“ஏம்பா, இன்னுமா பெரிய மாப்பிள்ளை வந்து சேரல?”
“வந்துருவாருங்க....சென்னையில இருந்து
வரணுமில்ல!”
“அட, இதையே இன்னும் எவ்வளவு நேரத்துக்கு
சொல்லப்போறீங்க? இங்கிருந்து இருநூறு கிலோமீட்டர் இருக்குமா?
ஆச்சு...இதோ...நானும், என் மாப்பிள்ளையும் வந்து அஞ்சு மணி நேரமாச்சு. நாங்க மட்டுமென்ன,
பக்கத்து ஊருலேயிருந்தா வரோம்? சேதி கேட்டவுடனே சட்டுபுட்டுன்னு கிளம்பி வரல?
இதெல்லாம் சரிப்படாது. மாப்பிள்ள, வாங்க. நம்ம தோப்பை ஒரு பார்வை பாத்திட்டு
வந்திடுவோம்.”
“இருங்கய்யா... எப்போ வேணுமின்னாலும்
முடிஞ்சிரும். அந்த நேரத்தில ஒரு மகனாவது அருகிலேயே இருக்கட்டுமே!”
சின்ன மகன் சரவணமூர்த்தியின் மாமனார்
முணுமுணுத்துக்கொண்டே சலிப்புடன் உட்கார்ந்தார்.
எதிர் வீட்டு பெரியப்பா பெரியசாமி, “யாரும்மா
அங்கே? ஐயாவுக்கு காபி கொண்டு வா” என்றார்.
“அதெல்லாம் வேணாம். ஏற்கனவே மூணு காபி
குடிச்சாச்சு. சர்க்கர வியாதி வாட்டுது. பேசாம கொஞ்சம் சோறு சாப்பிடுறேன்”
என்றவர், “அதனாலென்ன, இந்தாம்மா, நம்ம வீட்டுக்கு ஓடிப்போய் கொஞ்சம் சோறும்
சாம்பாரும்...” என்ற பதிலைக் கேட்டவுடனே, “வேணாம். நானே போறேன். எதிர்வீடுதானே...
இங்க ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது வாயும், சோறுமா இருந்தா நல்லாயிருக்காது. என்
வாழ்க்கையில் இந்நாள் வரையில பாதி சோறுல நான் கைகழுவினது இல்ல” என சொல்லிக்கொண்டே
எழுந்து நடந்தார்.
அவர் சற்று தூரம் செல்லும்வரை காத்துவிட்டு,
அந்தப் பெரியவர் உட்கார்ந்திருந்த சரவணனிடம், “ஏண்டா தம்பி, சுப்பையன் உங்க ரெண்டு
பேரையும் நல்லபடியாத்தானே வளர்த்துவிட்டிருக்கான்? உங்க குடும்பத்தைத் தவிர வேறு
எந்தக் குடும்பத்திலே ஒரு வயித்துல பிறந்த எல்லாப் பிள்ளைகளும்
உருப்படியாயிருக்கு? இப்போது என்னடான்னா... அவன் மூச்சு பிரியிற நேரத்தில, உன் மனைவி
பிள்ளைங்களை எதிர் வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் உட்காந்திருக்கா... உன் மாமனாரும்
சூழலுக்கேத்த இங்கிதமில்லாம பேசிட்டுப் போறாரு. நீ வாயை மூடிட்டு இருக்கியே?”
என்றார்.
“பெரியப்பா, என்ன செய்யச் சொல்றீங்க? திடீர்னு
ஒப்பாரி அழுகை கேட்டா குழந்தைங்க பயந்திரும்னு அவ போயிட்டா. என் மாமனார்
சொன்னதிலேயும் என்ன தப்பு? மென்பொருள் துறையில - கரணம் தப்பினா மரணங்கிற பயத்தில -
வேலை செய்யறவன் நான். லீவு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? போன மாசம் நீங்க
சொல்லி அனுப்பிச்சப்ப நான் வரலியா? காத்திருந்துவிட்டு திரும்பிப் போனப்போ என்
மேனேஜர் கேட்டான் – ‘என்ன, அப்பா சாவப்போறார்னு பொய் சொல்லி லீவு எடுத்தியான்னு!’ இன்னைக்கும்
நான் கிளம்பி வரல? அண்ணனுக்கென்ன! அரசாங்க வேலைதானே! பொறுப்பு இருந்தா, அவனில்ல
முதல்ல வந்து சேந்திருக்கணும்?”
“சரிதாம்பா, உனக்கு அவரே தேவலை போலிருக்கே!
உங்கப்பா காதில விழுந்து வைக்கப்போகுது! யாருடா அங்க? வா என் பின்னாடியே.... சில
ஏற்பாடுகளைச் செய்யணும்.”
படுக்கையில் மூன்று மாதங்களாக படுத்துக் கிடந்த
சுப்பையாவிற்கு இந்தப் பேச்சுகளெல்லாம் காதில் விழுந்துகொண்டிருந்தன. கண் இமையைக்
கூட அசைக்க முடியவில்லை. ஆனால் காது கேட்கும் திறனையும், கேட்பதை மனதில் அலசும்
திறனையும் அவர் இன்னும் முழுதாக இழந்துவிடவில்லை.
