Wednesday, May 6, 2020

அனாதையின் கரங்கள் (4) - வாழ்வின் கடைசி தோல்வி


இது விந்தையான உலகம். பல கோடிக்கணக்கான உயிரினங்களும், கோடிக்கணக்கான மனிதக்கூட்டமும் தினமும் இன்னல்களையும், இன்பங்களையும் உள்வாங்கிக் கொண்டு, நான் தான் பெரியவன், இதோ என் இனம்தான் பெரியது என்று பிதற்றிக்கொண்டு, தங்களுக்குள் உறவாடிக்கொண்டோ அல்லது அடித்து அழித்துக்கொண்டிருந்தாலும் இந்த உலகம் யாரையும் கண்டுகொள்ளாமல் அது அதன் பாட்டுக்கு இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. சூரியனின்  ஒரே ஒரு ஒளித்துகளுக்கு ஈடாகாத நாமோ நமது நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. கல்யாணியின் நான்காம் நினைவு நாள் (மற்றும் கண்ணனின் நோயின் நான்காம் ஆண்டு விழா). கண்ணன் மனைவியின் புகைப்படத்திற்கு முன் விளக்கேற்றிவிட்டு வணங்குகிறான்.

இந்த நான்கு வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. முதன்மையானது கண்ணனின் நோய் அல்லது உடல் நிலை அவனிடம் நிலைத்துவிட்டது. பல மருத்துவர்களை பார்த்து, அவர்களும் பல பரிசோதனைகளை செய்து மருந்து கொடுத்துப்பார்த்தாலும், அவ்வப்போது வலிப்பு வந்து மயங்கி விழுவது நிற்கவில்லை. கடைசியில் தினமும் மாத்திரைகளை சாப்பிடுமாறு எழுதிக்கொடுத்துவிட்டு, இந்த நோய் மூளையின் எங்கோ ஏற்படுகின்ற கோளாறு என்றும், இதை வெல்ல முடியாவிட்டாலும், கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும், கட்டுக்குள் கொண்டு வருவது மூளையிடம் தான் உள்ளது (!) என்றும், கட்டுக்குள் கொண்டுவர மாத்திரைகள் உதவி செய்யலாம் என்றும் சொல்லிவிட்டனர். இதற்கு மேல் மருத்துவர்களை பார்க்க பணமில்லாததால், கடவுளிடம் பாரத்தை போட்டுவிட்டு, மாத்திரைகளை நம்பி கண்ணன் வாழலானான்.

அடுத்த மாற்றம் அவன் வேலை இழந்தது. கல்யாணியின் சாவுக்கு சில நாள் கழித்து அவன் வேலைக்கு சென்றான். முதலாளி அவனை தனியே அழைத்தார்.

"கண்ணா, எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். என் வாழ்க்கையில நான் பார்த்தவர்களில் நேர்மையானவன் நீ. ஆனா உனக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்க கூடாது."

சற்று நேரம் அவனைப் பார்த்து இருந்தவர், தயக்கத்துடன் தொடர்ந்தார்.

"கண்ணா, இந்த வேலை சுலபமானதில்ல. உனக்கே தெரியும். கரணம் தப்பினால் மரணம்தான். நீ ஏதாவது வேலை செஞ்சிக்கிட்டிருக்கும்போது உனக்கு வலிப்பு வந்திடுச்சினா உன் உயிருக்கே ஆபத்து. இந்த நிலமை இருக்குறவங்கள நாங்க வேலைக்கே வெச்சுக்க கூடாது. வேணும்னா நீ கடையிலேயே உக்காந்துகிட்டு வரவங்களுக்கு பொருள் எடுத்து தர வேலை செய்யலாம்."

கண்ணனுக்கு மட்டும்தான் தெரியும். இந்த தொழிலுக்கு வருவதற்கு அவன் எந்த வயதிலிருந்து பாடுபட்டான் என்பது.

"ரொம்ப நன்றி முதலாளி. நான் கடையில உக்காந்துக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது. கடைக்கு வரவங்க எல்லாரும் என்ன பரிதாபமா பாப்பாங்க. அது என் மனச கஷ்டப்படுத்துமே தவிர நல்லது செய்யாது. உங்களுக்கு நான் என்னிக்கும் நன்றி கடன்பட்டிருக்கேன். நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. நீங்களும், உங்க குடும்பமும் நல்லாயிருக்கணும், முதலாளி. வரேன்."

அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு கண்ணன் வந்துவிட்டான். அவன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே!

கேசவன் கண்ணனை தன் கடைக்கு வருமாறு அழைத்தான். "நீ வந்து அங்க என் கூட இருடா" என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தான். ஆனால் கண்ணன் அதற்கும் மறுத்துவிட்டான்.

"கேசவா, உன் ரெண்டு பிள்ளைங்களும் பெரிசாகிட்டாங்க. உனக்கு செலவு அதிகமாகிக்கிட்டே இருக்குமே தவிர குறையாது. நம்ம நட்புக்குள்ள எப்பவுமே விரிசல் விழுந்திடக்கூடாது. உனக்கு என்ன நல்லா தெரியும். ஏதாவது வேலை செஞ்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடுவேன். கவலப்படாதே."

