தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மாநகராட்சிக்கு எல்லையிலுள்ள நகராட்சி அது. சமீபத்திலே
வளர்ச்சியடைந்த நகர் என்பதினால் தெருக்கள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தன. விலை
ஏற்றப்பட்டு (உண்மையை சொல்ல வேண்டுமெனில், ஏமாற்றப்பட்டு)
விற்கப்பட்டிருந்ததினால் வசதி படைத்தவர்கள் மட்டுமே குடியேறி இருந்தனர். வசதி
படைத்தவர்களின் அடையாளம் என்பது பெரிய வீடுகளை – அதாவது தேவையானது மட்டுமல்ல, தேவையற்ற
இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வீடுகளை – கட்டுவது என்ற தற்கால
நாகரீகமாகிவிட்டதினால், அந்தத் தெருவிலுள்ள எல்லா வீடுகளுமே பிரம்மாண்டமாகயிருந்தன.
பிரம்மாண்டமான வீடுகளில் வசித்தவர்களும் பிரம்மாண்டமாகவிருந்தனர் என்பதை இங்கே
சொல்லிவிடல் உசிதம்.
இந்தக் கதை அவர்களைப் பற்றியதில்லை. அந்தப் புது நகரின் தெரு ஓரங்களிலே
தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாய்க்கூட்டங்களிலே, புதிதாய்ப் பிறந்திருந்த
ஒரு தெரு நாய்க்குட்டியைப் பற்றியது.
கதாநாயகனை விவரிக்க வேண்டியது அவசியமாயிற்றே! மனிதர்களுடைய
கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த நாய்க்குட்டியிடம் விசேஷமாக எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை. அது ஒரு சாதாரண தெருநாய் குட்டி, அவ்வளவுதான். அடுத்த முறை தெருவில் செல்லும்போது உங்களுக்கு நாய்க்குட்டி
ஏதாவது தென்பட்டால் ஓரிரு நொடிகள் கண்களுக்கு அதிக உழைப்பு கொடுத்து அந்த நாயைப்
பாருங்கள். அதற்கும் நம் கதாநாயகனுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவுமிருக்காது.
ஆனால், மனிதக் கண்களை மூடி, இயற்கையின் கண்களிலே பார்க்கையிலே அந்த
நாய்க்குட்டி வித்தியாசமானதுதான். உருவத்தைப் பொறுத்தமட்டிலே மெலிந்த உடலும், குச்சிக்
கால்களும், சற்றே அகன்ற நெற்றியும், வெளிர் செந்நிற நிறமும் கொண்டிருந்தது. அதனாலென்ன!
இதைவிட அழகான நாய்கள் தெருவிலே எவ்வளவோ மேய்கின்றனவே! வித்தியாசம் என்னவென்றால், அந்த
நாய்க்குட்டி புத்திசாலி. பாரபட்சம் இல்லாமல் சொல்ல வேண்டுமானால், அபார
புத்திசாலி. அதனாலேயே என்னவோ, அது தன் தாயைவிட்டு தள்ளிச் செல்ல வேண்டிய நேரம்
வந்துவிட்டாலும் அது விலகவில்லை. ஏனென்றால் அது தன் தாயிடம் கேட்டுத்தெரிந்துகொள்ள
வேண்டிய விவரங்கள் எவ்வளவோ இருப்பதாக நினைப்பதால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல்
பிரிந்து போக அதன் புத்திசாலித்தனம் தடுத்தது.
கதையில் நாயிற்கு பெயரிட நேரம் வந்துவிட்டது. ஆனால் கொடுமையைப்
பாருங்கள்! வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ‘கௌரவமான’ ஆங்கிலப் பெயர்களையும்,
தெரு நாய்களுக்கு புளித்துப் போன தமிழ்ப்பெயர்களும் வைக்கவேண்டும் என்பது
எழுதப்படாத விதி. அன்று அப்படித்தான்; தெருவிலோருவர், முன்னே நடந்து
சென்றுகொண்டிருந்த வெளுத்த நிறம் கொண்ட நாயை ‘வெள்ளையம்மா’ என்றழைத்தார்.
திரும்பிப்பார்த்ததோ நாயிற்கு பக்கத்தில் நடந்துகொண்டிருந்த, மாநிறமான அவர்தம் மனைவி!
நாயிற்கு ஒருவேளை ‘கறுப்பி’ என்று பெயரோ! நம்மாட்கள்தான் குழப்பம் விளைவிப்பதில்
வல்லவர்களாயிற்றே! சமீபத்தில் புது நாகரீகம் முளைத்து விட்டது - நம் வீட்டுக் குழந்தைகளுக்குப்
பெயரிடும்போது பழக்கப்பட்ட, அல்லது தாத்தா பெயரை வைக்கும் வழக்கத்தை விட்டுவிட்டு,
சங்கத் தமிழில் வருகின்ற, யாருமறியா தமிழ்ப் பெயர்களை வைப்பது! வீட்டிற்கு விருந்தினர்
வந்தால், குழந்தையின் அருமை பெருமைகளைப் பேசுவதை விட்டுவிட்டு, சங்கத் தமிழ்
பெயரின் அர்த்தத்தை விளக்குவதே கடமையாகி, அதிலும் தமிழின் அறிமுகம் இல்லாதவர் வந்துவிட்டாலோ,
நாமே தொல்காப்பியராக மாறி பெயர்விளக்கம் சொல்வதின் விளைவாக, ‘இந்த வீட்டில்
குழந்தையென்று ஒன்று இருந்ததா’ எனும் குழப்பத்துடன் வந்தவர் வெளியேறும் நிலை
உருவாகிவருவதால் - சங்கத் தமிழ் பெயர் எதுவுமில்லாமல், இந்த நாய்க்குட்டியை,
‘நாய்க்குட்டி‘ என்றே அழைப்போம்.
இதனுடைய விசேட குணங்களாக மூன்றை நான் குறிப்பிடுவேன்; ஒன்று, மனிதனின்
மேல் இதற்கு இருக்கும் அளவு கடந்த அன்பு. உணவளித்தால் வாலையாட்டும் அன்பல்ல
(காரியம் ஆக வேண்டுமென்றால் நாயைவிட வேகமாக வாலையாட்டத் தயாராகவிருக்கும் மனிதர்கள்
இருப்பதைவிட விந்தை – அவர்களுக்கு வாலில்லாமல் இருப்பதுதான்). ஆக, நன்றி
பாராட்டும் அன்பல்ல. மனிதனின்பால் தன்னியல்பான அளவுகடந்த அன்பு. இரண்டு, இந்தக்
குட்டி இயற்கையை ரசிக்கும் பண்புடையது நம்புங்கள்... உங்களைவிட, என்னைவிட, இந்த
நாய்க்குட்டிக்கு இயற்கையை நேசிக்கும் இயல்பு அதிகம். மூன்று, இயற்கையை
நேசித்தபின்னும், அதற்கும் மேலாக மனிதனை விரும்பும் பண்பு. இயற்கையின் வலிவைவிட
மனிதன் உயர்ந்தவன் என்று அதன் சின்னஞ்சிறு மூளை நம்பியது.
நம் கதாநாயகனை ஈன்றெடுத்த தாய் கரிய நிறமுடையவள். வயிற்றுப் பகுதியில்
மட்டும் வெண்ணிறம் பரவியிருக்கும். நல்ல பொறுமைசாலி; அனுபவம் வாய்ந்தவள்.
