திருட்டுப் பரம்பரை
சென்னையின் ஒரு சேரிப் பகுதி. மாநகரின் எந்தத்
திசை என்று சொன்னால் வீண்வம்புகள் வருமென்பதால், ஏதோ ஒரு சேரி என்று முடித்துவிடலே
உசிதம். அந்தச் சேரியிலேதான் ‘திருட்டு மாரி’ என்பவன் வசித்து வந்தான். அவன்
குடும்பம் ஒன்றும் பெரியதல்ல: அவன், மனைவி, எட்டு வயது மகன், இரண்டு வயது பெண்
குழந்தை.
‘திருட்டு மாரி’ என அவன் அழைக்கப்படுவதற்கு பல
(பெயர்) காரணங்கள் அச்சேரியிலே சொல்லப்பட்டு வந்தன. ஆனால் எல்லா காரணங்களுக்கும்
முதன்மையானது அவன் பரம்பரையே திருட்டுத் தொழிலை சிரமேற்கொண்டு செய்து வந்ததுதான்!
‘களவும் கற்று மற’ என்பது அவன் பரம்பரையை பொருத்தமட்டில் ‘களவு கற்று மறை’ எனத்
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது போலும்.
ஆனால் பாருங்கள்; மாரி அப்படியொன்றும் பெருமை
வாய்ந்த திருடனில்லை. லட்சங்களும், கோடிகளும் அவனுக்குப் பரிச்சியமற்றவை. அவனைப்
பொருத்தமட்டில், அதிக பட்சம் ஒரு வாரத்துக்கு தேவையான பணத்தைத் தேடிவிட்டால் போதும்.
தேவையான பட்டியலில் ‘உணவு’ முதன்மையான இடத்திலிருந்து இறங்க மறுத்தது என்பதென்னவோ
உண்மை.
அவன் செய்வதெல்லாம் சில்லரைத் திருட்டுகளே! தொழிலில்
அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்ல விருப்பமில்லை என்பதைவிட திறமையில்லை என்பதே
பொருத்தம். அவன் கைத் திறமைக்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானால் - இரயில்
நிலையத்தில், ‘குடிநீர்’ என எழுதப்பட்டிருக்கும் குழாயடியில் உங்களின் ‘வாட்டர் ப்ரூஃ’ கடிகாரத்தை கழற்றி வைத்துவிட்டு, முகம்
கழுவி கண் விழித்துப் பார்க்கையில் கடிகாரம் காணாமல் போயிருக்குமேயானால் மாரி
அங்கு வந்து போயிருக்கக்கூடும். இவ்வகையான திருட்டுகளை கூட்டம் அதிகமிருக்குமிடத்தில்
வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டுச் செல்வதில் கில்லாடி. கூட்டாளி ஒருவன் உண்டு. பெயர்
மணி. மணியின் கடமை என்னவென்றால் மாரியுடன் கூடத் திரிந்து, திருடுவதற்கு உகந்த சூழ்நிலை
நிலவுகிறதா என்பதைக் கணித்து, செய்யலாம் என சைகை கொடுப்பது.
மாரிக்கு ஆயுதம் எதுவும் வைத்துக் கொள்ளும்
பழக்கமில்லை. வன்முறை கையாளாத் திருடன் என்பதாலும்,
குழாயடியில் கழற்றி வைக்கப்படும் ‘வாட்டர் ப்ரூஃ’ கடிகாரத்துக்கு மார்வாடி எவ்வளவு
பணத்தைக் கொடுத்துவிடப் போகின்றான் என்ற இரக்க சிந்தனையாலும் போலீஸ்காரர்களே இவனை
பல முறை கண்டுகொள்வதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
ஆனால் மாரிக்கோ பாட்டன், பூட்டன் கைத்
திறமைகளிலே அபார பெருமிதம்! தன் குலப் பெருமையை மனைவியிடம் பீற்றிக்கொள்வதில் எந்த
ஆணுக்கும் சளைத்தவனில்லை. ”‘என் பரம்பரை எப்பேற்பட்டது தெரியுமா? அம்மாம் திறமைசாலிங்க.
