"கிளம்புறேண்டா."
"இருடா. என்ன அதுக்குள்ள. மழை நின்னமாதிரி தெரியலையே"
"அய்யய்யோ.. மறுபடி தொடங்கினா அவ்ளோதான்."
சந்துரு கிளம்பிவிட்டான். நாங்கள் இருவரும் அதுவரை படு இழுவையான IPL match பார்த்துக்கொண்டிருந்தோம். சோதப்பலிலும் சொதப்பல். இதுவரை அவன் இருந்ததே அதிசயம்.
என் வீட்டில் யாருமில்லை. இந்த மேட்ச் பார்க்கத்தான் வேலையிலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்தேன். வீட்டிலும் யாருமில்லாததால் தூக்கம் வரும் வரை நேரத்தைக் கழிக்க வேண்டும்.
முதலில் நாங்கள் சாப்பிட்ட மிச்ச மீதியை குப்பைக் கூடையில் போட்டு விட்டு, தட்டுகளை கழுவிவிட்டு, மேஜையை துடைத்து விட்டு, கடைசியாக கொஞ்சம் Room Spray அடித்து விட்டேன். சூப்பர். என் மனைவியே வந்தால்கூட ஒன்றும் சொல்ல முடியாது.
வெளிக்கதவை மூடிவிட்டு, தாழ்ப்பாளும் போட்டு விட்டு உள்ளே வந்தேன். சரி, கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாமென்று Couch'ல் சாயந்தவாறே சேனலை மாற்றிக் கொண்டே வந்தேன். ஏதோ ஒன்றில் பழைய தமிழ் திரைப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சரி, சிரிப்புக் காட்சிகள் நன்றாக இருக்குமென்று நினைத்து, சாயந்தவாறே படுத்துக்கொண்டு பார்க்கலானேன்.
'திடும்' என்ற இடி ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். தூங்கிவிட்டேன் போல. வெளியில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக முன்பே ஜன்னலை மூடியிருந்தேன். இல்லையென்றால் இடியின் சத்தம் இன்னமும் அதிகமாக இருந்திருக்கும். பேய் மழை பெய்து கொண்டிருந்தது.
வெளியில் மழை பெய்வதால் டிவியில் ஒன்றும் வரவில்லை. 'இணைப்பு ஒழுங்கா இருக்கா பார் அல்லது வெளியில் மழை பெய்துகொண்டிருக்கும்' (என் மேல் ஒரு தப்புமில்லை) என்கின்ற செய்தியை தெரிவித்து விட்டு அது அமைதியாக இருந்தது. சிறிது நேரத்தில் அதுவும் போய்விட்டு வெறும் வெள்ளை புள்ளிகளாக பொறிந்து கொண்டிருந்தது.
டிவியை switch off செய்ய வேண்டும், ஆனால் remote control எங்கே என்று தெரியவில்லை. எழுந்து தேடுவதற்கும் மனமில்லை. அப்படியே சுகமாக படுத்துக் கிடந்தேன்.
பாதி சொக்கியிருந்த என் கண்களில் ஏதோ அசைவது போலிருந்தது. தூக்கத்தை கலைப்பதற்கு மனமில்லை. ஆதலால் அப்படியே கிடந்தேன். ஆனாலும் வெளிச்சம் அதிகமாவது போல தோன்றியதால் கண்களைத் திறக்க வேண்டியதாயிற்று. TV யிலிருந்து வரும் வெளிச்சம் அதிகமானதால் வேறு வழி இன்றி கண்களை முழுதும் திறந்தேன்.
உங்களுக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கும், ஆனால் நான் சொல்வது உண்மை. வெளிச்சப் புள்ளிகள் முதலில் ஒரு கால் போல அமைந்து பிறகு ஒரு கையும், மற்றொரு காலும் கடைசியில் முழு உடலாக வெளியே வந்தது.