அதனால்தான் குட்டியின் பல்வேறு கேள்விகளுக்கும் இயன்றவரை விளக்கம் சொல்ல
முடிகிறது. அந்தத் தெருவிற்கு இரவு நேர காவல்கார கிழவன் ஒருவனுண்டு. அக்கிழவனை
அண்டித்தான் இப்பெட்டை நாய் வாழ்கிறது. பகலில் உணவு கிடைக்கிறதோ இல்லையோ, இரவில்
அக்கிழவன் கொண்டு வரும் உணவின் சிறு பகுதியை பெண் நாய்க்கும், அதனுடன்
ஒட்டிக்கொண்டிருக்கும் குட்டிக்கும் கொடுப்பான். அக்காவல்காரன் நடுநிசி கடந்தபின்
வாயை ஆ’வெனத் திறந்தபடி உறங்கும்போது, அவன் கொடுத்த உணவிற்கு நன்றியாக, அந்த பெண்
நாய் கூரிய கண்பார்வையால் இரவு முழுதும் காவல் காத்துக்கொண்டிருக்கும்.
மனிதர்களை வியப்பு கலந்த அன்புடன் நேசிப்பதாலேயே, அவர்களை பார்த்துக்
கொண்டிருப்பது குட்டிக்கு மிகவும் பிடித்த செயல். கதிரவனின் காலைக் கதிர்கள்,
தெருக்களில் பரவத்தொடங்கும்முன் நாய்க்குட்டி ஏதாவது பெரிய மரத்தின் நிழலில்,
வேர்களுக்குப் பின், தன்னால் முடிந்த வரை மறைந்துகொண்டு தெருவை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கும். ஏனெனில் விடியற்காலையிலேயே, நடுவயது கடந்த பருத்த
மனிதர்கள் வேகமாக நடை உலா வருவார்கள். எதற்காக இவ்வளவு அவசர சுற்றுப்பயணம் எனப்
புரியாவிட்டாலும், பயணத்திற்கு குறுக்கே சென்று, தொந்தி நடைலயனத்திற்கு இடையூறு
விளைவிப்பது அவர்களுக்கு மகிழ்வாக இராது என்பது இந்நாய்க்குட்டிக்கு ஏற்கனவே
புரிந்திருந்த அனுபவம். அதனால் முடிந்தவரை தான் அங்கிருப்பதை யாரும் அறியாதவகையில்
பார்த்துக்கொள்ளும். சூரிய வெப்பம் ஏறும்வரையிலோ, அல்லது தொந்திகள் மூச்சுவிடத் திணரும்வரையிலோ
இந்த வேடிக்கைகள் நிகழும். காலைப் பொழுதும் இந்தக் குட்டிக்கு இனியதாகவே கழியும்.
சற்று நேரம் கடந்த பின், வீடுகளிலுள்ள அழகு குழந்தைகளை அழ, அழ வைத்து
அம்மாக்கள் வாகனத்தில் ஏற்றும் செயற்கள் அரங்கேறும். குழந்தைகளும் காலையில் அழுதுச் சென்றுவிட்டு மாலையில் சிரித்துக்
கொண்டே வருவார்கள். அந்தத் தெருவிற்கு அப்பால் எங்கோ சென்று வருகிறார்கள் என்பது
மட்டும் அந்த நாய்க்குத் தெரியும், ஆனால் எங்கே, எதற்கு எனத் தெரியாது.
சில
தெருக்களுக்கு அப்பால் சென்றால் என்னவாகும் என்ற அனுபவம் இக்குட்டிக்கு உண்டு. ஒருமுறை
விளையாட்டாக இரு தெருக்கள் கடந்து தரையில் படர்ந்திருந்த புற்களை முகர்ந்து
கொண்டிருந்தபொழுது ஓர் கருப்பு நிற, சடை பிடித்த நாயைக் கண்டது. அந்த முரடனோ
குட்டியென்றும் பாராமல் இதைக் கடிப்பது போல் கூரிய பற்களைக் காட்டிச் சீறியதால் குட்டி
பயந்து, வாலைக் கால்களின் நடுவே இடுக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாய் தன்
தாயிடம் ஓடிவந்துவிட்டது. அந்தச் சடையனைக் குறை கூறுவதுபோல் முனகலும்,
சிணுகலுமாக நின்றது. அத்தெருவிற்கு அப்பால், நாய்க்குட்டிக்கு சடையனைப் போல்,
குழந்தைகளை பயமுறுத்தவும் யாரோ இருக்கவேண்டும். இல்லையெனில் மனிதக்குட்டிகள் ஏன்
அழவேண்டும்?
காலைப்பொழுது முடிந்தவுடன் அந்தத் தெரு சில மணித்துளிகளுக்கு ஆள்
அரவமின்றி அமைதியுடன் காணப்படும். அந்தச் சமயத்தில், நாய்க்குட்டியும் அதன் தாயும்
நடைப்பயணம் மேற்கொள்வதுண்டு. அக்கணங்களில் கேள்விகளால் தன் தாயைத் துளைத்தெடுப்பது
அதன் வழக்கம். அப்படித்தான் ஒருமுறை,
“அம்மா, நம் தெருவிற்கு அப்பால் உலகம் எவ்வளவு பெரியது?”
“தெரியாது. நான் வெகுதூரம் சென்றதில்லை. இரு தெருக்களைக் கடந்தாலே
வீண் சண்டைகள் வந்துவிடுகின்றன. ஓரிரண்டு தெருக்களிலேயே என் வாழ்க்கை முடிந்துவிடும்
போலிருக்கிறது.”
“நாமெல்லாம் ஓரினம்தானே! பின் ஏன் நமக்குள்ளேயே பகை?”
அருகிலிருந்த மரத்தின் கீழ்ப்பகுதியை சிறிது நேரத்திற்கு உற்று
நோக்கிக்கொண்டிருந்த பெரிய நாய், பொறுமையாக பதிலளித்தது.
“அது எனக்கும் புரியவில்லை. நமக்குள் வீண்பகை எதற்காக? அவர்களுக்கு
கிடைக்கும் உணவை நாம் திருடிவிடுவோம் என்பதாலோ? ஆனால் திருடுவது என் குணமல்ல.”
“நீ போய்வந்த தெருக்களுக்கும் அப்பாலுள்ள உலகம் விசாலமானதோ?”
ஆம். அப்படித்தான் இருக்கவேண்டும். வானைப் போல் உலகமும்
விசாலமாகத்தான் இருக்கவேண்டும்.”
பெருமூச்சு விட்டபடியே, நிழலான மரத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு
வசதியான இடத்தை குட்டிக்கு விட்டுவிட்டு படுத்துக்கொண்டது. தனது அழகிய
கருவிழிகளால் மரத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு பிறகு வருத்தம் தோய்ந்த குரலில்
பேசத் தொடர்ந்தது.
“இரவில் வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரே எண்ணம்தான் என்னை வாட்டி
வதைக்கின்றது. இந்தப் பரந்த உலகில் நான் பிறக்கவேண்டிய காரணமென்ன? என்னைப் போன்ற
சிறிய உயிர்களால் உலகுக்கோ, மனிதர்களுக்கோ என்ன பயன்? குட்டிகளை ஈன்றேன்; அவ்வப்போது
மாறிக்கொண்டிருக்கும் காவல்காரர்களுக்கு துணையாக இருந்தேன் என்பதெல்லாம் உண்மை.
