இந்த கதை ‘நவரத்தின மலை’
என்ற ஒரு அருமையான கதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கதையின் தொடர்ச்சி. இந்த கதை முழுவதும் கற்பனை. தொகுப்பில் இருந்த கதையை நான் குழந்தைகளிடம் சொல்லிய பொழுது
அவர்களுக்கு முடிவு பிடிக்காமல் போனதால், இரண்டாம் பாகத்தை நானே கற்பனை செய்து,
அவர்களுக்கு சொல்லி, குழந்தைகளின் மனதை சமாதானப்படுத்தினேன்.
முதல் கதையின் மிகவும் குறுகிய சுருக்கம்:
(இதுதான் நவரத்தின மலை தொகுப்பில் இருந்தது. அருமையான கதை. எங்கேயாவது கிடைத்தால்
முழு கதையையும் படிக்கவும்)
முன்னொரு காலத்தில், எங்கேயோ தொலை தூரத்தில்
ஒரு காடு இருந்தது. அங்கு வசித்த எந்த விலங்கிற்கும் வால் இல்லை. அதற்கான காரணம் என்னவென்று
யாருக்கும் தெரியவில்லை.
ஒரு நாள் அக்காட்டின் மிருகங்கள்
தங்களின் தலைவனான சிங்க ராஜாவிடம் சென்று, மிருகங்களுக்கு வால் இருந்தால்
நன்றாயிருக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. சிங்கமும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு,
பல விதமான வால்களை எங்கிருந்தோ வரவழைத்தது.
அடுத்த நாள் எல்லா மிருகங்களும் வரிசையாக வந்து அவரவர்க்கு பிடித்த வாலை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், ஆனால் முதலில் வருபவர்க்கே முன்னுரிமை என்று சிங்கம் கட்டளையிட்டது.
எல்லா
விலங்குகளும் போட்டி போட்டுக் கொண்டு பிடித்தமான வாலை எடுத்துக் கொண்டன. ஆனால்
கரடியின் கதையோ மாறிப்போனது. வழியில் தேன் கூட்டை பார்த்தவுடன், தேனை குடித்துவிட்டு
படுத்து தூங்கிவிட்டது. தூங்கி எழுந்து சிங்கத்தின் வீட்டிற்கு வந்து பார்த்தால்,
எல்லா வால்களும் தீர்ந்து போய், விலங்குகளும் வீட்டிற்கு சென்றுவிட்டன. அங்கு
யாருமே இல்லை. அதனால் கரடிக்கு வால் இல்லாமல் போயிற்று
மேலே
சொல்லப்பட்ட கதை குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. சோக முடிவு எந்தக் குழந்தைக்குதான்
பிடிக்கும்? அதனால், இந்தக் கதையை முடிக்காமல் இரண்டாம் பாகம் சொல்ல வேண்டிய நிலை
வந்து விட்ட்து.. அதுதான் நான் கீழே எழுதியிருப்பது. இது முழுக்க என் கற்பனை.
---------------------------------------------------------------------------------------------------------------
கரடிக்கு
வால் வந்த கதை - இரண்டாம் பாகம்
அடுத்த
நாள். எல்லா மிருகங்களும் வால் வந்த மகிழ்ச்சியில் அதிகாலையிலேயே குதூகலமாக
இருந்தன. அதிலும் முக்கியமாக, குட்டிகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.
அவைகளுக்கு ஆனந்தமோ ஆனந்தம். ஓடியும், குதித்தும், துள்ளியும் வாலை சுழற்றியபடி
விளையாடின. அந்தோ பரிதாபம். கரடிக் குட்டி மட்டும் வால் இல்லாததால் சோகமாக
உட்கார்ந்து இருந்தது.
அதே
நேரத்தில், நரியும், ஓநாயும், யானையும் எப்பொழுதும் போல குட்டிகளுக்கு பால்
வாங்குவதற்காக கொக்கின் கடைக்கு சென்று கொண்டிருந்தன. ஏனென்றால் அந்த காட்டில்
கொக்கு தான் பால் கடை வைத்திருந்தது.
