தமிழ் மொழியினால் பயன்கள் எதுவும் என் வாழ்க்கையில்
பெரிதாகக் கிட்டியதில்லை. ஆனால் இன்னல்கள் பல விளைந்ததுண்டு.
ஆங்கில மீடியம்களாக பள்ளிகள் மாறிவரும்
சூழலிலும், குழந்தைகள் தமிழைக் கற்க வேண்டும் என எண்ணும் தகப்பன் நான்.
செம்மொழியாம் தமிழ் மொழி, ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய
மொழியாக்கும்’ எனப் பிதற்றித் திரியும் கூட்டத்தில் நானும் ஒருவன். தமிழ்க் கண்கள்
அழுதால் உடல் இரத்தம் கொதிக்கும் என்று எண்ணியிருந்த எனக்கு, ‘மேற்படி மேற்படி’
ஆங்கில ஆரம்பப் பள்ளியில் படிக்கும் என் மகனின் தமிழ்ப் பாடத்தால் வந்தது வினை.
அந்தப் பள்ளி வட்டாரத்தில் ஒரு பிரபலமான பள்ளி. உங்களின் வருமானம் எவ்வளவு என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு – அந்தப் பள்ளியில் குழந்தையைப் படிக்க வைக்க உங்களுக்கு அருகதை உண்டா என்பதைத் தெரிந்து கொள்ளும் நுணுக்கத்தின் முதற்படி அது – அந்தச் சம்பளத்தின் கணிசமான ஒரு தொகையைக் கறந்துவிட்டு, பின் - ‘குழந்தையின் கல்வி வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது’ எனும் பொன்மொழியை முதற்பாடமாக பெற்றோர்களுக்குச் சொல்லித்தரும் களவுக் கூடம் – மன்னிக்கவும், கல்விக்கூடம்.
மற்றப் பாடங்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால்
தமிழ்க் கல்வியை வீட்டிலிருந்து எங்கனம் தொடங்குவது? உலகமயமாக்கப்பட்ட
பொருளாதாரத்தின் அங்கத்தினனாக பெருமைப்பட்டுக்கொண்டு, ஆனால் வீட்டுடமையாக்கப்பட்ட
பணத்தை ஈட்டும் கணவர்களாகிய நமக்கோ நேரம் கிடப்பதில்லை. சகதர்மிணிகளுக்கோ இக்காலக்
குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, அக்கம்பக்க செய்திகளை தினமும் கேட்டறிந்துவிட்டு, நெடுந்தொடர்களுக்கு
ஒரு பாட்டம் அழுதுவிட்டு – பிறகு ஒழியும் நேரத்தில் கற்றுக்கொள்ளும் தமிழறிவோ
‘மாரி, சோமாறி, சும்மாக்கீரான்’ என்ற அளவிலேயே இருப்பதனால் வீட்டுக்கல்வி தமிழைப்
பொறுத்தமட்டில் கானல் நீரே! அதற்காக விட்டுவிட முடியுமா? திருக்குறளையும், நன்னெறிகளையும்
அறிமுகப்படுத்தமுடியாவிடினும்,
‘பள்ளிக்குப் போகும் பாப்பா
கையாட்டிச் சொன்னது டாட்டா
திரும்பி வந்தது லேட்டா
தெருவினில் ஏதோ கலாட்டா!’
என்பது போன்ற கடைசிச் சங்கப் பாடல்களைப் பாடிப்
பழக்கப்படுத்திக்கொண்டுதானிருந்தேன்.
எனது கஷ்டத்துக்கு வருவோம். எனக்கு வந்த வினை
தமிழாலல்ல, தமிழறிஞரால் வந்தது.. தமிழறிஞர்கள் பதிகம் பாடும் வன்முறையைத் தவிர மற்ற
நேரங்களில் பொதுவாக அஹிம்சாவாதிகளே! பாருங்கள்; எனக்கு வந்த வினை ஒரு பெண்
தமிழறிஞரால்!
