Wednesday, July 7, 2021

கனவே.. கொல்லாமல் போய்விடு (பகுதி 2)

 

தூங்கி எழுந்த எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை என்றாலும் இரு நிமிடங்களில் எல்லாமும் நினைவுக்கு வந்து விட்டன. நான் கொலைகாரனாகிவிட்டது இனி மாறாது. எங்கே இருக்கிறேன் என்பதை விசாரித்து எங்கள் வீட்டுப் பகுதிக்கு வந்தேன். முன்பு உட்கார்ந்திருந்த அந்த கல்லிலே உட்கார்ந்தேன். 

ஆமாம். இந்த கல்லில் உட்கார்ந்துதான் உங்களுக்கு நடந்தது எல்லாவற்றையும் சொன்னேன். இப்போது நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு போகும் நேரம் வந்துவிட்டது. எழுந்து நடந்தேன்.

வீட்டிற்கு அருகில் வருபோது முகத்தையும், ஆடையையும் சற்றே சரி செய்துகொண்டே எங்கள் குடியிருப்பினுள் நுழைந்தேன்.

அங்கே சிறிய மக்கள் கூட்டம். காவல் துறை ஜீப் ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நின்றிருந்தன. நான் உள்ளே நுழையும்போது ஒரு காவலர் என்னை தடுத்தார்.

'யாருய்யா நீ? இங்கே நிக்குறோம்...நீ பாட்டுக்கு உள்ள போற?'

'சார், நான் இங்கதான் குடியிருக்கிறேன்.'

அந்த காவலர் இங்கிருந்தே குரல் கொடுத்தார். 'சார், இவரு இங்கதான் இருக்காறாம். உள்ள அனுப்பட்டுமா?

'அனுப்புய்யா.'

உள்ளே எல்லா குடியிருப்புவாசிகளும் ஒன்றாக நின்றிருந்தனர். எட்டிலிருந்து பத்து காவல்காரர்களும் இருந்தனர். நான் உள்ளே வந்தவுடன் மொத்தமாக எல்லோர் பார்வையும் என் மேல் விழுந்தன. நெஞ்சின் படபடப்பையும், உடல் நடுக்கத்தையும் முடிந்தளவு சமாளித்துக்கொண்டு, ஒன்றும் புரியாதவன் போல் கூட்டத்தை நெருங்கினேன். 

அங்கே மேனகாவை கிடத்தியிருந்தனர், ஒரு வெள்ளைத் துணியால் போர்த்தியபடி. ஆனந்தும், மேனகாவின் பெற்றோரும் அருகில் நின்றபடி அழுது கொண்டிருந்தனர்.

"இங்கே வாங்க."

இன்ஸ்பெக்டர் போலும், என்னை அதிகாரமாக அழைத்தார். வயது குறைவானவராக இருந்தாலும் மிடுக்கில் எந்த குறையுமில்லை. அருகில் சென்றேன். கால்கள் நடுங்கின என்றாலும் விழாமல் எப்படி சமாளித்தேன் என்பது எனக்கே ஆச்சரியம்.

"நீங்க யாரு?"

"நான்...நான்..இதோ இந்த வீட்டுல குடியிருக்கேன்."

"எந்த வீடடுல?"

நான் எங்கள் வீட்டை காட்டினேன்.

"ஓ... அடுத்த வீடா? இங்க என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா?"

"தெரியாதுங்க, சார்."

"தெரியாதா? என்னம்மா பக்கத்து வீட்டுல கொலை நடந்திருக்கு. நீங்க உங்க வீட்டுக்காரருக்கு சொல்லலியா?"

கௌரி பயத்துடன் தயங்கி சொன்னாள். "நான் அவர் ஆஃபிசுக்கு ஃபோன் பண்ணேன். அவர் ஏதோ வேலையா வெளிய போயிருக்குறதா சொன்னாங்க."

"அதனாலென்ன? நீங்க அவர் மொபைலுக்கு பண்ணியிருக்கலாமே?"

இப்போது நான் பேசினேன். "எங்கிட்ட மொபைல் ஃபோன் இல்லை சார்."

"என்னது??" இன்ஸ்பெக்டர் ஆச்சரியமாக கேட்டார். "இந்தக் காலத்துல மொபைல் ஃபோன் இல்லாம ஒருத்தரா? நம்ப முடியலையே..."

"எனக்கு எதுக்கு சார். வீட்டுல இல்லன்னா வேலை செய்யுற இடம், அங்கிருந்து கிளம்பினா வீடு. வேற எங்கேயும் போகமாட்டேன். அது எல்லோருக்கும் தெரியுமே!"

இன்ஸ்பெக்டர் அதை நம்பியதாக தோன்றவில்லை.

"சரி. உங்க வீட்டுல நில்லுங்க. நான் ஒவ்வொருத்தரையா விசாரிக்கணும். போங்க."

நான் கௌரியின் அருகில் சென்றேன். டீ வேண்டுமா என்று கேட்டாள். வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

போலீஸ் ஒவ்வொருவரையாக விசாரிக்க தொடங்கினர். ஏதோ காரணத்துக்காக எங்களிடம் கடைசியாக வந்தனர்.