என் பாட்டனெல்லாம் வெள்ளைக்காரத் துரை வீட்டிலேயே கை வெச்சவனாக்கும், (அதற்கு வாங்கிய
சவுக்கடியால் ஒரு வாரத்துக்கு பாட்டன் உட்கார முடியாமல் திரிந்தது வேறு கதை), என்
கெட்ட நேரம்; என் அப்பன் குலத் தொழிலை ஒழுங்கா சொல்லித்தராம சீக்கிரம் போய்
சேந்துட்டான். இல்லன்னா, நானெல்லாம் பட்டிணத்திலே பெரிய திருடனா, ஏன்,
பத்திரிக்கையில போட்டோவோடு வர வேண்டியவன்” என்று தினந்தோறும் மனைவியிடம்
புலம்புவதைக் கேட்கும்பொழுது. ‘வாழ்ந்து கெட்ட குடும்பம்’ என்ற சொற்றொடருக்கு
இணையான - திருட்டுப் பரம்பரைக்கு பொருந்தக்கூடிய - வேறெதாவது தொடரை நினைத்து பரிதாபப்படத்
தோன்றும்.
மாரியின் மனைவியும் ஒரு பாரம்பரியமான திருட்டுக்
குடும்பத்தின் வழி வந்தவள்தான். ஆனால் அவளும் கைத்திறமையற்றுப் போயிருந்ததுதான் விதியின்
கொடுமை. அவளால் முடிந்ததெல்லாம் அவ்வப்பொழுது அக்கம்பக்க குடிசைகளின் அரிசிப்
பானைகளைத் துழாவி கொஞ்சம் அரிசியைத் திருடி வருவதுதான்.
அந்தோ! சேரிப் பகுதிகளிலே உணவுத் திருட்டுகள்
எளிதில், உடனுக்குடனே, கண்டு பிடிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினாலே மாரி
மனைவியின் தலை முடி பற்றி இழுக்கப்பட்டு, உடலை மண்ணில் உருட்டி, எல்லை மீறிய
வசவுகள் ஏவப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டு விடும். அரசன் அன்றே கொல்வான்
என்பதுபோல் ஏழ்மையில் அரிசியும் அன்றே கொல்லும். என்ன! தண்டனை கிடப்பதற்கு முன்னேயே
திருடிய அரிசி வெந்து, நான்கு வயிறுகளுக்குள் சென்று விட்டால், வெற்றிதானே!
மாரியின் பெண் குழந்தையைப் பற்றிச் சொல்வதற்குப்
பெரிதாக ஒன்றுமில்லை. இரண்டு வயதிற்குள்ளேயே - கிடைத்தால் உணவையும்,
கிடைக்காவிட்டால் பூமித் தாயின் மண்ணையும் தின்று உடலைப் பூஷிக்கும் துறவி
மனப்பக்குவத்தை ஏற்கனவே அடைந்திருந்தது.
கவலையெல்லாம் மகனைப் பற்றிதான். தாத்தா அளவுக்கு
தொழில் தெரியாவிட்டாலும், அப்பனுடைய திறமையில் பாதியாவது வேண்டாமா? கெட்ட காலம்
பாருங்கள்; யார் யாரோ படித்தவர்களெல்லாம் ஒருமுறை வந்து மாரியின் மகனை
அருகிலிருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டனர். மகனும் பள்ளிக்கு ஒழுங்காக
சென்று வருகிறான். அங்கே என்ன படிக்கிறான் என்பது மாரிக்கோ, மனைவிக்கோ அல்லது
அவர்தம் குலக் கடவுளுக்கே கூடத் தெரியாத, புரியாத இரகசியம்.