பால்
கடைக்கு சிங்கத்தின் வீடு இருந்த தெரு வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த மூன்று
விலங்குகளும் நடக்கும்பொழுது ஒரு அதிசயத்தைக் கண்டன. சிங்க ராஜாவின் வீட்டு
வேலிக்கருகில் ஏதோ ஒரு சிறிய வேர் போன்ற ஒன்று, தரையில் கிடக்க பிடிக்காமல்
குதிப்பது போல் முயற்சித்துக் கொண்டிருந்தது.
சிறிய
பாம்புக் குட்டியாக இருக்குமோ என்ற எண்ணத்தில் நரி சற்றே அருகில் சென்று கூர்ந்து
கவனித்தது. வேடிக்கை பாருங்கள் – அது பாம்பு குட்டியோ அல்லது செடியின் வேரோ அல்ல. அது
அடர்த்தியான சிறிய ஒரு வால்!!
அதிர்ச்சியில்
உறைந்த நரி அதனிடம் சென்று, “நீ யார்? இங்கு எப்படி வந்தாய்” எனக் கேட்டது. அந்த
வாலும் “என்னை இங்கு நேற்று கொண்டு வந்தார்கள். ஆனால் அப்புறம் மறந்தே போய்
விட்டார்கள்” என சொன்னது.
ஆச்சரியத்தில்
நரியும், ஓநாயும், யானையும் சிறிது நேரம் பேசாமல் நின்றன. என்ன செய்வது என்பது
அவைகளுக்குத் தெரியவில்லை. நல்ல நேரமாக சிங்க ராஜா அவருடைய காலை உடற்பயிற்ச்சிகளை
முடித்து விட்டு, கம்பீரமாக வீட்டு வாசலில் வந்து நின்றார்.
யானையை
பார்த்தவுடன் சிங்கம், “என்ன இது? நீங்கள் மூவரும் காலையிலேயே என்னை பார்க்க
வந்தீர்களா? ஏதாவது முக்கியமான
காரியமா?” என்று கேட்டது.
நரியும்,
ஓநாயும் போட்டி போட்டுக்கொண்டு அவை பார்த்த வாலைப் பற்றி எடுத்துரைத்தன.
ராஜாவும்
ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது என்பது
அவருக்கும் தெரியவில்லை. ராஜாவும் மற்ற மிருகங்களும் யோசனையில் இருந்தன.
திடீரென்று
ஓநாய் துள்ளி எழுந்து நின்றது. “ஓ, நான் எப்படி மறந்தேன்! எனக்கே வெட்கமாக
இருக்கிறது. எப்படி மறந்தேன்..எப்படி மறக்கலாம்!”.
சிங்கம்
சற்றே அதட்டலுடன், “வெட்கமெல்லாம் வேண்டாம். என்ன மறந்தாய். அதை முதலில் சொல்”
என்றது.
“மன்னிக்கவும்
ராஜா. நேற்று எல்லா விலங்குகளும் சரியான நேரத்திற்கு வந்து, அவரவர்க்கு பிடித்த
வாலை தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் விட்டன. ஆனால் தாமதமாக வந்த கரடிக்கு எந்த
வாலும் கிடைக்கவில்லை. கரடிக் குட்டிக்கும் வாலில்லை. அதனால் அது வருத்தத்துடன் என்னுடைய
இளைய குட்டியிடம் சொல்லியது. என் குட்டியும் அதை என்னிடம் சொல்லி நண்பனுக்கு
ஏதாவது செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டது. நானும் என்னிடம் ஒன்றுமில்லை.
கரடிக்கு வால் வந்தால்தான் குட்டிக்கும் வால் வரும் என்று சொன்னேன். கரடிக் குட்டி
வருத்தமாகத்தான் இருந்தது. ராஜாவே, ஒரு வேளை இது கரடிக் குடும்பத்துக்கான வாலாக
இருக்குமோ?”
“இது எப்படி
எனக்குத் தெரியாமல் போனது? என் காட்டில் குட்டிகள் யாரும் வருத்தப்படக்கூடாது
என்று நினைப்பவன் நான். வாருங்கள். இந்த வாலை கரடிக்கு கொடுத்து வருவோம்.”
