பக்கங்கள்

Sunday, November 10, 2024

அடைக்குந்தாழ்

 கதை எழுதி பல நாட்களாகிவிட்டன. நண்பர் ஒருவரோ, நீ ஏன் எப்போதும் சோக கதைகளையே எழுதுகிறாய் என்று கேட்டார். நான் என்ன செய்வேன்? சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். அதுவாவது பரவாயில்லை - என் மனைவி என்னிடம், "நீங்கள் ஏன் romance நிறைந்த காதல் கதை எழுதக் கூடாது" என்று கேட்டுவிட்டாள். என்னை வைத்து அவள் செய்த காமெடியாக இருந்தாலும் எனக்கு அது பிடித்திருந்தது. 

நான் என்ன கதை எழுதுபவனா? அதுவெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்! எல்லா கிறுக்கல்களும் ஓவியமாகிவிட முடியுமா? 

நானெல்லாம் மனதில் எழும் சிறு எண்ணங்களை உரையாக எழுதத் தெரிந்தவன், அவ்வளவே!

இதை எழுதுவதற்கும் அதுவே காரணம். 

******************************************************************

                                                    அடைக்குந்தாழ் 

வானம் தெளிவாக இருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒரு மின்னல் கீற்று தோன்றி மறைந்ததாக எண்ணம் வரும். தூரத்தில் மழை பெய்கிறதோ, இங்கும் மழை வருமோ என்று நாம் வானத்தின் விளிம்பில் தேடுவோம், ஆனால் அது மீண்டும் வரவே வராது.   மனது ஏக்கப்படும், ஆனால் தோன்றி மறைந்தது மறைந்ததுதான். 

அப்படி ஏற்பட்ட ஏக்கத்தின் மிச்சம்தான் இந்த கதை. மன்னிக்கவும். இதை கதையாக்கி மறக்க நான் முயன்றாலும் மறையாத வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். இதை என்னுடைய பாவத்தின் மன்னிப்புக்கான தேடலாக வைத்துக் கொள்ளலாம். பொறுங்கள், யார் கண்டது, நீங்களும் இந்த பாவத்தை செய்திருக்கலாம். அங்கு நான் மட்டும் தனியாக இருக்கவில்லையே! 

 கதைக்கு போவதற்கு முன் இரு விஷயங்களை நான் தெளிவுபடுத்தவேண்டும்.

முதலாவது: சென்னையில் கார் ஓட்டுவது. சென்னையில் கார் ஓட்டும்போது, நமது வண்டி மற்றவர்கள் மீதும். மற்றவர்கள் வண்டி நமது வண்டியின்  மீதும் உரசாமல் போவது ஒரு தனிப்பெரும் கலை. அந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்றவன் நான். ஆரம்ப காலங்களில் இருந்த கோபம், ஆத்திரம் எல்லாம் அடங்குவதற்கு சில வருடங்கள் சென்றாலும் பின்பு 'முக்தி' அடைந்து விட்டேன். அதன் பிறகெல்லாம் என்னை யாராவது கடந்து போகும்போது  திட்டினாலும் ("போவத பாரு. அதான் அந்த gap ல பூந்து போக வேண்டியதுதானே..rules பாத்து ஓட்டுது ..புறம்போக்கு") என்றாலும். பாதசாரிகள் கடக்க நான் வழி விட்டால், சிலர் கொஞ்சம் கையை உயர்த்தி நன்றி சொன்னாலும் எல்லாமே எனக்கு ஒன்றுதான். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் அது எனக்கு license கொடுத்தவரையே சேரும்.

இரண்டாவது நான் செய்த வேலையால் வந்தது.Sub conscious mind  என்று சொல்வார்களே (ஆழ் நிலை மனது என்று வைத்துக் கொள்ளலாம்), அந்த ஆழ் நிலை மனது எப்போதும் அலுவலகத்தின் வேலையை பற்றி  நினைத்துக் கொண்டேயிருக்கும்; 'நேற்று யாரெல்லாம் கழுத்தை நெறித்தார்கள், இன்று எவனெல்லாம் கடித்து குதறப்போகிறான் என அலைபாய்ந்துக் கொண்டிருந்தாலும் வெளியில் எதுவும் தெரியாது. 