பையன் புத்திசாலி; பாராட்டத்தான் வேண்டும். பள்ளிக்குப்
போனால் ஒருவேளை சோறு கிடைக்கும் என்பதை முதற் பாடமாகக் கற்றுத்தேர்ந்துவிட்டதால்
கல்வியை மறக்க இயலவில்லை. அட! ஒருவேளை சோறு கிடைக்குமென்றால்
பள்ளிக்கூடத்துக்கென்ன, தினமும் நரகத்துக்கு சென்று வரவும் ஏழைக்கூட்டம் தயார்தானே!
மிக்க கவலையுடன் மாரி அன்று இரவு உட்கார்ந்திருந்தான்.
கிட்டத்தட்ட இரு வாரங்களாக அவன் தொழில் திறமைக்கு பொதுமக்கள் யாரும் மரியாதை
செலுத்தவில்லை. அதாவது, தொழில் நடக்கவில்லை. மனைவியும் நேற்று வரை எப்படியோ குடும்பத்தை
பேணி விட்டாள். இன்று அவளும் கை விரித்துவிட்டாள். என்ன செய்வதென்று விளங்காமல் சோகத்தில்
ஆழ்ந்திருந்தான்... குடும்பஸ்தனல்லவா!
குடிசையின் முன் (அதைக் குடிசை என்று சொல்வதே
உயர்வு நவிற்சி) இரண்டு வயது ‘பெண் துறவி’ தவழ்ந்து கொண்டிருந்தது. சோகத்துடன்
அதைப் பார்த்துக்கொண்டிருந்தவன் தலையை இடப்புறம் திருப்பியவுடன் மகன் செய்து
கொண்டிருந்த மாபாதகச் செயலைக் கண்டான்.
‘கலெக்டர் துரை’ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
வந்தது பாருங்கள் மாரிக்கு கோபம்!
“எல்லாம் இந்தத் தண்டத்தால் வந்துச்சு. கூட வந்து
அப்பனுக்கு ஒத்தாசையா இல்லாம இங்க என்ன வேலையைக் கிழிக்கிறான், பாரு!”
“ஏன்யா? அவன் உன்ன என்ன பண்ணான்? அவன்
பாட்டுக்கு படிச்சிக்கிட்டிருக்கான்.”
“கழுத, அதத்தான் நானும் சொல்றேன். இப்ப
என்னத்துக்கு படிக்கிறான்? எங்கூட வேலைக்கு வரலாமில்ல?”
“ஆமா, நீ முதல்ல ஒழுங்கா வேலையைக் கத்துக்க.
காசு கொண்டு வரத் துப்பில்ல... பிள்ளையைப் பாத்துக் கத்துற? இஸ்கூலுக்கு ஒழுங்கா
வரவங்கள்ல இவனும் ஒருத்தன்னு வாத்தியார் நேத்துதான் சொன்னாரு!”
“முதல்ல அந்த ஆளை உதைக்கணும்! எம் பிள்ளையை
ஒண்ணுத்துக்கும் உபயோகமில்லாம ஆக்கிக்கிட்டிருக்கான்...”
“அறிவிருக்கா உனக்கு? படிச்ச பெரிய மனுஷன அப்புடி
எல்லாம பேசலாமா?”
“அவங்களுக்கென்ன? மாசா மாசம் சம்பளம்.. மூணு
வேளைக்கு சோறு... நம்ம கவல அவங்களுக்குத் தெரியுமா? சேரி மனுஷனுக்கு படிப்புக்கு
முன்னால பசிதானே வருது!”
வாக்குவாதம் இப்படியே என்றும் போல் தொடர்ந்திருக்கும்.
பசித்து, உணவில்லாமல் வாடி, மனிதப் பிறப்பை வெறுத்து வாழும் மனிதர்களுக்கு சண்டை
சச்சரவுகளைவிட சிறந்த பொழுதுபோக்கு என்ன இருக்கக்கூடும்? ஆனால், அன்றைய தினத்தில்,
மாரியின் ஒரு கேள்வி சண்டையின் போக்கையே மாற்றிவிட்டது.