இதுவரை
ஒன்றும் பேசாமல் யோசனையில் இருந்த நரி, “ராஜாவே, நான் ஒரு கருத்தைக் கூறலாமா?”
என்றது.
“தாராளமாக
சொல்லலாம். சொல்லுங்கள் நரி.”
“ராஜா, எனக்கு
நினைவிருக்கின்றது. இன்று கரடிக் குட்டியின் பிறந்த நாள். இந்த வாலை நாம் பிறந்த
நாள் பரிசாகக் கொடுக்கலாமே. அது கரடிக் குடும்பத்தின் மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்குமே”
யானை
குறுக்கிட்டது.
“ஆமாம்.
அதுவரை நாம் வால் கிடைத்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம்.”
சில
நொடிகள் யோசித்த சிங்கம், “எல்லாமே நல்ல யோசனைகள்தான். பிறந்த நாள் என்றாலே உணவும்
கொண்டாட்டமும் அவசியமாற்றே” என்றது.
மூன்று
விலங்குகளும், “ராஜா, உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். கொண்டாட்ட ஏற்பாடுகளை நாங்கள்
பார்த்துக்கொள்கிறோம். அசைவ உணவுகளுக்கு ஓநாய் பொறுப்பு. சைவ உணவுகளுக்கு யானை
பொறுப்பு. குழந்தைகளுக்கான சிறு விளையாட்டுப் போட்டிகளுக்கு நரி பொறுப்பு” என்றன.
சிங்கமும்
ஒப்புக்கொண்டு, அங்கே மரத்தில் உட்கார்ந்திருந்த காகத்தைப் பார்த்து, “காகமே,
உன்னால் காடு முழுவதும் பறந்து சென்று, இன்று கரடிக் குட்டியின் பிறந்த நாள்
என்பதையும், விருந்து இன்று மாலை காட்டின் நடுவிலுள்ள பரந்த மைதானத்தில் உள்ளது
என்பதையும் சொல்ல முடியுமா?” எனக் கேட்டது. காகமும் மகிழ்ச்சியுடன் காடு முழுதும்
பறந்து சென்று, “கா, கா... கரடிக்குட்டிக்கு பிறந்த நாள். விருந்து மாலை...
மைதானத்தில்..கா...கா...” என்று சொல்லி வந்தது.
காகத்தின்
அறிவிப்பைக் கேட்ட கரடிக்குட்டிக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் உள்ளூர கொஞ்சம்
வெட்கமும் இருந்தது. பின்னே! வாலில்லாமல் அங்கே போனால்? மற்ற எல்லா குட்டிகளுக்கும்
வாலிருக்கும், இதற்கு மட்டும் இல்லையே! ஆனாலும் பிறந்த நாள் கொண்டாட்டம்
குட்டிக்கு முக்கியம். அதனால் தன்னை தயார்படுத்திக் கொண்டு, மாலை வேளையில், அப்பா
கரடியுடனும், அம்மா கரடியுடனும் கிளம்பிப் போனது.
ஏற்பாடுகள்
படு ஜோராய் இருந்தன. உணவு வகைகள் சமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இயற்கை உணவுகளான
கீரை, பழங்கள், கேரட், வெள்ளரிக்காய் போன்றவை ஒரு பக்கம் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. தாகத்திற்கு தண்ணீர் மட்டுமன்றி இளநீர், பழ சாறுகள் இருந்தன.
அசைவ
பிரியற்களுக்காக ருசியான உணவு வகைகள், ஓநாயின் மேற்பார்வையில் சிறந்த முறையில்
தயாரிக்கப்பட்டு வந்தன. அதுவும் எல்லோருக்கும் பிடிக்கும் பிரியாணி தக தகவென்று
ஜொலித்தது. வாசம் பிடித்து அங்கு சுற்றி வந்த குட்டிகளிடம், ஓநாயானது, “இல்லை.
இன்னும் முழுவதும் தயாராகவில்லை” என்று சொல்லிக்கொண்டேயிருந்தது.
அதே
நேரத்தில் “விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன, விலங்கு குட்டிகள் வரவும்”
என்று யானை உரக்க அறிவித்தது. குட்டிகளுக்கு உற்சாகம் பிறந்து எல்லாம்
மைதானத்திற்கு ஓடி வந்தன.