பெண் மூதறிஞர் என்றவுடன் உங்களுக்குப்
புரிந்திருக்கும்; ஆமாம் ஔவையாரேதான்! ஔவைப்பிராட்டி அன்பு கலந்துவரும் அருமையான
பாடல்களைப் பாடி, நெறிகளைப் போதித்து, வாழ்வின் கடமைகளை மிக எளிதாக விளக்கி –
சுருக்கமாகச் சொல்வதானால், நம் சொந்தப் பாட்டியைப் போன்ற உணர்வை ஏற்படுத்துபவர். அவரா
எனக்கு தீங்கு விளைவிப்பார்? ஆனால் அதுதான் நடந்தது!
சனிக்கிழமை என்பது திருமண நாளைப் போன்ற மயக்கமான
நாள். ஞாயிற்றுக்கிழமை தரப்போகும் ஓய்வையும், உணவையும், மகிழ்வையும்
நினைவுப்படுத்தும் நாள். ஆனால் ஞாயிறோ இதற்கு நேர்மாறானது. முந்தைய தினத்தின் கனவுகளைத்
தவிடுபொடியாக்கும் நாள். பேசாமல் சாமியாராகப் போய்விடலாமா என சம்சாரிகள் நினைப்பது
ஞாயிறுகளில்தான் இருக்கும்!
ஒரு மங்களகரமான சனிக்கிழமை மாலைப்போழுதில்
சாய்ந்து உட்கார்ந்து – ‘இப்பொழுது மரங்கள் சூழ் சோலையில், கயிற்றுக்கட்டிலில்
மல்லாந்து படுத்துக்கொண்டு, வானத்தின் இளவரசியாம் வெண்ணிலவைப்
பார்த்துக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்’ என்னும் விபரீத ஆராய்ச்சியில் நான்
ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். வளர்ந்து கொண்டிருந்த சோலையைக் கலைத்தது என் மகனின்
குரல்,
:அப்பா, அப்பா...”
:என்னப்பா”
“என் ஸ்கூல் பாடத்தை முடிச்சுக் கொடு”
அவன் நீட்டியது தமிழ் பாட நோட்டு.
வீட்டுப்பாடங்களை செய்வது பெற்றோர்களே என்ற
உண்மையை அறிந்திருந்தும் சிரத்தையாக தினம் வீட்டுப்பாடங்களைக் கொடுக்கும்
ஆசிரியர்களின் பொறுமையை எவ்வாறு புகழ்வது?
“என்ன முடிச்சுத் தரணும்?”
நோட்டைப் பிரித்தான். அவன் காட்டிய பக்கத்தில்
‘அ’, ’ஆ’..என வரிசையாகக் கொடுக்கப்பட்டு ஆத்திச்சூடியை முடிக்கவும் என்றிருந்தது.
“இதை ஏம்பா என்கிட்டே கேக்குற? அம்மாகிட்ட
கேட்கவேண்டியதுதானே?”
“அம்மாக்குத் தெரியல..உங்களைத்தான் கேக்கச்
சொல்றாங்க”
வீட்டின் உட்புறத்தை நோக்கிக் குரலேழுப்பினேன்.
“ஏம்மா, இதெல்லாம் என்கிட்டயா கேக்கச் சொல்றது? நீயே சொல்லித்தர வேண்டியதுதானே?
ஆத்திச்சூடி உனக்குத் தெரியாதா?”
“ஆத்திச்சூடி சொல்லித்தர மாட்டீங்களா? பெரிய
கம்பரு! ராமாயணம்தான் உங்ககிட்ட கேக்கணுமாக்கும்!” மனைவி அருகில் வந்தாள். “ஆத்திச்சூடி
மட்டுமல்ல, வேறு ஒரு விஷயமும் இருக்கு!”
“என்ன பொல்லாத விஷயம்?”
“அந்தப் பக்கத்திலே மேலப் பாருங்க”
பக்கத்தின் மேலே ஒரு கட்டம் போட்டிருந்தது. “எதுக்கு
இந்தக் கட்டம்?” என்று கேட்டேன்.
“அதுதான் பிரச்சினை. வெறும் எழுதினா மட்டும்
பத்தாதாம். அந்தக் கட்டத்திலே ஔவையார் படமும் ஓட்டணுமாம்”.
“என்னது? ஔவையார் படமா? சரி, சரி, ஏதாவது
தெருவில் விற்ற புத்தகத்திலிருந்தோ அல்லது இன்டர்நெட்டில் இருந்தோ எடுத்து ஒட்டித்
தரவேண்டியதுதானே?”