சட்டென்று எழுந்து அமர்ந்தவனை அது உற்று நோக்கியது. பிறகு "உஷ்.. அப்பா.. என்ன.. உஷ்ணம்!" என்று சொல்லிவிட்டு மறுபடியும் என்னைப் பார்த்து, "ஏனப்பா, தூங்கும்போது டிவியை அணைத்து தொலைக்க மாட்டீயா" என்றது.
கட்டளை என் மனைவி சொல்வது போல இருந்தாலும் உருவம் சற்று சிறியதாக இருந்ததால் என் மனைவியில்லை என்பது முதலில் தெளிவானது. அது கொஞ்சம் நிம்மதி கொடுத்தாலும் யாராக இருக்கும், ஒருவேளை!!!!?
என் திருட்டு முழியைப் பார்த்து அது சிரிக்கத் தொடங்கியது. "ஆமாம், நான் பேய் தான். சந்தேகம் வேண்டாம்."
பொதுவான வழக்கப்படி நான் மயங்கியிருக்க வேண்டும், ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலால் நான் மயக்கத்தைப் பற்றி யோசிக்காமல் அதையே உற்று நோக்கினேன்.
அது ஒரு ஆண் பேய் (பேய்களில் பால் பாகுபாடு முக்கியமா என்றாலும் நான் இதை குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது). அதற்கு 60 வயதிற்கு மேலிருக்கும்! வயது அதற்கு மேலும் இருக்கலாம், ஆனால் வெளிச்சப் புள்ளிகள் திடமாக இல்லாமல், காற்றில் அசையும் புற்களைப் போல் இருந்ததால் என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
"பரவாயில்லையே! என்னைப் பார்த்ததும் மயங்கவில்லையே! கல்யாணமாகி பத்து வருடங்களுக்கு மேல் இருக்குமோ?" என்றது.
உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாலும் மயக்கமாகவில்லை.
"பயப்படாதே, சொல்லு!"
"ஆமாம். கல்யாணமாகி பதினைந்து வருடங்களாகிவிட்டது."
"ம்.. அப்படித்தான் இருக்க வேண்டும்."
"நீங்கள் யார்? எதற்காக என் வீட்டுக்கு வந்திருக்கின்றீர்கள்?"
"நானா? உன்னை கடித்து திங்க வந்திருக்கின்றேன்." கடகட வென்று சிரிக்கத் தொடங்கியது.
பயம் என்னை விட்டு விலகத் தொடங்கியது.
மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டேன்.
"விட மாட்டீயா? சரி சொல்றேன் கேள். இப்படியே தெற்கு திசையில் பத்து நிமிஷம் நடந்தா ரொம்ப நாளா பூட்டிக் கிடக்கின்ற வீட்டில், என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் நிம்மதியாக இருந்தோம். உங்க பயலுங்க விடுவாங்களா? ஏதோ பேய் படம் எடுக்குறோம்னு சொல்லிட்டு ஒரு கும்பலே வந்திருச்சு. நாளெல்லாம் தடமுடான்னு ஒரே சத்தம். லைட் அடிக்ககிறது என்ன, டமால் டுமாலுன்னு சத்தம் போடுறது என்ன.. பிசாசு பயலுங்க.. அதிலும் ஒரு பொண்ணு பேய் வேஷம் போடுறேன்னு கருப்பு பூசிக்கிட்டு வந்தா பாரு..!! பயந்து போய் அடிச்சோம், பிடிச்சோமுன்னு ஓடி வந்துட்டோம்."
"சரி, இந்த பக்கம் நிறைய மரம் இருக்குமேன்னு வந்தா, உங்க ஆளுங்க மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டுட்டு ரோடு போட்டுட்டானுங்க! நீயே சொல்லு, நாங்க எங்க தங்குறது? ரோட்டுலேயே தூங்குனா, வண்டிங்க வரும் போது நாங்க பயந்து போய், ஆன்னு அலறிக்கிட்டு, கண்ணாடி முன் நின்னா, பாவம் அந்த டிரைவர் பயல் எவ்வளவு பயப்படுவான்!! அதனால பொது நலன் கருதி, இருக்குற ஒரே ஒரு புளிய மரத்துக்கிட்ட போனா, ஒண்டிக்குடித்தின வீடு மாதிரி ஒரே கூட்டம். என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. பார்த்தேன், ஏனோ தெரியவில்லை, உன் வீடு பிடித்திருந்தது. வந்து விட்டேன். முன்ன பின்ன இங்க பேய் வாழ்ந்திருக்குமோ?"