மாரி மகனை நோக்கி, “ஏண்டா, அப்படி படிச்சு
என்னவா ஆவப்போறே?”
புத்தகத்திலிருந்து தலைநிமிராமலே சிறுவன்
பதிலளித்தான், “போலீஸ்காரனா ஆவப்போறேன்..”
இடிந்து போய், தலையில் கைவைத்துக்கொண்டு மாரி
தரையில் ஏறக்குறைய விழுந்துவிட்டான்.
“நாசமாப் போறவனே, மறுபடி சொல்லு... என்னவாகப்
போறே?”
“சொன்னேல்லே...போலீசாவப் போறேன்...”
“உன்ன மிதிச்சுக் கொன்னுட்டுதான் மறு வேல..”
மகனை மிதிக்க தகப்பன் பாய்ந்தான். காப்பாற்றத்
தாய் குறுக்கே பாய்ந்தாள். களேபரத்தில் யார், யாரை மிதித்தார் என்பதில்
குழப்பம்... மிதிகளின் முடிவில் கால் முட்டியைத் தடவிக்கொண்டு அமர்ந்தது என்னவோ,
மாரிதான்!
அதோடு அன்றைய பேச்சுவார்த்தை நிறைவுற்றது.
ஆங்காங்கே பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்த நாடாக் கட்டிலை வாசலின் முன், அதாவது
நடுத்தெருவில், போட்டுவிட்டு மாரி படுத்துக் கொண்டான். தெரு (சந்து) குறுகலானது. உண்மையையைச்
சொல்ல வேண்டுமானால், தெருவில் கட்டிலில் மல்லாந்து படுப்பவன் உறக்கத்தில்
ஒருக்களிக்கும்போழுது பாதி உடல் எதிர் குடிசைக்குள்ளே நுழைந்துவிடும் அபாயமுள்ள
அளவிற்கு குறுகலானது. அந்நிய ஊடுருவல்களைத் தடுக்கும் பொருட்டு ஆண்கள் அவரவர்
குடிசையின் முன் படுத்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது.
மாரி வானத்தை பார்த்துப் படுத்திருந்தான்.
பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத வளம் கொழிக்கும் ஜீவநதியில் உற்பத்தியாகும்
கொசுக்கள் கூட இந்த ஏழைகளை மனிதர்களாக மதிப்பதில்லை. ஏழைகளின் உடலில் இரத்தத்தை
தேடுவதைவிட, அக்கரைக்குச் சென்றால் மூன்று வேளை உணவருந்தும் மனிதர்களின் இரத்தத்தை
உறுஞ்சும் உழைப்பு சுலபமானது என்பதால் அவை அங்கே பறந்து சென்றுவிட்டன.
மாரியின் கட்டிலை இடித்தபடி படுத்தான், எதிர்
வீட்டுக்கார மணி. நண்பரின் முக வாட்டத்தை கண்டுகொண்டான்.
“என்ன தலீவரே, சோகமாக் கிடக்கிற?”
“டேய், உனக்கு தெரியாதா? ஒண்ணும் சரிப்பட்டு
வரல... நானும் எம்புட்டுதான் அலஞ்சு பாக்குறது? ஒரு பய ஏமாற மாட்டேங்கிறான்!”
“விடு மாரி...இதெல்லாம் நமக்கு புதுசா?
பாத்துக்குனே இரு, ஜாக்பாட் கிடைக்கப் போவுது...”
“ஆமாண்டா...வாயப் பொளந்த்துக்கினு கிடக்க
வேண்டியதுதான்... காசில்லாததுகூட பரவாயில்ல... இன்னிக்கு என் புள்ள ஒரு வார்த்த
சொன்னான் பாரு, அதுலேந்து மனசே சரியில்ல..”
“நல்ல பையனாச்சேபா... இன்னா சொல்லீட்டான்?”
“ம்... அவன் படிச்சு போலீசு ஆவப் போறானாம்.”