“அந்த மாதிரி படமெல்லாம் ஒட்டக்கூடாதாம்!
ஸ்டிக்கர் தான் ஒட்டணுமாம்!”
“அதுக்கு நான் எங்கேடி போவேன்?”
“அதெல்லாம் தெரியாது. திங்கக்கிழமை ஸ்கூலில்
தரணும்”
மகனை எரிச்சலோடு பார்த்தேன். “ஏண்டா, இதெல்லாம்
கடைசி நேரத்தில்தான் சொல்லனுமா?”
“போப்பா. ஒரு வாரம் முன்னாடியே அம்மாகிட்டே சொல்லிட்டேன்.”
“என்னய்யா மாட்டி விடற... பாத்துக்கிறேன்... இதோ
பாருங்க, அக்கம்பக்கத்திலே எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டேயெல்லாம் கேட்டுப்
பாத்துட்டேன். யார்கிட்டேயும் ஔவையார் ஸ்டிக்கர் இல்லை!.”
அவளுக்கு அக்கம்பக்கத்திலே தெரிந்தவர்கள் இரண்டு
பேர். அதிலொருவர் மலையாளி, மற்றொருவர் ஏதோ வடகிழக்கு மாநிலம்! இவர்களுக்கு ஔவையார்
யாரென்றே தெரிந்திருக்காது! அவர்கள் எப்படி ஸ்டிக்கர் வைத்திருக்கக் கூடும்?
“பாடம் சொல்லிக்கொடுங்கன்னா படம் ஒட்டச்
சொல்றாங்க! என்ன, குழந்தைகளை போஸ்டர் ஒட்டவா வளக்குறோம்?” முனகியபடியே யோசித்தேன்.
என் தமிழ் நண்பர்கள் யாரிடமும் ஔவையார் படமிருக்கும் எனத்தோன்றவில்லை. ஔவையார்
எப்படியிருப்பார் என்று யாருக்குத் தெரியும்? நமக்கெல்லாம் தெரிந்த ஒரே ஔவையார்
கே.பி.சுந்தராம்பாள் அம்மையார்தான். அவர் படம் எங்கே கிடைக்கும்?
“பேசாமல் தூங்குங்க. நாளைக்கு ஏதாவது புத்தகக்
கடையிலே விசாரிச்சுப் பார்க்கலாம்.”
ஞாயிறன்று காலை – மனதில் நம்பிக்கை இருந்தாலும் –
நல்ல நேரம் பார்த்தே வீட்டிலிருந்து கிளம்பினோம். ஆனால் முதலில் நுழைந்த கடையே என்
நம்பிக்கையைத் தகர்த்தது. அந்தச் சிறிய கடையின் முதலாளி வடமாநிலத்தவர்.
“வாங்கோ சார்.. இன்னா வேணூம்?”
சரியாப் போச்சு! மனம் நொந்துக் கொண்டது!
“ஔவையார் படம் இருக்குங்களா?”
“யாரு.. இங்க யாரும் அப்பூடி இல்லீயே!”
‘களுக்’ என்று என் மனைவி சிரித்த சத்தம்
பின்னிருந்து கேட்டது.
“இல்லங்க... ஔவையார் இருக்காங்க இல்ல... அதாவது
பழங்காலத்து தமிழ்ப் பாடல்களிலே பாத்தீங்கனா...”
எங்கே! தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றைப் பேச
ஆரம்பித்துவிடுவேனோ என்ற பயத்தில் என் சட்டைக் கையைப் பற்றி வெளியே இழுத்தாள்.
“அதான் இல்லேன்னு சொல்லிட்டாரில்ல...வாங்க
அடுத்த கடைக்குப் போவோம்.”
அடுத்தக் கடையிலும் அதிர்ஷ்டக் காற்று
வீசவில்லை.
“ஔவையார் ஸ்டிக்கரா? அதெல்லாம் யார்கிட்டே
இருக்கும்...” கடைக்காரர் விட்டத்தைப் பார்த்து சொன்னார்.
“யார் கிட்டே இருக்கும்?” அப்பாவியாக வினவினேன்.
“அட, அதான் சார், யார்கிட்டே இருக்கும்?”
“அதுதாங்க நானும் கேக்குறேன்...யார் கிட்டே
இருக்கும்?”