சின்ன சம்பந்தி பேசியது வியப்பளிக்கவில்லை.
மரியாதைக் குறைவுகள் சிறிது காலமாகவே, அதாவது மீள முடியாத நோயில் அவர் வீழ்ந்து
விட்டார் என்கின்ற உண்மை தெளிவடைந்த போதிலிருந்தே, நிகழத் தொடங்கிவிட்டன. சுப்பையா
எனும் தனி மனிதனின் மீதான சமூகத்தின் அக்கறை உயர்திணையிலிருந்து அஃறிணைக்கு
மாறிவிட்டது. இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் சுற்றமும் சூழமும், நேரம்
வரும்பொழுது, தவறாமல் தரும் பரிசு இது.
இதே மனிதன் பெண் பார்க்கும் படலத்திலும், கல்யாண
தினத்தன்றும் எவ்வளவு வெளிப்படையாக குழைந்து கொண்டிருந்தார் என்பது சுப்பையாவின்
நினைவிலிருந்து மறையவில்லை. பெரிய சம்பந்தி மட்டும் என்னவாம்! அன்றும் சரி...
இன்றும் சரி... இவர்கள் இருவருக்குமிடையே என்ன வித்தியாசம்?
‘பெரியவன் இன்னும் வரவில்லையா? ம்...
ஏனாகவிருக்கும்? மருமகளும் வேலைக்குப் போகிறவளல்லவா... அல்லது அவள் வேலைக்குப்
போவதில்லையா? ஞாபகம் விட்டுப் போச்சு. ம்... இருவரும் அலுவலகங்களில் சொல்லிவிட்டு,
பேரப்பிள்ளைகளையும் தயார் செய்துவிட்டு... கிளம்பி வரவேண்டுமல்லவா! இருந்தாலும்
இந்நேரத்திற்குள் வந்திருக்கலாம்..!’
அவருக்கு அவ்வப்பொழுது நினைவு தவறிக்கொண்டு
இருந்தது. உயரமான மலையில் கடினப்பட்டு ஏறுபவனுக்கு மூச்சுத் திணரும்பொழுது அவன்
நின்று, நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மூச்சை இழுத்துப்பிடித்து, மறுபடியும்
ஏற்றத்தில் காலெடுத்து வைப்பது போல் ‘அடைய வேண்டிய’ இடத்திற்குச் செல்லும்
முயற்சியின் விளைவால், மனது திறனை இழப்பதும் மறுபடி செயல்படுவதாகவும் இருந்தது.
கேட்கும் ஒலிகளை அலசி ஆராயும் திறன் வந்தபொழுது
வீட்டுத்திண்ணையில் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். குரலை வைத்து அடையாளம் தெரிந்து
கொள்ள இயலவில்லை. தன் மகன்களைப் பற்றிய பேச்சுதான்.
“நல்ல மனுஷன்... பிள்ளைங்க ரெண்டு பேரையும்
நல்லபடியா வளர்த்து, உசத்தி, சம்பாதிக்க வைத்திருக்காரே! நாமளுந்தான் இருக்கோமே!
வீட்டுக்கு ஒரு பிள்ளையாவது தற்குறியாகவே இருக்கு!”
:ஆமாண்ணே... ஆனா அதுக்கெல்லாம் கொடுப்பினை
வேண்டுமண்ணே...”
“கொடுப்பினை என்னடா கொடுப்பினை? நல்ல மனைவி
வந்து சேந்தாங்க... ம்... நமக்கும் வந்து வாய்ச்சுதுங்களே! அதுங்களைப் பத்தி
பேசணும்னாலே பயமாயிருக்கு!”
“சரியாச் சொன்னீங்க.. அன்பான மனைவி கிடைத்தால்
மனுஷனால முடியாதது என்னவிருக்கு?”
இவ்வார்த்தைகள் சுப்பையாவின் காதில்
விழுந்தவுடன் உடலில் மெலிய நடுக்கம் உண்டாயிற்று. ‘உண்மை... ஆண் எவ்வளவு
பலவீனமானவன்! எத்தகைய துன்பங்களுக்கும் துணை நிற்பவளும், கை பற்றி, வாழ்க்கைப்
பாதையில் தெளிவான வழி நடத்துபவளுமான நல்ல மனைவியை அமையப் பெற்றவன் எதைத்தான்
சாதிக்க முடியாது? கடவுளின் குறும்பைப் பாருங்கள்! வெறும் உடல் பலத்தை ஆணிடம்
கொடுத்துவிட்டு, விதியெனும் நச்சுப்பாம்பின் கடும் விஷத்தால் வாழ்வில் விளையும்
கொடுந்துன்பங்களைத் தாங்கிச் செல்லும் சக்தியை, - ஆண் என்றுமே அடைய முடியாத பலத்தை
- பெண்ணினுள் ஒளித்து வைத்திருக்கும் குறும்பைப் பாருங்கள்!’
மனதில் தொலைந்து போயிருந்த நினைவுகள் நிழலாடின.
