“என்ன? இவ்வளவு
சீக்கிரம்?” வரவேற்றது என் மனைவியின் குரல். இந்தக் கேள்வி இருக்கிறதே! ஆபத்தானது!
இந்த கேள்விக்கு அர்த்தங்கள் பல இருக்கலாம்: உதாரணத்துக்கு,
“ம்..வந்துட்டீங்களா?
இனிமே எனக்கு ஒரே வேலைதான்,”
“ஒ, வந்துட்டீங்களா?
அப்போ வெளியே எங்கேயாவது போகலாமா?”,
“நல்ல காலம் வந்தீங்க!
செருப்ப கழட்டாம அப்படியே போய் மாவு அரைச்சிட்டு வந்திடுங்க! இரண்டு மணி
நேரத்திற்குள்ளே வந்திடுங்க, எனக்கு சீரியல் பாக்கணும்,”
“வாங்க, வாங்க, ஒரு விஷயத்தப்பத்தி
உங்ககிட்ட பேசணும்னுதான் காலையில இருந்து காத்துக்கிட்டிருக்கேன்!” (ஐயையோ)
இது போன்று மேலும்...மேலும்..
கேள்விகளின் பதிலுக்குப்
பின் விளைவுகள் என்ன இருக்கும் என்பது ஒரு புதிர்! புதிர்களுக்கு விடை தேடவா நாம்
சீக்கிரம் வீட்டிற்கு வருகிறோம்! ‘அரை மணி நேரமாவது தூங்க வாய்ப்பு கிடைக்க
வேண்டுமே’ என்று தெய்வத்தை மனதில் வேண்டியபடியே உள்ளே நுழைந்தேன்.
செருப்பை கழற்றிய வேகத்திலேயே படுக்கை அறைக்குப் பாய்ந்து ஒளிந்து கொண்டேன். நல்ல
வேளை! புதிர்களுக்கு விடை தேட வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை!
எந்த இடையூறும்
இல்லாமல் சற்று நேர தூக்கத்திற்குப் பின் வெளியே வந்தேன்! குடும்பத் தலைவர்கள் பொறுப்புகள்
அதிகம் அமையப் பெற்றதைப் போல் சற்றே கடுமையான முகத் தோற்றத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்! அப்போதுதான் நீங்கள் ஏதோ சிக்கலான எதிர்காலப் பிரச்சினைக்குத் தீவிரமாக
யோசிக்கிறீர்கள் என்று மற்றவர்கள் (நம் வாழ்வில் மற்றவர்கள் எங்கே? எப்போதும்
ஒருமைதானே!) நினைத்துக் கொள்வார்கள்.
என் மனைவி சமையலறையில்
அன்று பகலில் தொலைக்காட்சியில் கற்றுக்கொண்ட ஏதோ ஒன்றை சமைக்க முயன்று
கொண்டிருந்தாள். ‘சரிதான், இன்றைக்கும் நான்தான் பரிசோதனை எலியா?’ என்று நினைத்துக் கொண்டேன். அங்கே ஹாலில் என் மகள்
(நான்காவது படிப்பவள்) மிக உன்னிப்பாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். நன்றாக
படிப்பவள். இப்படியே படித்து வந்துவிட்டாளானால் கவலையில்லை. என்னுடைய சிநேகிதனின்
மகள், சம வயதினள், தொலைக்காட்சி முன் உட்கார்ந்தால் மயங்கி விழும் வரை
எழுந்திருக்க மாட்டாள்! இன்னும் காலம் போகப் போக என்ன ஆகப் போகிறாளோ?