இது எங்கே வாழைப்பழக் கதையாகிவிடப் போகின்றது
என்ற பயத்தில் என் மனைவி என்னை கடைக்கு வெளியே மறுபடியும் இழுத்து வந்துவிட்டாள்.
அவள் என் ‘அப்பாவித்தனத்தை’ - தெருவில் படுத்துக்கொண்டிருந்த நாய் வாலை இடுக்கிக்
கொண்டு ஒடும்படியான ‘கனிவுடன்’ - எடுத்துரைத்தபோதுதான் என் முட்டாள்தனத்தை
உணர்ந்தேன்.
“சே! என்ன வாழ்க்கையிது? லீவ் நாளும் அதுவுமா...
ஏதோ நல்லாத் தின்னோமா, தூங்கினோமான்னு இல்லாம, இப்படி வெயில்ல அலைய
வேண்டியிருக்குது! ஔவையார் கவி பாடலேன்னு யார் அழுதா? எல்லாம் உன்னாலதாண்டா! போன
வாரமே சொல்லியிருக்கலாம்லே!”
என் இடக்கையைப் பிடித்துக்கொண்டிருந்த மகன்
அண்ணாந்து பார்த்துக் கேட்டான்.
“சொல்லியிருந்தா என்னப்பா பண்ணியிருப்பீங்க?”
“ம்... உன் பாட்டியை வரச்சொல்லி, கையிலே ஒரு
தடியைக் கொடுத்து, போட்டோ எடுத்து உன் நோட்டிலே ஒட்டியிருப்பேன்.”
“அப்பா பாட்டியா? அம்மா பாட்டியாப்பா?”
என்னைச் சுற்றியிருந்த உலகம் சட்டென்று இயக்கத்தை
நிறுத்திவிட்டு என்னையே உற்று நோக்கத் தொடங்கியது போலிருந்தது.
“அப்பா பாட்டிதாம்பா! அவங்கதான் ஔவையார்
வேஷத்துக்குப் பொறுத்தமா இருப்பாங்க..”
‘உலகம் மறுபடி இயங்கத் தொடங்கிற்று.’
அடுத்த புத்தகக் கடையை கண்டுபிடிப்பது பிரம்மப்
பிரயத்தனமாகிவிட்டது. ஞாயிறாக இருந்தாலும் சாலையெல்லாம் வாகன நெரிசல்.
“லீவ் நாளைக்கே இப்படியிருக்கே! சாதாரண நாளில்
எவ்வளவு நெரிசல் இருக்கும்? இப்போ தெரியுதா, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு போறேன்னு..”
‘கிடைத்த வாய்ப்பைச் சரியாக
பயன்படுத்திக்கொண்டாய்’ என்று உள்ளம் பாராட்டினாலும், ஞாயிறன்று ஏன் இவ்வளவு
நெரிசலென்று புரியாமல் குழம்பினேன். ஒருவேளை, இவர்களெல்லோரும் ஔவையாரைத்தான்
தேடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றி அடிவயிற்றைக் குழப்பியது. ‘சே..சே.. இருக்காது.
அதோ பார்... அந்த பைக்கில் அப்பாவுடன் போகும் பையன் நிச்சயமாக பெரிய
வகுப்பாகத்தான் இருக்கும். ஆனால் யார் கண்டார்? அவன் கபிலரையோ, ஓட்டக்கூத்தரையோ
தேடுகிறானோ என்னவோ?’
மிகுந்த அலைச்சலுக்குப் பின் அடுத்த புத்தகக்
கடையைக் கண்டுபிடித்தோம். பார்த்தால், அது வெறும் புத்தகக் கடையாக மட்டுமில்லாமல் தோளில்
மாட்டும் பையிலிருந்து, காலில் மாட்டும் செருப்பு வரையிலும், இன்னம் பிற,
குழந்தைகளுக்குத் தேவையில்லாத பொருட்களாலும் நிறைத்திருந்தது. அதிலும் தேவையானவை
குழந்தையின் பார்வைக்கு எட்டாத மேல் தட்டுகளிலும், தேவையற்றவை கீழ்தட்டுகளிலும்
அடுக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்பொழுது வருங்காலத் தூண்களைச் செதுக்கும் பணியில்
கடைக்காரரின் சீரிய முனைப்பு நன்கு புலப்பட்டது.