எனக்கென்னவோ என்னைவிட கௌரி தைரியமாக இருந்தது போலிருந்தது. மனைவி என்றால் அப்படித்தானே இருக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர் என்னைக் கேட்டார்.

"நீங்க எங்க, என்ன வேலை பாக்குறீங்க?"

சொன்னேன்.

"உங்களுக்கும் உங்க பக்கத்து வீட்டுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததா?"

கௌரி பேசினாள்.

"சார், அவங்க, அதான் மேனகா எனக்கு அக்கா மாதிரி. ரொம்ப நல்லவங்க. வெளிய கூட அவசியமில்லாம வர மாட்டாங்க. அவங்களுக்கு போய்..." விசும்ப தொடங்கினாள்.

"இருங்கம்மா. விசாரிக்கும்போது அழுதா எங்களுக்கு என்ன புரியும்? இல்லன்னா ஸ்டேஷனுக்கு போய் தான் உங்க கிட்ட பேச முடியும். அது நல்லாவா இருக்கும்?"

அடிப்படையான சில கேள்விகளை கேட்டுவிட்டு எங்கள் விவரங்களையும் வாங்கிக்கொண்டு போவதற்கு முன், "நீங்க பக்கத்துலேயே இருக்கீங்க. யாருக்கு தெரியுதோ இல்லையோ, உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும். அவங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை நடக்குமா? முக்கியமா நேத்து ஏதாவது பெரிய சண்டை நடந்ததா?"

"இல்லங்க சார். அவங்க ஒற்றுமையாகத் தான் இருப்பாங்க. சின்ன சண்டைகள் வந்திருக்கலாம். ஆனால் வெளியே சத்தம் கூட கேட்டதில்லை."

"சரி. நான் மறுபடியும் வருவேன். நீங்க எங்கேயும் வெளியூர் போகாதீங்க. ஒரு வாரம்தான். அதுக்குள்ள கண்டு புடிச்சிருவோம்."

அவர் உடலை எடுத்து போவதற்கான ஏற்பாடுகளை செய்ய போய்விட்டார். நான் திகைப்புடன் கௌரியையே பார்த்துக் கொண்டிருந்தேன். பயந்த சுபாவமுடைய என் கௌரியா இவ்வளவு தைரியமாக போலீஸிடம் பதில் சொன்னாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

அவள், "உள்ள வாங்க" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டாள். நானும் அவள் பின்னே சென்றேன். இப்போ எதுவும் பேசாதீங்க என்பது போல் வாயில் விரலை வைத்து காண்பித்தவள், சிறிது நேரம் கழித்து சன்னல் ஓரத்தில் எட்டிப்பார்த்து, போலீஸ்காரர்கள் போய்விட்டனர் என்பதை உறுதி செய்துகொண்டு என் அருகில் வந்தாள். "குழந்தை தூங்கட்டும். அதுவரை எதுவும் பேசாதீங்க" என்று சொன்னாள். நானும் சரி என்பது போல் தலையாட்டினேன். 

கௌரி குழந்தைக்கு சோறு ஊட்டிவிட்டு, தூங்க செய்துவிட்டு வரும் வரை காத்திருக்கும்போதுதான் எனக்கு உண்மை உறைக்க ஆரம்பித்தது. நான் கொலை செய்துவிட்டேனா? என்னால் நம்பவே முடியவில்லையே! என்னை விடுங்கள்; எனக்கு அறிமுகமானவர்கள் யாரையும் கேளுங்கள். நான் அவ்வாறு செய்வேன் என்பதை எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 

ஒரு உயிரை கொல்வதா? அதுவும் அவ்வளவு மூர்க்கத்தனமாக. இரத்தத்தை பார்ப்பது நீங்கள் நினைப்பது போல் சுலபமல்ல. புதிதான, மெலிய சூடுடன், குபுக் என்று கொப்பளித்து வரும் ரத்தத்தை பார்ப்பதோ அல்லது உங்களின் மீது தெளிக்கும்போது உணர்வதோ லேசான காரியமல்ல. இந்த அழகில் நான் ஒரு கோழை வேறு. அந்தக் கொலையை செய்தேன் என்பதைவிட, செய்துவிட்டு, கால்கள் நடுங்காமல், கீழே விழாமல் எப்படி நடந்து வீட்டிற்கு வந்தேன் என்பதே ஆச்சரியம்!

கௌரி என்னருகில் வந்தாள். "குழந்தை தூங்கிவிட்டது. என்ன நடந்தது என்பதை விவரமாக சொல்லுங்க" என்றாள்.

மனதினுள் எண்ணங்கள் ஓடின. என்ன சொல்வேன் கௌரி? எதற்காக, யாருக்காக அந்த கொலையை செய்தேன் என்பதை நான் சொன்னால் கடவுள் கூட நம்புவாரா என தெரியவில்லையே! 

அவளிடம் பேச ஆரம்பித்தேன். நடந்ததை, முன்னமே எனக்கு மேனகாவின்மீதிருந்த வெறுப்பையும், இவ்வளவு நாளாக நான் பொறுத்திருந்ததையும் சொன்னேன். இன்று என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதையும் சொன்னேன்.

என் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கௌரி முடிவில் எனக்கு புரியாத ஒரு கேள்வியை கேட்டாள். 

"நீங்கதான் இந்த கொலையை செஞ்சீங்களா?"