முதலில் ஓட்டப்
போட்டி. எல்லோரும் வரிசையாக நிற்கின்றனர் என்பதை நரி உறுதிபடுத்தியவுடன், யானை
பிளீரிட்டு ஓட்டப்போட்டியை தொடங்கி வைத்தது. ஓட்டப்போட்டி தொடங்கியவுடன் முயல்
சுறுசுறுப்பாக ஓடியது. முன்னர் செய்த தவறை செய்யாமல், எங்கும் நிற்காமல்
ஓடிக்கொண்டேயிருந்தது. வேகத்தைப் பார்க்கவேண்டுமே! மின்னல் வேகம்! நாம் கண் மூடி
திறப்பதற்குள் நம்மை கடந்துவிடும். சொல்ல வேண்டுமா? அது தான் முதலில் வந்து வெற்றி
பெற்றது.
சுற்றியிருந்தவர்கள்
குரல் எழுப்பி முயலை பாராட்டினார்கள். முயலுக்கும் மகிழ்ச்சியில் முகம் முழுதும்
சிரிப்பு. காட்டிலேயே அதுதான் வேகமான ஓட்டக்காரன் என்பதை நிரூபித்துவிட்டதே!
திடீரென்று ஒரு குரல். அது நரிக்குட்டியின் குரல். கையை நீட்டி “அங்கே பாருங்கள்”
என்று கத்தியது.
குட்டிகளும்,
அம்மாக்களும் நரிக்குட்டி கை நீட்டிய திசையில் கூர்ந்து நோக்கின. அந்தோ! சிறிய
ஆமைக்குட்டி இன்னமும் ஓட்டப்பந்தய பாதையில் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. தரையில்
ஆமை நடக்கும் வேகம் அவ்வளவுதானே!
வேறு
காடாக இருந்திருந்தால் எல்லா மிருகங்களும் சிரித்திருக்கும். ஆனால் இந்தக்
காட்டிலோ மிருகங்கள் ஒற்றுமையுடனும், அன்புடனும் பழகி வந்தன. அதே போல் குட்டிகள்
எல்லோரும் நட்புடன் நல்ல நண்பர்களாக இருந்து வந்தன. நண்பர்கள் இது போன்ற நேரத்தில்
என்ன செய்வார்கள்? ஆமாம், எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆமை குட்டியை ஊக்கிவித்தன.
“மிகவும் நன்று. முன்னால் நட. உன்னால் முடியும்” என்று குரல்கள் எழுந்தன. இந்த
ஒற்றுமையை பார்த்து அம்மா விலங்குகள் மகிழ்ந்து சிரித்தன. ஆமை குட்டி முடிவை கடந்தவுடன் எல்லா மிருகங்களும் உரக்க குரலெழுப்பி ஆமைக்குட்டியை பாராட்டின.
‘உணவு
தயார்’ – எல்லோரும் காத்துக்கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது.
ஓ! என்ன ஒரு இனிய
மணம். குட்டிகள் முதலில் ஓடின. எவ்வளவு உணவு வகைகள். நீங்களும் நானும் அந்த
விருந்தை பார்த்திருந்தாலே நமது வயிறு நிறைந்திருக்கும். குட்டிகள் விருந்தை
நன்றாக ருசித்து உண்டன. ஓநாய் குட்டிக்கு கோழி பிரியாணியும், வறுவலும் மிகவும்
பிடித்திருந்தது. யானைக் குட்டிக்கோ இளம் தழைகளும், கறும்பு சாறும்
பிடித்திருந்தது. இப்படியே நான் சொல்லிக் கொண்டு போனால் நமக்கு ஏக்கமே
வந்துவிடும்.
காட்டு
விலங்குகள் அனைத்தும் சாப்பிட்டு முடிப்பதற்குள் மாலை நேரமே வந்து விட்டது.