உள்ளே நுழைந்ததும் என் மகனும், இதுபோன்ற
கடைகளில் நுழைந்துவிட்டால் குழந்தையுள்ளம் வந்துவிடும் என் மனைவியும் அவர்களைக்
கவர்ந்திழுத்த வேறு பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
இவரிடம் என்னென்ன போராட்டங்கள்
நடத்தவேண்டியிருக்குமோ எனும் அச்சத்துடன் கடைக்காரரை அணுகினேன்.
மலர்ந்த முகத்துடன் என்னைக் கேட்டார், “என்ன
சார் வேண்டும்?”
“ஔவையார் படம் வேண்டும்.”
“ஸாரி சார். நாங்க புதுப்படம்தான் வெச்சுக்கிறது.
அதுவும் நீங்க கேக்கிறது ரொம்ப பழைய படமாச்சே!”
“பழைய படமாக இருந்தாலும் பரவாயில்லை.
காலையிலிருந்து அலைந்து நொந்து போய்க் கிடக்கிறேன். எது இருக்கோ, அதையே கொடுங்க..”
“அதான் சொல்றேனே சார்... பழைய படமெல்லாம் நாங்க
வெச்சுக்கிறது இல்லே.”
நம்பினால் நம்புங்கள்! புரியாத குழப்பத்துடன்
நான் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.
“புது ஔவையார் படமா இருந்தா நல்லதுதானே! அதையே
கொடுங்க..”
“என்ன ஸார், கேலி செய்கிறீர்களா? அதுதான்
ஔவையார் படமே இல்லேன்னு சொல்றேன். நீங்க புதுசு, பழசுன்னு குழப்புறீங்களே”
இவ்வுரையாடல், தமிழ்பிராட்டி போதித்ததற்கு
மாறாக, கைகலப்பு வரை கூடச் சென்றிருக்கலாம்; என் மனைவி அருகில் வராமல் இருந்திருந்தால்!
கடைக்காரன் சொன்னது அவளுக்கு விளங்கிவிட்டது. அவளின் விதியை திட்டிக்கொண்டே என் கையைப்
பற்றித் தர தரவென்று கடைவாசலுக்கு இழுத்து வந்தாள்.
“கடவுளே! ஒரு வேலை செய்யத் தெரியுதா?”
“நான் என்னடி செஞ்சேன்? அவன்தான் என்னைக் கேலி
செய்யுறான். ஔவையார் படம்னா பழசுதான் வெச்சிருப்பானா? தமிழுன்னா அவ்வளவு கேவலமா?
பெரிய இங்கிலீஷ் துரை! விக்டோரியா மகாராணி படம்தான் புதுசு வெச்சிருப்பாரோ?”
நான் கூறிய வாக்கியத்திலுள்ள நாட்டுப்பற்று
உங்களுக்கு விளங்காமல் இருந்தால், ஆங்கிலேயன் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்த சர்,
திவான் பட்டங்களுக்குத்தான் உரியவர் நீங்கள்!
ஆனால் என்னை ‘ஆளும் வர்க்கம்தான்’ உண்மையை
விளங்க வைத்தது.
“ஐயோ! உங்களைப் போல ஒரு அசடை வாழ்க்கையில்
பார்த்ததில்லை. அவன் சொல்லிக்கொண்டிருந்தது ஔவையார் திரைப்பட ஸீடி பற்றி...!”
என் முகம் போன போக்கைப் பார்க்க அவளுக்கே
சகிக்கவில்லை. “நீங்க எதுவும் செய்யாம இங்கேயே நில்லுங்க. நான் அந்தக்
கடைக்காரனிடம் எடுத்துச் சொல்லி வேற எங்கே கிடைக்கும்னு கேட்டுட்டு வரேன்.”
பேயறைந்த முகத்துடன் நான் அங்கே நின்றிருந்தேன்.
‘எவ்வளவு வாகனங்கள்! மக்கள் கூட்டம்! காதைப் பிளக்கும் சத்தம்... எங்கேயிருந்து
வருகிறார்கள்? எங்கே போகிறார்கள்? இவர்களில் எத்தனை பேருக்கு ஔவையாரைத் தெரியும்?