"ஆமாம் கௌரி."

"நான் சொல்றத பொறுமையாக் கேட்டிட்டு பதில் சொல்லுங்க. இந்த கொலையை நீங்கதான் செஞ்சீங்கன்னு முழுசா உங்க மனசு நம்புதா?"

"இதென்னம்மா கேள்வி? கொலையை செஞ்சுட்டேன்னு யாராவது பொய் சொல்லுவாங்களா?"

"இல்லை...நீங்க ரொம்ப சாந்தமானவரு. இந்த அளவுக்கு எல்லாம் போக மாட்டீங்களேன்னு கேட்டேன். சரி. ரொம்ப யோசிக்காதீங்க. டாக்டர் கொடுத்த மாத்திரையை போடுங்க. இந்தாங்க. அமைதியா தூங்குங்க."

மாத்திரையை விழுங்கியவுடனே தூக்கம் வரவில்லை. கௌரி கேட்ட கேள்வி இன்னமும் காதில் எதிரொலித்தது. 'நானா இப்படி செய்தேன்? என் மனது மயங்கிய இசை துணையுடன் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் என்னால் எப்படி..?' 

ஒரு ரகசியத்தை இங்கே சொல்லிவிடுகிறேன். குழப்பத்தில் இருந்தாலும், எங்கோ, என் மனதின் எங்கோ ஒரு ஆழத்தில் ஏதோ ஒன்று சந்தோஷமாக இருந்தது. அது என்னவென்று சத்தியமாகப் புரியவில்லை. ஆனால் அதன் கொக்கரிக்கும் ஆர்ப்பாட்டத்தை என்னால் உணர முடிந்தது.

காலையில் வெளியே வந்து பார்க்கும்போது இரு காவல்காரர்கள் காம்பௌண்ட் வாயிலில் நாற்காலிகளை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். குடியிருப்பிலிருந்த யாரையையும் வேலைக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

பத்து மணி வாக்கில் போலீஸ்காரர் எங்கள் வீட்டு கதவைத் தட்டினார். கௌரிதான் கதவை திறந்தாள்.

"அம்மா, நாங்க ஸ்டேஷனுக்கு போறோம். இன்ஸ்பெக்டர் உங்க எல்லாரையும் 11 மணிக்கு அங்க வர சொன்னார். கண்டிப்பா வந்திடுங்க. உங்க புருஷனையும் வர சொல்லுங்க. அவர் வேற எங்கேயும் போகக் கூடாது."

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என் நெஞ்சுக்குள்ளே குலை நடுங்க ஆரம்பித்தது. கௌரியிடம், "என்னம்மா, என்னை கண்டிப்பா வர சொல்றாங்களே, ஏதாவது தெரிஞ்சிருக்குமா?" என்றேன்.

"நீங்க பயப்படாதீங்க. அவங்க இங்க இருக்குற எல்லாரையும் தானே விசாரிக்கணும். நம்பள மட்டுமா வர சொல்லுவாங்க? தேவையில்லாம நீங்களே கண்டுபிடிக்க வெச்சிடுவீங்க போலிருக்கு."

சிறிது நேரம் யோசித்தவள், "ம்...சரி. நானும் வெளியே போய் அக்கம்பக்கத்திலே விசாரிச்சுட்டு வர்றேன். நீங்க எங்கேயும் வர வேண்டாம். உங்க முகத்தைப் பாத்தாலே சந்தேகம் வந்திடும். பயமா இருந்தா...இந்தாங்க. இங்க தண்ணீ வெச்சுருக்கேன். குடிச்சுக்கோங்க."

சிறிது பயம் தணிந்தாலும், நான் எங்கேயும் போகவில்லை. பத்து, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்த கௌரியின் முகத்தில் கலக்கம் இருந்தது.

"என்னம்மா?"

"ஒண்ணுமில்லை. நீங்க கவலைப்படாதீங்க." என்று சொல்லி விட்டு சமையலறைக்கு சென்று வந்தவள் எனக்கொரு பழச் சாறு நிறைந்த கண்ணாடி குவளையைக் கொடுத்தாள். "குடிங்க. கொஞ்சம் தெம்பா இருப்பீங்க. நான் சமையலை முடிச்சுடுறேன். அப்புறமா கிளம்பலாம்."

அவள் என்னவோ சொல்லிவிட்டாலும் எனக்கு அடிவயிறு பயத்தில் குழம்பியது. அவள் கொடுத்ததை குடித்து விட்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடினேன். எண்ணங்கள் தெளிவில்லாமல் இருந்தாலும், பயம் சற்று கூட குறையவில்லை. எனக்கு ஏதாவது நடந்து விட்டால் என் குடும்பம் என்னவாகும் என்பது என் தலையை சுற்றியது. நான் அவ்வாறே கண்ணயர்ந்துவிட்டேன்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அன்பர்களே! இனிமேல் நான் சொல்வதெல்லாம், நான் கனவிலும் நினைத்துப் பாராத கொடுமைகளும், வேதனைகளும்! நடக்கப்போவதெல்லாம் கனவாக இருந்தால், என்னைவிட மகிழ்பவர், மன அமைதியடைபவர் யாராக இருக்க முடியும்?