காற்றில் மிதந்து வந்த
தீய்ந்த வாடையிலிருந்து ‘பரிசோதனை எலிக்கான பண்டம்’ தயாராகி விட்டதை உணர்ந்தேன்! என் ஆரூடம் பொய்யில்லை என்பதை மெய்ப்பிக்கும்
வகையில் என் மனைவி ஒரு தட்டுடன் என்னை நோக்கி வந்தாள். “இதோ பாருங்க! நீங்க
சீக்கிரம் வந்துட்டதுக்காக ஒரு ஸ்பெஷல் தயாரிப்பு!! சாப்பிட்டு என்னன்னு சொல்லுங்க
பார்க்கலாம்” என்ற அவள் அன்பு மொழிக்கு என் மனசாட்சி, “ம்ம்..சாப்பிட்டா
மட்டும் என்னன்னு தெரியவா போகுது” என்று மனதிற்குள்ளேயே பதிலளித்துக் கொண்டது.
“ஹி..ஹி நான்தான்
பரிசோதனை எலியா?” என்றேன்.
தட்டில் மட்டுமல்லாமல் வேறு எங்கோவும் தீய்ந்ததை
புரிந்து கொண்டேன்!
“ஆமாம். நான் ஆசை ஆசையா செய்வேன். நீங்க இப்படிதான் சொல்லுவீங்க. எலியாம்,
எலி..” என முகத்தை அவள் தோளில் இடித்தபடி
சென்றாள். ‘தட்டின் மீதிருந்ததை வாயில் போட்டேன், பரவாயில்லை, சமாளித்துக்
கொள்ளலாம், ஆறுதல் அடையும் விதமாக இருந்தது. இன்று நான் தப்பித்தேன், ஆனால்
பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று மனது கவலைப்பட்டது.
அப்போதுதான் நினைவு வந்தது. என் மகன் எங்கே? சிறியவன். இப்போதுதான்
பள்ளிக்குப் போகத் தொடங்கியுள்ளான்.
“ஏம்மா, பையன் எங்கே?”
“அடுத்த ரூம்ல பாருங்க! ஸ்கூல்ல இன்னிக்கு சொல்லிக் கொடுத்ததைப் படிடான்னு
சொன்னேன். அவன் எங்கே கேக்கறான்? விளையாடிக்கிட்டு இருக்கான்.”
வீட்டின் உட்புறத்தில் இருந்த சிறிய அறைக்குச் சென்றேன். அங்கே என் மகன் பந்தை
உருட்டியபடியே எதையோ உருப்போட்டுக் கொண்டிருந்தான். பரவாயில்லையே.. பையன்
படிச்சுக்கிட்டுத் தான் இருக்கான் என்று மனதில் மகிழ்ந்தபடியே அவனை நெருங்கினேன்.
அவனுக்குத் தெரியாமலேயே அருகில் போய் மழலை பாடத்தைக் கேட்போம் எனச் சென்றவன்,
வார்த்தைகள் காதில் விழுந்தவுடன் தூக்கி வாரிப்போட்டு நின்றேன்.
பாவிப் பயல்! என்ன சொல்லிக்கொண்டிருந்தான் தெரியுமா! “என் அப்பா பெயர் அறிவழகன். என் அப்பா பெயர் அறிவழகன். என் அப்பா
பெயர் அறிவழகன்.”
“டேய், நிறுத்துடா! என்னடா சொன்ன? மறுபடி சொல்லு!”
“என் அப்பா பெயர் அறிவழகன்..”
“மடையா, என் பெயர் ராமச்சந்திரன்டா..”
“எனக்குத் தெரியாதுப்பா! அம்மாதான் சொல்ல சொல்லுச்சி!”
விக்கித்துப் போய் நின்றேன்! “ஏய், இங்க சீக்கிரம் வாடி..” என்னவோ ஏதோவென்று ஒடி வந்தவளிடம், “உன்
பையன் என்ன சொல்றான் தெரியுமா?”
“இதுக்கா இப்படி கத்துனீங்க. அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும் அவனையே
கேளுங்க”
“பைத்தியமே, அவன் அப்பா பேர் அறிவழகன்னு சொல்றாண்டீ”
“அது என்னமோ எனக்கு தெரியாது. நான் என்ன, உங்கள மாதிரி படிச்சவளா..” என்று சொல்லிக் கொண்டே வெளியே போக
முயன்றவள் சட்டென்று நின்றாள். “என்ன சொன்னீங்க”?
