“காலா” – ரஜினிகாந்த்
அவர்களின் சமீபத்திய திரைப்படம். ரஜினிகாந்த் போன்ற நீண்ட காலமாய் திரைப்பட நடிகராய்
இருந்துவரும் ஒரு கலைஞனின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இது இல்லை என்பது நிச்சயம். ஆனால் அதே நேரத்தில் இத்திரைப்படத்தின் விமர்சனங்களைப்
பார்க்கும் பொழுது அந்த விமர்சனங்கள் நடுநிலையில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
முதற்கண், அவ்விமர்சனங்களைப்
பார்ப்போம்:
(YouTube) – வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டவை
மற்றுமே நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில், ஆனந்த விகடனில் நல்ல மதிப்பெண்கள்
கொடுத்துவிட்டதால் பத்திரிக்கைகளை ஆராய வேண்டிய அவசியமில்லை).
விமர்சனங்கள் வரிசைப்படி;
1. “இந்தக்
கதை அதரப் பழதானது.” ஒருவர் குறிப்பிடுகிறார் – ‘இதே கதையில் எம்.ஜி.ஆர். அவர்கள் 100 படங்களில் நடித்திருப்பார்....’
நான் அதிர்ந்து
போனேன். என்ன? எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். 100 திரைப்படங்களில் ‘தாதாவாக நடித்திருக்கிறாரா! இது
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியுமா? ஒரே ஒரு திரைப்படத்தையாவது நண்பர்
குறிப்பிட்டால் நன்றாயிருக்கும். அதை விட வேடிக்கை, அவர் சொல்கிறார், ‘James Bond கூட தாதாவாக ஆறேழு படங்களில்
நடித்திருக்கின்றார்.’ ஐயோ! ஒரு அளவு வேண்டாமா?
இந்தக் கதை மக்களைக் காப்பாற்றும் தலைவனைப் பற்றியதல்ல. அதை
தான் விஜய் முதல் சிவா (தமிழ் படம்) வரை எல்லோரும் செய்கிறார்களே! இக்கதை அந்த
வட்டாரத்தில் தாதாவாக (வன்முறையை கையாண்டு) இருந்து வயதாகிய ஒரு மனிதனைப்
பற்றியது. இந்த அடிப்படையை தெரியாமல் திரைப்படத்தை விமர்சிப்பது எவ்வகையில்
நியாயம்?
2. “கதாநாயகன் அறிமுகமாகும் காட்சி ‘மாஸாக இல்லை”
உண்மை. ரிடையர் ஆகப்போகும் காலத்தில் சச்சின் அடிக்கடி
போல்டு ஆனதைப் போல் ரஜினியும் அவுட் ஆகிறார். ஆனால் இவர்கள் என்ன
எதிர்பார்க்கிறார்கள்? ரஜினி அடிக்கும் பந்து பறந்து போய், பூமி பூஜைக்கு வைத்திருக்கும்
செங்கல் நூறு சிதறல்களாய் சிதறி, ஒவ்வொறு துகளும் ஆளுக்கு ஒரு ஸ்கார்பியோ காரை
வெடிக்க வைத்து.....! போதுமப்பா இந்த பூச் சுற்றல். இன்னும் எவ்வளவு
காலத்துக்குத்தான் இது போன்ற காட்சிகளைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்வது? நான்
பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்தில் கமல் ரசிகர்கள் ரஜினியை கிண்டல் செய்வதே இது
போன்ற பூச்சுற்றல் காட்சிகளை வைத்து தான். அது இன்னமும் தொடர வேண்டுமா?
ஓரு யதார்த்தமான மனிதனாக ரஜினியை காண்பிப்பது, அதாவது
வயதாகிய தாதாவின் பலம் அவனுடன் இருக்கும் மக்கள் கூட்டமே ஒழிய ரப்பர் பந்தை வைத்து
கார்களை உடைப்பதல்ல என்பது விமர்சிப்பவற்கு தெரியாவிடில், நான் என்ன சொல்வது!
3.
“ரஜினியின்
அரசியல் பிரவேசத்திற்கு பெரும் பலமூட்டும் வகையில் இக் கதையில்லை – எம்.ஜி.ஆர்.
படங்களைப் போல”
நான் (என்னைப் போல் பலரும்) பணம் கொடுத்து அரங்கிற்கு
சென்று திரைப்படம் பார்ப்பது ரஜினியின் அரசியலிற்காகவல்ல. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்.