அப்படியே தெரிந்திருந்தாலும் அவரின் பாடல்கள் எவருக்கு நினைவிருக்கும்? பல
நூறாண்டுகள் கடந்தும் காலத்தை வென்று நிற்கும் அவரின் பாடல்களிலுள்ள மொழிச்சுவையும்,
பொருட்சுவையும் இங்கே எவருக்கு நினைவிருக்கிறது? பிறகு ஏன் இந்தத் தேடும் படலம்?
அடுத்த வகுப்புக்குச் சென்றவுடன் என் மகனுக்கும் நினைவிருக்கப்போவதில்லை... மேல்
வகுப்பு ஆசிரியைக்கும் தெரியப் போவதில்லை! ஏன் குழந்தைகளின் மேலும், நம் மேலும்
இந்தத் திணிப்பு?
மனைவி வந்துவிட்டாள். “நல்லா கேட்டீங்க! பையன்
படிக்கிற ஸ்கூலுக்கு அடுத்தத் தெருவிலேயே ஒரு கடை இருக்காம். அங்கு எல்லாம்
கிடைக்குமாம். வாங்க போகலாம். அரை நாளில் மூடிடப் போறாங்க!”
கடுப்பில், “ஆமாம் இப்படியே அலைய
வேண்டியதுதான்!” என்றேன்.
“இதுக்குத்தான் தலையால அடிச்சிக்கிட்டேன். தமிழ்
வேணாம்...இந்தி எடுத்தக்கலாம்னு... கேட்டாதானே!”
“தமிழ் தாய்மொழி. அதைக் கத்துக்காம இருக்கலாமா?”
“ஆமாமாம்... காலம் மாறிப்போச்சுன்னு கூடத்
தெரியாம பழைய நினைப்பையே கட்டிக்கிட்டு அழுதா..!”
“ஏண்டி. இப்போ எதுக்கு இதெல்லாம்
சொல்லிக்கிட்டிருக்கே?”
“பின்னே! இந்தி எடுத்திருந்தா ஔவையார் படம்
கேட்டிருப்பாங்களா? நானும் இப்படி நடுத்தெருவில் நின்னுக்கிட்டுருப்பேனா?”
அவள் வாதம் சரியென்றே மனதிற்குப் பட்டது. ஆனால் அதற்காக
நடுத்தெருவில் தமிழை விட்டுக் கொடுத்து விட முடியுமா?
“நீ ஒண்ணும் அலைய வேணாம். நானே பாத்துக்கிறேன்.
நீ வீட்டுக்குப் போ..!
என்னதான் தன்மானம் மேலிட பேசிவிட்டாலும், இந்தி
எடுத்திருந்தால் எந்த இந்திக்காரக் கிழவனையோ, கிழவியையோ தேடிக்கொண்டிருக்கமாட்டோம்
என்றுதான் மனம் நினைத்தது.
கடைசியில் அந்தக் கடையையும் கண்டுவிட்டோம். நல்ல
வேளையாகக் கடை திறந்துதான் இருந்தது. சற்றே பெரியதுதான். வியாபாரம் நன்றாகத்தான்
இருக்கவேண்டும். கடைக்கு எதிர்புறத்திலேயே வண்டியை நிறுத்தினேன்.
“நீங்க ரெண்டு பேரும் இங்கேயே நில்லுங்க. கடைக்கு
வர வேண்டாம். நான் போய் கேட்டுட்டு வாங்கிட்டு வரேன்!”
“நாங்களும் வரோம்”
“வேண்டாம். நான் என்ன உதவாக்கரையா? நானே
போகிறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தேன்.
“உதை வாங்கிட்டு வராதீங்க” என்ற வாக்கியம் மக்கள்
நிறைந்திருந்த தெருவை நான் பாதி கடந்தபிறகு உரக்கச் சொல்லப்பட்டதால், அந்த
வாக்கியத்தின் உண்மை நோக்கம் தெள்ளற நிறைவேற்றப்பட்டது.
கல்லாவில் இருந்தவர் குனிந்து ஏதோ செய்து
கொண்டிருந்தார். தலையை நிமிராமலே, “என்ன வேண்டும்” என்றார்.
எப்படி ஆரம்பிப்பது என்ற பயத்துடன், உளறலை
ஆரம்பித்தேன். ‘”’மேற்படி’ ஸ்கூல்ல பையனுக்கு வீட்டுப் பாடம்
கொடுத்திருக்காங்க...”