“அவனையே கேட்டுப் பார்!”
“கண்ணா, என்னப்பா சொல்றே..?”
“ஆமாம்மா. நீ தானே என்னை படிக்கச் சொன்னே. அதனாலேதான் சொல்றேன். என் அப்பா
பெயர் அறிவழகன்..”
குறுக்கிட முயன்ற என்னைக் கை நீட்டித் தடுத்தாள்.
“இதை உனக்கு யார் சொன்னா?”
“ஸ்கூல்ல..மிஸ் சொன்னாங்க”
“வேற என்ன சொல்லிக் கொடுத்தாங்க?”
“அப்பா பேர் அறிவழகன், அம்மா பேர் செல்வி. தாத்தா பேர் அம்மையப்பன்.
பாட்டிக்கு பேர் இல்ல...”
கோபத்தின் உச்சத்துக்கு போன நான், “டேய் எல்லாமே தப்புடா. நான்தான்டா உன் அப்பா. என் பேர் ராமச்சந்திரன், அம்மா பேர் சீதா...” - ஒப்பிக்கத் தொடங்கிய என்னை இடைமறித்த என் மகனோ,
“போப்பா, நீ தப்பு. நான் சொன்னதுதான் சரி. என் அப்பா பேர் அறிவழகன்தான். தப்பா
சொன்னா மிஸ் அடிப்பாங்க.”
ஏதோ சொல்ல வந்த என்னை என் மனைவி மறுபடி தடுத்தாள்.
“கண்ணா, உனக்கு எதுக்கு இதை சொல்லிக் கொடுத்தாங்க?”
“அதோ, அந்தப் பாடத்திலே வருது. கிளாசில் நான் அப்பா பேர் தப்பா சொன்னேன்னு
மிஸ் திட்டினாங்க.”
அந்தச் சிறிய பள்ளிப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தோம். புரிந்தது. அதில் இருந்த
கதையில் ஒரு சிறுவன் தன் குடும்பத்தை விவரிக்கிறான்.
அந்தச் சிறுவனின் அப்பா பெயர்தான் அறிவழகன். அந்தக் கதையை சொல்லிக் கொடுத்து
விட்டு குழந்தையை கேள்வி கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. கேள்விக்கு என் பெயரை பதிலாக
குழந்தை சொன்னவுடன் திட்டியிருக்கலாம்.
“இது என்ன மடத்தனமா இருக்கு. சின்னக் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பாடத்தை
எல்லாம் ஏன் வெக்கிறாங்க? எந்த லெவலுக்கு என்ன பாடம் இருக்கணும்னு கூடவா தெரியாது.
சொல்லித் தரவங்களாவது ஒழுங்கா சொல்லித் தரக் கூடாது? பணத்த மட்டும் நல்லாப்
புடுங்குவாங்க. நான் நாளைக்கே போய் நல்லாக் கேட்கிறேன்!”
எப்போதும் எனக்கு எதிர் பாட்டு பாடும் என் மனைவி அதிசயமாக என்னோடு ஒத்துப்
போனாள்.
“ஆமாம். நாளைக்குப் போய் கேட்டிடுங்க. பிள்ளைங்க படிப்புச் சமாசாரம்..” என்று சொல்லிக் கொண்டே வெளியே போனவள்
குரல் பின் சன்னமாக காதில் கேட்டது. “இந்தக் கதையில எல்லாம் பேர் வெக்கிறவங்க
கொஞ்சம் மாடர்னா விக்ரம், சூர்யா அப்படின்னு வெக்க மாட்டாங்களா?”