"தெரியவில்லை, பேய் சார். என் மனைவி ஊருக்கு போயிருக்கிறாள்."
"போகட்டும்.. போகட்டும்.." வீட்டை கண்ணாலேயே சுற்றிப் பார்த்தது.
"பேய் சார், எனக்கு ஒரு சந்தேகம்"
"கேளு"
"பேய்களெல்லாம் எங்களை பயமுறுத்தும், அடிக்கும்னு தானே சொல்வாங்க."
"யார் சொன்னது?"
"சினிமாவுல.."
"நாங்க ஏண்டா உங்கள அடிக்கப் போகிறோம்? எங்களுக்கு வேற வேலையில்லையா? சினிமாக்காரப் பயலுங்க சொன்னா நம்பிவிடுவதா? நாங்களும் உங்கள் மாதிரி ஒரு காலத்துல மனுஷங்களா இருந்தவங்கதானே! நாங்க அடிச்சாலும் உங்களுக்கு ஏன் வலிக்கப் போகுது?"
"அது எப்படி பேய் சார்?"
அது ஆச்சரியத்துடன் என்னை உற்று நோக்கியது.
"தம்பி, என்ன படிச்சிருக்க?"
"இன்ஜினியரிங், பேய் சார்."
"நல்லா படிச்ச போ! Force, அதான், விசையின் definition என்ன?"
"ம்..F=mV"
"அதாவது பொருளின் நிறை அல்லது எடை முக்கியம் அல்லவா?"
"ஆமாம்"
"புறாவின் மெல்லிய இறகு கூட என்னதான் காற்றில் மிதந்தாலும் கடைசியில் தரையில் விழும். ஏனென்றால் புவி ஈர்ப்பு விசை. நாங்களோ காற்றிலேயே மிதக்கிறோம், எங்களுக்கு என்ன இறக்கையா உள்ளது?"
"இல்லை."
"அப்போ இறகை விட லேசான நாங்கள் உங்கள் மீது மோதினால் உங்களுக்கு அடிபடுமா?"
"அடி படாது போலத்தான் தோன்றுகிறது."
"அப்புறம் என்ன வீண் பழி எங்கள் மீது? சரி, எங்களின் எடை என்னவாக இருக்கும்னு சொல்லு பாக்கலாம்."
"தெரியலையே."
"நீ CBSE யா, இல்லை ஸ்டேட் போர்டா?"
"ஸ்டேட் போர்ட்."
"அதானே பார்த்தேன். இதே சிபிஎஸ்இ யா இருந்தா ஒரு பேயை பிடிச்சு, எடையை கண்டுபிடிச்சிருப்பான்."
அவமானத்தில் தலை குனிந்தேன்.
பேய் ஹாஹா வென்று சிரித்து, "கவலைப்படாதே தம்பி, எல்லாரும் சொல்லுவாங்க, அதான் நானும் சும்மா சீண்டிப் பார்த்தேன்."
"நேரமாகிறதே! நான் கிளம்பவா?"
"பேய் சார், எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன."
"கேளு தம்பி."
"இல்ல. நிறைவேறாத ஆசையோட செத்தவங்கதான் பேயா அலைவாங்கன்னு சொல்லுவாங்க. அது உண்மையா?"
பேய் சிறிது நேரம் தலையைக் குனிந்து தரையை பார்த்தபடி நின்றது.
