Sunday, May 3, 2020

அனாதையின் கரங்கள் - பாகம் 2

https://neerathi.blogspot.com/2020/05/1.html?m=1பாகம் 1


அன்று மாலையே தாத்தா பழையபடி உற்சாகமாக காணப்பட்டது பிள்ளைகளுக்கு பெரும் மன நிம்மதியாக இருந்தது. 

"கண்ணா, தாத்தாவ பாருடா."

கண்ணன் புன்னகை செய்தபடியே வேலை செய்து கொண்டிருந்தவரிடம் ஓடினான்.

"வாடா, என் செல்லமே! எங்க அந்த வாலு?"

வால் பின்னாலேயே வந்தது. "கொஞ்ச நேரம் இருங்கடா...ஓ..ஓ...பெரிய மனுஷனுங்கள வாடா, போடானு சொல்லலாமா? வாங்க சாருங்களா."

தாத்தாவை உற்சாகத்துடன் பார்த்தவுடனேயே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டது. இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

"இருங்கடா, என் தங்கங்களா...உங்களுக்கு இந்தக் கிழவன் என்ன கொண்டு வந்திருக்கான் பாருங்க."

பையிலிருந்து ஆளுக்கொரு கொய்யாப் பழத்தைக் கொடுத்தார். சிறு அணிற் குட்டிகளைப் போல் இருவரும் பழத்தைக் கொறித்தனர். சுவையோ சுவை. அது போன்ற கொய்யாப் பழத்தை கண்ணன் சாப்பிட்டதேயில்லை. 

கிழவர் சொன்னார். "நல்லா இருக்கா? இதுதாண்டா, உழைப்புக்கேற்ற பலன். நான் வெச்ச மரம், தினம் தினம் பாத்து பாத்து, என் பிள்ளைய போல வளர்த்தது. உங்களுக்கு இந்த தாத்தா சொல்ற ஒரே அறிவுரை என்ன தெரியுமா...உங்க உழைப்புக்கேற்ற பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அதனால, எதையும் நம்புறதுக்கு முன்னாடி உங்க உழைப்ப நம்புங்க. நல்லபடியா வருவீங்க. போங்கடா. போய் விளையாடுங்க."  

பள்ளிக்கு செல்லும் காலம் நெருங்கியது. தையற்காரர் அளவு எடுத்து விட்டு சென்றார். இரு நாட்களுக்குப் பிறகு புதுத் துணியும் வந்தாயிற்று. விடுதியிலிருந்து தினமும் வெளியே செல்லும் வாய்ப்பை எண்ணி கேசவனுக்கு ஒரே உற்சாகம். இன்னமும் பல நண்பர்களை சந்திக்கலாமே!

நல்ல நாளும் வந்தது. இரு குழந்தைகளும் புறப்பட்டன. துணைக்கு ஒரு ஆயா மட்டும் வந்தார். செய்ய வேண்டிய மற்ற 'சடங்குகள்', அதாவது விண்ணப்பம், தயாரிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், புகைப்படம் எல்லாம் முன்னமே கொடுத்தாகிவிட்டது. அப்பாவா, அம்மாவா? இதிலெல்லாம் குழப்பங்கள் வர! விடுதியில் கொடுப்பதுதான் விவரங்கள்.

நடந்து சென்றது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பள்ளியை நெருங்கும்போது கண்ணனுக்கு மனதில் என்னவென்று தெரியாத ஏதோ புது கலக்கம். பாதுகாப்பாக இருந்த இடத்தை விட்டு புது இடத்திற்கு செல்லும் பயம்.

பத்து அல்லது பதினைந்து நிமிட நடைதான். ஆயா சொன்னார். "அதோ பாருங்க. அதுதான் நீங்க படிக்கப்போற பள்ளி."

கண்ணன் பார்த்தான். கண்முன்னே ஒரு வறட்டுத் திடல் தெரிந்தது. ஆங்காங்கே சில மரங்களும் நடுநாயகமாக ஒரு குழாயும் காணப்பட்டது இதற்கு பின்னால், ஓடுகள் வேயப்பட்ட, மூன்று வீடுகளைப் போல் தெரிந்த, பழைய கட்டிடங்கள் இருந்தன. கட்டிடங்களின் சுவர்கள் இரண்டு அல்லது மூன்று அடிதான் இருக்கும். மற்றபடி திறந்த இடைவெளிதான். வெயில் உள்ளே விழாது என்றாலும் வெப்பமும், வறண்ட புழுதியும் தாராளமாக, இந்தப் பக்கம் நுழைந்து அடுத்த பக்கம் செல்லலாம். காற்றோட்டத்திற்காக விடப்பட்ட இடைவெளியா அல்லது செங்கல் வாங்க பணம் இல்லாத குறையால் விடப்பட்ட இடைவெளியா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

சுருங்கக் கூறின், மரத்தடி கற்றலிலிருந்து முன்னேற்றப்பட்ட அடுத்த படி. 