கடைசியாக, பிறந்த நாள் குட்டிக்கு வாழ்த்து சொல்லும் நேரம். சிங்க ராஜா
கரடிக்குட்டியை அருகில் அழைத்தார். குட்டிக்கோ வெட்கம் வந்துவிட்டது. மெதுவாக
தயங்கி, தயங்கி கரடிக்குட்டி அந்தக் காட்டின் ராஜாவான சிங்கத்தின் அருகில்
சென்றது.
சிங்கம்
தன்னுடைய கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தது. “நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இந்த
விருந்துக்கு வந்ததற்கு நன்றி. நம்முடைய கரடிக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்தை
சொல்லுவோம். ஆனால் அதற்கு முன்பு நான் அந்த அழகுக்குட்டிக்கு ஒரு பரிசு
வைத்திருக்கின்றேன். உங்கள் முன்னிலையில் அந்த பரிசை தருவதற்கு விரும்புகிறேன்.”
அந்த
பரிசு என்னவாக இருக்கும் என விலங்குகள் யோசித்தன. யாருக்கும் தெரியவில்லை. என்ன
பரிசாக இருக்கக்கூடும்? ராஜாவே கொடுக்கின்றார் என்றால் நிச்சயம் முக்கியமான,
உபயோகமான பரிசாகத்தான் இருக்க வேண்டும்.பரிசு என்னெவென்று அறிந்திருந்த யானையும்,
நரியும், ஓநாயும் மெல்லிய புன்னகையுடன் அமைதியாக இருந்தன.
கரடிக்குட்டி
தயங்கியபடியே ராஜாவிடம் சென்றது. வாழை இலையால் மூடப்பட்டு, சிறிய கயிறினால்
கட்டப்பட்டிருந்த பரிசை சிங்க ராஜா கரடிக் குட்டியின் கையில் வைத்தார்.
“ம்..பிரித்து
பார். உனக்கு நிச்சயமாக பிடிக்கும்” என்றார் ராஜா.
ஆவலுடன்
கரடி அதை பிரித்தது. உள்ளே இருந்ததோ பொசு பொசுவென்று முடி அடர்ந்த சிறிய அழகிய
வால். ஆனந்தத்தில் கரடிக்குட்டி குதிக்க ஆரம்பித்துவிட்டது.
“எனக்கும்
வால் கிடைத்து விட்டது....எனக்கும் வால் கிடைத்து விட்டது..”
குதித்துக்
கொண்டிருந்த கரடிக்குட்டியைப் பார்த்து அதன் நண்பர்களும், மற்ற பெரிய விலங்குகளும்
ஆரவாரமாக குரலெழுப்பின. யானையின் பிளீரலும், ஓநாயின் ஊளையும் எல்லாவற்றையும் விட
சத்தமாக இருந்தது.
கையை
உயர்த்தி அமைதியை கொண்டு வந்த சிங்க ராஜா பின்வருமாறு கூறினார்.
“என்னுடைய
தவறுதான். இந்த வாலை மட்டும் எங்கேயோ மறந்து வைத்துவிட்டேன். நல்ல வேளையாக என்
நண்பர்களான நரியும், ஓநாயும், யானையும் இந்த வாலை என்னிடம் ஒப்படைத்தன. குட்டியின்
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவே, இதை ரகசியமாக வைத்திருந்து பிறந்த நாள் பரிசாக
கொடுக்க முடிவு செய்தோம். இனி என்னுடைய காட்டில் எல்லா மிருகங்களுக்கும் வால்
இருக்கும். வால் இல்லையென்ற குறை யாருக்கும் இங்கே இருக்காது. ம்...வாருங்கள்...இன்னொரு
முறை விருந்தை சுவைப்போம்.”
விலங்குகளெல்லாம்
மறுபடியும் கொண்டாடத் தொடங்கின.
அதிசயம் பாருங்கள்; அந்த ஒரு
காட்டில் மட்டும்தான் எல்லா விலங்குகளுக்கும் வால் இருக்கின்றது.
kids will be happy to read this story. Bear's mistake was corrected by Lion's justice towards kids. Usual villain animals are very compassionate in this story.
ReplyDeleteNicely narrated kids story..biriyani has role in the story..what is the moral?..
ReplyDeleteNo moral, Ravi. Just a story for children to enjoy. We can add more sports events, food items, expressions if a child wants to. :)
Delete