இருந்தும், நான் பிறக்காமல் இருந்திருந்தால் என்ன மாறியிருக்கப்போகின்றது?”
தாயின் துயரை மாற்ற அந்தக் குட்டி முயன்றது. “நீ ரொம்ப நல்லவள்,
அம்மா!”
“ஆமாம்: நேர்மையுடன் ஒப்புக்கொண்டது அந்தக் கரிய நாய். “முடிந்தவரை
நல்லவளாயிருக்கவே நான் முயன்றிருக்கிறேன். யாரையும் பகைக்கவோ, கடிக்கவோ
நினைத்ததில்லை.... ஒன்று மட்டும் நினைவில் இருத்திக்கொள், மகனே. மனிதர்களை என்றுமே
பகைத்துக் கொள்ளாதே...”
குட்டி தலையை அசைத்து ஒப்புக்கொண்டது. மனிதர்கள் சர்வ வல்லமை
படைத்தவர்கள் என்பது அதன் சிறிய மூளைக்கு முன்பேயே எட்டியிருந்தது. ஒரு பக்கம்
சரிந்து படுத்துக் கொண்டு உடனேயே உறங்கிவிட்டது.
பிறிதொரு சமயம், அவர்களுக்குள் ‘மூர்க்கனைப் பற்றி பேச்சு வந்தது.
‘மூர்க்கன்’ என குட்டி நாய் பெயரிட்டிருந்தது ஒரு பெரிய கருப்பு நாயை. நீண்ட
தெருவிலிருந்த, மாளிகை போன்ற பெரிய வீட்டில் அவன் வாழ்ந்து வந்தான். ஒரு முறை
இந்தக் குட்டி தெரியாமல் அந்த வீட்டின் வாசலருகே சென்றுவிட்டதற்காக எங்கோ
உள்ளிருந்து மூர்க்கன் பெருங்குரல் கொடுத்துக்கொண்டே பாய்ச்சலுடன் வந்தான். அந்த
அடித்தொண்டை உறுமலைக் கேட்டு குலை நடுங்கி, பயந்து, வாலை இடுக்கிக்கொண்டு, தெருவில்
வரும் வாகனங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல், குட்டி ஓட்டமாய் ஓடிவிட்டது. அதன் நெஞ்சு நடுக்கம் நிற்க நெடுநேரமாயிற்று.
“மூர்க்கனுக்கு வசதியான வாழ்வு. உணவு கிடைப்பதில் எந்தச் சிரமமுமில்லை.
மழைக்கும், வெயிலுக்கும் அவன் பயப்படத்தேவையில்லை. நமக்கு ஏன் அந்த வாழ்வு
அமையவில்லை, அம்மா?”
“எனக்கும் புரியவில்லை. ஒருவேளை இதைவிட நல்லத் தெருவில்
பிறந்திருப்பானோ, என்னவோ! ஒன்று நிச்சயம்; மனிதர்கள் இந்த வசதிகளை அவனுக்கு
கொடுத்திருக்கின்றனர் என்றால், அச்செயலுக்கு ஏதோ ஓர் உறுதியான காரணம்
இருக்கவேண்டும். வேடிக்கையைப் பார்! அவனோ அந்த ஒரு வீட்டினைத்தான் காவல்
காக்கிறான். ஆனால் இந்தத் தெருவிற்கே காவலாளியான கிழவனுக்கு நாம்
துணையாகவிருக்கின்றோம்! நமக்கு இதற்கு என்ன பலன் கிடைக்கின்றது; சில சமயங்களில்
நம்மீது வீசியெறியப்படும் கற்களைத் தவிர!”
“இந்தத் தவறு எவ்வாறு நிகழ்ந்தது?”
“தெரியவில்லை. தவறா இல்லையா என்றும் தெரியவில்லை. இந்த பங்களாக்கள்
இருக்கவேண்டும் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. நம்மை விடு; நாம்
எப்படியாவது பிழைத்துக்கொள்வோம். ஆனால் பாவம், மாளிகைகள் இல்லையென்றால்
காவல்காரனின் தேவையென்ன? பிழைப்புக்கு என்னதான் செய்வான்?”
சில நொடிகள் மௌனமாய் இருந்துவிட்டு, பெரிய நாயே பேசத் தொடர்ந்தது.
“பங்களாக்கள் இல்லையென்றால் காவல்காரன் தேவையில்லை. அந்நிலைமையில்
நம்மாலும் எப்பயனுமில்லை. ஆனால் இந்த விஷயத்தில் நம்மை விட அதிக கவலை கொள்ளவேண்டிய
மூர்க்கனுக்கு அக்கறை இல்லாமலிருப்பதுதான் புரியவில்லை. பணக்காரனுக்கு
அடிமையாயிருப்பதைவிட ஏழைக்கு அடிமையாயிருப்பது நன்மைதான்; இதைவிட கீழான நிலைக்கு
நாம் போகமுடியாது.”
‘சரி’ என்பதுபோல் குட்டியும் தலையாட்டியது. மனதில் எண்ணங்கள் தர்க்கங்களைத்
தொடங்கின. ‘நாய் எனப்படும் ஐந்தறிவுப் பிராணிக்குத் தேவையான நன்றி, காவல் காத்தல்
போன்ற அடிப்படைத்தகுதிகள் பொதுவாக எல்லாரிடத்திலும் காணப்படும்போது எங்களை மட்டும்
ஏன் ஒதுக்கி வைக்கின்றனர்? என் தாய் சொல்வதுபோல் நான் வேறு தெருவில்
பிறக்காததினாலா? அல்லது நான் கற்றறிய வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது
என்பதினாலா?’
குட்டியின் மனதைப் பொறுத்த மட்டில் முடிவு ஒன்றுதான். இயன்றவரை
மனிதனிடத்தில் அன்பு பாராட்டுவதுதான் ஒரே வழி. நன்றியுடன் இருப்பதில் தான்
யாருக்கும் குறைந்தவனில்லை என்பதை அத்தெருவில் உள்ளோர் உணரச் செய்வதே அதன்
நோக்கமாயிற்று!
கிழக்காவல்காரன் அசைந்து அசைந்து நடந்து, விசில் ஊதியவாறு தெருக்களைச்
சுற்றி வரும்போது அந்தக்குட்டியும் பெருமிதம் கலந்த மிடுக்குடன் – தானும் காவலின்
அங்கமாகிவிட்டதினால் – நடந்து வரும். அதன் துருதுருவென்ற கண்கள் இருளின் எல்லா
மூலைமுடுக்குகளையும் அலசி ஆராயும். ஏதாவது சிறு சலனத்தைக் கண்டாலும், ‘வள்’ எனச்
சிறு குரலெழுப்பி காவல்காரனின் கவனத்தை ஈர்க்கும். அச்சிறு குட்டியின் ‘காவல்கார
மிடுக்கை’ பெரிய நாய்கள் கண்டு கொள்வதில்லை. அவை தூங்கி வழிந்துகொண்டிருக்கும். குட்டி,
அதன் சகோதரர்களைக் கண்டுவிட்டால் மட்டும், வாலை ஆட்டியவாறே, அன்பு பாராட்டிவிட்டு,
ஒருவரையொருவர் நக்கிக் கொடுத்துகொள்வார்கள். ஆனால் இந்த விளையாட்டு நெடு
நேரத்திற்குத் தொடராது. கடமையை நினைவு கூர்ந்து, தூரத்தில் சென்றுவிட்ட கிழவனை
எட்டிப்பிடித்து, தன் பாராவை மீண்டும் தொடரும்.