கிராமத்துப் பள்ளிக்கு இது போதாதா? அதுவும் கிராமத்துக் குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், கருணையுள்ளத்தால் நடத்தப்படும், பள்ளியில் வேறென்ன எதிபார்க்கிறீர்?

கண்ணனுக்கும், கேசவனுக்கும் இதில் எந்தக் குறையுமில்லை. அவர்களின் வாழ்க்கை முறைக்கு இதொன்றும் வினோதமில்லையே!

ஆயா ஒரு வகுப்பறைக்கு அழைத்துச் சென்று இவர்களை வெளியே நிற்க சொல்லிவிட்டு உள்ளே இருந்த ஆசிரியையிடம் பேசிவிட்டு திரும்பி வந்தார். 

"பசங்களா, டீச்சர் கிட்ட நான் எல்லாம் பேசிட்டேன். நல்ல பிள்ளைங்களா இருக்கணும், தெரியுதா! ஒழுங்கா படிக்கணும். அப்புறம்...அதோ அங்க பாருங்க. அந்த சின்ன கட்டிடம் தெரியுதா?"

தூரத்திலிருந்து பார்த்தால் பாம்பு புற்று போலிருந்தாலும், வெயிலுக்கு கண்ணை சற்று சுறுக்கிப் பார்த்தால் அது தெரிந்தது.

ஆயா சொன்னார். "மதிய மணி அடிச்சவுடனே எல்லாரும் அங்க போகணும். தட்டு எடுத்துக்கோங்க. சாப்பாடு போடுவாங்க. சாப்பிட்டிட்டு, தட்ட கழுவி வெச்சுடணும், தெரியுதா? டீச்சர் அப்புறம் ஐயாகிட்ட ஏதாவது சொல்லிட்டாங்கன்னா எங்களுக்கு திட்டு விழும்."

இதில் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பழக்கப்பட்டதுதானே!

"சாயங்காலம் நீங்களே வந்துடுவீங்கள்ள?"

கண்ணனும், கேசவனும் தலையாட்டினார்கள்.

ஆயா சென்று விட்டார். இரு குழந்தைகளும் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

கண்ணனின் பள்ளிப் பருவத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக (அல்லது சொல்ல முடியாத அளவிற்கு) ஒன்றும் நடந்துவிடவில்லை. நினைத்தது போலவே கேசவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டனர். நேரம் கிடைத்துவிட்டால் ஒரே ஓட்டமும், விளையாட்டும்தான். 

கண்ணன் பொதுவாக தனித்தே இருந்தான். ஆனால் மற்ற குழந்தைகள் அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. அவனின் அழகான, உள்ளுக்குள் சோகம் நிறைந்த புன்னகை அவனின் நல்ல குணத்தை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததால், அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதே போல், எவ்வளவு நண்பர்கள் இருந்தாலும் கேசவன் கண்ணன் மீது வைத்திருக்கும் நட்பு தனித்துவமானது. அந்த நட்பு எதன் அடிப்படையில் தோன்றியது என்பது விளங்கிவிட்டால், அந்நட்பு ஏன் தோற்காது என்பது புரிந்துவிடும்.

முதற் மதிப்பெண் எடுக்காவிட்டாலும், இரு குழந்தைகளும் படிக்க வேண்டியதை படித்துவிடுவர். கண்ணன் பொதுவாகவே பொறுப்பு குணமுடையவன். கேசவன் எவ்வளவுதான் விளையாட்டுச் சிறுவனாக இருந்தாலும் கண்ணனின் உதவியால் படித்து விடுவான்.

அதே நேரத்தில், உங்களிடம் நான் மறைக்க விரும்பினாலும், என் மனசாட்சி ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இன்னொரு காரணத்தையும் சொல்லிவிடுகிறேன்.

மதியம் பள்ளியில் வெந்து, கொதிக்கும் சாம்பார் சோறு, விடுதிக்கு சென்றால் அங்கும் உணவு - பள்ளியில், படிப்பில் சரியாக இல்லாவிடின் எங்கே இந்த உணவுக்கு கேடு வந்துவிடுமோ என்பது மற்றொரு முக்கிய காரணம்.

இதை நான் ஏன் மறைக்க விரும்பினேன் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். நீங்கள் என்னை தவறாக நினத்துவிடக்கூடாது அல்லவா!