கண்ணனின் சொல்லில் இருந்த உண்மை கேசவனுக்கு புரிந்தது. அதனால் அவனைக் கட்டாயப்படுத்த முடியவில்லை.

கண்ணன் அதே தெருவிலிருந்த, முன்பு இருந்ததைவிட சிறிய அறைக்கு குடிபெயர்ந்தான். இந்த மாற்றத்தில் ஒரு நன்மை இருந்தது. வீட்டிற்கு பின்பக்கத்தில், மூலையில் இப்போது வந்துவிட்டாலும், வீட்டிற்கு பின்பக்கத்திலிருந்த மரங்கள் கண்ணனுக்கு ஆறுதலும், மகனுக்கு விளையாட நிழலும் கொடுத்தன. ஏழை பாட்டியம்மாவும் தினமும் வந்து குழந்தையை பார்த்துக்கொண்டார்.

இந்த மாற்றங்கள் வந்தாலும் இரண்டு வயிறுகளின் பசியில் மாற்றம் வரவில்லை. கண்ணன் அந்தத் தெருவிலிருந்த வீடுகளுக்கு எந்த வேலை இருந்தாலும் செய்து கொடுத்து, அவர்கள் தரும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தினான். சில வேலைகள் கடினமாக இருந்தாலும் கண்ணன் பொருட்படுத்துவதில்லை. 

கேசவனின் பொறுப்புகள் அதிகமாகிவிட்டபடியால் முன்புபோல் அடிக்கடி வந்து கண்ணனை பார்க்க வரமுடியவில்லை.

ஒரு நாள், அடுத்த தெருவிலிருந்த மளிகைக் கடைக்கு மொத்த சரக்குகள் வந்தன. கடை முதலாளியின் மகன் கண்ணனுக்கு சொல்லியனுப்பினான்.

கண்ணன் ஓட்டமாய் ஓடி வந்தான். 

"சொல்லுங்கய்யா."

"கண்ணா, அந்த வண்டியிலிருக்குற சரக்கையெல்லாம் கடைக்குள்ள கொண்டு வந்து வை. அம்பது ரூபாய் தரேன்."

"சரிங்கய்யா."

வேறு யாராக இருந்தாலும் 200ரூபாய்க்கு கீழ் குறைய மாட்டார்கள். டெம்போ வண்டி முழுவதும் சரக்கு. கண்ணனின் வறுமை பேரம் பேச அவனுக்கு வாய்ப்பளிப்பதில்லை. 

அவனின் கெட்ட நேரம். அரிசி மூட்டைகள், கிலோ கணக்கில் பருப்பு மூட்டைகளை எல்லாம் ஒழுங்காக வண்டியிலிருந்து எடுத்து, கடைக்குள் அடுக்கி வைத்துவிட்டான். காய்கறிக்கூடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். தக்காளி கூடயை தூக்கும்போது திடீரென தரை காலிலிருந்து நழுவுவதை உணர்ந்தான். வலிப்பின் தாக்கம் ஆரம்பித்தது. கூடையை கீழே போட்டவன், கையையும் காலையும் உதைத்துக்கொண்டு கீழே விழுந்தான்.

கண்ணன் விழுந்தது ஒருபுறம் என்றால் தக்காளி பழங்கள் மொத்தமும் வேறு பக்கத்தில் விழுந்தன. சில உருண்டோடி சாக்கடையிலும், சில வண்டிகளில் அடிபட்டும் சிதைந்தன. அப்போதென்றா கடையின் முதலாளி வரவேண்டும்!

"டேய், யாருடா இந்த வேலையை காக்கா வலிப்புகாரன்கிட்ட கொடுத்தது? ஐயோ! பழமெல்லாம் வீணா போகுதே! தண்டசோறு, நீ எடுத்து வைக்க வேண்டியதுதானே!"

விழுந்து மயங்கிய கண்ணனுக்கு இது மட்டுமே காதில் கேட்டது.

"சோடா வாங்கிட்டு வா"

"புடிச்சிக்கோ.. கால் துடிக்குது பாரு"

"கும்பல் கூடாதீங்கப்பா"

மளிகைக் கடைக்காரருக்கு கோபம் தணியவில்லை.

"பழுக்க கம்பிய காச்சி தொடையில ஒரு இழுப்பு இழுத்தா போதும். எங்க காலத்துல நாங்க கொடுக்குற வைத்தியம் அதுதான். அதுக்கப்புறம் வருதா பாருங்க"

சோடாவை கொஞ்சம் முகத்தில் தெளித்தனர். கலங்கிய நிலையில் எழுந்த கண்ணன் கொஞ்சம் சோடாவை குடித்து, கையிலே அதை பிடித்துக்கொண்டே தள்ளாடி நடக்கலானான். 

"ஏய், யாராவது புடிச்சுகிட்டு போங்கப்பா. இவன் வீடு தெரியுமா."

பாதி மயக்க நிலையிலேயே கண்ணன் வீடு வந்து சேர்ந்தான். அவனுக்கு நினைவிலிருந்தது காலையிலிருந்து செய்த வேலைக்கு கூலி எதுவுமே கொடுக்கப்படவில்லை என்பதுதான். தள்ளாடிக் கொண்டே தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது அவனே காரணம் சொல்லிக்கொண்டான். "ஆமாம், இழந்த பொருளுக்கு நான்தானே பொறுப்பு. அப்புறம் எப்படி கூலி வரும்?"