அவள் விளையாட்டுக்குச் சொல்கிறாளா அல்லது உண்மையாகவே சொல்கிறாளா என்றுப் புரியவில்லை. சில
மாதங்களுக்கு முன் என் பெயரை குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிட்டது. எங்காவது காணாமல் போய் விட்டால் அப்பா, அம்மா பெயர்களைச் சொல்லத்
தெரிந்திருக்க வேண்டுமல்லவா.. என் பெயரோ குழந்தைக்கு கஷ்டமாக இருந்தது. ராஷ்ஷ்,
ராஷ்ஷ் என்று கிட்டத்தட்ட என் பெயரை ராட்சசன் போலவே
சொல்லிக் கொண்டிருந்தது. சமீபமாகத் தான் நன்றாக
உச்சரித்தது. இப்போது அதுவும் போய்விட்டது.
அடுத்த நாள் அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு குழந்தையின் பள்ளிக்குச்
சென்றேன். பணக்காரப் பள்ளிதான். இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே
போகலாம்.
குழந்தைக் கூட்டம் ஒன்று சிறிய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அன்புக்
குழந்தைகள் அன்றலர்ந்த மலர்க் கூட்டம் போலிருந்தாலும் அவ்வப்போது சிலர் வண்டுகளாக
மாறி ஒருவரையொருவர் கொட்டிக்
கொண்டிருந்தார்கள்.
தலைமை ஆசிரியை எனக்குத் தெரிந்தவர். என்னைப் பார்த்து, “வாங்க, ராம். என்ன
விஷயம்?” என்றார். என்னால் முடிந்தவரை பணிவாக நடந்ததை சொன்னேன். “அப்படியா. அவங்க
நல்ல டீச்சராச்சே! சொல்லப் போனா மத்தவங்கள விட அவங்கதான் நல்லா சொல்லித் தருவாங்க(!!!).
வேணும்னா ஒண்ணு பண்ணுங்க. இப்ப அவங்க கிளாஸ்ல தான் இருப்பாங்க. இது உங்க பையன்
கிளாசிற்கு ஸ்லீபிங் டைம்! போய் நேரிலேயே பேசிடுங்களேன்..”
அவருக்கு நன்றி சொல்லி விட்டு என் குழந்தையின் வகுப்புக்குப் போனேன்.
‘தூங்கும் வகுப்பு நேரத்தில்’ வந்ததற்காக தன்னைத் தானே மெச்சிக் கொள்ளவும் என்
மனது தயங்கவில்லை. பின்னே! படிக்கும் நேரத்தில் சென்று, வகுப்பின் நடவடிக்கைகளைக் குலைத்து,
நாட்டின் எதிர்காலத் தூண்களின் அறிவு வளர்ச்சிக்கு நான் சிறு தடைக்கல்லாக இருந்து
விடக் கூடாதல்லவா! நாமெல்லாம் சம்பளத்தை வழித்துப் பள்ளிகளுக்கு தருவதே ஒவ்வொரு
நிமிடமும் நம் குழந்தை கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதால் தானே!
இவ்வாறான மேம்பட்ட எண்ணங்களுடன் காரிடாரில் திரும்பியவன் பெயிண்ட் சரியாக
அடிக்கப்படாத தூணில் முட்டிக்கொண்டேன். பிறகுதான் தெரிந்தது – அது தூண் அல்ல.
மல்யுத்தக்காரன் உடல்வாகில் வாட்டசாட்டமாக தோற்றமளித்த பியூன் என்பது. மோதலின்
அதிர்ச்சியில், ‘அவன் காக்கிச் சட்டை சுத்தமாக இருந்திருந்தால் தூணுக்கு பெயிண்ட்
முழுமையாக இருக்குமோ’ என்று நான் தெளிவாகக் குழம்பிக்கொண்டிருக்கும்போழுது, ‘யார் சார், நீங்க?’ என்னும்
அதட்டல் மனதை சுயவுணர்வுக்குக் கொணர்ந்தது.
“அதாவது..நான் வந்து..என் பிள்ளையை பார்க்க வந்தேன்.”