அதே சமயத்தில் அனிச்சை செயல்களாக எல்லாம் நடக்கும். காலை துயிலெழுந்தவுடன் ("ஐயோ..மறுபடி இதே உலகமா!"), காலைக் கடன்கள் முடிந்து, உடை அணிந்து, காரில் அமர்ந்து, கிளம்பும்போது கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், தெருமுனை திரும்பியவுடன் இயந்திரமாக மாறி, அலுவலகத்தில் விலங்காக மாறி...ம்ம்.. அப்படியே நாளும் முடியும்.

தினமும் ஒரே வழியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதே என் வழக்கம். அப்போதுதான் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும்.

இப்பொழுது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த இரு காரணங்களையும்  நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும், நான் காரில் செல்லும்போது என் கவனம் சிதறாது. உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதெல்லாம் எனக்கு தெரியாமல் இருந்தாலும், விதிவிலக்கு ஒன்று இருந்ததால் வந்தது வினை.

விதியால் எனக்கு குறிக்கப்பட்டிருந்த அந்த நாளும் வந்தது. அன்று நான் எப்போதும் போல் காரில் சென்ற நேரத்தில் முன்புரைத்த சிறு மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. அந்த நேரத்தில் எதுவும் எனக்கு உரைக்கவில்லை. ஆனால் ஆன்று இரவுதான் அந்த மின்னல் கீற்று என் இதயத்தைக் கிழித்து சென்றிருந்ததை உணர்ந்தேன்.

 என்னதான் நடந்தது! அன்று ஒரு குறிப்பிட்டஇடத்தில் பத்திலிருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தை தெருவின் ஓரமாக அமர்ந்து கொண்டு, தெருவில் சென்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த குழந்தை அணிந்திருந்தது அரைக் கால்சட்டை மட்டுமே. வெயிலில் உட்கார்ந்திருந்ததனால், சூரிய ஒளி பட்டு, கறுத்த தோல் மினுமினுத்தது. என் இதயத்தைக் கிழித்தது என்னவென்றால் அந்த குழந்தை சற்று மூளை வளர்ச்சி குன்றியிருந்ததாக எனக்கு புரிந்ததுதான்.

சாலையின் ஓரத்தில், சிறு சுவரின் மேல் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தையின் முகம் மலர்ந்து இருந்தது. அதனுடைய கண்களின் பார்வை மிகவும் ஆழமாக, நம்மையெல்லாம் தாண்டி எங்கோ பார்த்தது. ஆனால் அதில் தேடல்களும் இல்லை, ஏக்கமும் இல்லை. அதனால் ஏமாற்றமுமில்லை. 

அழகிய, மலர்ந்த சிரிப்பிற்கான காரணம் அதுதானோ! 

ஒன்று மட்டும் நிச்சயம், தினமும் அங்கு உட்காரும் நேரம் அந்தக் குழந்தைக்கான நாளின் மகிழ்வு தரும் நேரமாக இருக்க வேண்டும். என்னால் எந்த நாளும் அந்த சிறிய உதடுகளின் மெல்லிய புன்னகையை மறக்க முடியாது.

அந்த மின்னல் கீற்றால் இரத்தம் உள்ளே பொங்கிக் கொண்டிருந்த, அன்றைய இரவு நீண்டதாக, வெறுமையாக, இவ்வுலகத்தின் மீது வெறுப்பு தரும் இரவாக இருந்தது. இந்த வாழ்க்கையே துன்பம்; அப்படி இருக்கும்போது எதற்காக மேலும் வலி அந்தக் குழந்தைக்கு வர வேண்டும்? நான் என்ன புண்ணியம் செய்தவன்? பிறப்பிலேயே அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது? அதையெல்லாம் விட முக்கியமாக, நான் ஏன் அந்தக் காட்சியை பார்க்க வேண்டும்?

இதற்கு விடை எப்படி எனக்கு கிடைக்கும்! புரண்டு, புரண்டு படுத்து தூங்க நேரமானது.

அடுத்த நாளும் அதே வழியில் சென்றாக வேண்டுமே! அப்போது வேறொரு சிறந்த வழியைக் கையாண்டேன். அந்த இடம் வருவதற்கு சற்று முன்பே, கவனத்தை வேறு பக்கம் திருப்பும் அற்புதமான கலை. யாராவது அதைப் பற்றி பேசினால், "அங்கே  என்ன இருந்தது? எனக்கு ஒன்றும் தெரியாதே! அப்படியா? எங்கே? அவ்வளவுதான்."