ஒற்றையடிப்பாதை மூலம் பின்பக்கம் வந்தவன் அவனுடைய குழந்தையைக் கண்டான். நிழலில், மரத்தினடியில் மண்ணில் ஏதோ கோடு கிழித்துக்கொண்டு இருந்தது இவனைப் பார்த்ததும் அழகாக புன்னகை செய்தது. அவனுக்கு அப்போதுதான் உரைத்தது.

"ஐயோ! நான் இந்த சோடாவாவது குடிச்சேன். என் குழந்தை காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிட்டிருக்காதே!"

மனம் பதைபதைத்து உள்ளே ஓடியவன் எங்கேயாவது காசு கிடைக்குமா என்று கலைத்தவனுக்கு ஐந்து ரூபாய் நாணயம் கிடைத்தது. எடுத்துக்கொண்டு வெளியே ஓடியவன், போகும் போக்கில், "ராஜா, அப்படியே இரு. அப்பா ஏதாவது வாங்கிட்டு வரேன்" என கதறியவன் எதிரிலிருக்கும் சின்னக்கடையில் ஒரு பன் வாங்கி, தாளில் சுற்றிக்கொண்டு ஓடிவந்தான்.

அந்த ரொட்டி உருண்டையை தண்ணீரில் நனைத்து குழந்தைக்கு ஊட்டினான். குழந்தை அதை ரசித்து, சுவைத்து சாப்பிட்டது.

இதைப் பார்த்த கண்ணனுக்கு இதயமே வெடித்து விடும் போலாயிற்று. மனதிற்குள், "கடவுளே, அனாதையான எனக்கு கிடைத்த உணவை கூட இந்தப் பிள்ளைக்கு வாங்கித் தர என்னால் முடியவில்லையே! என்னை ஏன் படைத்தாய்? எனக்கு துன்பம் கொடுத்து ரசித்தாயே, அது போதாதா? இந்த சின்ன உயிருக்கு ஒரு வேளை உணவு வாங்கித்தர முடியாத என்னை, அன்றே குப்பைத் தொட்டியிலேயே சாக விட்டு இருக்கலாமே!"

கண்ணீர் பொங்கிய கண்களை குழந்தை பார்த்துவிட்டால் அது தின்பதை நிறுத்திவிடுமென்பதால், முகத்தை திருப்பிக்கொண்டான். எங்கே, அந்தக் கடவுள் அதையும் குழந்தைக்கு செய்துவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு.

கேசவன் அன்று மாலை வந்தான்.

"கண்ணா, நல்லாயிருக்கியா? எங்கே என் ராஜா? வாடா வா. இந்தா...இந்த பிஸ்கெட் சாப்பிடு" என்று குழந்தையின் கையில் கொடுத்தான். பாட்டியம்மா இருந்ததால், குழந்தையை விளையாடவும், எப்போதோ கிடைக்கும் நல்ல பிஸ்கெட்டை குழந்தைக்கு கொடுப்பதற்காகவும் அதை தூக்கிக்கொண்டு பின்பக்கம் சென்று விட்டாள்.

"என்னடா? நான் கேக்குறேன் நீ ஒண்ணும் பேசமாட்டீங்கற?"

கண்ணன் மனமுடைந்து அழ ஆரம்பித்தான். பின்பு தேம்பலுடன் கேசவனிடம் எல்லாவற்றையும் சொன்னான். கேசவனுக்கு ஆழ்ந்த வருத்தம் உன்டாயிற்று.

"கண்ணா, நீ நல்லவன். நான் இருக்கேன். என் பசங்களும் வளர்ந்துட்டாங்க. இனிமே நான் அவங்களுக்கு செய்ய பெருசா ஒண்ணுமில்லை. பண்டிகை காலம்னால என்னால வர முடியல. கொஞ்சம் தாங்கிக்கோ. உனக்கு ஏதாவது நான் செய்யுறேன். எனக்கு விஷயம் தெரியாது. கையில பணம் கொண்டு வரல. இந்தா. இந்த 500 ரூபாய வெச்சுக்கோ. அட, வெச்சுக்கோடான்னா"

"கண்ணா, நீ மனச மட்டும் தைரியமா வெச்சுக்கோ. உன்ன கடவுள் கைவிடமாட்டாரு."

கேசவன் ரொம்ப நேரம் பேசினான். ஆனால் கண்ணனுக்கு பெரும்பாலும் காதில் ஏறவில்லை. பாவம். இவன் மட்டுமென்ன, கோடீஸ்வரனா? இவனால் என்ன செய்துவிடமுடியும்? அவ்வப்பொழுது 500 ரூபாய் தரலாம். வேறென்ன முடியும் அவனால்?

மனித வாழ்க்கையின் கடைசி ஆயுதமான மன தைரியம் கண்ணனுக்கு விடை கொடுக்க ஆரம்பித்தது. ஒரு மனிதன் வாழ்வதற்கு காரணம் தேட ஆரம்பித்தாலே அவன் முடிவு ஆரம்பமாகிறது.