மணி வாய்விட்டு சிரித்து விட்டான்.
“சரிதான் தலீவரே.... நமக்கும் ஒரு போலீசுகாரர்
தயவு வந்துடுமில்ல!”
திட்டிக்கொண்டே மாரி கால்களை நீட்டிப் படுத்து மௌனமானான்.
மறுநாள் காலை, எங்கனமோ மாரியின் மனைவி கொஞ்சம்
கஞ்சிக்கு வழி செய்துவிட்டதால் நான்கு உயிர்களும் விடாப்பிடியாக உடல்களில் மீண்டும்
ஒட்டிக்கொண்டன.
சிறிது நேரத்தில் மகன் பள்ளிக்குப்
போய்விட்டான். தொழிலுக்குப் போக சிறிதும் ஆர்வமின்றி, தெம்பின்றி மாரி சோர்ந்து உட்கார்ந்திருந்தான்.
“ஏய், இன்னா? வெளிய போவல?”
“இல்ல... மனசு சரியில்ல...”
“ஏன்? என்னவாச்சாம் என் ராசாவுக்கு?”
“சும்மாக் கிட. கிண்டல் பண்ணாத... நேத்து பையன்
சொன்னத நினைச்சுப் பாத்தா மனசுக்கு கவலையாவும், பயமாவும் கிடக்கு...”
”கிறுக்கு மனுஷா... அப்படி இன்னா
சொல்லிக்கீனான்? படிச்சு போலீசுகாரனாப் போறது நல்லதுதானே! இந்த திருட்டுப் புத்தி
நம்மளோடு ஒழிஞ்சு போவட்டுமே”
மேலிட்டுப் பார்த்தான். “தொழிலைப் பத்தி
கேவலமாப் பேசாதே”
“ஏன்யா, தெரியாமத்தான் கேக்கிறேன். நீயும்,
உங்கப்பனும் திருடி இன்னா வாழ்க்க வாழ்ந்தீங்க? நம்ம பிள்ளைங்களுக்கு ரெண்டு வேளை
பழைய கஞ்சியாவது ஊத்த முடியுதா? ஏதோ, புள்ள படிச்சு வந்து நம்மளக்கு சோறு
போடணும்னு ரோசனையில்லாம... நாமதான் அன்னிக்குப் பாத்தோமே. அதான், அடுத்த தெருவிலே
குடிசைங்க தீப்புடிச்சு எரிஞ்சு, பொண்டு புள்ளங்கள்லாம் லபோ திபோன்னு வாயிலும்,
வவுத்திலும் அடிச்சிகினு ஓடினப்போ - பெரிய பெரிய போலீசுகாரங்க எல்லாம் இன்னா
கம்பீரமா ஜீப்புல வந்தாங்க! நம்ம மவனும் அதுபோல ஜீப்புல வந்து இறங்கினா எத்தினி
பெருமையா இருக்கும்?”
“அதுக்கு முதல்ல நம்ம குடிசை தீப்புடிச்சு
எரியணும்!” மாரி துவண்டு போன மனதுடன் பேசலானான். “அறிவில்ல உனக்கு... பெரிய ஆபீசர்
ஆவணும்னா எம்மாம் பெரிய படிப்பு படிக்கணும்? அப்படி எல்லாம் படிக்க வைக்க
நம்மகிட்ட காசு இருக்கா? இல்ல, உடம்புல தெம்புதான் இருக்கா? அப்படியே உசிரக்
கொடுத்து படிக்க வெச்சாலும் சாதாரண போலீசுகாரனாத்தான் ஆக்க முடியும். அவனுக பாடு
எங்கள விட மோசம். அதிர்ஷ்டம் இருந்தா நம்ம தொழிலுக்கெல்லாம் அரை மணி நேரத்திலேயே
ஒரு மாசத்துக்கு காசு கிடைச்சிடும். சாதா போலீசுதான் பாக்கிறியே! மாச சம்பளம்
வாங்குறதுக்கு மாசம் முழுக்க வெயிலேயும், மழையிலேயும் நடுத்தெருவிலே நிக்கணும். அவனுங்க
படற பாட்ட நான் ஜெயில்ல பாக்கலீயா? இல்ல, கோர்ட்டுக்கு என்னைய கூட்டிட்டுப்
போறப்போ பாத்ததில்லையா? சில சமயங்கள்ல ஜட்ஜ் ஐயா என்னை திட்றத விட அவங்களத்தான்
அதிகமாத் திட்டுவாரு. நம்ம மவனும் அப்படிதான் கஷ்டப்படனுமா?”