பிறகு என்னை ஊற்றுப் பார்த்து, "தம்பி நீ கேக்குற கேள்வி முட்டாள்தனமானது! எவன் ஆசையில்லாமல் சாகிறான்? வாழும்போதும் சரி, சாகும்போதும் சரி. ஆசையில்லாமல் இருந்தவனே கிடையாது. இதுல பாரு! பணப் பித்து புடிச்சவன் பணப் பேயாம்! எதுக்கு தேவையில்லாம எங்க பேரை இழுக்கறீங்க! ஏதாவது பேய் என்னிக்காவது உங்ககிட்ட காசு கேட்டுருக்கா? இதோ பாரு, இந்த பணம் காசெல்லாம் உங்க உலகத்துக்குத்தான். இங்க வந்து பாரு! எது முக்கியமுன்னு நினைச்சியோ அது தேவையே இல்லைன்னு தெரியும்!
எனக்கு சாவதற்கு முன் என் பேரப்பிள்ளையை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. என்னிடம் நயா பைசா தேறாது என்று புரிந்த என் மகன் என்னை வீட்டுக்குள் விடவேயில்லை."
"என்ன சொல்றீங்க பேய் சார், நீங்க இப்போ கூட போய் பார்க்கலாமே!"
"இப்போ போய் பார்த்து என்ன ஆகப் போகுது? குழந்தை பயப்படும். அதுமட்டுமல்லாமல் எனக்கு என் வீட்டின் விலாசமே மறந்து விட்டதே!"
அது பொய் சொல்கிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.
"அது எப்படி பேய் சார், உங்களுக்கு தெரியாம போகும்?"
"உனக்கு சொன்னா புரியாது, தம்பி. பல விஷயங்கள் புதுசா இருக்கு. செத்து இந்த நிலைக்கு வந்தபோது ஒன்னுமே புரியல. மத்தியானத்துல தூங்கிட்டு முழிச்சு பாத்தா, அது காலையா, மாலையான்னு புரியாதுல்ல, அப்படித்தான் இருந்தது. சாகுறது என்ன சுலபம்னு நினைச்சியா?காதறுந்த ஊசியும் வாராதுன்னு சொன்னாங்களே, அவங்க எல்லாம் பைத்தியமா? எனக்குன்னு இருந்த ஒரே சொத்தான அந்த உடம்பையே விட்டுட்டு வந்தேன்! அப்புறம் என்ன விலாசத்தையா கையுல தூக்கிக்கிட்டு வருவேன்?
"மன்னிக்கனும் சார், எனக்கு தெரியாது இல்லையா!"
"உயிரோடு இருக்கும்போது மனுஷனுக்கு என்னதான் தெரியுது! இங்க வந்து பாரு. உயிரோடு இருக்கும்போது எவ்வளவு முட்டாள்களா இருந்திருக்கோம்னு இப்போ புரியுது."
அவரிடமிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய்விட்டது. வீட்டிற்கு வந்த விருந்தாளியாய் கவனிக்க தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு வெட்கத்தை உண்டாக்கியது.
"மன்னிக்கனும் சார், உங்களை கேட்கவேயில்லை. சாப்பிடவோ அல்லது குடிக்கவோ ஏதாவது கொண்டுவரவா?"
பேய் ஹாஹாவென்று பேய் சிரிப்பு சிரித்தது. "கவலையேபடாதே, அந்த ஒரு விஷயத்தில் நாங்க உங்க உலக மகா பணக்காரர்களை விட கொடுத்து வைத்தவர்கள். எங்கள் வாழ்க்கையில் பசியுமில்லை, தாகமுமில்லை."
எனக்கு பேய் வாழ்க்கையின் மீது பொறாமை உண்டாயிற்று.
"ஆஹா, சமத்துவமான உலகம் உங்களது பேய் சார்."
இருக்கலாமென்பது போல் தலையை ஆட்டியது.
"ஆமாம், அது என்ன சார் சாருன்னுட்டு? நான் என்ன மந்திரி பேயா இல்ல படிச்ச ஐஏஎஸ் பேயா? சாதாரணமான ஆளுதான். உன் அப்பா இருக்காறா?"
"இல்லை, இறந்துட்டாரு."