ஒரு வாரம் ஓடிவிட்டது. கேசவன் இன்னும் வரவில்லை. அவன் கொடுத்த பணம் தேய்ந்து சில்லறையாகிவிட்டது.

பாட்டியம்மா வந்து, "தம்பி, அரிசியில்ல. கடைசியா இருந்தத பிள்ளைக்கு கஞ்சி வெச்சுக் கொடுத்துட்டேன். நீ என்ன பண்ணுவ? நான் என் வீட்டுல ஏதாவது இருக்கான்னு பாத்துட்டு வரவா?"

"வேணாம்மா", என்றவன், அந்த அம்மாவின் கைகளைப் பிடித்து கண்ணில் ஒற்றி, முகம் பதைத்து அழுதான்.

"ஏனய்யா...எதுக்கு அழுவுற?" என அந்தக் கிழவியும் கண்கலங்கினாள்.

"ஒண்ணும் இல்லம்மா. நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க" என்று சொல்லி அந்தம்மாவை அனுப்பி வைத்தான்.

தூக்கத்தில் சொக்கிய குழந்தையை நெஞ்சில் போட்டு தூங்க வைத்து, ஜன்னலோரம் இருந்த கிழிந்த மெத்தையில் படுக்க வைத்தான். கண்ணனுக்கு தூக்கம் வரவில்லை. தூக்கம் வராததற்கு பசி காரணமல்ல. பசியோடு தூங்கிய இரவுகள் எண்ணிலடங்காதவை. தூக்கம் வராததற்கு காரணம் அவனின் மனதினுள் எழுந்த கேள்விகள் கொடுத்த வலிகளும் வேதனையும் தான். 

'வறுமையின் கொடுமை பசியில் தெரியும். நான் சிறு வயதில் பசியில் ஏங்கியதில்லையே. போராட்டங்களினுள் வளர்ந்து, வாழ்வை வெல்வேன் என்று நம்பியவன் கடைசியில் செய்த சாதனை இந்த பச்சிளம் குழந்தையை பசியில் வாடவிட்டு, வறுமைக்குள் தள்ளி வதங்கவிட்டதுதானே! இதற்காகவா போராடினேன்? என் வாழ்க்கையின் பலன்தான் என்ன?'

'நேர்மையுடன் உழைத்து வாழ்பவன் உயர்வான் என்று கேட்டதெல்லாம் பொய்யா? அதெல்லாம் பொய்யாக இருந்து தொலையட்டும். ஆனால் அந்த பொய்யின் பலனை, வேதனையை எனக்கு கொடுத்திருக்கலாமே! குற்றம் செய்தவனை தண்டிக்காமல், சிறிய குழந்தையை வாட விடும் கடவுளே, உனக்கு இரக்கமே இல்லையா? இப்படித்தான் போகும் என்றிருந்தால் என்னை குப்பை தொட்டியிலேயே கொன்றிருக்கலாமே. ஏன் என்னை வளர வைத்தாய்? ஏன் என்னை அடுத்த மனித உயிரின் துன்பத்தை, ஏக்கத்தை உணரும் வகையில் வளரவிட்டாய்? இந்தப் பிஞ்சு செடி வேர் ஊன்றும் வரையிலாவது என்னை விட்டு வை. அதைக்கூட செய்ய மனமில்லாதவனா நீ? நான் உயிரோடு இருந்து இந்தக் குழந்தையின் ஒவ்வொரு நாளின் போராட்டத்தை காணும் சக்தியில்லாதவன் என்பது உனக்கு தெரியாதா?'

*****************************
(நிகழ்காலம்)

 பின்னிரவுப் பொழுது.
அந்த குறுகிய தெருவின் இருமங்கிலும்பகலிலே நிழலை அள்ளித் தரும் மரங்கள் நிறைந்திருக்கின்றன. இரவினில் இலைகள் அசையாவிடினும்பகலில் தரை வெப்பம் ஏறாத காரணத்தினால் இரவுப் பொழுது குளிர்ந்திருக்கின்றது.

எங்கும் அசைவில்லை.

அந்தத் தெருவிலிருந்த ஒரு பழைய வீட்டின் பின்பக்கத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த சிறிய குடியிருப்பு. சின்னஞ்சிறு சமையலறையைத் தவிர இருப்பது மேலும் ஒரே ஒரு அறைதான். உட்காருவதுசாப்பிடுவதுதூங்குவது எல்லாமுமே அங்கேதான். காரை பெயர்ந்த சுவர்களைத் தவிர அந்த அறைக்கு ஒரு பெரிய ஜன்னல்மற்றபடி உயர்வாக குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை.

அந்த ஜன்னலை ஒட்டியபடி ஒரு கட்டிலும்அக் கட்டிலின் மேல்கிழிந்தபழைய பஞ்சு மெத்தையும் இருக்கின்றன. ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. ஓரங்களிலும்நடுவிலும் ஆங்காங்கே கிழிந்திருந்த போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது. ஒருக்களித்துப்படுத்துவலது காலை சிறிது மடக்கியும்இடது காலை நீட்டியும்இரு கைகளையும் முகத்தினருகே மடக்கி வைத்தபடியும்அந்த குழந்தை ஆழ்ந்த நித்திரையிலிருந்தது

அக்கட்டிலை ஒட்டியபடி போடப்பட்டிருந்த மேஜையின் அருகே ஒரு மனிதன் நின்றிருந்தான். அவனது துயரம் தோய்ந்த விழிகள்ஜன்னலின் வழியாகத் தெரிந்த முழுநிலவை நோக்கிக்கொண்டிருந்தன. நிலவினில் எதையோ தேடுவதைப் போல் இருந்தது அவன் பார்வை.