அவர் தலையை நிமிரவே இல்லை. “எந்த வகுப்பு?”
சொன்னேன்.
“எந்தப் பாடம்?”
“தமிழ்.”
வேறெந்தக் கேள்விகளும் கேட்காமல் அவர்
தொடர்ந்தார்.
“ஔவையார் படம் ஸ்டிக்கர்தானே? என்ன! இவ்வளவு
லேட்டா வரீங்க? அந்தக் கடைசியிலே, இடது பக்கத்திலே, மேலேயிருந்து இரண்டாவது
தட்டிலே, நடுவிலே இருக்கான்னு பாருங்க..”
கிண்டல் செய்கிறாரோ என்ற சந்தேகத்தினுடையே அவர்
குறிப்பிட்ட இடத்தில் பார்த்தால் – ஔவையார் படம் இருந்தது!! ஆனந்தமும், திகைப்பும்
ஒருங்கே கலந்து, ஏதோ பரீட்சை முடிவைப் பார்ப்பவன் போல் கைவிரல் மெலிதாக நடுங்க அந்தப்
படத்தை எடுத்தேன்.
பாருங்கள்... கெட்ட நேரம் என் ஒன்று விட்ட
சகோதரன் போலும்! ஓரத்தில் ஔவையார் கிழிந்திருந்தார்! ஐயகோ! என் செய்வேன்? பாராளும்
மன்னனுக்கே அதிசய நெல்லியைப் பரிசளித்தவர், இப்படிப் பட்டப் பகலிலே, தமிழ்
மண்ணிலே, குறுக்காக கிழிந்திருக்கின்றாரே! இந்த அவமானத்தை எப்படி நீக்கப்
போகிறோம்? எந்த மாநாட்டில் தமிழ் கூறும் நல்லுலகம் அஞ்சலி செலுத்தி, தமிழின் மேல்
படிந்த களங்கத்தை போக்கப் போகின்றது?
மன்னிக்கவும்; மூளை குழம்பிவிட்டது. நீங்களே
சொல்லுங்கள்! என் மகன் தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பியதைத் தவிர நான் வேறு என்ன
பிழை இழைத்தேன்?
கல்லாவிடம் சென்றேன். அங்கு வாடிக்கையாளர் ஒருவர்
தான் வாங்கிய பொருட்களுக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
நான் கடைக்காரரிடம், “ஒரே ஒரு ஔவையார் படம்தான்
இருக்கிறது. அதுவும் கிழிந்திருக்கின்றது.”
“அப்படியா? மத்ததெல்லாம் வித்துப்போச்சு!”
“வேறெதுவும் உங்ககிட்டே இல்லையா?”
“இல்லைங்க...அடுத்த ஔவையார் ஸ்டாக் வர ஒரு
வாரமாகும்.”
“என்ன இப்படிச் சொல்றீங்க? என் பையன் நாளைக்குக்
கொடுத்தே ஆகணுமே!”
“சார், நீங்க ஒரு வாரம் லேட்டா வந்திருக்கீங்க! ‘மேற்படி’
ஸ்கூல்ல இந்தப் பாடத்தை போன வாரமே முடிச்சுட்டாங்க! மத்த அப்பா, அம்மாக்களெல்லாம்
எப்பவோ வந்து வாங்கிட்டுப் போயாச்சு! நீங்க பொறுப்பில்லாம (!!) லேட்டா வந்தா நான்
என்ன செய்றது?”
இதற்கு நான் என்ன பதில் சொல்வது? தொங்கிய முகத்துடன்
வெளியே வந்தேன். தெருவின் எதிர்ப்புறத்திலிருந்து என் மனைவி கூரிய பார்வையுடன்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். விளைவு எனக்குப் புரிந்துவிட்டது. எப்படி
சமாளிக்கப் போகிறேன்?
கடையினுள்ளேயிருந்த, நான் முன்பு
குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளர், என் அருகில் வந்து நின்றதை முதலில் நான்
கவனிக்கவில்லை. ‘சார்’ என்று என்னை அழைத்ததிற்கு பின் நான் அவரைப் பார்த்தேன்.