அந்த இடத்திற்கு திரைப்படம் மூலமாக வருவதற்கு இனி யாராலும் முடியாது. இந்த தெளிவான
உண்மையை நடிகரோ, ரசிகரோ அல்லது விமர்சகரோ இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்றால்
அது வேதனையே! சங்கர் போன்ற இயக்குனர்களால் எம்.ஜி.ஆரை உருவாக்க முடியாது; அவர்
அப்படி உருவாகவுமில்லை.
நான் விரும்புவது என்னவென்றால், சமீப காலமாக வெளி வந்த
ரஜினி படங்களிலிருந்து மாறுபட்டு, அரைத்த மாவையே அரைக்காமல், புதிதாக ஏதாவது கதையை
சொல்வது; முழுவதும் வித்தியாசமாக இல்லையென்றாலும் ஒரு மாறுபட்ட ரஜினி திரைப்படத்தை நம்மால்
பார்க்க முடியவில்லையென்றால், தவறு எங்கிருக்கின்றது என்பதை யோசியுங்கள். சமீபத்தில்
வெளி வந்த ‘ஜோக்கர்’ திரைப்படம் வெற்றி பெறாததற்கு யார் காரணம்? நாமா அல்லது
இயக்குனரா?
‘தமிழ் சினிமாவின் கதை’ என்கின்ற ஒரு அருமையான புத்தகத்தில்
எழுத்தாளர் திரு. அறந்தை நாராயணன் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப் போல – இமேஜ் என்பது
ஒரு நடிகனை சிறிய வளையத்திற்குள் அடைப்பதைப் போன்றது. அந்த மாய வலையில் சிக்கிக்
கொண்டால் மீள்வது மிகக் கடினம். இந்தக் கருத்தையே திரு எம்.ஜி.ஆர். அவர்களும் அவர்
எழுதிய தொடரான ‘நான் ஏன் பிறந்தேன்’ என்பதில் எழுதியிருக்கிறார்.
ரஜினி என்ற ஒரு நல்ல நடிகனிடம் இனி எப்போதும் நாம் ‘முள்ளும்
மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற திரைப்படங்களை எதிர்பார்க்கவே முடியாது.
அப்படியென்றால் காலா ஒரு சிறந்த திரைப்படமா?
என்னுடைய கருத்தை இங்கே முடிவுரையாக எழுதுகிறேன்.
காலா தமிழ் சினிமாக்கள் வரிசையில் குறிப்பிட வேண்டிய படமல்ல!
ஆனால் ரஜினி என்னும் ஒரு நடிகனின் பட வரிசைகளில் அபத்தமான சில படங்களிலிருந்து
மாறுபட்டு, அதுவும் சமீப காலமாக வரிசையாக வெளிவந்த பட வரிசைகளிலிருந்து விலகி
நின்று, ரஜினியின் அற்புதமான நடிப்புத் திறமையை – ஒரு மக்களின் காவலனாக, ஒரு
தந்தையாக, ஒரு கணவனாக, ஒரு முன்னாள் காதலானாக – என்று பல்வேறு பாத்திரங்களில்
சிறப்பாக காட்டியிருப்பதால், ரஜினிக்கும், இயக்குனருக்கும் வெற்றியே. இனி இந்த
ரஜினியை நீங்கள் பார்க்கப் போவதில்லை.
இனி எல்லாம் மாயைகளே! இதோ... அடுத்து
வருகிறது ரோபோ 2.0 ரஜினி என்னும் இயந்திரம் பல்வேறு மாயவித்தைகளை காட்டும். பல
மடங்காக வடிவெடுக்கும். உலகையே காப்பாற்றும். (பல ஆங்கில படங்களை நினைவூட்டும்). எல்லோரும் வேப்பிலை அடித்தது போல் வெளியே வருவோம்.
ஒரே ஒரு கேள்வியுடன் நான் முடிக்கிறேன்.
இதே கதையில் இந்தியில் அமிதாப் அவர்களோ அல்லது மலையாளத்தில்
மம்முட்டி அவர்களோ நடித்திருந்தால் இந்த விமர்சனங்களைத்தான் முன் வைப்பீர்களா?
***************************************************
ரா. பாரத்ராம்
13 July 2018
Good one. It is true that Rajinikanth is caught in image mindset. Keep writing.
ReplyDelete