சில நிமிடங்கள் கழிந்தன. மெதுவாக அவன் தனது பார்வையை இவ்வுலகுக்கு கொணர்ந்துபின் சத்தம் எழுப்பாமல் அறையின் குறுக்கும் நெடுக்குமாக - குழந்தை எழுந்திருக்காமல் இருக்கும் பொருட்டு - கால்களை தரையினில் அழுந்தாமல் வைத்து நடந்தான். ஒரு முறை நின்று நிலவையும்தெளிந்த வானத்தில் படர்ந்திருந்த நட்சத்திரங்களையும் ஏக்கத்துடன் பார்த்தான். சில நொடிகள் கழிந்த பின் மறுபடியும் நடந்தான். மனதின் எண்ணப் போராட்டத்தில் சிக்குண்டுவிடுபட வழி தெரியாமல் போராடிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் முகத்தில் சற்று தெளிவு வந்தது. மேஜையின் அருகே வந்தவன் அங்கிருந்த ஒரு வெள்ளைத்தாளில் நடுங்கும் கையினால் பின்வருமாறு எழுதினான்.

என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. வேறுவழி எதுவும் தெரியாததால் என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன்.

அக்கடிதத்தை மடித்து சட்டைப் பையினுள் வைத்தபடியே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்தான். அவன் முகத்தில் சிறுமலர்ச்சி தோன்றியது. குழந்தையின் அழகால் அவன் மிகவும் கவரப்பட்டான்.

போர்வை குழந்தையின் உடலில் படிந்திருந்ததால்குழந்தையின் சின்ன உடலுக்கு இணங்கபோர்வையின் மேடு பள்ளங்கள் இருந்தன. நிலவின் ஒளியில் அக்காட்சி மிகவும் அழகாக இருந்தது. அவனுக்கு ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது. இக்காட்சியை ஒரு ஓவியன் பார்த்தால் இதை ஒரு அழகான சித்திரமாக வரைந்திருப்பான் என்று நினைத்து மகிழ்வடைந்தான். மனதில் எண்ணவோட்டம் ஓடியது.

அது சரிதான். எல்லாக் குழந்தைகளும் அழகுதானே! உண்மையான அழகு உள்ளத்தில்தான் இருக்கின்றது என்றால் - வன்மம் வாய்ந்தசூழ்ச்சியால் சூழப்பட்ட உலகின் உண்மையை அறியாத தூய உள்ளம் அமையப்பெற்ற குழந்தைகள்தானே அழகு!

இவ்வெண்ணம் தோன்றி மறைந்தவுடன் அவன் நெற்றியில் சுருக்கம் உண்டாயிற்று. மெலிய நடுக்கம் உடல் முழுதும் பரவிச் சென்றது. எந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியூட்டியதோ அந்த எண்ணமே பெரும் பயத்தை விளைவித்தது. கலவரமடைந்த அவன் முகம் சுருங்கி கண்களில் நீர்திரையோடியது. எண்ணங்கள் தோன்றின. "இப்படியா முடிவதுஇல்லையில்லை.." இந்தக் கேள்விக்கான விடையை அவன் எங்கோ தேடினான்.

சிறிது நேரத்தில் சட்டென்று முகத்தோற்றம் மாறியது. கடவுளிடமிருந்து ஆணை கிடைத்தது போலிருந்தது. சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்து கிழித்தெறிந்தான். கைகளால் முகத்தை மூடியபடி அமர்ந்தான். கைவிரல்களுக்கிடையே சூடான கண்ணீர்த்துளிகள் வழிந்தன. அவன் எண்ணமிட்டான்.

என்னதான் செய்வதுஅதையா..எதற்காக இந்நாள் வரை போராடினேனோ அதைக் கைவிடுவதாமுடியாது.... ஆனால் என்ன வழியிருக்கின்றதுநான் அனுபவித்த அதே வாழ்க்கையை என் குழந்தைக்கும் கொடுப்பதாஇல்லை... ஆனால்... துணையில்லாத இந்த அபலக் குழந்தை...? நான் என்ன செய்வேன்? கடவுளே! தயவு செய்து என்னை மன்னித்துவிடு! எனக்கு வேறு வழி தோன்றவில்லை. இரக்கமும்கருணையும் சிறிதுமில்லாத உலகம் இது. இழிநிலையில் கிடந்துமனம் உழன்று துன்புறுவதைவிடநான் செய்வதே சிறந்ததாக இருக்கும். கடவுளே.. இப்பாவச் செயலிற்காக நரகத்தில் நான் எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி. பொறுத்துக்கொள்கிறேன்!

