முதலில் எவ்விதக் கிண்டல்களுமில்லாத பாரம்பரியக் கதை:
பாட்டி வடை சுட்ட கதை
முன்னொரு காலத்திலே ஒரு ஊரிலே ஒரு பாட்டி வடை சுட்டு, விற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் வழக்கம்போல் வடை சுட்டு கூடையில் வைத்துக்கொண்டிருந்தார். அவர் கவனம் எண்ணெய் கடாயில் திரும்பிய நேரமாகப் பார்த்து, ஒரு காக்கா வேகமாகப் பறந்து வந்து ஒரே ஒரு வடையை மட்டும் கவ்வி எடுத்துக்கொண்டு பறந்து சென்றுவிட்டது. வயலோரமாக இருந்த மரத்தின் கிளையில் உட்கார்ந்து அந்த வடையை சாப்பிடலாமென்பது அந்தக் காக்காவின் எண்ணம்.
காக்கா கிளையில் உட்கார்ந்த நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு வயல் நரி ஓடி வந்தது. காக்காவின் வாயிலிருந்த வடையைப் பார்த்தவுடன் அந்த நரிக்கு வடை சாப்பிட ஆசை உண்டானது. நரிக்கு ஏமாற்றும் தந்திரம் தெரியும். அதனால் அது காக்காவைப் பார்த்து, "காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகாய் இருக்கிறாயே! அப்படியென்றால் உன் குரலும் நன்றாகத்தான் இருக்கும். எங்கே! ஒரு பாட்டைப் பாடு. எனக்கு கேட்க ஆசையாக உள்ளது" என்றது.
புகழ்ச்சிக்கு மயங்கிய காக்காவும், வாயில் இருந்த வடையை மறந்து, "கா, கா..." எனப் பாடவும் வடை கீழே விழுந்தது. நரியும் வடையைக் கவ்விக்கொண்டு ஓடியே சென்றுவிட்டது. காக்கா ஏமாந்துவிட்டது.
நீதி: ஏமாற்றுபவன் ஏமாறுவான் (மற்றும்) தற்புகழ்ச்சிக்கு மயங்காதே!
இதே கதையை மாறுபட்டு யோசித்தால் எப்படியிருக்கும்! சமூகக் கண்ணோட்டங்கள் வரக்கூடிய அபாயம் இருப்பதால், படிக்க விரும்பாதவருக்கு இங்கேயே, டாட்டா...
பாட்டி வடை சுட்ட கதை
முன்னொரு காலத்திலே ஒரு ஊரிலே ஒரு பாட்டி வடை சுட்டு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார். ஒருநாள் வழக்கம்போல் அவர் வடை சுட்டு, திறந்திருந்த கூடையில் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு காக்கா பசியுடன் அலைந்து, திரிந்து வந்தது. அதற்கு உணவு எதுவும் கிடைத்திருக்கவில்லை. அப்போதுதான் பாட்டியையும், வடைகள் நிறைந்திருந்த கூடையையும் காக்கா கண்டது. முந்தின அமாவாசையன்று இதே பாட்டி கூவிக் கூவி வடையைக் காக்காவுக்கு கொடுத்திருந்தார். அந்நாள் போன்றே இன்றும் வடை கிடைக்கும் என நம்பி காக்கா பாட்டியின் கண் பார்வையில் படும்படி சுற்றி வந்தது. ஆனால் பாட்டியோ, "சீ, போ..." எனக் காக்காவை விரட்டிவிட்டார். அமாவாசை சித்தாந்தத்தின் உள்ளர்த்தங்கள் அறிவீலிக் காக்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. வேறு என்னதான் செய்வது? யோசித்தது. பசிக் கொடுமையில் திருடத் துணிந்தது.
பாட்டியின் கவனம் எண்ணெய் கடாயில் திரும்பிய நேரமாகப் பார்த்து, காக்கா வேகமாகப் பறந்து வந்து, ஒரே ஒரு வடையை மட்டும் கவ்வி பறந்து சென்றுவிட்டது. வயலோரமாக இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து, பொறுமையாக, இயற்கையை ரசித்தபடியே வடையை சாப்பிடலாமென்பது அக்காகத்தின் எண்ணம்.
காக்கா கிளையில் உட்கார்ந்த நேரத்தில், அந்தப் பக்கமாக ஒரு வயல் நரி ஓடி வந்தது. காக்காவின் வாயிலிருந்த வடையைப் பார்த்தவுடன் நரிக்கு வடை சாப்பிட ஆசை உண்டாயிற்று. அது காகத்தைப் பார்த்து, "காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகாக இருக்கிறாயே! அப்படியென்றால் உன் குரலும் நன்றாகத்தான் இருக்கும். எங்கே! ஒரு பாட்டைப் பாடேன்" என்றது.
புகழ்ச்சிக்கு மயங்கிய காக்காவும் வாயிலிருந்த வடையை மறந்து, "கா, கா..." எனப் பாடவும், வடை கீழே விழுந்தது. ஆனால் வடை தரையில் விழுமுன்னே வேறொரு கிளையில் உட்கார்ந்திருந்த வேறு ஒரு காக்கா பறந்து வந்து, வடையைக் கவ்வி அடுத்த மரத்துக்குச் சென்றுவிட்டது.
