சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – (கலைச்)
செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
(அடைப்புக்குறி என்னுடையது)
என்
நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாரதியின் மேற்கண்ட பாடல் வரிகள் மேற்கோளாக ஒருவரால்
உபயோகிக்கப்பட்டது – அதாவது எட்டுத் திசைகளிலும் சென்று செல்வங்களைக் (பணத்தை) கொண்டுவந்து
சேர்க்கவேண்டும் என்று பொருள் படும் விதத்தில்.
பள்ளியில்
மதிப்பெண் வாங்குவதற்காக புத்தகங்களைப் படித்திருந்த நானும் அந்த வரிகளை, நண்பர் கூறிய அர்த்தத்தில்தான் பலமுறை உபயோகித்திருக்கின்றேன். இருந்தாலும், செல்வம் சேர்ப்பதில் பாரதிக்கு ‘எட்டுத் திக்கும்
செல்லும் அளவிற்கு’ எண்ணம் இருந்திருக்குமோ என்ற சந்தேகம்
உதித்ததால் - அதுதான் ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்கின்ற பழமொழி ஏற்கனவே உள்ளதே – பாரதியின் அந்தக் கவிதையை மறுமுறை
படித்தேன். அக்கவிதையின் சில வரிகளை கீழே தந்துள்ளேன்.
தமிழ்த் தாய் (தன் மக்களைப் புதிய
சாத்திரம் வேண்டுதல்)
1. “இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினன்
கண்டீர்!”
2. “புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள்
கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில்
இல்லை.”
3. சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்
கில்லை,
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை
யோங்கும்”
4. என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர்எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்!”
(கிணறு
வெட்ட பூதம் கிளம்பியதுபோல், நான் அவ்வப்பொழுது உபயோகிக்கும் மற்றொரு
வாக்கியமான “மெல்லத் தமிழினிச் சாகும்”
என்ற வரிகளும் இந்தக் கவிதையில்தான் உள்ளது!)
மேற்கண்ட வரிகளுக்கான எளிய உரையைத் தந்திருக்கின்றேன். அர்த்தம் புரிந்தவர்கள் கீழ்க்கண்ட பத்தியைத் தவிர்த்துவிடலாம்.
தமிழ்த் தாய் தன் மக்களைப் பார்த்து கூறுகிறாள்: “ஒரு கொடியவன் கூறத் தகாத, என்னைக் கொல்வது போன்ற வார்த்தைகளை இன்று என்னிடம் சொல்லிவிட்டான். பஞ்ச
பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் – இவற்றை நுட்பமாக ஆராய்ந்து புதிய
கண்டுபிடிப்புகளை மேலை நாட்டவர் உருவாக்குகின்றனர். ஆனால் அறிவியல்பூர்வமாக இதுபோன்ற
கண்டுபிடிப்புகளை விளக்கும் திறமை தமிழுக்கில்லாததால், ‘தமிழ் மொழி இனி மெல்ல அழிந்துவிடும்; அத்திறன் வாய்ந்த
மேலை மொழிகள்தான் இனி வாழும். ஆ! இந்த வசையைக் கேட்டுச் சகிக்க என்னால் முடியவில்லை.
சென்றிடுவீர் எட்டுத் திசையும்; அந்தக் கலை செல்வங்கள் (அறிவியலை
விளக்கும் நுட்பத் திறனை) கொண்டு வந்து தமிழில் சேர்ப்பீர்!”
என்னே
என் அறியாமை! பாரதியாரின் தொலைநோக்குப் பார்வையை உணரத் தவறிய என் பேதமையை எண்ணி வெட்கப்படுகிறேன்.
பாரதியார்
கூறியிருப்பதுபோல் புதுப்புது கண்டுபிடிப்புகளை தமிழில் புரிந்துகொள்ளாத வரையிலும், தமிழில் விளக்க இயலாத வரையிலும் தமிழ் மெல்ல குறுகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.
அதே சமயத்தில் வெறும் குடிக்கும் காஃபியை ‘குழம்பி’ என்றோ 'Hardware shop’ ஐ ‘வன்பொருளகம் என்று அழைப்பதிலோ தமிழ் மேம்படும் என்பதில் எனக்கு சந்தேகம்தான்
எழுகிறது.
தமிழ் வழிக்கல்வி என்பது இனிமேல் கனவு என்கின்ற உண்மை நிலையில் குறைந்தபட்சம் தமிழில்
பேசுவதாவது தாய்மொழிக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.
ரா. பாரத்ராம்.
6/7/2015
Good analysis..trying to understand deeply.. wonderful thing..keep it up...
ReplyDeleteஇந்தப் பதிப்பில் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் (கலை) செல்வங்கள்...என்று எழுதி, அடைப்புக்குறி என்னுடையது என்று குறிப்பிட்டிருந்தேன். எல்லோரும் செல்வங்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவ்வாறு இல்லை என்பதை தெளிவுபடுத்துவதுதான் இந்த பாடல். கலை என்ற வார்த்தையை விட்டு விடுகிறார்கள் என்பதினால் கலை என்பதை அடைப்பிலிட்டு, அடைப்புக் குறி மட்டுமே நானாக இட்டது. என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். இதை ஆங்கிலத்தில் Emphasize என்று சொல்வார்கள். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல், ஒரு தமிழறிஞர் இங்கே comment எழுதி, தமிழைக் கற்க வேண்டுமானால் என்று ஒரு பயிற்சி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். அவர் முனைவர் என்ற பெருமைக்காக அவர் பெயரை நீக்கிவிட்டேன்.
ReplyDeleteஅவருக்கு புரியும்படி சொல்வதானால் Bracket மட்டும் நான் போட்டுருக்கேங்க. ok va.