"முட்டாள்தனமான கேள்விகளை கேட்கும்போதே தெரியுதே. அப்பா என்றே கூப்பிடு. நான் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிடுவேன். இந்த ஊரில் ஒரு காலியான மரத்தை தேடுவது எவ்வளவு கஷ்டமா இருக்கு! செத்தாலும் நிம்மதியாக இருக்க விடமாட்டானுங்க போலிருக்கே!"
அப்பா போல கூடவே வைத்துக் கொள்ளலாமென்று தோன்றியது. ஆனால் என் மனைவி விடமாட்டாள். துரத்திவிடுவாள். மனிதனோ, பேயோ அல்லது பூதமோ, எல்லாமே அவளுக்கு ஒன்றுதான்.
மனதில் அப்போது எழுந்த கேள்விகளை கேட்டுவிடுவோமென்று தோன்றியது.
"பேயப்பா, வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்."
நான் கிண்டல் செய்கிறேனோ என்று எண்ணி அது என்னை முறைத்துப் பார்த்தது.
"என்ன தம்பி, கொஞ்சம் நல்லபடியாக பேசினால், பயம் போய்விட்டதா?"
"ஐயையோ, அப்படியெல்லாம் இல்லவேயிலை. என் தந்தை உயிரோடு இருந்திருந்தாலும் இதைத்தான் கேட்டிருப்பேன். வருடங்கள் ஓடிவிட்டன. நல்லபடியாக வாழ எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஒரு மனிதனாக எப்படி வாழ வேண்டுமென்று புத்தகங்கள் சொல்கின்றனவோ அதைப் பின்பற்றியே நடக்க முயல்கிறேன். ஆனாலும் எங்கோ ஏதோ குறை இருந்தபடியே இருக்கின்றது. ஏதோ ஒன்று என்னை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நான் என்னதான் பாடுபட்டாலும் அதை வீழ்த்த முடியவில்லை. பிறர் என்னை கேலி செய்வதில் தொடங்கி, உறவுகள் வரை வந்து, இப்போது என் வாழ்க்கையை நானே கேலி செய்யும் அளவிற்கு வந்துவிட்டது."
நான் தொடர்ந்தேன்.
"நீங்களே சொல்லுங்கள் பேயப்பா. அன்பு, பாசம், கருணை என்று பெரிய வரிசையை சொல்லிக் கொடுத்தனர். இங்கே அதையெல்லாம் காணவே முடியவில்லையே! சட்டப்படி பாரக்கப்போனால் எட்டடி தான் சொந்தம் என்று பட்டுக்கோட்டை கவிஞர் சொன்னார். இங்கு நடப்பதுவெல்லாம் அப்படியில்லை என்பதுபோலவே இருக்கின்றனவே! மேலும், மேலும் வேண்டும் என்கின்ற பொருளாசை இந்த உலகம் முழுதும் பரவிக்கிடக்கிறது. எல்லா உயிர்களுக்கும் - மனிதனுக்கும், மண் புழுவிற்கும் - பொதுவான மரணத்தைப் பற்றி யாருக்குமே தெரியவில்லையே! முடிவில்லா வாழ்க்கை, முடிவில்லா இன்பம், என்றல்லவா அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பிறர் அழிந்தாலும் தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். சாகக் கிடப்பவனை, போய் ஒழியட்டும் என்று நினைப்பவர்கள், தனக்கும் அதே நிலை ஒரு நாள் வந்தே தீரும் என்பது புரியாமல் இருப்பது எனக்கு குழப்பமாகவும், வருத்தமாகவும் இருக்கின்றது. அப்படியென்றால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்ற புனித வார்த்தையே தவறா? அப்படியென்றால் என் வாழ்க்கையே வீணா? மன்னிக்கவும், பேயப்பா. இதை உங்களை விட வேறு யாரிடம் நான் கேட்க முடியும்?"
அந்த வெளுத்த புள்ளிகளால் நிறைந்த பேய் என்னை சற்று நேரம் வேதனையோடு பார்த்தது போல் இருந்தது.