தீர்க்கமுடன் மற்றொரு வெள்ளைத்தாளில் - இம்முறை கைகள் மட்டுமல்ல.. உடலும்மனதும் சேர்ந்து நடுங்க - எழுதினான்.

எங்களின் இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணமல்ல. இக்கொடிய உலகம் எங்களுக்குத் தந்து கொண்டும்என் குழந்தைக்கு தரப்போகும் துன்பங்களிலிருந்தும் விடுவித்துக் கொள்ளவேஇந்த பாவத்தை நான் செய்யப் போகிறேன். வாழ்க்கை தரும் வேதனைகளை விட மரணம் தரப்போவது மோசமாக இருக்க முடியாது. கடவுள் என்னை மன்னிக்கட்டும்...!

இந்த வரிகளுடன்கையொப்பமிட்டுவிட்டு காகிதத்தை சட்டைப் பையில் வைத்து விட்டு குழந்தையைப் பார்த்தான். நேரம் வந்துவிட்டது என்பது அவனுக்கு விளங்கியது. இனி காரியத்தை செய்ய வேண்டியதுதான்!

********************************************
கண்ணன் குழந்தையை கையில் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டான். படுக்கையிலிருந்த போர்வையை எடுத்து, குழந்தைக்கு போர்த்தியபடியே அதை தூக்கி கொண்டு தெருவுக்கு வந்தான்.

அவனின் எதிர்காலம் போல் தெருவும் சூன்யமாகிக் கிடந்தது. அவனிருந்த பகுதிக்கு அருகில்தான் உலகத்தின் முதல் உயிர் தோன்றியதாகச் சொல்லப்படும் கடல் இருந்தது. 

காலியாகிக் கிடந்த தெருக்களில் நடந்து கடற்கரையை அடைந்தான். இனி மணலில் நடக்க வேண்டும். மனம் போகலாமா வேண்டாமா என யோசித்தாலும், கால்கள் தானாகவே கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தன. பொதுவாகவே நடக்கக் கடினமான கடற்கரை மணல், முடிவுக்கு நடக்கும்போது இலகுவாகவா இருக்கும்? ஆனால் இதையெல்லாம் உணரும் திறனில் அவனில்லை.

கடலின் அருகில் வந்தவன், கொஞ்சம் உட்காரலாம் என முடிவெடுத்து மணலில் அமர்ந்தான். 

கடல் அலைகளின் ஓயாத ஒலியினால் குழந்தை விழித்துக்கொண்டது. 

கண்ணனைப் பார்த்து, "அப்பா, நாம ஏன் இங்க வந்தோம்?" என கேட்டது.

"ஒண்ணுமில்ல ராஜா, காத்து வரல. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்" என கிசுகிசுத்தான். 

அலைகளைப் பார்த்தவனுக்கு அப்போது விசித்திரமான ஒரு எண்ணம் வந்தது. 'இந்தக் கடலில் எத்தனை பேர் தற்கொலை செஞ்சுக்கிட்டிருப்பாங்க? கடைசியா அவங்களுக்கு என்ன தோணியிருக்கும்?'

'பாரு, எத்தனை உயிரை காவு வாங்கிகிட்டு இது ஒண்ணும் தெரியாத மாதிரி, எப்பவும் போல அலையடிச்சிக்கிட்டிருக்கு! இதுவும் மனுஷங்கள மாதிரிதான் போல. எவன் இருந்தா என்ன போனா என்ன..!'

"குளிருதப்பா", என குழந்தை சொல்லவும், போர்வையை அதன் உடல் முழுவதும் போர்த்தினான்.

மனம் மறுபடியும் வினோதமாக யோசித்தது. 'இப்ப என்ன? குழந்தையை தூக்கிகிட்டு உள்ள இறங்க வேண்டியதுதான். இங்கேயே இறங்கலாமா இல்ல...அதோ, அங்க கொஞ்ச தூரம் போனா அவ்வளவா ஆழம் இருக்காதுபோல தெரியுதே. அங்க இறங்கலாமா? அட, முட்டாளே, ஆழம் இருந்தாதானே சீக்கிரம் சாக முடியும்.' 

'குழந்தைய கெட்டியா கையுல பிடிச்சுக்கணும். தனியா விட்டுடக்கூடாது. ஆமாம்.. ஆனா, செத்துபோனதுக்கு அப்புறம் இந்த பாழாப் போன கை, குழந்தைய விட்டுடிச்சுன்னா? கடவுளே, என் கடைசி ஆசையா வெச்சுக்கோ. ரெண்டு உடலும் ஒண்ணா கரை ஒதுங்கணும்!'

இப்படியே சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். 'தாமதம் ஆகுதடா. இன்னும் கொஞ்ச நேரம் போனா விடிஞ்சிடும். சீக்கிரம் முடிச்சிடணும். சரிடா, கண்ணா, அவ்வளவுதான் உன் வாழ்க்கை. இந்த நிலைமைதான் வரும்னு இருக்கு...ஆமாம், கேசவனுக்கு தெரிஞ்சா? அழுவான். வேறென்ன செய்ய முடியும். பாவம். அவன் வாழ்க்க நல்லா இருக்க செய் கடவுளே! உம்.. இதை உங்கிட்ட சொல்றேன் பாரு. சரி, தாத்தாவுக்கு தெரிஞ்சா?' 
  