அகல விரிந்த கண்களுடன் கணவனைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
“யோவ், நீ இம்மாம் பெரிய புத்திசாலின்னு
இன்னைக்குதான்யா புரிஞ்சிக்கினேன்! படிச்சு வேலைக்குப் போனா அவ்வளவு கஷ்டப்படணுமா?
மரமண்டைக்கு ஒண்ணும் தெரியல... நீ கவலைப்படாத... தெம்பா இரு.”
மாரி ஆற்றாமை தாங்காமல் தொடர்ந்தான். “எனக்கு
போலீசுகாரங்க சோறு போட்டது நாலு வருஷம்தான் (ஜெயில் வாழ்க்கையை குறிப்பிடுகிறான்).
மிச்ச முப்பது வருஷமும் எனக்கு தெரிஞ்ச, கத்துகிட்ட தொழில்தாம்மே சோறு போட்டுச்சு.”
“நீ சும்மா மனச அலட்டிக்காத... கொஞ்ச நாள் போவட்டும்.
அப்புறம் கடவுள் காட்ற வழி.”
ஆகக் கடைசியில், மகனை பள்ளிக்கு அனுப்புவதைவிட
தொழில் திறமையை ஊக்குவிப்பதே உகந்தது என்ற எண்ணம் திருட்டு மாரிக்கும் அவன்
மனைவியின் மனதிலும் நிலை பெற்றுவிட்டது. பள்ளி வாழ்க்கை உடனடியாக தடை
செய்யப்படாவினும் மகனின் வாழ்வுக்கான தொலைநோக்குத் திட்டம் உறுதியானது.
பாவம்! பையனுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றும்
தெரியாது. வழக்கம்போல் ‘இஸ்கூலுக்கு’ சென்று வந்தான்; இன்றைய கனவான சோறுக்கும், நாளையக்
கனவான போலீசுகார வேலைக்கும்!
ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும். மாரி வகையாக
போலீசிடம் சிக்கிவிட்டான். கடைவீதியில் சுற்றித் திரிந்தவனின் கண்ணில் பட்டது, ஒரு
அழகான பெண்ணின் கைப்பை. நல்ல மொத்தையாக இருந்ததால் உள்ளே காசு நிறைய இருக்கும் என
மாரியின் மனது கணக்குப் போட்டது..
அந்தப் பெண் பையை கல்லாவின் மேல் வைத்துவிட்டு
கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். கடைக்காரரும் பெண்ணின் முகத்தைப்
பார்த்தே பேரம் பேசியதால் மாரி அங்கிருந்ததை கவனிக்கவில்லை. எதிர் வரிசையிலிருந்த
மணி சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மாரிக்கு சைகை கொடுத்துவிட்டான்.
கைக்கெட்டும் தூரத்தில் நான்கு வயிறுகளின் ஒரு
மாதப் பசிக்கு உணவு!
ஒரு எட்டு உள்ளே வைத்து, யாரும் கவனிக்கவில்லை
என்பதை உறுதி செய்துவிட்டு, பையின் முனையைப் பற்றி இழுக்கும் சமயத்தில் அந்தப்
பெண் பார்த்துத் தொலைத்துவிட்டாள். பாய்ந்து ஒரு முனையை அவள் பற்ற, பெண்தானே, ஒரு
இழு இழுத்தால் வந்துவிடும், ஓடிவிடலாம் என கண நேரத்துக்கு அவன் மனதில் தோன்றி –
அவன் இழுத்ததில் அப்பெண் மேஜையின் மேல் விழுந்துவிட்டாள். நிச்சயம் அடிபட்டிருக்கவேண்டும்.