‘இவர்களுக்குத் தெரியாது; அல்லது
மறந்திருக்கலாம். சிறுவயதில் நான் ஊதாரியாகச் சுற்றித் திரிந்தேன். என்
மூதாதையர்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலில் அழித்தேன்; நிலபுலன்களும்
கைவிட்டு நழுவத் தொடங்கின. இன்னும் கொஞ்ச காலம் கழிந்திருந்தால் – இதோ, இவர்கள்
குறிப்பிடும் ஊதாரிகளைவிட தரந்தாழ்ந்து போயிருப்பேன்! சரியான நேரத்தில் வந்தடைந்தாள்;
என் வாழ்க்கை நீரோட்டத்தின் போக்கே மாறிவிட்டது. எப்படி என்னை மாற்றினாள், எங்கெங்கே என்னை
ஒழுங்குபடுத்தினாள்? நினைவோட்டப் புகையினுள் எவ்வளவுதான் தேடிப்பார்த்தாலும்
விளங்கவில்லை. ஏதோ ஒரே ஒரு செயலில் அல்ல; என் ஒவ்வொரு செயலிலும் எனக்கே தெரியாமல்
என்னை வழி நடத்தியுள்ளாள்.’
இந்த நல்ல நினைவுகளிலேயே மயங்கிவிடல் நன்றாக
இருந்தது. மயங்கிவிட்டார்.
மீண்டும் தெளிவு வந்தபோது, எக்காரணத்திலாலோ, முன்பு
இருந்த மகிழ்ச்சி இல்லை. யோசிக்கலானார்.
‘ஆனால் அப்படி என்ன நல்ல வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்? அவள் என்னை சீராக்கியவுடன் என்ன பெரிதாகச் சாதித்தேன்? உழைத்தேன்;
உண்மைதான். இழந்த நிலங்களை மீட்டேன். கூடுதலாக நிலங்களை வாங்கினேன். அதுவும்
எப்படி... ஏழ்மையில் விழுபவனைக் கணித்து, பணத்தைத் திருப்பித் தரமுடியாதவனாகப்
பார்த்து, சிரித்த முகத்துடன் அவன் நலனில் அக்கறை கொண்டவனைப் போல் நடித்து, கடன்
கொடுத்து, பின்பு அவன் நிலத்தைப் பிடுங்கி... இதெல்லாம் நிச்சயம் நல்ல செயல்கள்
அல்லவே! ஆனால், என்னைப் போன்ற எல்லோரும் அப்படித்தானே செய்கிறார்கள்?’
‘பணம்... நிலம்... சொத்துகள்... வரவு....
இதையெல்லாம் சாதிக்கத் துணையாயிருந்த மனைவி.... நான் உயர்த்திவிட்ட இரு
மகன்கள்...! பொறு; ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. அந்த துயரத்தின்
நினைவுகள் என்றோ மறைந்துவிட்டனவே! இப்போது ஏன் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது?
இல்லை... எங்கோ, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்? என்னுடைய
கடமைகளைச் சரிவர... ம்... அவை சரியானவையா எனத் தெரியவில்லை.’ என்னுடைய எண்ணங்கள்
குழம்புகின்றன.’
நினைவிழந்தார்.
வீட்டு வாசலில் சலசலப்பு தோன்றிப் பின் ஆரவாரமாக மாறியது. எங்கிருந்தோ இதற்காகவே காத்திருந்த கூட்டமொன்று சேர்ந்துகொண்டு ஒப்பாரியைத் தொடங்கின. பெரிய மகன் கணேசமூர்த்தி வந்துவிட்டான். கணேசன் வீட்டினுள் நுழைந்து கட்டிலில் படுத்துக் கிடக்கும் தந்தையைப் பார்த்தான். அவன் மனைவி, வீட்டிற்கு மூத்த மருமகள் நிர்மலா வீட்டிற்குள்ளிருந்த பொருட்களை ஆவலுடன் பார்வையிடலானாள். அவரவர் கடமை அவரவர்க்கு!
குச்சி போல் மெலிந்து கிடக்கும் உடலைக் கண்டவன், சற்றே கண்களைச் சுருக்கிக் கொண்டு (இத்தோற்றத்தை வரும் வழியில் பழகிக் கொண்டுதான் வந்திருந்தான்) “என்ன சொல்கிறார்கள்?” என்றான்.
அருகில் நின்றிருந்த கோவிந்தன் (மாமா முறை வேண்டும்), கணேசன் கேட்ட கேள்விக்கு அர்த்தம் பிடிபடாமல் நின்றார். “அதானேப்பா, மூணு நாளைக்கு முன்னேயே எப்ப வேணுமின்னாலும் உயிர் பிரியும்னு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க. நீ அப்போவே வருவேன்னு...”
இடைமறித்தான். “அதான் அன்னிக்கே சொன்னேனில்லே... வேலை அதிகம்னு. அவன் எப்போ வந்தான்?”
“இன்னைக்கு காலையிலேதான்...”
“மாமா, ஏண்டா முன்னாடியே வரலேன்னு கேக்க வேண்டியதுதானே? நீங்க எப்பவும் அவன் பக்கம்தான். நிரு, வா... கார்ல இருக்கிற பெட்டிகளை எடுத்து உள்ள வெச்சிடுவோம். நம்பமுடியாது!”