“அதெப்படி? இந்த டைமுக்கு யாரும் வரக்கூடாதே..நீங்க எப்படி உள்ள வந்தீங்க?”
“நான் ஹெட்மிஸ்ட்ரஸ் கிட்ட சொல்லிட்டேன்.”
“ஆமா.. இதே வேலையாப் போச்சு! சரி..சரி.. போங்க..”
குழந்தைகள் பள்ளிக்கு மல்யுத்தக்காரன் எதற்கு என யோசித்தபடியே என் மகனின்
வகுப்பை அடைந்தேன். உள்ளே சுமார் முப்பது குழந்தைகள் இருந்தனர். ‘தூங்கும் வகுப்பு
நேரத்தில்’ எல்லோரும் விழித்துக் கொண்டிருந்தனர் – ஆசிரியை ஒருவரைத் தவிர! விழித்திருந்த குழந்தைகள் சும்மாயிருக்கவில்லை; மேசையில் தலையை
சாய்த்துக் கொண்டு அவர்களுக்குள் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தனர்.
என் மகன் என்னைப் பார்த்து சிரித்ததாலும், திடீரென்று தோன்றிய வேற்றாள் வருகையின்
சாதக பாதகங்கள் உடனடி பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, மௌன மொழியில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதின் சலசலப்பாலும் ஆசிரியை
விழித்துக்கொண்டார். பனிக்காலம் முழுதும் தூங்கி சடாலென்று எழுந்த கரடியின்
கடுப்பும், எரிச்சலும் அவர் தோற்றத்தில் இருந்தது ஏ/சி அறையில் பறந்துகொண்டிருந்த ஈக்களுக்கும் புரிந்துவிட்டதால், அவை வேகமாக வெளிநடப்பு செய்தன!
ஆசிரியைக்கு நடுத்தர வயது. கண்டிப்பானவர் போலும். மூக்கின் மேல் கண்ணாடி
இருந்தாலும் புருவத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக என்னை உற்று
நோக்கினார்; என்ன வேண்டும் என்பது போல! நான் வந்த நோக்கத்தை மெதுவாக ஆரம்பித்தேன்.
ஆனால் போகப்போக என் ஆவேசம் ஏறிக் கொண்டே போனது. அவருக்கும் ஆவேசம்
ஏறிக்கொண்டிருந்தது என்பதை நடுவில் ஒரு முறை சத்தம் போட்ட குழந்தைகளை நோக்கி இவர்
போட்ட சத்தத்தின் ஒலி விகித வேறுபாடு வெளிப்படுத்தியது.
“சரி, என்னை என்ன சார் செய்யச் சொல்றீங்க?”
“என்ன மேடம் இப்படிக் கேக்கறீங்க? குழந்தைங்க மனசில பதியும் விஷயங்களுக்கு
உங்களுக்கும் பொறுப்பு இருக்கு இல்லையா?”
“இதோ பாருங்க. நான் என்ன சொல்லித் தரணுமோ அதைத் தான் சொல்லித் தரேன். என் மேல
ஏன் பாயுறீங்க?”
“டீச்சர், எவ்வளவு கஷ்டப்பட்டு என்னுடைய பெயர என் குழந்தைக்கு சொல்லிக்
கொடுத்திருக்கேன், தெரியுமா? இப்போ அப்பா யாருன்னு கேட்டா எவன் பேரையோ சொல்லுது.
இதுக்கா நாங்க அதுங்கள படிக்க வைக்குறோம்? கதை வேற, நிஜம் வேறன்னு அதுங்களுக்கு
சொல்லித் தரவேண்டாமா?”
“நான் என்ன பண்ணட்டும்? புத்தகத்தில என்ன இருக்குதோ அதைத்தான் நான் சொல்லித்
தரேன்! சொல்லித் தந்தாலும் உங்களுக்குப் பிடிக்காது; தராவிட்டாலும் பிடிக்காது.
எல்லாத்துக்கும் நாங்கதான் பொறுப்பு என்று பின்னாடி திட்டுவீங்க!”