பொதுவாக, பகல் வெயில் கொளுத்தும் நேரங்களில் எங்கேயாவது நிழல் காணும்
இடங்களில், வெம்மை தாங்காமல், சின்னஞ்சிறு பூவிதழ் போன்ற நாக்கை வெளியே
தொங்கவிட்டுக் கொண்டு படுத்துக்கிடக்கும். இரவுக்கு ஏங்கும்.
சில பின்னிரவு நேரங்களில் வானத்தை உற்று நோக்கியவாறு படுத்துக் கிடக்கும்.
நட்சத்திரக் கூட்டங்களை வேடிக்கை பார்ப்பது அதன் பிடித்த பொழுதுபோக்காயிற்று. தெருநாய்களின்
இரவுகளைப் பிரகாசமாக்குவதற்கு மனிதர்கள் உருவாக்கியதுதான் நட்சத்திரங்கள் என்பது
அதன் எண்ணம். ‘முழுநிலவு இரவுகள் கண்ணயர்வதற்கும், அதே சமயத்தில் நிலவில்லாத இருண்ட
இரவுகள் கடமையில் தவறாமல் இருப்பதற்காகவும் உருவாயின. இதுபோன்ற எண்ணங்கள்
எழும்போதெல்லாம் மனிதர்களின் எல்லையில்லாத ஆற்றலை எண்ணி, அவர்களுக்குத் தொண்டாற்ற
வாய்ப்பு கிடைத்தமைக்கு உளமகிழ்ந்து படுத்திருக்கும்.
ஒரு சமயம் மூன்று பகலும் இரவும் இடைவிடாமல் மழை அடித்துத் தள்ளியது.
மழை தொடங்கும்முன் பரவியிருந்த குளிர்ந்திருந்த காற்றில் அங்குமிங்கும்
ஒடித்திரிந்ததும், தூரலில் நனைந்ததும் உள்ளத்திற்கு உற்சாகமாகவிருந்தது. ஆனால்
ஒருநாள் கழிந்தும் தொடர்ந்த மழையின் குளிர் அந்தக் குட்டியை வாட்டியெடுத்தது. அதன்
சிறிய உடல் குளிரின் தாக்கத்தால் நடுங்கியது. என்னதான் மறைவிடத்தில் பதுங்கியிருந்தாலும்
சாரல் துளிகளையும், ஊடுருவி வந்த குளிர் காற்றையும் தடுக்க இயலவில்லை. அந்தத் தெரு
நாயின் நெஞ்சுக் கூடும், பின்னங்கால்களும் மெலிதாக நடுங்கிக்கொண்டேயிருந்தன. மூர்க்கனின்
வாழ்வுக்கும், தனது வாழ்வுக்கும் இடையிலுள்ள வேறுபாடு அன்றுதான் குட்டிக்கு
புரியத்தொடங்கியது.
தானும் நனைந்து, உடலில் மணம் கமழ்ந்துகொண்டிருந்த தாய்தான்
அக்குட்டியைக் காப்பாற்றியது. சொரசொரப்பான நாக்கினால் குட்டியின் கழுத்தையும்,
நெற்றியையும் சற்று நேரத்திற்கு நக்கிக் கொடுத்து அதன் உடலில் சேர்த்து
வைத்திருந்த வெப்பத்தை குட்டிக்கு பரிமாற்றம் செய்ததின் விளைவால் அக்குட்டிக்கு
நடுக்கம் குறைந்து உயிர் பிழைத்தது. விளைவு அறியாமல் செய்துவிட்ட, சிறுபிராய
விளையாட்டுத்தனத்தை, அன்பு கலந்த உரிமையுடன்’ கண்டித்த பெட்டை நாய், வசதியான
இடத்தைத் தன் குட்டிக்கு விட்டுக் கொடுத்தது. தாயின் உடலுடன் ஓட்டிப் படுத்து, அந்த
அந்த அரவணைப்புத் தந்த சுகத்தில் குட்டி கண்ணயர்ந்தது. கால நிலைக்கு ஏற்ப
வாழவேண்டியது கட்டாயம் எனும் படிப்பினையை பெற்றது.
வேறு ஒருவரை இப்போது சந்திப்போம்: அவன் நாய்க்குட்டியை
சந்திக்கப்போவதேயில்லை என்றாலும் அந்தக் குட்டியின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய
வாய்ப்பு அவனைக் கடந்து போகப்போவதால் அவனையும் இக்கதையினுள் இழுக்கவேண்டியுள்ளது. அங்கிருந்து சில தெருக்கள் தள்ளி அரவிந்தன் வசித்து வந்தான்.
புதுகுடியிருப்புகளின் உருவாக்கத்தின் தொடக்கத்திலேயே அரவிந்தனின் குடும்பம் அந்த
இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டது.
பெயரைச் சொல்லிவிட்டதால்
தோற்றத்தையும் பார்த்துவிடுவோம். எளிமையான
சட்டை; சாதாரண காலணிகள்; நிமிர்ந்த நடையாக இருந்தாலும் கனிவான பார்வை.
பார்த்தவுடனே அனுமானிக்க முடிகிறது; ஆடம்பரங்களை வெறுக்கும், தற்கால, தேடுதற்கரிய
சிறு இளைஞர் கூட்டத்திலோருவனென்று!
மற்றபடி அரவிந்தனின் வாழ்க்கை சுவராசியமற்றது. முதுகலைப் பட்டதாரி; நடித்தரக்
குடும்பத்திலே பிறந்ததினாலே சம்பாதித்தே ஆகவேண்டிய துரதிர்ஷ்டவாதிகளில்
(இலட்சியவாதி என்றும் சொல்லலாம்). இலட்சியவாதிகளுக்கு
இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரியும் என்ற நெடுங்காலக் கூற்றுக்கு ஏற்ப – சம்பளம்
எனும் இலட்சியத்தை அடைய எந்த நேர்மையான வேலையையும் செய்யத் துணிந்தவன்.
அவனுடைய அம்மா அருகில் வந்து
நின்றாள். “அரவிந்தா, நாளைக்குப் போகும் வேலையிலாவது
கொஞ்ச நாளைக்குத் தங்குப்பா! அப்பா கஷ்டப்பட்டு எவ்வளவு வேலைக்குத்தான் சொல்லமுடியும்?”
“நான் என்னம்மா பண்றது? எங்க போனாலும் என் ராசி அப்படி. செய்யுற வேலைக்கு மனசுல திருப்தி வரவேண்டாமா?”
“என்னமோப்பா... நீதான் குடும்பத்தைக்
கரையேத்தணும்.”
அரவிந்தனுக்கு அவன் தகப்பனார்
ஒரு லோக்கல் பத்திரிக்கையில் யாரிடமோ சிபாரிசு பெற்றிருந்தார்.