அவர்கள் அகன்றதும் கோவிந்தன் அருகிலிருந்தவரிடம் கூறியது சுப்பையாவிற்கு எங்கோ தூரத்து எதிரொலி போல் கேட்டது. “பாத்தியாப்பா, உயிரே இன்னும் போகலே. என்னமோ சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்த மாதிரி பேசறான்!”
‘சுடுகாடு’ என்ற சொல்லைக் கேட்கவும் சுப்பையாவின் மனம் பயந்து நடுங்கியது. ‘ஓ, நானும் சுடுகாட்டுக்கு போய்த்தான் ஆகவேண்டுமா? வேறு வழியில்லையா? நான் அதிலிருந்து தப்பிக்கவே முடியாதா? அதெப்படி? எனக்குமா அதே கதி? இது எப்படி இருக்க முடியும்!’
மற்றபடி கணேசன் பேசியதிலும் அவருக்கு வருத்தம் ஏதுமில்லை. இந்தப் பேச்செல்லாம் அவள் உயிரோடிருக்கும்போதே ஆரம்பித்தாயிற்று. ஏதோ, அவள் இருந்தவரை உருவான அல்லது உருவாக்கப்பட்ட சொத்து சண்டைகள் அளவிற்கு மேல் வளராமல் பார்த்துக்கொண்டாள். சென்ற வருடம் அவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள். மகராசி... அவள் அதிர்ஷ்டம்...
கோவிந்தன் குரல் கேட்டுக்கொண்டிருந்தது, “எல்லாம் சொத்து பிரச்சினைதாம்பா. சுப்பையன் நிறைய நிலத்த வாங்கிப் போட்டான். - நியாயமான முறையிலா எனக் கேட்டுடாதே - என் பிள்ளைங்க என்னத்தான் கேள்வி கேக்குதுங்க; மாமா மாதிரி நிலம் வாங்கிக்கொடுத்தியான்னு...”
“சரிதான்னே... ஆனா நிலங்களைத்தான் அம்மா இருக்கும்போதே சரிசமமா பிரிச்சுக் கொடுத்துட்டாரே... அப்புறம் என்ன?”
கோவிந்தன் வாய்விட்டு சிரித்தார். “வயசானவங்களுக்கு சொத்து என்பது பாதுகாப்புன்னு நினைப்பு. ஏதோ கையில சொத்து இருந்தாதான் பெத்த புள்ளைங்க கடைசி வரைக்கும் சோறு போடும்னு நினைக்கிறாங்க.... அது சரிதான், இல்லைன்னு சொல்லலே... ஆனா கடைசி நாட்கள்ல மடியில வெச்சிக்கிட்டிருக்குற சொத்துதான் சோறு போடும்னா, வாழ்க்கை பூரா பெத்த பிள்ளைங்க மேல இவங்க காட்டுன அன்புக்கு இவங்களே கொடுக்குற மரியாதையைப் பாரு... வயித்தெரிச்சல்ல பேசறேன்னு நினைக்காதே; தன்னோட அன்பையும், வாழ்நாள் பூரா தான் காப்பாத்திக்கிட்ட நல்ல குணத்தையும் இவங்களே நம்பலேன்னா, அடுத்தவனைக் குறை சொல்றது என்ன நியாயம்?
சுப்பையாவின் உடல் லேசாக சிலிர்த்தது.
“எல்லாத்தையும் கொடுத்துட்டாரு. ஆனா, பாதுகாப்புக்கு இந்த வீட்ட தன பேருலேயே வெச்சிக்கிட்டாரு. கிராமத்திலேயே நல்ல வீடு. திண்ணையில பத்து பேரு படுத்துத் தூங்கலாம். மூணு குடும்பம் உள்ள ஒன்றாகத் தங்கலாம், அவ்வளவு வசதி. வேற எவனுக்கு இங்க இப்படியொரு வீடிருக்கு? வீட்ட யாருக்கும் இவரு கொடுக்கல. இப்ப அதான் பிரச்சினை. சின்னவன், அவனுடைய மாமனார், மாமியாரை இங்கேயே தங்க வெச்சிகிட்டு நிலங்களைப் பாத்துக்கப் போறேன்னு சொல்றான். பெரியவன், அது என்ன? நான் வந்து போக இடம் வேணாமான்னு கேக்குறான். எவன் பக்கம் கை ஓங்கப் போகுதுன்னு தெரியல. சரி, வாயை மூடித் தொலைப்போம். நமக்கு ரெண்டு பேரு தயவும் வேணும்!”
சிறிது நேரத்திற்கு ஒன்றும் காதில் விழவில்லை. சுப்பையா நினைத்துக்கொண்டார்; ‘புண்ணியவதி, சரியாத்தான் சொல்லிட்டு செத்தாள்... அவ சொன்ன மாதிரிதான் நடக்குது. ஆனால் இந்தப் பேச்சுல கேட்டது போல என்னுடைய அன்பை, பாசத்தை நான் ஏன் நம்பவில்லை? விதைத்ததைத்தான் அறுப்பாய் எனும் பழமொழி ஏன் இப்பொழுது நினைவுக்கு வரவேண்டும்? செல்வத்தை சேர்த்துக் கொண்டிருந்ததால் சக மனிதர்களின் நேசத்தை இழந்துவிட்டேனா? ஏதோ ஒன்றை நான் செய்யத் தவறிவிட்டேனா? குழப்பம்தான் மிஞ்சுகிறது...’ அவர் மறுபடி சுய நினைவை இழந்தார்.