சற்று அயர்ந்து தூங்கி விட்டாலும் மனது தெளிவாகவில்லை. கனவினுள்ளும் தலை சுற்றும் மயக்கம் இருந்தது. நான் என்னும் என் ஐம்புலன்களும் என்னை விட்டு விலகி கொஞ்சம் தூரத்திலிருந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தன. 

"ஐயோ...இப்படி பண்ணிட்டீங்களே.." காதைப் பிளக்கும் கூச்சல் என்னை திடிக்கிட்டு கண் விழிக்க செய்தது. யார் அலறினார், எதற்காக, என்பதை தெரிந்துகொள்ள எழும்போது என் தொடையில் கொஞ்சம் வலித்ததைப் போல் இருந்ததால், அங்கே பார்த்தேன். சின்னதாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அங்கு எப்படி ரத்தம் வர முடியும்? அப்போதுதான் முழு உணர்வும் வந்து சேர, என் வலது கையில் கத்தியை பிடித்திருப்பதைக் கண்டேன்!! சட்டென்று எழுந்ததால் கையிலிருந்த கத்தி என்னை அறியாமலேயே கீறியிருக்க வேண்டும்.

ஆனால் அந்த கத்தி என் உடலை ஆயிரம் முறை கீறியிருந்தால் கூட வந்திராத வலி என் முன்னால் இருந்த காட்சியால் வந்தது. உடல் நடுங்கத் தொடங்கிற்று. கழுத்திலிருந்து தலை கீழே விழுந்து விடும் அளவிற்கு ஆட்டம் கண்டது.

என் முன்னே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த சிறிய உடல் ஒரு குழந்தையுடையது என்பதையும், அந்த குழந்தை யாருடையது என்பதையும் புரிந்து கொள்ள எனக்கு ஒரு வினாடி கூடத் தேவைப்படவில்லை.

தலைவிரி கோலமாக இருந்த கௌரி என்னைப் பார்த்து, "அடப் பாவி மனுஷா...குழந்தையை எதுக்குய்யா கொன்ன? பைத்தியக்காரா! பெத்த குழந்தையையே கொன்னுட்டீயே! நான் என்ன பண்ணுவேன்..." கதறி கீழே விழுந்தவளை தூக்கி விட அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டனர்.

அதற்கு மேல் என் ஐம்புலங்களும் இயங்க மறுத்துவிட்டன. யார்யாரோ வந்தார்கள். என்னை திட்டித் தீர்த்தனர். காதில் எதுவும் கேட்கவில்லை. அடித்து துவைத்தனர். ஆனால் எங்கும் வலிக்கவில்லை. அடிவயிற்றில் ஓங்கி மிதித்தனர். என் உடல் அதை உணரவே மறுத்துவிட்டது. 

"எவ்ளோ அடிக்கிறோம்...வாயிலிருந்து சத்தம் வருதா பாருங்க. சைக்கோ கொலைகாரன். குழந்தையை கொன்னுருக்கான். பைத்தியக்காரப் பயல். அடிங்க சார் அவன,,," 

இழுபட்ட இடத்துக்கெல்லாம் என் உடல் அலைந்தது. எனக்கென்று ஒரு உறுப்பும் இயங்கவில்லை. அதற்கான கவலையும் வரவில்லை.

போலீஸ் ஸ்டேஷன் லாக்கப் சிமென்ட் தரையில் கிடந்திருந்த போதுதான் கொஞ்சம் நினைவு வந்தது. வெளியே யாரோ கத்திக்கொண்டிருந்தனர். அதில் ஒரு குரல் மட்டும் எனக்கு பரிச்சியமானது போலிருந்தது. எங்கோ கேட்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் குரல். அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"கொஞ்ச நாளாத்தான் அப்படி சொல்லினார், சார். ஏதோ சில சமயங்களில் பொண்ணுங்கள கொல்லனும்போல் இருக்குதுன்னு சொன்னார், சார். டாக்டர் கிட்ட கூட கூட்டிட்டு போனேன், சார். டாக்டர் நிறைய டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னார், சார். இவர்தான் அதெல்லாம் தேவையில்லேன்னு சொல்லிட்டார், சார்."

"ஏம்மா, டாக்டர் சொன்னதை கேட்டிருக்க வேணும்ல. இப்போ பாருங்க. இது எங்க கொண்டு போய் விட்டிருக்கு..."

எந்த டாக்டர்? யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்னையா? நான் வேணாம்னு சொன்னேனா? நான்தானா இல்லை அதுவா? அதன் பழி எதற்கு என்மேல் விழுகின்றன? எண்ணங்கள் வருகின்றன. எண்ணக் கலைவுகளும் வருகின்றன. ஆனால் காற்றில் பறக்கும் எண்ணங்கள் ஏன் கோர்வைகளாக மாற மறுக்கின்றன? ஒருவேளை இவைகளெல்லாம் என் எண்ணங்களே இல்லையோ?

இதையெல்லாம் என் மனது யோசித்துக்கொண்டிரும்போதே என்னைத் தூக்கி உட்கார வைத்தனர். வெளியே சத்தம் ஏதும் கேட்கவில்லை. 

இன்ஸ்பெக்டர் போலும். என்னைப் பார்த்து, "ஏண்டா குழந்தையை கொன்ன" என்று கேட்டார்.

"நான் கொல்லல சார்."