எங்கள் வாக்குவாதம் இப்படி நடந்து கொண்டிருந்த வேளையில், வரமாகக் கிடைத்த
இடைவெளியை குழந்தைகள் அகமகிழ்ந்து பயன்படுத்துக் கொண்டிருந்தன. சிரிப்புகளும்,
அழுகைகளும் ஆங்காங்கே தோன்றத் தொடங்கின.
அந்த டீச்சர் கடைசியாக சொல்லிவிட்டார். “நான் செய்ய வேண்டிய வேலையைத்தான்
செய்யுறேன். இதுக்கு மேல ஏதாவது வேணுமின்னா நீங்க ஸ்கூல் ஹெட் மிஸ்டரஸ் கிட்ட
கம்ப்ளைன்ட் செய்யுங்க! இல்ல, நேரா கல்வித்துறையிலேயே போய் பேசுங்க. புக் எழுதுரவங்கள
போய் கேளுங்க. டெஸ்ட்ல தப்பா எழுதுனா நான் ஜீரோ தான் போடணும்!”
ஒரு வகையில் அவர் சொல்வதும் உண்மைதான்! உருப்போடப்பட வேண்டிய பாடத்திற்கும்
உண்மைக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை விவரிக்க அவருக்கு என்ன உபரி சம்பளமா
தரப்படுகிறது? வேறு வழியில்லாமல் நான் சற்று இறங்கிவிட்டேன். “மேடம், இப்படித்
தப்பா என் பிள்ளை கத்துக்கலாமா?”
அவருடைய மூக்குக் கண்ணாடி - சாகச வீரன் பாராசூட்டில் தொங்குவது போன்று - மூக்கில்
இருந்து தொங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய கேள்வி வெளிப்பட்ட நேரத்தில் அவரின்
கவனம் பாராசூட்டில் தொங்கிகொண்டிருந்த மூக்குக் கண்ணாடியை காப்பாற்றச் சென்றிருக்கலாம்!
அதனால் கேள்வி அவரின் மூளையின் வேறு பகுதிக்குத் திரும்பி விட்டது.
“என்னது உங்க குழந்தைக்குத் தப்பா சொல்லித் தருகிறேனா? உங்க குழந்தை மேல
எனக்கு என்ன விரோதம்? எப்படி நீங்க என்னைப் பத்தி தவறா நினைக்கலாம்? ஆசிரியை
தொழிலை புனிதமா நினைக்கிறவ நான்! குழந்தைகளுக்கிடையே பாரபட்சம் எதுவும்
பார்ப்பதில்லை...!”
கிளாஸ் பக்கம் திரும்பியவர், “ஸ்டூடண்ட்ஸ், சைலன்ஸ். ஷட் அப்...ஷட் அப். எல்லாரும்
எழுந்து நில்லுங்க. எங்கே சொல்லுங்க! உன் அப்பா பெயர் என்ன?”
எல்லாக் குழந்தைகளும் கோரஸாக, “என் அப்பா பெயர் அறிவழகன்” என்றன.
டீச்சர் என்னைப் பார்த்து, “போதுமா, எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாத்தான் சொல்லிக்
கொடுப்பேன்..!!”
எந்த தெருவின் வழியாக வீட்டிற்குத் திரும்பி வந்தேன்
என்பது சத்தியமாக நினைவிலில்லை!
******************************************
ரா. பாரத்ராம்.
TeaKadaikaaran:
ReplyDeleteVery nice story. I actually face such problems in real life
Thanks very much
DeleteTeaKadaikaaran:
ReplyDeleteOne of the best stories I have ever read. May be the best.
Hilarious
ReplyDeleteThanks very much. Please read other stories too and share your comments.
DeleteSuper. Hilarious. Last one is good when everybody says En appa per Arivazagan!!!. Basic fault in our education system.
ReplyDeleteThank you, Bala
ReplyDelete