அரவிந்தன் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்தான். ‘தமிழகம் முழுதும் விற்பனையாகும்
நடுநிலை பத்திரிகை’ என விளம்பரங்களில் பரப்பிக்கொண்டு, அதே சமயத்தில் நகராட்சி
செய்திகளையே மையமாக நடத்தப்பட்டு வருவது அது. என்ன செய்வது? அப்பகுதி மக்களின்
ஆர்வம் சுற்றுவட்டார செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை விட்டால் ஒரேயடியாக
‘அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் எவ்வளவு அறைகள் உள்ளன?’ போன்ற உலக முக்கிய
செய்திகளுக்குத் தாவி விடுவதால் ஆசிரியரும் என்னதான் செய்வார்?
ஆசிரியர் அறையைக் கண்டுபிடுத்து
உள்ளே நுழைந்தான்.
தலை நரைத்திருந்த ஆசிரியர், “வாப்பா...நீதானே அரவிந்தன்? பரமசிவம்
உன்னப் பத்தி நிறையச் சொல்லியிருக்கான். அதனாலேதான் சர்டிபிகேட் பாத்தவுடனேயே வரச்
சொல்லிவிட்டேன். வீட்லே எத்தனை பேர்?”
“அப்பா, அம்மா, நான், தம்பின்னு நாலு பேர் சார். தம்பி +2 படிக்கிறான்.”
“சந்தோசம். அப்போ இனிமே நீதான் குடும்பத் தலைவன்... ஹா..ஹா..ஹா..”
என்று சிரித்தார். “சரி, இந்த வேலையில் சேர்ந்து என்ன செய்யணும்னு எதிர்பாக்கிறே?”
“ஸ்கூல் படிக்கும்போதே பத்திரிகைத் துறையிலே சேரணும்னு ஆசை இருந்தது,
சார். உண்மையை, எளிய மக்களின் கஷ்டங்களை, சமூகத்தின் அவலங்களை, பெண்களின் உயர்வை,
சுரண்டல்களை...இது போன்ற விஷயங்களை பத்திரிக்கை வாயிலாக, மக்களிடம் சேர்த்து,
விழுப்புணர்வை உருவாக்கி...”
“ம்கூம்...” என்று கனைத்து, ஆசிரியர் கையை மேலே உயர்த்தினார். அவனை
சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.
“தம்பி, அரவிந்தன், நான் சொல்றத நல்லா கேட்டுக்க...நானும்
இலட்சியங்களுடன் பணத்தைப் போட்டுதான் இந்தப் பத்திரிக்கையை தொடங்கினேன். கொஞ்ச
நாளிலேயே அதெல்லாம் மறக்க, மறைக்க வேண்டியதாயிற்று. வாழ்க்க வண்டி ஓடணும்னா,
மக்கள் படிக்க விரும்பறத மட்டுமே எழுத வேண்டிய நிலைமை. நம்ம பத்திரிக்கையின்
சர்குலேஷன் இந்த நகரத்திலேயும், அக்கம் பக்க ஊர்களிலும்தான். ஏதோ! வர்ற பணம்
கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு. உன்னப் போல சின்னப் பசங்கள வேலைக்கு வெக்குறதே
நீங்க அலைஞ்சு திரிஞ்சு மக்களை கவர்ற செய்திகளா கொண்டு வருவீங்கன்னுதான்!”
சிறிய இடைவெளி விட்டு தான் சொல்ல வந்ததை முடித்தார். “எனக்கு
வேண்டியது கொஞ்சம் ருசியான செய்திகள். மாசாமாசம் நாம வளரணும். இப்போதைக்கு இதை
மட்டும் பார்ப்போம். லட்சியங்களுக்கு இன்னும் நேரமிருக்கு!”
தான் நினைத்து வந்ததற்கும், ஆசிரியரின் எதிர்பார்ப்புக்கும் இடையே
உள்ள ‘தலைமுறை’ வித்தியாசத்தை அரவிந்தன் எதிர்பார்க்கவில்லை.
“பார்... முதலில் உனக்கு சுலபமான வேலைதான். நகராட்சி கூட்டம்
நடந்துக்கிட்டிருக்கு. அங்கே போய் ஏதாவது நியூஸ் கொண்டு வா. கால் பக்கத்துக்கு
தேவைப்படுது. வெளியே உட்கார்ந்திருப்பவரிடம் செலவுக்கு கொஞ்சம் பணம்
வாங்கிட்டுப்போ!”
அவ்வளவுதான்! அரவிந்தன் நிருபராக உருமாறியாயிற்று!
பெரிய நாயின் நடவடிக்கைகள்
ஓரிரு நாட்களாக - ஏனென்று தெரியவில்லை - குட்டிக்கு விளங்கவில்லை. பெரிய
நாய், அவ்வப்பொழுது, சந்தேகம் மிக்க பார்வையுடன் தெருவின் இருமுனைகளையும் உற்று
நோக்கிக் கொண்டிருந்தது. ஏதோ, தீங்கை எதிர்பார்ப்பது போலிருந்தது அதன் செய்கை. ஒன்றும்
புரியாமல் குட்டி அதனிடம் கேட்டது.
“என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய், அம்மா?”
“தெளிவாகச் சொல்ல முடியவில்லை. நமக்கு ஆபத்து வந்துகொண்டிருப்பதாக
உள்மனது சொல்கிறது”
“ஏன் அப்படித் தோன்றுகிறது?”
“அதுதான் தெரியவில்லை என சொல்லிவிட்டேனே!” எரிச்சலுடன் பேசிய நாய்,
மறுபடியும் கண்களால் தெருவை ஆராய்ந்தது.
“மகனே, மனிதர்கள் சிலருக்கு நம்மிடத்தில் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகத்
தோன்றுகிறது. இந்த உலகை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளும் வல்லமை
உடையவர்கள் இவர்கள் என்பதை நாம் எக்கணத்திலும் மறக்கலாகாது.”
“ஏன் அம்மா, நம்மால் இவர்களுக்கு என்ன தொல்லை? இவர்களை அண்டித்தானே
நாம் வாழ்கிறோம்!”
“நீ என்ன கேட்டாலும் பதில் சொல்ல என்னிடம் விளக்கமில்லை. நான் ஒன்று
மட்டும் கண்டிப்பாகச் சொல்கிறேன். எந்நேரத்திலும் கவனமாகவும், விழிப்புடனும் இரு.
எல்லோரையும் நம்பிவிடாதே!”
தாயின் எச்சரிக்கைகளை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தும் குணம் அதற்கு
இல்லையென்றாலும், எதனிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமெனத் தெரியாதபோது, குழப்பம்மட்டுமே
அதனிடம் மிஞ்சியது. பரிவான மனிதர்கள் இருக்குமட்டில் கவலைப்படத் தேவையில்லை என்பதே
அந்தக் குட்டியின் எண்ணம். ஏன், அந்தக் கிழ காவலாளி போதாதா, காப்பாற்ற!
அரவிந்தனின் முதல் நாள்
வேலை. பேருந்தைப் பிடித்து நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றான். அந்த நகராட்சி அலுவலகம் அதரப் பழமையான கட்டடத்தில் இயங்கியது. உள்ளே
சென்று வெளியே வருவதற்குள் கட்டடம் தலையில் விழாமலிருக்கவேண்டுமே என்ற கவலையுடன்
அரவிந்தன் உள்ளே போனான.