பளீரென்று கன்னத்தில் விழுந்த அறையால் கண்கள் சுழன்றன.   

"அத்தன பேர் சேந்து கையும் களவுமா புடிச்சிருக்காங்க...கொலை பண்ணலையா நீ?"

"சத்தியமா பண்ணல சார். நான் எப்படி பண்ணியிருக்க முடியும்? அது குழந்தை. அது மட்டுமில்லாம எனக்கு அந்த இசையின் தூண்டுதல் வரவேயில்லையே!"

"என்னடா உளறுர?"

"ஆமாம் சார். மத்த மூன்று  கொலைகளையும், இல்லல்ல...ஒரு கொலையும் இரண்டு கொலை முயற்சிகளையும் அந்த பாழாய்ப் போன ஒலியால தானே செஞ்சேன்! இப்ப மட்டும் எப்படி எந்த சத்தமும் கேட்காம நானா போய் பண்ணுவேன்? அதுவும் ஒரு குழந்தையை?"

நிசப்தம் நிலவியது. இருளில் இருந்ததால் அவர்களின் முகங்களை என்னால் பார்க்க முடியவில்லை. 

சில வினாடிகள் கழித்து பூட்ஸ் காலால் என் பாதத்தை யாரோ மிதித்தனர். வலி தாங்க முடியவில்லை.

"என்னடா சொல்ற? ஒரு கொலையும் இரண்டு கொலை முயற்சியுமா? எங்கள பாத்தா உனக்கு எப்படி இருக்கு?"

"ஆ...சத்தியமா சொல்றேன், சார். என்னை நம்புங்க." 

பூட்ஸ் காலின் அழுத்தம் அதிகமானது. எனக்கு மயக்கத்தினால் தலை சுற்றியது.

"சார், நான் உண்மையை தான் சொல்றேன். இதை ஏற்கனவே என் பொண்டாட்டி கிட்டேயும் சொல்லியிருக்குறேன். டாக்டர் பாக்க கூட போனோம்."

மறுபடியும் பளீர் என்று அடி கன்னத்தில் இறங்கியது.

"ஓரு குழந்தையை கொன்னிருக்க. இந்த லாக்கப்புலேயே உன்ன அடிச்சு கொல்லனும். ஏதோ உன் பொண்டாட்டி அழுது புலம்புறது பாத்து, பாவப்பட்டு, கேள்வி கேட்டா..?"

என் இதயம் உடைந்ததால் அந்த ரத்தம் எல்லாம் சேர்ந்து கண்ணீர் தாரையாய் விழியிலிருந்து கொட்டின.

"ஐயோ சார்...நான் அத செய்யல. மத்த கொலைகளை ஒத்துக்குற நான் இத மட்டும் ஏன் மறைக்கனும்? நான் அந்த அளவுக்கு என்னிக்கும் போக மாட்டேன்."

தரையில் விழுந்து புரண்டு, கண்களால் பார்க்க முடிந்தது, கைகளால் நிரவ முடிந்ததும், எங்கெங்கெல்லாம் பூட்ஸ் கால்கள் பட்டாலும் அவைகளை என் கைகளால் பிடித்து கெஞ்சினேன். ஒரு வேளை அவ்வாறு கொலை செய்திருப்பேனோ என்னும் எண்ணம் தோன்றி மறைந்ததும் மயங்கிவிட்டேன்.

கண் விழித்தால் என்னை அமர வைத்திருந்தனர். பகலா, இரவா என்று ஒன்றும் புரியவில்லை. உடலும், மனதும் சேர்ந்து வலித்தன. 

சிறிது நேரத்தில் ஒருவர் உள்ளே வந்தார். அவரின் முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர் ஒரு உயர் அதிகாரி என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் பேச ஆரம்பித்தார்.

"உங்கள ரொம்ப நேரம் விசாரிச்சும் ஒன்னும் உருப்படியா தெரிஞ்சுக்க முடியலன்னு இன்ஸ்பெக்டர் சொன்னார். நான் கேக்குற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் நல்லது."

"சொல்றேன் சார்."

"இந்த ரெண்டு கொலைகளையும் நீங்கதான் செஞ்சீங்களா?"

"சார், நான் நிறைய தடவை சொல்லிட்டேன். ஒரு கொலையை, மேனகாவை, நான் தான் கொன்னேன். குழந்தையை நான் கொல்லல."

"மேனகாவை எதுக்காக கொலை செஞ்சீங்க?"

"எனக்கு அவளைப் பார்த்தால் பிடிக்கவைல்லை. அது மட்டுமில்லம நான் சொன்ன மாதிரி அந்த இசை, பாட்டா அது..தெரியல...அது வந்து என் மனசை நிறைச்சு கொலை செய்யுன்னு சொல்லிச்சு. அதனால தான் நான் செஞ்சேன்."

அந்த போலீஸ்காரர்கள் தள்ளி சென்று நின்று ஏதோ பேசிக்கொண்டனர். 'ஜட்ஜ்...சொல்வார்' என்பது மட்டும் என் காதில் கேட்டது.

அவர்கள் சென்றுவிட்டனர்.  உடனே வேறு ஒருவர் வந்து என் முகத்தை ஏதோ துணியினால் மூடினார். என்னை வாகனத்தில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்றனர். எங்கே போகிறேன் என்பது எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கடைசியாக என்னை படுக்க வைத்தனர்.

என் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றியதும் நான் ஒரு மருத்துவமனை படுக்கையில் இருக்கிறேன் என்பது தெரிந்தது.

என் புறங்கையில் ஊசியை ஏற்றிவிட்டு பக்கத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் ஒரு பாட்டுலையும் தொங்க விட்டனர். அப்படியே படுத்துக் கிடந்தேன்.

என் மனது லேசானது போல் உணர்ந்தேன். அறைக்குள் இரு போலீஸ்காரர்களும், அப்போதுதான் கழுவப்பட்ட பிணத்தைப் போன்றிருந்த நர்சும், வயதான வெள்ளைக் கோட்டினை அணிந்திருந்த ஒரு மருத்துவரும் வந்தனர். ஒரு போலீஸ்காரர் தன் கையில் வைத்திருந்த அலைபேசியினால் என் உரையாடலை பதிவு செய்ய ஆரம்பித்தார். உரையாடல் எனக்கும் மருத்துவருக்கும் இடையே மட்டும் நடந்தது.

"உங்களால் பேச முடியுமா?"

"முடியும், டாக்டர்."

"என்ன நடந்தது என்பதை நீங்கள் சொல்லுங்க."

"நான் குழந்தையை கொல்லல, டாக்டர்."

"நீங்க முதலிலிருந்து சொல்லுங்க. நீங்க சொல்றத நான் நம்புறேன்."

"நான் சொல்றது எல்லாம் உண்மை"

"சரி."

நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்த கதையை அந்த டாக்டரிடம் சொன்னேன். எங்கோ கதை தொடர்ச்சியில்லாமல் போவதாக எனக்கு தோன்றியது. டாக்டர் நான் சொன்னதை நம்பினார்.

"சரி. நீங்கள் ஒரு பெண்ணை துரத்தியதாக சொன்னீர்களே, அது எந்த இடம்?"

"அதான் டாக்டர். நான் எப்பவுமே பஸ் ஏறும் அந்த ஸ்டாப்பிங்கிற்கு ஒட்டியிருக்கும் அழகிய சந்து."

"ம்...ஆனால் அப்படி ஒரு தெருவே இல்லையென்று சொல்கிறார்களே!"

"அதென்னவோ...எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது."

"அதே போன்று, நீங்கள் பேருந்திற்குள் ஒரு பெண்ணை கொல்ல நெருங்கியதாக சொன்னீர்களே. அப்படி எதுவும் நடக்கவில்லையென்று போலீஸ் சொல்கிறதே!"

"நான் பார்ப்பதையும் நம்புவதையும் அவர்களால் எப்படி பார்க்க முடியும், நம்ப முடியும்?" 

"சரியாக சொன்னீர்கள். ஏதோ இசையென்று சொல்கிறீர்களாமே. அதைப் பற்றி சொல்ல முடியுமா?"

"ஆஹா. அது ஒரு அழகிய இசை."

"அது உங்கள் காதுக்கு மட்டும் கேட்கின்றதா?"

"ஆமாம்.

"அதை சிறு வயதில் கேட்டிருக்கிறீர்களா?"

"இல்லை. முன்பு அதை நான் கேட்டதேயில்லை. ம்...டாக்டர், அப்படியென்றால் ...எனக்கு இப்போது சிறு வயதா? டாக்டர், தயவு செஞ்சு சொல்லுங்க. இப்போ எனக்கு என்ன வயசு?" 

"உங்கள் வயதைப் பற்றி பின்பு பேசுவோம். உங்களின் அந்த இசையை பற்றி மேலும் சொல்ல முடியுமா?"

"ஹா. அதை பேசிக்கொண்டேயிருக்கலாம். அதற்கு தொடக்கமுமில்லை, முடிவுமில்லை."

"அதை எதனுடனாவது ஒப்பிட முடியுமா?"

"ஏன் முடியாது? ம்ம்...பச்சைப் புழு போல் தவழ்ந்து, பின் உள்ளிருந்து வெடித்து, பல வண்ணங்களில், தனித்துவமான வண்ணங்களில் , சிறகை விரித்து கிளம்பும் வண்ணத்துப் பூச்சி அது. காற்றில் எழும்பி கிளம்பும் அதன் ஆனந்தத்தை, மன திருப்தியை வார்த்தைகளால் சொல்ல முடியுமா? புழுவிலிருந்தே கவனிக்க வேண்டும். ஆனால்...ஆனால்..."

என் உடல் முறுக்கேறியதை அவர் கவனித்திருக்க வேண்டும்.

"பொறுமையா இருங்க...பேசுவோம். உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்."

"குடும்பமா? எனக்கு ஒரு குடும்பமும் இல்லையே!"

கையை நீட்டி குறுக்கே பேச வந்த இன்ஸ்பெக்டரை டாக்டர் இடைமறித்தார். டாக்டரே தொடர்ந்தார்.

"உங்க உறவினர் யாருமே ஞாபகமில்லையா?"

யோசித்தேன். அப்படி யாரும் இருப்பதாக நினைவில்லை.

டாக்டர் தொடர்ந்தார்.

"கௌரி. இந்த பெயர் நினைவிருக்கிறதா?"