"வருத்தப்படாதே மகனே, எனக்கு இறுதி காலத்தில் வந்த கேள்விகள் இப்போதே உன்னிடம் வந்துவிட்டன. அதற்காக மகிழ்ச்சி கொள். நான் உன்னிடம் சந்தோஷமாகவே பேசிவிட்டு செல்லலாமென்று நினைத்தேன். அது முடியாது போலிருக்கின்றது. அந்த நல்லவர்கள் சொன்னவையெல்லாம் உண்மைதான். காலம்தான் மாறி விட்டது. இப்போது அந்த வார்த்தைகளெல்லாம் பழைய பஞ்சாங்கம் போலாகிவிட்டன. நானும் உன்னைப்போலத்தான் இருந்தேன். இன்றைய கால உலகம் இப்படித்தான் இருக்கின்றது. ஆனால் இதுவே இறுதியாக இருக்க முடியாது. என்றோ ஒருநாள் மனிதர்களின் பேராசைகளும், பொறாமைகளும், அடுத்தவன் வேதனையை புரியாதது போல் நடிக்கும் பாங்கும் மாறியே ஆக வேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகுமோ தெரியவில்லை. ஒருவேளை அது நடப்பதற்குள் இந்த உலகமே வெடித்து சிதறினாலும் சிதறிவிடலாம்."
"நான் புரிந்து கொண்டதை மட்டும் உனக்கு சொல்கிறேன். உங்களுடைய இன்றைய உலகத்தின் கடவுள் பணம்தான். அதுவே உங்கள் மனதை ஆள்கிறது. ஒருவர் எதன் மீது அதிக அன்பையும், பாசத்தையும் வைக்கின்றாரோ அது அவருக்கு அதிக வேதனையைக் கொடுக்கின்றது. செல்வம் அப்படியில்லையே! அதிக பணம், அதிக மகிழ்ச்சி. சொல்லப்போனால் சொர்க்கத்தில் உங்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்று சொல்கின்றனரோ, அதில் பெரும் பகுதி உங்கள் உலகத்தில் பணக்காரனுக்கு கிடைக்கின்றது.
"டேய் தம்பி, எனக்கு பேச பிடிக்கும். அதுக்காக நான் முடடாளுன்னு நினைச்சிடாதே. முழு வாழ்க்கையும் பார்த்துட்டு வந்தவன் நான். ஏதோ பாதியிலேயே நானே முடிச்சிக்கிட்டு வந்தவனில்லை. நானும் உங்கள மாதிரி பணம், பணமுன்னு அலைஞ்சவன்தான். அது கையில கிடைக்கலங்கறது வேற விஷயம். அதுக்காக உண்மையை சொல்லாம இருக்க முடியுமா?
அது தொடர்ந்தது. "கடைசியில திரும்பி பாத்தா, நான் வாழவேயில்லைன்னு தெரிஞ்சுது. ஆனால் அதுக்காக சம்பாதிக்காம இருக்க முடியுமா? அதுவும் உங்க உலகத்துல? ஒரு நாள் கூட பணமில்லாமல் இருக்க முடியாதே! அப்படின்னா பணமும் வேணும், வாழவும் வேணும் அப்படிங்குறதுக்கு என்னதான் வழி? அங்கதாண்டா வெச்சுருக்காங்க சூட்சுமத்த!"
"பணம், மகனே, பணம். அதுதான் உங்களுலகத்தின் கடவுள். பஞ்சமாபாதகங்கங்கள் செய்தவனையும் அது புனிதப்படுத்தும். அன்பு, கருணை எல்லாம் நீங்கள் சொல்லலாம். ஆனால் பணத்தின் முன் அவை மண்டியிடும். உன் மன திருப்திக்காக வேண்டுமானால் நீ அன்பைப் பற்றி சொல்லித் திரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. உங்கள் உலகில் வீழந்தவனை தூக்கி விட அன்பு கொண்ட கரங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ வரலாம். ஆனால் அவனை மிதித்துச் செல்ல ஆயிரம் கால்கள் காத்திருக்கின்றன."