இப்படியே எல்லாம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நான் வேலை செய்துகொண்டிருந்த அலுவலகத்தில் ராஜினாமா கொடுத்துவிட்டேன். சில நாட்களுக்குப் பிறகு நான் வேறு ஒரு அலுவலகத்தில் சேர வேண்டும்.

 அன்றுதான் அந்த வழியில் நான் செல்வது கடைசி முறை. அடுத்த நாளிலிருந்து என் பாதையும் பயணமும் மாறிவிடும். 

அந்தக் கடைசி நாளில், கவனத்தை திசை திருப்ப மறந்துவிட்டேனோ, அல்லது ஏதோ ஒன்று என்னை கவர்ந்து இழுத்ததோ - அந்தக் காட்சியை மறுபடியும் கண்டேன். அதே சுவர், அதே கவர்ந்திழுக்கும் எளிய, மலர்ந்த சிரிப்பு. ஆனால் அக்குழந்தைக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். 

அப்பொழுது வாகன நெரிசல் ஏற்பட்டு எல்லா வாகனங்களும் ஊர்ந்து செல்லத் தொடங்கின. ஆதலால் முழுக் காட்சியையும் நான் தெளிவாகப் பார்த்தேன். வேலைக்கு செல்லும் அந்த பெண் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி அவருக்காக கொண்டு வந்திருந்த மதிய உணவை அந்தக் குழந்தைக்கு ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருந்தார். அக்குழந்தையும் தன் தாயால் ஊட்டப்படுவதைப் போன்று எந்த மறுப்பும் சொல்லாமல், அந்த உணவை மென்றுகொண்டே, எப்போதும் போல் மலர்ந்த முகத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

திகைத்துப்போன என் நெஞ்சினுள்ளே இரத்தம் வடிவது போலிருந்தது. பல நூறு வாகனங்கள், அவைகளில் பயணித்த பல நூறு (ஏன்னைப் போன்ற) மனிதப் பிறவிகள் - எல்லோருமே முகத்தை திருப்பிக் கொண்டு தன் வாழ்க்கையை பார்ப்போம் என்றோ, ஒரு சிறிய உச்சு கொட்டிவிட்டு விரைவாக கடந்து போகும்போது எப்படி அந்த பெண்ணால் அவளுக்கு சொந்தமில்லாத அந்த துயரத்தின் அருகே செல்ல முடிந்தது, முகம் மலர்ந்திருந்தாலும் வயிறு வாடியிருக்குமோ என்ற எண்ணம் எப்படி தோன்றியது. அந்தப் பெண்ணால் எப்படி அவள் அன்பை, பாசத்தை மறைக்காமல் பொழிய முடிந்தது. அப்படி அந்தப் பெண்ணுக்கும், எனக்கும் என்னதான் வித்தியாசம்?

அப்பொழுது அந்த பெண் முகத்தை கொஞ்சம் திரும்பி. அந்தக் குழந்தை எங்களைப் பார்த்த்து போல அவளும் இந்த விந்தையான மனிதக் கூட்டத்தை பார்த்தாள். ஆனால் அவள் பார்வை முற்றிலும் வேறானது. அந்தப் பார்வையில் கோபமில்லை, வெறுப்புமில்லை. அதன் பொருளே வேறு.

என்னால் என்றும் மறக்க முடியாத, "உங்களில் ஒருவர் கூட கவனிக்கவில்லையா" என்ற பொருளுடைய,  ஏக்கத்தின் வேதனை மிகுந்த அந்தப் பார்வையால் நான் நொறுங்கிப் போனேன்.  

அவளின் கண்களில் கண்ணீர் மண்டியிருந்தது. அன்பின் மொத்த உருவான அந்தக் கண்ணீர்..ஓ..அதன் ஒரு துளி என்மேல் பட்டிருந்தாலும், என் வாழ்வின் அனைத்து பாவங்களிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டிருப்பேன். இந்த உலகத்தை வழி நடத்தும் அவள் போன்ற கடவுள்களை நாம் காண்பது அரிது. அந்த அரிய நேரத்தில் காரிலிருந்து இறங்கி, அவள் காலில் விழுந்து வணங்கியிருக்க வேண்டும். 

இறங்க யாரும் இடம் தராததால்  என்னால் முடிந்ததெல்லாம் மானசீகமாக அவள் காலைத் தொட்டு வணங்கியதுதான்.

(தூய, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத) "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்"


*******************************************************************

ரா. பாரத்ராம்

10 Nov 2024