"கௌரி...கௌரி...எங்கோ கேட்டது மாதிரி இருக்கே!ஆங்..ஞாபகம் வருது. அவள எங்கேயோ பார்த்திருக்கேன். நல்ல அழகி. அமைதியான பொண்ணு. "

"அவங்கள கல்யாணம் செஞ்சுக்க உங்களுக்கு விருப்பம் இருக்கா?"

சிரித்தேன். "டாக்டர் அவளுக்கு என்ன பைத்தியமா? என்ன மாதிரி ஒரு ஓட்டாண்டிகிட்ட வாழ?"

"கௌரியைப் பத்தி வேற ஒன்னும் ஞாபகம் இல்லையா?"

"இல்லையே! ஒரு கல்யாணத்துல பாத்தேன். சாதாரண மஞ்சள் நிற புடவையில, நெத்தியில சிவப்பா ஒரு சின்ன குங்குமப் பொட்டு வெச்சுகிட்டு, குனிஞ்ச தலை நிமிராம இருந்தா பாருங்க. அடடா...அப்படி ஒரு பெண்ணை நான் என் வாழ்க்கையில பாத்ததேயில்ல. என்ன! எனக்கு பச்சை நிறம் பிடிக்கும், அவளுக்கு சிவப்பு பிடிக்கும் போலிருக்கு. அதுக்காகவே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் பொண்டாட்டிக்கு சிவப்பு நிறத்துல சேலை வாங்கிக் கொடுப்பேன். சிகப்பு சேலை என்ன விலையிருக்கும், டாக்டர்?"

"நான் விசாரிச்சு சொல்றேன். சரி. இப்போ நிறங்களைப் பற்றி பேசுவோம். உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும்?"

"பச்சை, டாக்டர். எங்கும் பசுமை." 

நான் கண்களை மூடி கனவினைப் போல் நினைத்துப் பார்த்து பேசினேன்.

"டாக்டர், எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் பச்சை புல்வெளியை பார்த்திருக்கீங்களா? அந்த புல்வெளியில் குப்புறப்படுத்துகிட்டு பாருங்க. அழகிய பெண்ணின் மெல்லிய பாதங்கள் புல்லின் மீது நடக்கும்போது, அந்த பெண்ணின் பாதம் சிவந்து, ஒரு குழந்தையின் பாதம் போல நம்மள கவர்ந்து இழுக்கும். புற்களைப் பாருங்க. ஒவ்வொரு முறை அந்தப் பெண்ணின் பாதம் பட்டு எழும்போதும் புற்கள் கெஞ்சும் பாருங்க! ஏன் என்னை விட்டு விலகிப் போகிறாய் என்று. பெண்ணே! என் மீதே நில். நீ எனக்கு சுமையல்ல. உன்னைத் தொட்டு உணரும் ஒவ்வொரு கணமும், உன் ஸ்பரிசத்தால் எனக்கு கிடைக்கும் இன்பம் உனக்கு புரியவில்லையா? விலகாதே பெண்ணே, என்னை விட்டு விலகாதே! கெஞ்சிக் கதறி சில புற்களோ அவளால் மிதிக்கப்பட்டு, மடங்கி, பின் வாழ் விருப்பமில்லாமல் அப்படியே காய்ந்து போகும்."

ஏனென்று தெரியவில்லை. என் உடலினுள் ரத்த ஓட்டம் அதிகரித்து, கைகளை இறுக்கி மூடினேன். நிமிர்ந்து அமர்ந்தேன்.

"டாக்டர், எந்த நிறத்தையும் நம்பிடாதீங்க. அதே பச்சை நிறத்திலிருக்கும் பள்ளத் தாக்குகளிலிருந்து, சிறிதாய் தொடங்கி, பின் வானம் முழுதும் வியாபிக்குமே அந்த இசை கொடுக்கும் உந்தல்களால நீங்களே உங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழிக்க நினைப்பீங்க பாருங்க... ஆ...கொன்றுவிடு என்று கட்டளையிடும் பாருங்க..."

டாக்டர் என்னை சாந்தப்படுத்தினார்.

"ஓகே. கடைசிக் கேள்வி: நீங்க அந்த இசையை எப்போது முதன்முதலாய்க கேட்டீங்க?"

"எப்போ? தெரியலையே! யோசிக்கிறேன். என்னிக்கு? ஒருவேளை...இல்லையே..ஆமாம். நினைவுக்கு வந்திடுச்சு டாக்டர். அன்னிக்கு...நான் கூட சீக்கிரம் கிளம்பினேனே. வீட்டிற்கு போகலாம்னு... மழை பெஞ்சுதே. ஆனா...வீட்டுக்கு வற்ரதுக்கு (இல்ல வந்துட்டேனா?) முன்னாடியே...டாக்டர்..." 

நான் கத்த ஆரம்பித்தேன். 

"கட்டிய சிவப்பு சேலைமீது நன்றியை மறந்து, அது தூக்கி கீழே கசக்கி எறியப்பட்டு.. அந்த துரோகத்தைப் பார்த்து, கத்தியால என் நெஞ்சு குத்தி கிழியப்பட்டு, என்னைப் பார்த்து பரிதாபப்பட்ட வானம் அதன் கண்ணீரை மழைத் துளிகளாய் இரத்தமாக பொழிய ...நான் பயந்து தெருவில் ஓடினேனே.. அன்னிக்குதான் என் காதுக்குள்ளே அந்த இசைக் கோர்வை பொங்கி வழிந்து, என் நெஞ்சமெல்லாம் நிரம்பி, கால்கள் நடுங்கி உட்கார்ந்து, என்னை நானே கொன்றேனே... 