கண்ணனுக்கு மனதில் தாங்க முடியா வேதனை உண்டாயிற்று. 'தாத்தாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு. அவர் வெச்ச செடி இப்படி பட்டுப் போறத பாத்தா...' கண்ணனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

'இப்படியே யோசிக்கக் கூடாது. வா... இறங்கிடலாம்' என்று முடிவெடுத்த கண்ணன், குழந்தையை கையில் தூக்கிக் கொண்டான். அதிகாலை கடல் குளிர் காற்று இருவரது உடலையும் தழுவி சென்றது!

மணற்மேட்டிலிருந்து கீழே இறங்க கால் வைத்தவன் கால் இழுக்கத் தொடங்கியதை உணர்ந்தான். வாழ்க்கையில் சந்தித்திருந்த வேதனைகளிலும், கொடுமையான வலிகளிலும் உச்சமான வலியில், பீதியில் அந்த மனிதன் விழுகிறான்.

'ஐயோ, நான் விழக்கூடாது. என் குழந்த...அது தண்ணீ கிட்ட போயிடும்..யாருமில்லா அனாதை அது...என் உடம்பே விழாதே... நில்லு... அத காப்பாத்து...கடவுளே..' என்றெல்லாம் மனதில் பேசினாலும் மூளைக்குள் இடித்த இடியினால் அவன் அலறியது 'ஆ...' என்றுதான். மயக்க நிலைக்கு முன் கடைசியாக கண்ணன் நினைத்ததெல்லாம், 'என் குழந்தையை காப்பாத்தணும்' என்பதுதான்.

உலகம் எப்போதும் போல் விழிப்பதற்காக தயாரானது. சூரியன் கிழக்கிலிருந்து கடலின் மேல் கிளம்ப தயாராகியது. அன்று சிறிது மேகமூட்டமாக இருந்ததால் சூரியனின் முழு வெளிச்சமும் வர சிறிது நேரமாகும்.

கண் விழித்த கண்ணன் கண்டது மேகக் கூட்டங்களின் பின்னே எங்கோ தோன்றிய சிறிய வெளிச்சம் தான். கறுப்பு மேகங்கள் அதிகாலை ஒளியை மறைத்தன. கடல் அலைகளின் ஓசை காதை நிறைத்தது. 

அவனுக்கு எப்படி இங்கு வந்திருக்கிறோம் என்பது விளங்க சில நிமிடங்களானது.

"யோவ், அறிவிருக்கா? பாத்தா படிச்சவன் போல இருக்க... இங்க என்ன பண்ற..?"

கண்ணன் பதறி எழுந்தான். அவனை சுற்றிலும் நான்கைந்து மீனவர்கள் இருந்தனர். எல்லோருமே உணர்வுபூர்வமாக இருந்ததினால் குழப்பம் தெளிய சில வினாடிகள் தேவைப்பட்டன.

"விடியங்காத்தால கடலுக்கு போலாம்னு வந்தா, இங்க நீ இப்படி கிடக்குற.. அறிவு இல்ல உனக்கு?"

"நான் பாத்தே இருக்கமாட்டேன் அண்ணே! சின்னதா ஏதோ தெரியுதுன்னு உத்துப் பாத்தா கடலு கிட்ட ஒரு குழந்த..அதான் அலறிக்கிண்ணு ஓடி வந்தேன்."

அப்போதுதான் கண்ணன் முழுமையாகத் தெளிந்தான்.

"என் குழந்த, என் குழந்த..." என்று அலற ஆரம்பித்தவனை அடக்கியது ஒரு பெண்ணின் குரல்.

"என் கிட்ட இருக்கு. பாவம். அழக் கூட இல்ல"

அந்த அம்மாவிடம் இருந்து குழந்தையை கண்ணன் பறித்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

"ஏனய்யா...குழந்தைக்கு அம்மா இல்லியா? உனக்கு என்ன காக்கா வலிப்பா? அப்புடி இருக்குறவன் இங்க வரலாமா? உதச்சிக்கினு கிடக்குற..பாவம், இந்தக் குழந்த இன்னான்னா அப்பாவுக்கு குளிருல நடுங்குதுண்ணு போர்வைய
போத்தி விடுது! எம்மாம் பாசம் உம்மேல வெச்சிருக்கு."

தன் குழந்தையை கட்டி அணைத்தான். இந்த வார்த்தைகளை கேட்கையில், மேகத்தின் இடைவெளியில் சூரியனின் ஒரே ஒரு ஒளி மட்டும் அவன் கண்ணில் பட்டதால், வெட்கி கண்களை மூடிக்கொண்டான்.

"ரொம்ப நன்றிங்க" என தழுதழுத்தவனிடம், "இனிமே இங்க கடலோரம் உன்ன பாத்தா வெட்டி வீசிப்புடுவேன். கிளம்பி வூட்டுக்கு போ" என்று ஆணையிட்டது ஒரு குரல்.

அன்பின் ஆணை. நன்றி சொல்ல மறந்து, எழுந்து மெதுவாக கண்ணன் நடந்தான். அவனுடைய கால்கள் மண்ணில் புதைந்து எழும்போது வரும் கொடிய வலியை உணரும் நிலையில் கண்ணன் இல்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தை அவன் காதில் மட்டும் கேட்கும் வகையில், "அப்பா, பசிக்குதப்பா" என்றது. 

