணிக்கை இன்று இருப்பதைவிட மிக குறைவாகவே இருக்கும். ஆம், அரசன் மட்டுமல்ல, கடவுளும் அன்றே கொல்வார்.
யோசித்துப் பாருங்கள். நீங்கள் எட்டி உதைத்தாலும், மிதித்தாலும் முடிந்தவரை அழுதுவிட்டு, பின்பு உங்கள் கால்களையே சுற்றி வருவதை விட குழந்தையால் வேறு என்ன செய்துவிடமுடியும்? இந்த உலகம் உங்களுக்கு தரும் துன்பங்களை நீங்கள் அங்கு எதிர்க்காமல், உங்களின் வக்கிர புத்தியால் வீட்டில் குழந்தைக்கு தண்டனையாகத் தந்தாலும், உங்களை மன்னிப்பதை விட குழந்தையால் என்ன செய்துவிட முடியும்? மன்னிப்பதும், மறப்பதும் சிறு குழந்தைகளின் தலையெழுத்து.
இப்படி விளையாடிக் கொண்டிருந்த நினைவுகள் கண்ணனுக்கு இருந்தாலும், அவன் உணரும் முன்னே பள்ளிக்கு செல்லும் பருவமும் வந்துவிட்டது. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது ஆயாதான் வந்து சொன்னார்கள். "பசங்களா, இந்த வருஷம் ஸ்கூலுக்கு சேரணும். யூனிஃபார்ம் எடுக்கணும். அளவு எடுக்க டைலர் வருவார்."
குழந்தைகளுக்கு குதூகலம் பிறந்தது.
"கண்ணா, அப்போ நாமளும் பெரிய பசங்களாயிட்டோமா?
"ஆமாம். இனிமே நாம கூட ஸ்கூலுக்கு போறோம். வா, தாத்தாகிட்ட சொல்வோம்."
இந்த செய்தியைக் கேட்டதும் தாத்தா மகிழ்ந்து போனார். அவர் சொன்னார்.
"கண்ணுங்களா, நாங்க எல்லாம் படிக்க முடியாம போயிட்டோம். ஒரு பிடி சோறுக்கு அலஞ்ச காலந்தான் என் வாழ்க்க. நீங்க அப்படி இருக்கக்கூடாது. நல்லா படிங்க. விருப்பத்தோட படிங்க. ஏட்டுப் படிப்போடு விட்டுடாதீங்க. காலம் தரும் அனுபவத்தையும் நினவுல வெச்சுக்கோங்க. உழைப்புல வரும் இன்பம் எல்லாத்தையும் விட மேலானது."
சட்டென்று அமைதியாகி, சில நொடிகள் அந்த குழந்தைகளையே பார்த்தார்.
"எல்லாம் இருப்பவனே இந்த வாழ்க்க புயல்ல திக்கித் திணறி போறான். இந்த பிஞ்சுங்க...?"
ஏனோ தெரியவில்லை. தாத்தா அன்று அழுதார். இரு குழந்தைகளையும் கட்டி பிடித்தவாறே இலேசாக விம்மியவாறே அழுதார். அவர் அழுவதை கண்ணன் அன்றுதான் பார்த்தான்.
சில நொடிகளிலேயே சுதாரித்துக்கொண்டவர், "சே, படிக்காத மர மண்ட நான். எம் புள்ளங்க படிக்கப் போதுங்க! வேர் திடமா இருக்கும் இந்த செடிங்க நல்லா இருப்பாங்க. என் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு. நல்லா படிங்கடா, என் சாமிங்களா!
கிழவர் நகர்ந்து போய்விட்டார். கேசவன் கேட்டான். "ஏன் தாத்தா அழுறாரு?"
கண்ணன் சொன்னான். "நாள் பூரா நம்மள விட்டு பிரிஞ்சு இருக்கணும்ல...அதுக்கா இருக்கும்."
அந்த இரு அனாதை குழந்தைகளும் மெலிதான சோகத்தில் ஆழ்ந்தன.
அனாதையின் கரங்கள் - பாகம் 2
ரா. பாரத்ராம்.
02/05/2020
இந்த செய்தியைக் கேட்டதும் தாத்தா மகிழ்ந்து போனார். அவர் சொன்னார்.
"கண்ணுங்களா, நாங்க எல்லாம் படிக்க முடியாம போயிட்டோம். ஒரு பிடி சோறுக்கு அலஞ்ச காலந்தான் என் வாழ்க்க. நீங்க அப்படி இருக்கக்கூடாது. நல்லா படிங்க. விருப்பத்தோட படிங்க. ஏட்டுப் படிப்போடு விட்டுடாதீங்க. காலம் தரும் அனுபவத்தையும் நினவுல வெச்சுக்கோங்க. உழைப்புல வரும் இன்பம் எல்லாத்தையும் விட மேலானது."
சட்டென்று அமைதியாகி, சில நொடிகள் அந்த குழந்தைகளையே பார்த்தார்.
"எல்லாம் இருப்பவனே இந்த வாழ்க்க புயல்ல திக்கித் திணறி போறான். இந்த பிஞ்சுங்க...?"
ஏனோ தெரியவில்லை. தாத்தா அன்று அழுதார். இரு குழந்தைகளையும் கட்டி பிடித்தவாறே இலேசாக விம்மியவாறே அழுதார். அவர் அழுவதை கண்ணன் அன்றுதான் பார்த்தான்.
சில நொடிகளிலேயே சுதாரித்துக்கொண்டவர், "சே, படிக்காத மர மண்ட நான். எம் புள்ளங்க படிக்கப் போதுங்க! வேர் திடமா இருக்கும் இந்த செடிங்க நல்லா இருப்பாங்க. என் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு. நல்லா படிங்கடா, என் சாமிங்களா!
கிழவர் நகர்ந்து போய்விட்டார். கேசவன் கேட்டான். "ஏன் தாத்தா அழுறாரு?"
கண்ணன் சொன்னான். "நாள் பூரா நம்மள விட்டு பிரிஞ்சு இருக்கணும்ல...அதுக்கா இருக்கும்."
அந்த இரு அனாதை குழந்தைகளும் மெலிதான சோகத்தில் ஆழ்ந்தன.
அனாதையின் கரங்கள் - பாகம் 2
******************************************
நன்றியுடன்,ரா. பாரத்ராம்.
02/05/2020
Good writing...
ReplyDeleteBeautifully written Bharath..kadhaiyodha flow azhaga podhu..I can just visualize things the way you've narrated ..anganga sila line bunch dialog Mari nalla irukku..like நிலை நிலங்கள்,இப்போவே யாராவது வெச்சாதானே அப்போ வளர்ந்திருக்கும்,கண்ணால பாக்குற கடவுள்தான் இந்த இயற்கை. அதை ரசி. Therndha yezhuthalargaloda sirukadhai padikura feel kandipa kuduthurukeenga..������
ReplyDeleteThanks very much, Saranya.
DeleteJust noticed there are typo errors..adhu punch dialog solla vanthen..hope you understand what I tried to say irrespective of typo errors :):)
ReplyDelete