நான் அழுதேன். "சொல்லுங்க நீங்களே! ஒரு புழுவை விடவா நான் மோசமானவன்?"

என் கையில் போடப்பட்டிருந்த ஊசியைப் பிடுங்கி எறிந்தேன். 'அடுத்த பெண்ணை கொல்லணும்' என்று  ஓலமிட்ட என்னை வேறு ஒரு ஊசியைப் போட்டு படுக்க வைத்தனர்.

மறுபடி நான் கண் விழித்தபோது, ஒரு படுக்கையில் படுத்திருந்தேன். எங்கே என்பது தெரியவில்லை. பக்கத்தில் வெண்ணிற உடை அணிந்த ஒரு பெண் நின்று கொண்டு எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். 

நாலு அடி அப்பால் நின்று கொண்டிருந்த யாரோ இருவர் அந்த அறையிலே இல்லாத யாரை பற்றியோ பேசிக் கொண்டிருந்தனர்.

"நல்லா விசாரிச்சுட்டோம் டாக்டர். மேனகா கொலை நடந்தபோது இவரு வீட்டிக்கு பக்கத்திலிருந்த பார்க்கில் இருந்திருக்கிறார். இவரை அங்கே பார்த்த நிறைய பேர் சொல்லிட்டாங்க. அதே மாதிரி மேனகாவின் சத்தம் கேட்டு ஓடிவந்தவங்க கொலை செஞ்சவன் பின்வழியா ஓடினதைப் பார்த்திருக்காங்க. உயரமா இருந்தானாம். அது நிச்சயமா இவரில்லை. குழந்தை  கொலை விஷயத்துல கத்தி இவர் கையிலிருந்ததே தவிர ஒரு துளி ரத்தம் கூட இவர் மேல இல்லை. அப்படி நடப்பது ரொம்ப கஷ்டம். ஏன்னா இவரு பொண்டாட்டி கத்துனதுல, அக்கம்பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து இவர புடிச்சுட்டாங்க. இவரு என்னடான்னா என்னென்னவோ பேசுறாரு. என்ன செய்யுறதுன்னு ஒன்னும் புரியல."

"Inspector, he had gone through a very severe traumatic incident.  அது இவர் மன நிலையை ரொம்ப பாதிச்சிருக்கு. மனச் சிதைவு ஏற்பட்டிருக்கு.  இன்னமும் சொல்லப் போனா இவர் இந்த மன சிதைவிலிருந்து வெளிய வர முடியுமாங்கறதே கொஞ்ச நாள் போனாத்தான் தெரியும். நான் இவர் மனைவி கிட்ட பேசனும். முடிஞ்சா இன்னிக்கே கூட்டிட்டு வாங்க. அவங்க கிட்ட பேசுனா இன்னும் clarity வரும். அதுவரைக்கும் இவர் ஓய்வாய் இருக்கட்டும்"

நான் யோசித்தேன்.

"யாரு இவங்க எல்லாம்? நான் ஏன் இங்க இருக்கேன்? இது என்ன, உடம்பு மட்டும் இருக்குற இடமா? அதுவும் சரி. நமக்கு இதை விட்டா போக வேற இடமிருக்கா என்ன?"

 

***********************************

இதே சமயத்தில் எங்கோ ஒரு காட்டு மலைப் பகுதியில் பேருந்து ஒன்று தள்ளாடிக் கொண்டே சென்றது. அந்தப் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அழகிய பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் துளி ஒன்று வழிந்தது. அதைக் கவனித்த அவன் அந்தப் பெண்ணின் இடது கையை அன்போடு பிடித்தான். அந்த பெண்ணின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. விரல்களால் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள், அதாவது கௌரி புன்முறுவலோடு ஆனந்தின் வலது தோளில் அன்புடன் சாய்ந்து கொண்டாள். 

*****************


நன்றியுடன்,

ரா. பாரத்ராம்.

07/07/2021


6 comments:

  1. கதையின் தாக்கத்திலிருந்து வெளிவரவே சில மணி நேரம் ஆகிறது. ஒன்றும் எழுத தோணவில்லை. என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. மனது கனமாக உள்ளது. இரவில் இந்த கதையை படிக்காதீங்க தூங்க முடியாது.

    ReplyDelete
  2. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. ஏதோ ஓரு வகையில் இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது படிக்கத் தூண்டியிருந்தாலோ, அதுவே எனக்கு திருப்தி. அடுத்து வரும் கதைகளையும் படித்து உங்களின் மேலான கருத்தை சொல்ல வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. Bharath,

    Please write something in English. It's been a long time since you wrote anything in English.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your suggestion. I wrote couple of stories in Tamil, language in which I'm comfortable to write stories. I'm trying to write a story in English next but I can't assure how good it will be.

      Delete
  4. Good language.. felt little dragging.. but it's needed for this narrative..overall good one. Good work..

    ReplyDelete