காத்திருப்பதில் மிக மோசமானது என்னவென்று தெரியுமா? ஓர் உயிர் பிரியக் காத்திருப்பதுதான். எவ்வளவு நேரத்துக்குத்தான் அகக் கருத்தையும், முகக் கருத்தையும் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருப்பது?
வீட்டிற்கு முன் இருந்த திண்ணையில், வாயிலின் இருபக்கங்களில் மகன்கள் அமர்ந்திருந்தனர். சொந்த சகோதரன் அருகிலிருப்பதை தெரியாதது போல் – தெரிந்து கொள்ள விடாத சக்திகளின் திறமையினால் – இருந்தனர். பெரியவன் பக்கம் சிறு குழுவும், சிறியவன் பக்கம் மற்றொரு குழுவும் சூழ்ந்திருந்தது. வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளமுடியாத சிறு கூட்டம் கொஞ்சம் நேரம் சிறியவனிடமும், கொஞ்ச நேரம் பெரியவன் பக்கமும் சுற்றி விசுவாசத்தை நிரூபிக்க முயன்று கொண்டிருந்தது.
தின்னும் பண்டம் தெருவில் கிடக்கும்பொழுது, அதற்காகப் போட்டி போடும் இரு நாய்களை கவனித்திருக்கிறீர்களா? இரண்டும் பண்டத்துக்கு அருகிலேயே திடமாக, கால்களை பரப்பி நின்று கொண்டு, தரையையே முறைத்துக்கொண்டு - ‘நீ சற்றேனும் அசைந்தால் தொலைந்தாய்’ எனப் பொருள்படும் வகையில் பற்களை காண்பித்து சீறிக்கொண்டிருக்குமே – அதேபோல்தான் இருந்தது சுப்பையாவின் மகன்களின் செய்கை. அவ்வப்பொழுது மகன்களும் முகத்தைச் சுளித்தவாறே கவலையுடன் திரும்பி ‘பண்டத்தை’ பார்த்தனர்.
நேரம் கழிந்துகொண்டே இருந்தது.
சுப்பையாவிற்கு நினைவு திரும்பியது. அவரால் நன்றாக சிந்திக்க முடிந்தது. ‘நான் இன்னும் சாகவில்லையா? என்ன சண்டை வெளியே? மகன்களின் குரல்களாக இல்லையே? இந்த நிலையில் யார் குரல் என்பதைப் புரிந்து கொள்ள முடியுமா? கூர்ந்து கேட்டால் சம்பந்திகளின் வெறி பிடித்த கூச்சல் போலல்லவா உள்ளது... எல்லாம் இந்த வீட்டைப் பற்றித்தானிருக்கும்!
நான் நன்றாக இருந்தபொழுது, செல்வந்தனாக இருந்தபொழுது, வீடு எத்தனை களையுடனிருக்கும்! நாள் கிழமையென்றால்...! பொங்கல் பண்டிகையன்றோ... கேட்கவே வேண்டாம். இதே சம்பந்திகள் வந்திறங்கும்போது என்னவொரு அன்பு ததும்பும் வேட்கையுடன் என்னைக் கட்டித் தழுவிக்கொள்வர்! பசுமையான, இனிமையான நினைவுகள்...!
உயிர் பிரியும் நேரத்திலே நினைவுகள் தப்புமென்று எண்ணியிருந்தது மடத்தனம்! வாழ்வின் எல்லா நினைவுகளும் – கோர்க்கப்பட்ட முத்து மாலையைப் போன்று – அற்புதமான கோர்வையுடன் மனதில் படிகின்றன. எல்லா நினைவுகளும் கடைசியாக ஒரு முறை ஒன்று கூடி, பின் மொத்தமாக சிதறிப் பிரிவதுதான் மரணம் போலும்!
விட்டுத் தள்ளு! துன்பந்தரும் எண்ணங்களை விட்டுத் தள்ளு... ம்... முடியவில்லையே! இன்பமான நினைவுகளைப் போன்று இன்னல் தரும் எண்ணங்களும் வரத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, ஏன் ‘சுடுகாடு’ என்னும் வார்த்தை அடிக்கடி முன்னுக்கு வரவேண்டும்? என்னதான் பெரிய மனிதனாக வெளிக்காட்டிக்கொண்டாலும் சுடுகாடு என்றாலே உள்ளூர உதறல்தான்... அந்த வெட்டியான் வேலப்பன் எப்படித்தான் சுடுகாட்டிலேயே வாழ்கிறானோ! வேலப்பன்! இழிவான பிறவி... எப்போது என்னைப் பார்த்தாலும், இடக்கையை வயிற்றின் குறுக்காகக் கட்டி, வலக்கையால் காதின் பின்புறத்தைச் சொறிந்துகொண்டு, “சாமீ... ஏதாவது கொஞ்சம் காசு...” என்றே கேட்டுக்கொண்டு... எல்லாம் குடிப்பதற்கு.