மூன்றாம் உலகப்போரில் தோற்றவனைப் போல் நின்றிருந்த என்னைப் பார்த்தவுடன்
அவருக்குப் பரிதாபம் மேலிட்டிருக்கவேண்டும்.
“சார், நான் கடைக்காரர் சொன்னதையெல்லாம்
கேட்டுக்கொண்டிருந்தேன். உங்களுக்கு ஔவையார் படம்தானே வேண்டும்? இந்தாருங்கள்.
உங்களுக்கு முன்னால் நான் வாங்கியது. இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.”
தன்னிலை அடைந்து, “ஓ, அதெல்லாம் வேண்டாம் சார். நான்
வேறெங்கேயாவது வாங்கிவிடுவேன்.”
அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “என்ன சார்,
விஷயம் புரியாம இருக்கீங்களே! அதெல்லாம் வேறெங்கேயும் கிடைக்காது. இப்படிப்பட்ட
விற்பனைகள் தற்செயலானவை கிடையாது. அதெல்லாம் சில பள்ளிகளுக்கும், அக்கம்பக்கத்திலே
உள்ள கடைகளுக்குமிடையே உள்ள புரிந்துணர்வு. ஒவ்வொரு வருஷமா மேலே போகப்போகப்
பாருங்கள். அடிக்கடி இங்கு வந்துப் போகவேண்டியிருக்கும். என்ன செய்வது? முதலிலேயே நல்ல
பள்ளிகளைத் தேடாதது நம் குற்றம்தானே!”
ஒன்றும் புரியாமலிருந்தாலும் அவரிடம், “சார்
உங்களுக்கு இந்த படம் தேவையாகவிருக்குமே?”
சிரித்தவர், “இல்லைங்க.. என் பொண்ணு வேற ஸ்கூல்ல
படிக்கிறாள். இந்தப் பாடம் அவளுக்கு அடுத்த வாரம்தான் வருகிறது. அதுதான் புது
ஸ்டாக் வந்துவிடும் என்று சொல்கிறாரே, அப்போது வந்து வாங்கி விடுவேன். இதெல்லாம்
பழக்கமாயிடிச்சு. இந்தாங்க...”
மனிதரென்றால் இவரல்லவோ மனிதர். ஒரு அப்பாவின் கஷ்டம்
இன்னொரு அப்பாவுக்குத்தான் புரிகிறது!
“நன்றி சார்..இது... என்ன விலை?”
“பணமெல்லாம் ஒன்றும் வேண்டாங்க... வரேன்!”
“இல்ல..இல்ல.. கொஞ்சம் நான் சொல்றத...” என நான்
ஆரம்பிப்பதற்குள்ளேயே அவர் விடுவிடென்று நடந்து சென்றுவிட்டார்.
எப்படியோ, துணைவியிடம் நான் விட்ட சவாலில்
வென்றுவிட்டேன். மனநிறைவுடனும், உளமகிழ்வுடனும் தெருவைக் கடந்து என் மனைவியிடம்
நடந்ததையெல்லாம் சொன்னேன். வெற்றிப் பெருமிதம் என் முகத்தில் தவழ்ந்தது!
என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த என் மனைவி,
“பணம் எவ்வளவு கொடுத்தீங்க?” என்றாள்.
“பணமெல்லாம் வேண்டாமென்று சொல்லிட்டார்... நல்ல
மனுஷன்.”
“ம்... அப்படின்னா பிச்சை மாதிரி வாங்கிட்டு
வந்திருக்கீங்க! இதுதான் உங்க சாமர்த்தியம்!”
அதென்னவோ.. நான் எந்தக் காரியத்தைச்
சாதித்தாலும் அதை மட்டந்தட்டுவதற்கு என் மனைவியால் முடிகிறது. பிச்சை வாங்கி வந்துவிட்டேனாம்!
போகட்டும், அதனாலென்ன.. ஔவையாரே
பாடியிருக்கின்றாரே!
‘கற்கை நன்றே,
கற்கை நன்றே,
பிச்சை புகினும்
கற்கை நன்றே!’
Hilarious and true :-)
ReplyDeleteNice to feel this story... Keep on..
ReplyDeletesuperb.It reflects today's education system. when will teachers stop giving Home work to parents?
ReplyDeleteSujatha, Thanks for your comment
Delete