கண்ணன் துடித்துப் போனான். எந்த வார்த்தையை கேட்க கூடாது என்று நினைத்திருந்தானோ, அந்த வார்த்தையை, அந்த நிலையில் கேட்ட போது, மனம் குறுகிப் போனது.

'ஒருவனது வாழ்க்கை அவனுக்கானது அல்ல' என்ற மனித வாழ்வின் அடிப்படை இரகசியத்தை கண்ணன் முழுவதுமாக புரிந்து தெளிந்தான்.

"ராஜா, அதோ அங்க போவோம்பா..அங்க தள்ளு வண்டி இருக்குல்ல, அங்க ஏதாவது கிடைக்கும்"

குழந்தையை அணைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க கண்ணன் நடந்தான். அந்தக் குழந்தை அப்பாவின் கழுத்தை இரு கைகளால் கட்டிப் பிடித்து, அவனது தோளில் சாய்ந்து தூங்கத் தொடங்கியது.

நமது கண்களுக்கு மெலிந்து, குச்சி போல் காணப்படும் அந்தக் கரங்களின் அணைப்பின் சக்தி அளவிடமுடியாதது. அன்பின் உச்சத்தால் உருவான சக்தி அது. 

அந்த பிஞ்சு கைகளின், பெற்ற தகப்பனை கட்டி அணைத்திருக்கும் கரங்களின் பிணைப்பு, எதனாலும் பிரிக்க முடியாத ஒன்று.

மனித வாழ்வின் துன்பங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு வெல்வதற்கு, ஒரு ஆணுக்கு தேவை எளிய பாசத்தின் தொடுதல்தான். இனி இந்த இரு உயிர்களின் வாழ்க்கை போராட்டம் எதையும் எதிர்கொள்ளும்! வெல்லும்! 

மேகத்திரளிலிருந்து வெளிவந்த கதிரவன், இவர்கள் நடக்கும் பாதைக்கு ஒளியை பாய்ச்சினான். 

முன்னே நடந்தபடி கண்ணன் முணுமுணுத்தான்.

"இனிமேல் நம் வாழ்க்கை முன்னே உள்ளது. திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அங்கே தெரியும் வெளிச்சத்தை நோக்கி நடப்போம். முன்னேறுவோம் மகனே! முன்னேறுவோம்..

முன்னே....முன்னே....

நிறைந்தது.
************************************
நன்றியுடன்
ரா. பாரத்ராம்
06/05/2020




15 comments:

  1. நான் கடைசியாகப் படித்த புத்தகம் கல்கி எழுதியது. உங்கள் வலைப்பதிவைப் படிக்கும்போது அதே அதிர்வுகளை உணர்ந்தேன். நீங்கள் அத்தகைய திறமையான எழுத்தாளர். உங்களைப் போன்ற திறமையான ஒருவரைக் கொண்டிருப்பது தமிழ் உலகத்தின் பாக்கியம். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதையைப் படித்த நிறைவு.கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. 'ஒருவனது வாழ்க்கை அவனுக்கானது அல்ல'- அனைவரும் உணர வேண்டிய உண்மை. முடிவு மனதிற்கு சந்தோஷமாக பிடித்தமானதாக இருந்தது. This story is a feather in your cap.

    ReplyDelete
  3. Saranya SathyamoorthyMay 7, 2020 at 1:21 AM

    Padikkuradhu kadhainu therinjum..aiyo enna agumonu manasu kedandhu patharavechuteenga...ponga Bharath..mudiyala..nalla velai kadhaiya subham potu mudicheenga...superb writing ..best wishes to you ..

    ReplyDelete
  4. அருமையான கதை. ஒரு மெலிந்த சிறிய பூப்போன்ற கைகளுக்கு எவ்வளவு வலிமை ... கதை சொல்லும் பாங்கு மிக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. Very nice and heart touching lines .Beautiful ending , you proved as a writer all the best and keep writing

    ReplyDelete
  6. Not a sad ending.. Positive message. Very good narration.. Keep up the good work..

    ReplyDelete
  7. A well written story dealing with a tough subject. The story maintained the suspense till the end. I was very glad to see the story ending with a positive note. Such positive approach is the need of the hour. The story opens up many questions to ponder. What is society? Who is a good person? What should be done with the gift of life? How should one live? Is selflessness still relevant? What is courage? What is responsibility etc... Amazing story and engaging writing style. Keep it up.

    ReplyDelete
  8. A disturbing story reflecting most poor people's lives. Living without even food for children and aged, not even a small own house, people having no job security in this world, etc are portrayed. Makes you question the grand lifestyle of rich, famous and the powerful and the current entitlement mindset of selfish people in the society. Only the poor help others (fishermen). The middle class are busy in their lives and the rich are the cause of this situation. The title is very good (esp the last chapter). Expecting more, similar stories in future from you. I believe that you should publish your stories as a (e)book.

    ReplyDelete
    Replies
    1. Thanks very much for feedback and on your advice. Yes, I will explore about that.

      Delete