அவனைப் பார்த்தாலே அருவருப்புத்தான். பின்னே! சொந்த வயல்களின் விளைச்சலைப் பார்த்து மகிழ்ந்து, நாலைந்து பேரை திட்டி வேலை வாங்கி, அவ்வருட வருமானத்தை மனதிலேயே கணக்குப் போட்டு, வாய்க்காலில் ஓடும் தெளிந்த நீரில் காலை நனைத்து, தெருவில் ஏறி நிற்கும்போது, என் முன்னே வந்து நின்று “காசீ...” என்று கெஞ்சினால் யாருக்குத்தான் கோபம் வராது? அவனும் அவன் தோற்றமும்! அழுக்கான அரை வேட்டியும், அதைவிட அழுக்கான துண்டும், எல்லாவற்றையும் விட அழுக்கான பற்களும்... அவனைப் போன்ற தோற்றம் உடையவர்களெல்லாம் நமக்குத் துன்பத்தையும், மரணத்தையும் நினைவுபடுத்துபவர்கள்... அவர்களை விரட்டாமல் இருக்க முடியுமா?’
ஏன் வேலப்பனின் நினைவு இப்போது வருகிறது என்பது சுப்பையாவிற்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. அவர் மேலும் யோசித்தார்.
‘இன்பதுன்பங்களிலே இணைந்து மெலிந்த என் மனைவி காலமாகிவிட்டபோது சுடுகாட்டுக்குச் செல்ல எப்படி பயந்தேன்! காற்றில் கரைந்த வாசம் போல் சென்றுவிட்டாள் என்பதை நம்பமுடியாத நேரமது! ம்... ஆனால், அவள் மேலிருந்த என் உண்மை அன்பு எனக்கே அன்றுதானே வெளிப்பட்டது. கட்டைகளின்மேல் படுக்க வைக்கப்பட்டு கொள்ளியிட அழைத்தனர். சிறு நெருப்பை கட்டைகளின் அடியில் வைத்துவிட்டு ஒடிவந்துவிட்டேனே! அவள் எரிவதைப் பார்க்க முடியாமல் ஒடி வந்துவிட்டதாக கூறிக்கொண்டார்கள். ஆனால் இன்று நினைத்துப் பார்த்தால், ஒருநாள் நானும் அவ்வாறு காட்டில் தனியே படுத்துக்கிடக்க நேரிடும் என்கின்ற உண்மையை மறைத்துக்கொள்ளவே ஓடிவந்தேன் எனத் தோன்றுகிறது. ஏதோ ஆன்மா என்கிறார்களே! அந்தச் சமயத்தில், அவளின் ஆன்மா சிதையின் நெருப்பிலிருந்து எழுந்து, ஊருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் என்னை இழிவாகப் பார்த்திராதா? ‘இதுதானாய்யா நீ எனக்கு காட்டும் நன்றி’ என நினைத்திருக்காதா? ஏன், மற்றவர்கள் மட்டுமென்ன... ஓட்டப்பந்தயம் போலல்லவா ஓடிவந்தார்கள்! சிதை எரிவதைத் திரும்பிப் பார்த்தால் சாவுதானாம்! வெட்கக்கேடு..’
‘வாழ்க்கையையே திரும்பிப் பாராமல்தானே ஓடுகிறோம்!’
‘ஆனால் அங்கேதானே வேலப்பனும், துணைக்கு அவன் மனைவியும் இருக்கிறார்கள்! அவர்களால் எப்படி பயமில்லாமல் இருக்க முடிகிறது? ஏதோ, விவசாயி உழுது, விதைத்து, அறுவடை செய்வது போலல்லவா அவன் கட்டைகளை அடுக்கி, நெருப்பை அணையவிடாமல் பார்த்து, எலும்புகளைப் பொறுக்கி... ஓ... எண்ணமே பயமாகவுள்ளது... சுடுகாட்டை நினைத்தாலே...’
மறுபடியும் அவர் உடல் நடுங்குவதைப் பார்த்த ஒருவர், “சண்டைய நிறுத்துங்கப்பா... உயிர் போற நேரத்துலேயா இதெல்லாம்...”
“உயிர் போறதுக்குள்ளே பேசிடணும். அப்புறமெல்லாம் ஒண்ணும் பிரயோஜனமில்லை.!”
“சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தா எப்படி?”
“சின்ன மகனுக்கு கொடுத்த நிலம் நல்ல பாங்கான இடமாயிருக்கு”
“நிறுத்துமய்யா...பெரியவரு நிலத்தில எவ்வளோ பெரிய கிணறு...”
“அட, ரெண்டு பேருமே இருங்கய்யா... என்னமோ பசங்களே விவசாயம் செய்யப் போற மாதிரி... குத்தகைக்கு விட்டா ஏறக்குறைய சமமாகத்தானே பணம் வரும்!”
“அதெப்படி சொல்ல முடியும்?”