“யார் நீங்க? எங்க போறீங்க?”
“பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கேன் சார். கூட்டத்தின்
தீர்மானங்களைக் குறிப்பெடுக்க வந்திருக்கிறேன்.”
“பத்திரிக்கைக்காரரா? கூட்டம் ஆரம்பிச்சாச்சே, லேட்டா
வந்திருக்கீங்களே?”
“இல்ல...இன்னைக்குதான் வேலைக்கு முத நாள்...”
“சரிதான். முத நாளே லேட்டா! போங்க. கதவுகிட்டேயே நில்லுங்க. உள்ளே போக
இடமிருக்காது.”
இரைச்சலாக இருந்தது. ‘சுற்றுகிறோம்’ என்ற பெயருக்கு மின்விசிறிகள்
சுற்றிக்கொண்டிருந்தன. புழுக்கம்... கதவருகில் யாராரோ ஆட்கள் இடித்துக்கொண்டு
நின்றிருந்தனர். உள்ளே ஏதோ தீர்மானங்கள் நிறைவேறிக் கொண்டிருந்தன.
“சரி..அதை பதிவு பண்ணிக்கோங்க...அடுத்து உறுப்பினர் க...
எழுப்பியிருந்த பிரச்சினைக்கு ம்... தீர்மானம் எண் 3 ஐ முன்மொழிவதாக....”
அரவிந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. எதை குறிப்பு எடுத்துக்கொள்வது?
அவர்கள் பேசுவதையா?
யாரார் வந்திருக்கின்றனர் என்பதையா? இந்த இடம் தேனிக் கூடு
போல் நெரிசலாக, இரைச்சலாக இருப்பதையா? ‘முதல்ல கட்டடத்தையும், மின்விசிறிகளையும்
மாற்ற தீர்மானம் கொண்டு வாங்க’ - அலை பாய்ந்து கொண்டிருந்த அரவிந்தனின் மனம்
சூழ்நிலையின் சூறாவளியைக் கவனிக்க மறந்தது.
“யோவ்..நீ அதப் பத்தி பேசாத...”
“ஏன் பேசக்கூடாது? எங்க ஆட்சியிலே...” அதற்குள் மூன்று பேர் எழுந்து
குரலெழுப்பத் தொடங்கினர். அந்த இடம், சரியாகச் சொல்ல வேண்டுமானால், தேனிக்
கூட்டைக் கலைத்தது போன்றிருந்தது.
“அடுத்த மாவட்டத்தில நடந்ததைப் பத்தி இங்கே பேசாதே..”
“ஏன்? அது மட்டுமென்ன? அடுத்த நாட்டிலா இருக்குது?”
“அண்டை நாடுகளைப் பற்றி பேச வேண்டாமென உறுப்பினருக்கு
உத்திரவிடப்படுகின்றது”
சிறிது நேரத்திற்கு இரைச்சல் தொடர்ந்து பின் மெதுவாக அடங்கியது.
கடைசித் தீர்மானம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் கொண்டு வரப்பட்டது.
“உறுப்பினர் சா... அவர்கள் கொண்டு வந்த பிரச்சினை: எல்லா
வார்டுகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால், பொதுமக்களுக்கு
அச்சுறுத்தல்களும், இடைஞ்சல்களும் அதிகமாகி, அமைதி கெடுவதாலும், மனித உயிர்களுக்கு
ஆபத்து தோன்றக்கூடிய சூழ்நிலைகள் உருவாகிவருவதாலும், பொதுமக்களின்
வேண்டுகோளுக்கிணங்க தெரு நாய்களை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவேண்டும்.”
“ஆமாம்...ஆமாம்...”
“ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்படுகின்றபடியால், வார்டு மேம்பாட்டுக்கு
ஒதுக்கப்பட்ட நிதியினை உபயோகப்படுத்தி, நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது...”
“நிதி போதாது. ஏனெனில் விலங்கு வதைச் சட்டத்தின் பிரிவு எண்...”
“ஆரம்பிச்சிட்டாண்யா...” என்றார் அருகிலிருந்தவர். மன்றத் தலைவரின் முகத்திலும்
சிரிப்பு. “உங்களுக்கே என்ன செய்ய வேண்டுமெனத் தெரியும். உங்கள் வார்டு மக்களை
சமாளித்துக்கொள்வது உங்களின் பொறுப்பு. நிதியில்லை என்பது உங்களுக்கே தெரியும்.
வேறு முக்கியப் பிரச்சினைகளும் உள்ளன. உட்காருங்கள்.... நிறைவேற்றப்பட்டது.”
“என்னப் பண்ணப் போறாங்க! தலையில் ஒரு அடியைப் போட்டு குழியில் தள்ளி
மூடப்போறாங்க...” என்று கூறிய பக்கத்திலிருந்தவரை பயந்த கண்களுடன் பார்த்தான்
அரவிந்தன். பத்திரிக்கைக்காரரா எனத் தெரியவில்லை. வயதானவர்; அனுபவம் பேசுகிறது.
“என்ன சொல்றீங்க?”
இவனைத் திரும்பி பார்த்தார். தனக்கு அதிகம் தெரிந்திருக்கின்றது என்ற
சிறு கர்வம் எழ, உற்சாகத்துடன் பேசலானார்.
“உங்களுக்குத் தெரியாதா, தம்பி? காலங்காலமா இதைத்தானே செய்றாங்க!
பின்னே! தெரு நாயைப் பிடிச்சு, ஊசியைப் போட்டு, திரும்ப அதைப் பிடிச்ச இடத்திலேயே
விட்டு...வேலையத்த வேலை.”
“அதுக்காக, இப்படி கொடூரமாகவா செய்வாங்க?”
“கொடூரமா?, வாய்விட்டுச் சிரித்தார். “குழியிலே போடும்போது எல்லாம்
பாதி உயிரோடத்தான் இருக்கும். யாருக்கு கவலை?”
ஏதோ நினைவுக்கு வந்ததைப் போன்று அரவிந்தனை உற்று நோக்கினார். “ஆமா,
நீங்க யாரு? பத்திரிக்கையா?”
“இல்ல சார்...இங்க ஒருத்தரப் பாக்க வந்தேன்..”
“நல்லது.. ஏன்னா, நாமளும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணுமில்லையா!
அதுக்குத்தான். தம்பி, எவ்வளவு இடங்கள்லே சாக்கடை நாறுது. தண்ணீப் பஞ்சம்... ரோடு
சரியில்ல.. ஆனா..,” குரலைத் தாழ்த்தினார், “அதையெல்லாம் கண்டுக்குறதில்லே..காசு
பண்றதிலே, கட்சி பேதம் கிடையாது. கொஞ்ச நஞ்ச நல்லவங்களாலேயும் ஒண்ணும் செய்திட
முடியாது...” இப்படியே பேசிக்கொண்டு போனார்.
அரவிந்தனுக்கு மனதில் நின்றதெல்லாம் வாயில்லா ஜீவன்களுக்கு
பத்திரிக்கைக்காரனாக தான் ஏதாவது செய்ய
வேண்டும் என்பது மட்டுமே. கோபம் கலந்த நெஞ்சுடன் ஆசிரியரை சந்தித்தான்.
“வாப்பா...எங்கே, உன்னுடைய முதல் ரிப்போர்டை சொல்லு. திறமையைப்
பார்ப்போம்.”