'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே' என நரி வருந்தினாலும், முயற்சியைக் கைவிடாமல் அடுத்த மரத்துக்கு ஓடிச் சென்றது. இரண்டாவது காக்காவைப் பார்த்து, "காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகாய் இருக்கிறாயே! அப்படியென்றால் உன் குரலும் நன்றாகத்தான் இருக்கும். எங்கே! ஒரு பாட்டைப் பாடேன்" என்றது.
ஆனால் இந்தக் காக்காவோ நரிக்கு சளைத்தது இல்லை. வாயில் இருந்த வடையை கால்களால் இருக்கிக்கொண்டு, "கா...கா...கா..." என பாடியது. பின், "ஹோ, ஹோ..." என்று சிரித்துவிட்டு, "என்னை முட்டாளென்று நினைத்தாயோ?" என்றது.
நரிக்கு ஏமாற்றமாய் இருந்தாலும் - ஏமாற்றும் தந்திரங்களை தேர்ந்த வல்லுனர்களால் நரி கற்றிருந்ததால் - விடாது முயற்சியைத் தொடர்ந்தது. "ஹா, என்னை கேலி செய்கிறாயோ? உனக்கு கொஞ்சம் கூட உலக விஷயங்களே தெரியவில்லையே! தொலைக்காட்சி பார்த்ததில்லையா? அடப் பாவமே! பாட்டுப் பாடும் நிகழ்ச்சிகளிலே வெறும் பாட்டு மட்டும் பாடினால் போதாதே! உடை அலங்காரம் செய்துகொண்டு, பாடும்போது ஆடிக்கொண்டே பாட வேண்டுமே! குரல் போல் உடல் அசைவுகளும் முக்கியமாயிற்றே! அதுவும் குழந்தையாக இருந்தால் அசைவு அதிகமாக இருக்கவேண்டுமே. தாய் தந்தையரும் அந்தத் திறமைகளுக்கு கை தட்டி, விசில் அடித்து, முடிந்தால் அவர்களும் ஆடவேண்டுமே! ஐயோ பாவமே... உனக்கு இது தெரியாதா? பட்டிக்காட்டானா நீ? சந்தேகமென்றால் உன் பெற்றோரைக் கேட்டுப் பார்" என்றது. காக்கா அண்ணாந்து பார்க்கவும், மேல் கிளைகளில் உட்கார்ந்திருந்த அதன் பெற்றோரும் நரி சொன்னது சரிதான் என ஆமோதித்தன.
நாகரீகமறியாதவனாக இருப்பதை விட ஏமாளியாக இருப்பதையே காக்கா விரும்பியது போலும்! அது இம்முறை, "கா, கா..." என்று பாடிக்கொண்டு, அதே சமயத்தில் இறக்கைகளை விரித்தும், கால்களை தூக்கி ஆடியும் காண்பித்தது. அந்தோ! வடை கீழே விழுந்தது. நரியும் வடையை கவ்விக்கொண்டு ஓடியே சென்றுவிட்டது. காக்கா, "வடை போச்சே" என நினைத்தாலும், தன்னுடைய ஆட்டத் திறத்தினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவோமா என்ற கவலையில் ஆழ்ந்தது.
நீதி: உங்களுக்கு விருப்பமானதை நீங்களே நிரப்பிக் கொள்ளலாம்!
கதை முடிந்துவிட்டாலும், சற்றே நீட்டித்துப் பார்த்தால்:
வடையைக் கவ்வி ஓடிய நரி யோசித்துப் பார்த்தது. "சீ, எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படி ஏமாற்றியே வாழ்க்கையை ஓட்டுவது? அதே நேரத்தில் தினமும் உழைப்பது சிரமமாகவுள்ளது. ம்... ஒரு காரியம் செய்தாலென்ன?"
அந்த நரி வடை சுட்ட பாட்டியிடம் சென்றது. பாட்டியின் முன் வடையைக் கீழே போட்டுவிட்டு, "பாட்டி, பார்... நீ சுட்ட வடையைக் காக்கா திருடிவிட்டது. நான் கஷ்டப்பட்டு வடையை அதனிடம் திருடி, மீட்டு உன்னிடம் கொண்டு வந்துள்ளேன். இதற்கு நன்றியாக தினமும் நீ எனக்கு ஒரு வடையைத் தரலாமே!" என்றது. வந்தது பாருங்கள் பாட்டிக்குக் கோபம்! "ஓடிப்போ இங்கிருந்து. தள்ளாத வயதில், தெருவோரமாக, அதுவும் வயல் நரிகள் மேயும் தெருவோரமாக, வடை சுட்டு பிழைப்பு நடத்துகிறேன். என்னிடமே தினமும் வடை கேட்கிறாயே? மொத்து வேண்டுமோ உனக்கு? இனிமேல் நான் உன்னை இங்கு பார்க்கவே கூடாது, ஓடு" என்று கத்தினாள். மிரண்டுபோன நரியும் பிழைப்பைத் தேட வயலிற்கு அப்பாலிருந்த காட்டிற்குள் சென்றுவிட்டது.
பாட்டி இரு காக்கைகளும், நரியும் கவ்வியிருந்த வடையை விற்பனைக்காக கூடைக்குள் எடுத்து வைத்துவிட்டு யோசிக்கலானாள்: "ஏன், எனக்கே இவ்வளவு கஷ்டங்கள் வருகின்றன?"
என்னால் சொல்ல முடிந்த ஒரே நீதி: தெருவில் விற்கும் தின்பண்டங்களைத் தின்னாதே!
Lateral thinking. Old theme and new story. Good. Vazthukkal
ReplyDeleteThank you, Bala
ReplyDelete