சச்சரவு அதிகமாகிக்கொண்டிருந்தது. மகன்கள் இருவரும் வாயைத் திறக்காமல் முறைப்புடன்தான் இருந்தனர். இருபக்கக் கூட்டங்கள்தான் கத்திக்கொண்டிருந்தன. அதிலும் மாமனார்களின் குரல்கள் ஓங்கியிருந்தன.
சுப்பையாவின் உடல் சோர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ‘இன்னமும் வீட்டு சண்டை ஓயவில்லையா? இங்கே கொஞ்சகொஞ்சமாக இவ்வீட்டின் நினைவுகளை அழித்துக்கொண்டு பிரியும் உயிரை யாரும் கவனித்தபாடில்லை! இவர்களுக்காகவா வாழ்ந்தேன்? எல்லாம் அவளால் வந்தது... பாவம், அவள்தான் கண்டிருப்பாளா? நன்றியில்லாதவர்கள். எப்படியெல்லாம் குழைந்தார்கள். என் மகன்களைப் பற்றி விசாரிப்பதை விட என் சொத்துகளைப் பற்றியே அதிகம் விசாரித்து பெண் கொடுத்தவர்கள். எனக்கா தெரியாமல் போகும்? இந்த சுற்றத்துடனா நான் வாழ்க்கையை கழித்தேன்?’
அவருக்கு பயத்துடன் தோல்வி நினைவுகளும் தோன்றின.
‘அப்படியென்றால் எனக்காக யாருமே இங்கு இல்லையா? வெளியிலிருக்கும் கூட்டம் வெறும் பித்தலாட்டம். என் இறப்பினால் கிடைக்கப்போகும் லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் கூட்டம். என்னை இங்கிருந்து அகற்றிவிட்டால் வீட்டை சுத்தமாகக் கழுவிவிட்டு கருமாதி முடிவதற்கு காத்திருக்கப்போகும் கூட்டம். பார்க்க வேண்டியவர்கள் பார்க்கும்போது மட்டும் அழுது நடிக்கப் போகும் கூட்டம். என் மகன்களும் பாவம்தான்!’
‘ஒரு உயிரின் மறைவிற்கு தனிமையில் அழுபவனே அந்த உயிரின்மீது உண்மையான அன்பு கொண்டவனாக இருக்க முடியும். பிரிந்த உயிரின் அன்புக்காக, கருணைக்காக, செய்த நன்மைகளுக்காக அல்லது ஏதோ வாழ்வில் விளைவித்த தாக்கத்திற்காக... தனிமையில் அழுபவனின் கண்ணீர் மட்டுமே களங்கமில்லாதது. ஓ... எனக்கென்று அப்படி ஒருவர் கூட இல்லையா? சாகும் நேரத்தில் இதைவிட பயம் தரும் எண்ணம் வேறென்ன இருக்கமுடியும்?’
“வேலப்பன் வந்துவிட்டானா? வந்துட்டியா... தயார் செய்யணும் போலிருக்கு” என்று யார் குரலோ கேட்டது. “இதோ இருக்கேன் சாமீ... நான் பாத்துக்குறேன், சாமீ...”
‘சுப்பையாவிற்கு எண்ணங்கள் தீவிரமாக ஓடத்தொடங்கின. ‘ஆமாம், என் சம்பந்திகளுக்கு வேலப்பன் எவ்வளவோ மேல். இவர்களுக்கென்ன! தகன மேடையில் படுக்க வைத்துவிட்டு ஓட்டமாய் ஓடிவிடப்போகிறார்கள். அவனாவது கடைசி வரை, நான் வெந்து முடியும் வரை கூட இருப்பான். இப்போதுதான் தோன்றுகிறது; ஒருவேளை, கையில் ஐந்தோ, பத்தோ கொடுத்துவிட்டு, வேலப்பனைக் கட்டித் தழுவியிருக்க வேண்டுமோ? அதுதான் நான் வாழ்வில் செய்யத் தவறியதோ? இருந்தாலும் இருக்கலாம்... நான் எரியும்போது கை துண்டை வாயில் பொத்தி நாலு சொட்டு கண்ணீராவது விட்டிருப்பான்! ம்... இப்போது அதைப் பற்றி யோசித்து பயனொன்றுமில்லை’
ஏனென்று தெரியவில்லை, சுப்பையாவிற்கு துன்ப எண்ணங்கள் மடிந்து, நகைப்புக்குரிய சில கனவுக் காட்சிகள் தோன்றின.
‘ம்... சுடுகாட்டிலிருந்து அவர்களெல்லாம் ஓடியபிறகு, ஒருவேளை, எப்போதும்போல், வேலப்பன் படுத்துக்கிடக்கும் என்னிடம் கையைக் கட்டிக்கொண்டு, காதைச் சொரிந்து விட்டு, “சாமீ...காசு...” எனக் கேட்பானோ!’
இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தவுடன் சுப்பையாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால், உள்ளுக்குள் அவர் சிரித்தது, வெளியில் தொண்டைக்குழியில் ‘களுக்’ என்ற சத்தத்தை எழுப்பியது.
யாரோ ஒருவர், “வாங்கப்பா... உயிர் போகப்போகுது. தொண்டை சிக்குது” என்றார்.