"ஒருவேளை நான் அதை செய்யாத பாவங்களுக்காக (செல்வம் படைத்தவனின் பாவங்கள் தான் உங்கள் உலகிலேயே மன்னிக்கப் படுகின்றனவே!!) நான் இங்கே அலைந்து திரிகிறேன்றேனோ என்னவோ? யாருக்குத் தெரியும்? ஏதோ ஒன்று நடக்க வேண்டும், அது நடந்தால் நாங்கள் அடுத்த உலகிற்கு சென்றுவிடுவோம் போலிருக்கிறது! ஆனால் அது என்ன என்பதுதான் தெரியவில்லை. அந்த புரிதல் இல்லாமல் இருப்பதுதான் மிகுந்த வேதனையைக் கொடுக்கின்றது."
அந்த புதிர் அதற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் தலையை குனிந்திருந்த அதனிடமிருந்து 'ளுக்கும்,ள்ளுக்கும், என்பது போன்ற சத்தம் எழுந்தது.
என்னை நிமிர்ந்து பார்த்தபோது அதன் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சிவந்திருந்தது.
"எங்களால் அழ முடியவில்லை, தம்பி. ஒருவேளை நான் செய்த பாவங்கள் மட்டுமல்ல, நான் உன்னிடம் குறிப்பிட்ட செய்யாத பாவங்களுக்காகவும் கதறி வாய்விட்டு அழுதுவிட்டால் இங்கிருந்து சென்றுவிடுவேனோ? ஆனால் என்னால் முடியவில்லையே! எங்களுக்காக அழ யார் இருக்கின்றனர்?"
வாசல் பக்கம் நகர்ந்து சென்ற அது போகும்போது ஒரு முறை மட்டும் திரும்பிப் பார்த்து, "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், மகனே" என்று மட்டும் சொல்லி விட்டு வெளியில் போய்விட்டது.
என் வாழ் நாளிலேயே மறக்க முடியாத அந்த நாளில், சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலும், ஒரு வேதனை என் நெஞ்சுக்குள்ளிருந்து குத்தியது. என்னதான் நான் அந்த நாளையையும், இக்கதையையும் சோகமாக முடிக்க விரும்பாவிடினும், அந்த வேதனைக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.
ஒருவேளை நானும் இறந்து போனால் இப்படித்தான் அலைவேனோ? பணம், பணம் என்று இங்கே பேயாக அலையாத பாவத்தினால் (செய்ய முடியாத பாவங்களுக்காக) இடைப்பட்ட உலகில் நானும் அலைய வேண்டியிருக்கும் போலிருக்கின்றது. அப்படியென்றால் எனக்கும் யாராவது அழ வேண்டுமோ?
இல்லையில்லை. தந்தையாக நான் கடைசியாக செய்ய வேண்டிய கடமை என்னவென்றால் எனக்காக என் குழந்தை அழக்கூடாது. அதுதான் அங்கே பசியும் இல்லை, தாகமும் இல்லை என்கின்றனரே! இந்த உலகை விட அது எவ்வளவோ பரவாயில்லை.அங்கேயே தங்கி விடலாம்.
ஆனால் இந்த பாசம் என்கின்ற கொடும் குணத்தின் குரூரத்தை பாருங்கள். என்னை அது அடுத்த எண்ணத்திற்கு அழைத்து சென்றது.
ஒருவேளை, மறைந்த என் தந்தையும் இப்படித்தான் அலைந்து கொண்டிருப்பாரோ! நிறைய பாவங்களை சம்பாதித்தார், சொத்து சுகம் ஒன்றும் சேர்க்கவில்லை, அப்படியென்றால் அந்த மனிதனுக்கும் இதே நிலைதானோ! இறந்து, பேயாக, ஒரு அனாதையைப் போல் எங்கோ அலையும் என் தந்தையின் அவல நிலை என் மனதில் பெரும் வேதனையைக் கொடுத்தது.
என் தந்தைக்காக, நான் அறியாமலேயே, என் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கின. யார் மன்னிக்க வேண்டுமோ அவர் என் தந்தையை மன்னிக்கட்டும்!
_________________________________________________
ரா. பாரத்ராம்.
02/10/2023