“சார், அந்தக் கூட்டத்திலேயே ஒரேயொரு செய்திதான் விபரீதமாகவிருந்தது.
அந்தச் செய்தியை கேட்டதிலிருந்து நெஞ்சு பதறுகின்றது. அதைச் சொல்லத்தான் ஓடோடி
வந்தேன்.”
ஆசிரியர் சுவராசியத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். “முதல்
நாள்லேயே ஆர்வத்தை தூண்டுறியே.. ம்.. சொல்லு..”
“கூட்டத்திலே ஒரேயொரு தீர்மானத்தை எல்லோரும் ஒரு மனதாக
ஏற்றுக்கொண்டுள்ளனர். நகரிலே தெருநாய்களின் தொல்லை அதிகமாகிவிட்டதால் அவற்றை
எல்லாம் ஒழிக்க முடிவு செய்து விட்டனர்.”
“சரி...?”
“சார், அவங்க ஊசி போடப்போறதில்ல..அந்த உயிர்களை கொல்லப் போவதாகத்
தெரிகிறது!”
“தம்பி, நீ என்ன சொல்ல வர்றே?”
அரவிந்தன் திகைப்புடன் நின்றிருந்தான். “சார், இது முக்கியமான
செய்தியில்லையா? இந்த அக்கிரமத்தை தடுக்க வேண்டியது நம் கடமையில்லையா?”
ஆசிரியர் இவனையே பார்த்தார். “நாய்த் தொல்லை அதிகமாய் இருக்கிறதென்று
எழுதிப் போட்டது யார்?”
“அந்த பகுதி மக்கள்”
“நம்ம பத்திரிக்கையை படிக்கப் போவது யார்?”
தயக்கத்துடன் அரவிந்தன் பதிலளித்தான், “ம்... அதே பகுதி மக்கள்தான்”
“அப்போ இந்த நியூஸை படிப்பதில் அவர்களுக்கு ஆர்வமிருக்குமென்று நினைக்கிறாயா?”
எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.
“உன்னப் பத்தி என்னென்னவோ நினைச்சிருந்தேன்! நீ இப்படியிருக்கியே.. போ..
முந்தைய
வெளியீடுகளை மறுபடியும் படி. பயிற்சி
இல்ல... இப்படித்தான் இருப்ப.. .தப்பில்ல!”
அரவிந்தனுக்கு இந்த வேலையும்
நிலைக்குமா என்பதில் சந்தேகமற்றுப் போயிற்று!
அந்த உரையாடல் நடந்ததற்கு அடுத்த நாள்... காலைப்பொழுது ரம்யமாக
இருந்தது. தெருக்கடைசிக்கு முன்னிருந்த வீட்டுப் பெண்மணி வீசி எறிந்திருந்த,
முந்தைய நாள் சோற்றினால் குட்டியின் வயிறு நிறைந்திருந்தது. வயிறு நிரம்பிய
குதூகலத்துடன் அலைந்து கொண்டிருந்த அந்தக் குட்டி, வெயில் ஏறவும், ஒரு வாகனத்தின்
அடியில் நிம்மதியான படுத்துக் கொண்டது. அருமையான, சிறிய கண்கள் செருகத்
தொடங்கியது. அதற்கே உரித்தான இன்பக்கனவுகளில் மூழ்கத் தொடங்கியது.
அப்போது அருகில் கேட்ட சிறு சலனத்தினால் கண்கள் திறந்தன. வாகனத்தின்
அடியில் படுத்துக்கொண்டிருந்தபடியால் முழுக்காட்சியும்
உடனடியாக விளங்கவில்லை. விழிகளை அகல விரித்தபின்தான், அருகில் நின்றுகொண்டிருந்த
அரைக்கால் அணிந்திருந்த ஓர் மனிதனைக் கண்டது. அவன் கைகளைப் பின்னே கட்டியிருந்தான்
போலும். அவனுடைய கைகள் குட்டிக்கு முழுதாகத் தெரியவில்லை. முதற்பார்வையிலேயே அவன்
அத்தெருவிற்கு அந்நியமான, ஏழை மனிதன் என்பது குட்டிக்கு விளங்கிவிட்டது.
“சு..சு..” சத்தமெழுப்பியபடியே அவன் அக்குட்டியை அருகில், அதாவது
வாகனத்துக்கு வெளியில் வருமாறு அழைத்தான். ஏழைகளிடம் அக்குட்டிக்கு எப்போதும்
அன்புண்டு. ‘தெருவில் நம்மீது கல்வீசி எறியப்படுவது போல் இவர்கள் மேலும் கற்கள்
எறியப்பட்டிருக்கவேண்டும். அதனால் தான் ஏழைகள் இத்தெருவில் அடங்கி ஒதுங்கி
நடக்கின்றனர்’ என்று எப்போதோ அதன் தாய் குட்டியிடம் கூறியிருந்தது அதன் நினைவுக்கு
வந்தது.
‘உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்’ எனப் பொருள்படும் உடல்
அசைவுகளுடனும், நன்றி பாராட்டும் கண்களுடனும், செங்கதிர் போன்ற நாக்கை தொங்க
விட்டுக்கொண்டு, மெலிந்து நீண்ட வாலைக் குழைத்துக்கொண்டு அது அவன் அருகில் சென்றது.
அவன் பொறுமையாக காத்திருந்தது, மனிதனுக்கு நன்றியுடன் தொண்டாற்ற மேலும் காலாவகாசம்
அளித்தததாக அக்குட்டி நினைத்தது. நடுத்தெருவில், கைகளைப் பின் கட்டியிருந்த, அழுக்கான,
ஏழ்மையால் அடிபட்டிருந்த அவன் முகத்தை அந்த நாய்க்குட்டி அண்ணாந்து பார்த்தது.
அந்நாய்க்குட்டி சற்றும் எதிர்பாராத சம்பவம் அப்போதுதான் நடந்தது. அம்மனிதன்,
பின்னே வைத்திருந்த கைகளை வேகமாக முன்கொணர்ந்து எதையோ சுழற்றி வீசினான். குட்டியின்
உள்ளுணர்வு தன்னை அடிக்கப்போகிறான் என்றுதான் முதலில் நினைத்தது. ஆனால்
நினைத்தற்கு மாறாக, அக்குட்டியின் தொண்டைக்குள் ஏதோ அடைத்ததை உணர்ந்தது. கண்ணிமைக்கும்
பொழுதிற்குள் அதன் கழுத்து நெரிபடத் தொடங்கியது. தாங்க முடியாத வலியினால் அந்தக்
குட்டி துடித்தது.
பரிதாபமான அக்குட்டியின் தொண்டை எலும்பு நொறுங்குவது போன்ற வலி
ஏற்பட்டது. அவன் கயிற்றில் சிக்கியிருந்த நாயை இழுக்கும்போது, வானும், தரையும்
அக்குட்டியின் கண்களின் முன் சுழன்றன. மூச்சு விடமுடியாமல் தவித்துக் கொண்டே
மண்ணில் இழுக்கப்பட்டது.
வலியில் துடித்தபோதும், உலகம் கண்களின் முன் மேலும் கீழும் சுழன்றபோதும்
அந்தத் தெரு நாய்க்குட்டியினுள் எழுந்த கேள்வி ஒன்றுதான்: “நான் என்ன தவறு
செய்தேன்?” அதன் பின்மண்டை எதிலோ மடாரென்று மோதியபோதும் வலியைவிட முன்னெழுந்தது - பதில்
தெரியா அதே கேள்விதான்...!