‘உயிரா, எனக்கா?’ சுப்பையா யோசித்தார். ‘நான் உயிரோடிருந்தது வேலப்பனுக்கு மட்டுமே தெரிந்திருக்கவேண்டும். இவர்களுக்கெல்லாம் நான் என்று உயிரோடிருந்திருக்கின்றேன்? தந்தையாகவோ, சம்பந்தியாகவோ, முதலாளியாகவோ, பணக்காரனாகவோ... இப்படி பல தோற்றங்களில் இருந்திருக்கின்றேனே ஒழிய உயிருடன் இருந்ததேயில்லை. உயிர் பிரிந்தபின்னும் சுப்பையாதான் என்றால் கடைசி சாம்பலாகும் வரையிலும் நான் சுப்பையாதானே! அப்போது என்னிடமிருக்கப்போவது வேலப்பன்தானே! அவனுக்குத்தான் நான் என்றும் உயிருடனிருந்திருக்கின்றேன்.’
அவர் மனதில் காட்சி மாறியது. இப்போதும் அவர் தகன மேடையில் படுத்திருக்கிறார்; வேலப்பனல்ல... இரு சம்பந்திகளும் அவர் கண்முன் தோன்றினர். சுப்பையா அக்கணத்திலும் உயிர் பிழைத்துக்கொண்டு வீடு திரும்ப சாத்தியமிருக்கிறது. விடுவார்களா! சம்பந்திகள் வேலப்பனைப் போலவே தலையைச் சொரிந்து கொண்டு, “சாமீ... காசு...! இல்லையில்லை... வீடு” என்கிறார்கள்.
அப்பெரிய மனிதர்களின் கேவலமான தோற்றத்தையும், முகபாவங்களையும் மனதில் கண்டவுடன் மறுபடியும் இவருக்கு சிரிப்பு வந்தது. இந்த முறை சிரிப்பதற்கு அவர் பெருமூச்சு இழுக்க வேண்டியிருந்தது. தொண்டையில் மறுமுறை ‘களுக்’ என்ற சத்தம்.
சிரிப்பது சிரமமாய் இருப்பதை சுப்பையா உணர்ந்தார். அதற்காக சிரிக்காமல் இருக்கமுடியுமா? வாழ்வின் உண்மைத்தோற்றங்கள் மரணப் படுக்கையில்தானே கண்முன் வருகின்றன!
அவர் மனக்கண்ணில் மறுபடி காட்சி மாறியது. இப்போது சம்பந்திகள் மட்டுமல்ல, வேலப்பனும் அங்கிருந்தான். கட்டைகளின்மேல் அவர் படுத்திருந்தார். சம்பந்திகள் இருவரும், முன்புபோலவே அவரைப் பார்த்து, “சாமீ... வீடு...வீடு..” என்றனர். ஆனால் இப்போது சுப்பையா அவர்களைப் பார்க்கவில்லை; வேலப்பனைக் கவனித்தார். கையைக் கட்டிக்கொண்டு, காதையும் சொரிந்து கொண்டு, படுத்திருந்த சுப்பையாவிடம் பேச நினைத்த அவன் அதிர்ந்து போய், சம்பந்திகளை பார்த்த பார்வையைக் கவனித்தார். வேலப்பன் நின்றிருந்த தோற்றம், அப்பெரிய மனிதர்களைப் பார்த்த அவனுடைய பார்வை, அவன் முகத்தில் பரவியிருந்த அதிர்ச்சி – எல்லாம் சேர்ந்து சுப்பையாவிற்கு அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்கியது.
சிரிப்பை சமாளிப்பதற்கு மிக நீண்ட மூச்சை இழுக்க வேண்டியிருந்தது.
“முடிந்து விட்டது. அண்ணன் இறந்துட்டார். ஒப்பாரியை ஆரம்பிங்கம்மா...”
‘நானா? இறந்துவிட்டேனா? நான் சிரிப்பையல்லவா அடக்க முயற்சிக்கிறேன்! ஆனால் அதுவும் சரிதான். என்னால் இனியும் சிரிப்பை அடக்க முடியாது. இவர்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க முடியவில்லை. என் நினைவுகளைக் கலைத்துவிடவேண்டியதுதான். வேறு வழியில்லை... போதும்...போதும்...எல்லாம் கலையட்டும்...’
அவரின் நினைவுகள் கலையத் தொடங்கின. சுப்பையாவின் மரணம் அப்போதுதான் ஆரம்பித்தது.
-----------------------------------------------
ரா. பாரத்ராம்.
Very good story. Good tamil short stories are rare to see nowadays. Keep writing
ReplyDeleteExcellent narrative bharath.expecting more such stories from you
ReplyDeleteExcellent narrative.expecting more such stories from you
ReplyDeleteThanks, Radhika
DeleteA person on a death bed as a protagonist is an interesting story line. Your interpretation of the process of dying is the most optimistic I have ever read with a touch of humor :)
ReplyDeleteRole of a woman in transforming a man into a responsible husband is beautifully expressed. Well, a wife wouldn't know either, when and how she brought about this change.
I still can't believe that the Bharath I used to know in college is so articulative with such deep insights on relationships. Keep expressing, so we enjoy your thoughts and understand you better :)
Thanks, Sathya..
Delete