அன்றைய தினம் மாரியின் தொழில் தர்மம் பிறழ்ந்துவிட்டது.
‘தப்பிப்போம்’ என மாரி இரு தப்படிகள்
ஓடுவதற்குள் வேறொரு கைப்பை இடிபோல் அவன் முகத்தில் இறங்கி, கீழே தள்ளியது. அடியா
அது! .ஏதாவது போலீசுகாரியின் கைப்பைத் தாக்குதலாக இருக்குமோ என மலங்க விழித்துப்
பார்த்ததில், அடித்தது உள்ளே விழுந்த பெண்ணின் தாய்! பிறகு கேட்க வேண்டுமா? தர்ம
அடியும், காவல் நிலையத் தஞ்சமும்தான். மணி எப்போதோ நழுவியாயிற்று.
இத்தனை வருட அனுவத்தில் செய்யாத தவறான அடித்தல்,
காயப்படுத்துதல் – போன்ற குற்றங்களைச் செய்ததற்கு ஓராண்டு தண்டனை
விதிக்கப்பட்டுவிட்டது.
இரு வாரங்கள் கழிந்த பின் மாரியின் மனைவி அவனைச்
சிறையில் சந்தித்தாள். வாடிப்போயிருந்த அவள் உடலையும், குழிவிழுந்துபோன கண்களையும்
பார்த்தவுடனேயே தன் குடும்ப நிலை மாரிக்குப் புரிந்துவிட்டது. அவன் கேட்ட
முதற்கேள்வி: “எப்போ சாப்பிட்ட?”
“அது ஆச்சு, ரெண்டு மூணு நாள்... நீ எப்படி
இருக்க?”
“எனக்கென்ன! அதான் தினம் சோறு போடறாங்களே! புள்ளைங்க
எப்படி இருக்காங்க?”
“கஷ்டப்படுதுங்க... வேறென்ன செய்யும்? மவன் இஸ்கூலுக்கு
போறத விட்டுட்டான்.”
“போவறதில்லையா? ஏன்?”
“கூட்டாளி வேணுங்க்கா... சின்னப் பையனா இருந்தா
சந்தேகம் வராது. நல்ல முறையில தொழில் சொல்லித் தரேன்னு மணி கேட்டான். அதுவும்
சரிதான்னு அவன்கூட அனுப்பி வெச்சுட்டேன்.”
“என்ன? நம்ம தொழிலுக்கா?” என யோசித்த மாரியின்
மனதில் புத்துணர்வு பிறந்தது. இனிக் கவலையில்லை... எப்படியாவது, குடும்பத்துக்கு
அப்பப்ப திங்க சோறு கிடைத்துவிடுமென்று மனது நிம்மதியடைந்தது. பல வருடங்களுக்குப்
பிறகு ‘கிடைக்கும்’ என நம்பவேண்டிய மாத சம்பளத்தை விட இன்றைக்கு கிடைக்கும்
கஞ்சிக்கான வழியே மேலானது என நினைத்தது அவன் மனம்.
‘பையனாவது என்னை போல இல்லாம பாட்டன்,
முப்பாட்டன் மாதிரி திறமைசாலியா இருக்கணும்’ – குலதெய்வத்துக்கு மாரியின் ஒரே
வேண்டுதல் இதுவே!
ரா. பாரத்ராம்.
12 March 2015
Good story Bharath and good ending. By the way r u sending this to kumudham or Varamalar (Dinamalar). Varamalar and kumudhan generally contest Sirukadhai potti. Watch fr it. If it is fr 2 pakka kadhai then reducece and send it. Nothing wrong in trying
ReplyDelete