அது தூக்கி எறியப்பட்டது. முரடான தரையில் விழுந்ததால் வலது
முன்னங்கால் எலும்பிலும், முதுகெலும்பிலும் தாங்க முடியா வலி ஏற்பட்டது. எங்கோ
தடாரென்று கதவு மூடப்பட்டது. அந்த இடத்தை இருள் சூழ்ந்தது. நில்லாமல் மனது
கேட்டுக்கொண்டிருந்த அந்த ஒரே கேள்வியைப் புறக்கணிப்பது அக்குட்டிக்கு
சிரமமாகவிருந்தது.
தரை தடதடத்தது. கண்கள் இருட்டுக்கு பழக்கப்பட்டவுடன் தானிருந்த இடத்தை
குட்டியால் பார்க்க முடிந்தது. அந்த இடம்
ஒரு மூடப்பட்ட ஒரு இரும்பு வண்டி என்பதைப் புரிந்துகொள்ள வெகு நேரமாகவில்லை.
அச்சிறு அறையினில் வேறு நாய்களும் இருக்கக் கண்டது. முன்பே அறிமுகமாகியிருந்த
அடுத்தத்தெரு ‘சடையனையும்’ கண்டது. ஆனால் அவன் முரட்டுத்தனத்தின் சுவடேயில்லாமல்
மூலையில் முடங்கிக் கிடந்தான். அவனை மரண பயம் கவ்வியிருந்தது புலப்பட்டது. அவன் குட்டியை
கண்டுகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. மேலும் சில (நான்கைந்து இருக்கும்) நாய்களும்
இரும்புத்தரையில் பீதியுடன் படுத்திருந்தன.
ஒரேயொரு அவலட்சணமான நாய் மட்டும் முனங்கிக் கொண்டே வண்டியின்
இரும்புச் சுவற்றை நக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தது. வண்டியின் ஓட்டத்தால், இடறி,
இடறி விழுந்தாலும் எழுந்து மறுபடியும் நக்கிக் கொடுத்தது.
“என்னை மன்னித்து விடுங்கள்... தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்... எப்படியாவது
மன்னித்து விடுங்கள்” என்று கோருவது போன்றிருந்தது அதன் செய்கை. இரும்பில்
ஒட்டியிருந்த துரு நாக்கை கீறினாலும் அச்செயலை நிறுத்தவில்லை.
அவலட்சணமாய் இருந்ததிற்காகவோ, அல்லது மனிதனுக்கு மட்டுமே
தெரிந்திருந்த வேறு ஏதோ காரணத்திற்காகவோ – இந்நாள் வரை பயந்தும், மன்னிப்பு வேண்டியே வாழ்க்கை ஓட்டிய – அதற்கு துன்ப வேதனையில் மனிதனுக்கும், இரும்புச் சுவற்றுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
அதன் எண்ணமெல்லாம் - யார் புரிந்துகொள்ள வேண்டுமோ அவர்கள் புரிந்து கொள்வார்கள். தன்னுடைய
இழிநிலையின் கடைசிக் கட்டத்திலாவது மன்னிக்கப்பட்டுவிடுவோம் என்பதுதான்.
ஆனால் புத்திசாலி நாய்க்குட்டி அவசரப்படவில்லை. அதன் மனம் கொஞ்சம்கொஞ்சமாக
தெளிந்து, யோசிக்க ஆரம்பித்தது. ‘என்ன நடக்கின்றது, என்ன நடக்கப் போகின்றது
என்பதும் அதற்கு புரியவில்லை. என்ன தவறிழைத்தது என்பதும் அதற்கு விளங்கவில்லை.
‘ஆம், ஏன் இப்படி நடக்கவேண்டும்? பொழுது நன்றாகத்தானே சென்று
கொண்டிருந்தது? ஏன் என்னுடைய நாள் மாற வேண்டும்? ஆனால், இதற்கெல்லாம் காரணம் இருக்கவேண்டும்! எங்களின்
உலகையும், வாழ்வையும், மாற்றியமைக்கக்கூடிய சர்வ வல்லமை படைத்த மனிதனால்
இக்காரியம் செய்யப்படுகின்றது என்றால் ஏதோ வலுவான காரணம் இருக்கவேண்டும் என அதன்
மனதை சாந்தப்படுத்திக்கொண்டது.
அதன் பிறப்பிடமும், வாழ்விடமுமான, மரங்கள் சூழ்ந்த, மனிதனால்
அமைக்கப்பெற்ற உலகமான அந்தத் தெருவில் இந்நேரத்தில் தாய் குறுக்கும் நெடுக்குமாக
ஒடி தேடிக்கொண்டிருக்கும் என்பதை நினைத்தபோது மனம் துன்பப்பட்டது. ஆனாலும், அதன் தாய் புத்திசாலி; நடந்ததைப்
புரிந்து கொள்வாள் என்று மனதை தேற்றிக்கொண்டது.
‘ஒன்றும் கெடுதல் விளையாது’ எனத் திடமாக நம்பத் தொடங்கியது. அதன்
மனதில் எண்ண ஓட்டங்கள் சீராகத் தொடங்கின.
“இயற்கைக்கு மாறாக எந்தத் தவறும் நானிழைக்கவில்லை என்பதை மனிதர்கள்
புரிந்து கொள்வார்கள். வெகு சீக்கிரத்தில் இந்நிகழ்வுகள் நின்றுவிடும். நிழலில்
படுத்துக்கொண்டோ, விண்மீன்களை ரசித்துக்கொண்டோ நான் வாழ்ந்த வாழ்க்கை மறுபடி
என்னிடத்தில் வந்துவிடும்.”
“இத்தீயவைகள் மறைந்து விடும்... என் நம்பிக்கை பொய்க்காது. ஆமாம்... ஒவ்வொரு
நம்பிக்கைக்கும் காரணம் இருக்கவேண்டும். என் நம்பிக்கைக்குக் காரணம் – மனிதன் எனும் உயரிய இனத்தின்மேல் நான் வைத்திருக்கும் காலத்தால்
மாறாத அன்பு. எவ்விதப் பேதங்களும் பாராட்டாது, ஒவ்வொரு மனிதனிடத்திலும் நான் காட்ட
விரும்பும் அன்பு... அன்பு பொய்க்காதெனில், என் நம்பிக்கையும் பொய்க்காது...”
பெருஞ்சத்தம் எழுப்பியவாறு சென்றுகொண்டிருந்த வாகனத்தின் கூண்டினுள்,
கும்மிருட்டு பரவியிருந்தாலும், சாதாரண தெருக்கோடியில் வளர்ந்த, பாவமறியா நாய்க்குட்டியின்
கண்கள் மட்டும் தொலைதூர நட்சத்திரத்திரங்களைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
சில அற்ப உயிர்கள் காணாததை அத்தெரு மனிதர்கள் உணர்ந்ததாகவோ, துரதிர்ஷ்டம் வாய்ந்த உயிர்களுக்கு நேர்ந்த
கதியைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வந்ததாகவோ எனக்குத் தோன்றவில்லை.
*****************************************************
ரா. பாரத்ராம்.