இப்போதெல்லாம் பெரிய ஞானிகளும், விஞ்ஞானிகளும் மனதை அடக்க வேண்டும், தியானம் செய்ய வேண்டும், அப்படி செய்தால் நோய் வராது என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மைதான்! ஆனால் எந்த தியானத்திற்கும் அடங்காத உறுப்பு ஒன்று நம்மிடம் உள்ளது. ஐயகோ! அது குரலெழுப்பத் தொடங்கினாலோ மொத்த உடலும் கூட்டு சேர்ந்துவிடும். உங்களுக்கே புரிந்திருக்கும். அந்த உறுப்பு வயிறு, அதன் போராட்ட ஆயுதம் பசி. கொழுப்பை சேர்த்து வைத்திருக்கும் நமக்கே அப்படியென்றால், பாவம், சின்ன குழந்தைகள் அதற்கு பயப்படுவதில் தவறில்லையே. மூளைக்காகவில்லை, வயிற்றுக்காகத்தான் படித்தேன் என்று சொல்வதில் என்ன அவமானம் வந்து விடப்போகிறது?

ஒரே ஒரு நாள் மட்டும் கண்ணனின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகிவிட்டது. பள்ளியில் அன்று இன்ஸ்பெக்க்ஷன் என்றார்கள். ஏதோ ஒரு உயர் கல்வியதிகாரி பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு தரப்படும் பணத்திற்கு வேலை செய்கிறார்களா, அதே போல் வயிற்றுக்குப் போடப்படும் உணவிற்கேற்ப மாணவர்கள் படிக்கிறார்களா என்பதை சோதிப்பாராம். 

அப்போது கண்ணன் மூன்றோ அல்லது நான்கோ வகுப்பிலிருந்தான். உயர் அதிகாரி வருகையில் ஆசிரியையின் பதற்றத்தைப் பார்த்து கண்ணனுக்கு பயம் வந்துவிட்டது. ஆசிரியர்கள் ஒழுங்காக சொல்லிக் கொடுத்தால் ஏன் உயர் அதிகாரி வர வேண்டும் அல்லது உயர் அதிகாரி வருவார் என்று தெரிந்திருந்தும் ஆசிரியர்கள் ஏன் ஒழுங்காக பாடம் சொல்லித் தருவதில்லை என்று குழந்தைகளால் யோசிக்க முடியுமா?

கண்ணனுக்கு அன்று காலையிலிருந்தே பதட்டமாக இருந்தது. பள்ளிக்கு நடந்து போகும்போது கண்ணன்,

"கேசவா, எனக்கு இன்னிக்கு என்னமோ பயமா இருக்குடா?"

"எதுக்கு?"

"தெரியல...யாரோ ஆபிசர் வராராமே."

"நமக்கு என்ன? டீச்சரம்மா பயப்படுராங்க. அப்படியே நம்மள கேள்வி கேட்டு பதில் தெரியலன்னா, தெரியலன்னு சொல்லிவிடுவோம். ஆனா அப்படியெல்லாம் நடக்காது. நாமதான் படிச்சிருக்கோமே"

அவன் சொல்வது உண்மை. ஆனாலும் கண்ணனுக்கு அந்த நெருடல் நிற்கவில்லை.

பரபரப்பாக இருந்தாலும் மாணவர்கள் சாதாரணமாக இருந்தது கண்ணனுக்கு ஆறுதலை தந்தது.

கடைசியில் அந்த அதிகாரி கண்ணன் படிக்கும் வகுப்பறைக்கு வந்தார். வந்தவர் கண்ணனிடமா முதலில் வர வேண்டும்!

உயர் கல்வியதிகாரியென்பதால் அந்த கிராமத்திற்கு சற்றும் பொருந்தாத ஆங்கிலத்தில் ஒரு கேள்வியை கேட்டார்.

அவர் கேட்டதென்னமோ எளிய கேள்வியான "உன்னுடைய அப்பாவின், அம்மாவின் பெயரைக் கூறு" என்பதுதான்.

கண்ணனுக்கு அந்தக் கேள்வி நன்றாக புரிந்தது. ஆனால் பதிலை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பது தெரியவில்லை. நான் அனாதை என்றோ, எனக்கு அப்பா அம்மா இல்லை என்பதையோ ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என்பது அந்த சிறுவனுக்குத் தெரியவில்லை.

கண்ணன் வாழ்வின் கொடுமையைக் கற்பது அந்நொடியில்தான் தொடங்கியது. மற்றவர்களுக்கு மிகவும் எளிய பதில் இந்த குழந்தைக்கு புரியப் போவதேயில்லை என்பது அந்த அதிகாரிக்கு எப்படித் தெரியும்?

கண்ணன் விம்மத் தொடங்கினான். இந்த விம்மல் அவன் மனதிலிருந்தல்ல, அவன் உடலிலிருந்துமல்ல, அவனது வாழ்க்கையின் தொடக்கதிலிருந்து உருவானது. அந்த விம்மலையும், தொடர்ந்து வந்த கண்ணீர் துளிகளின் வேதனையும் நம்மால் உணர முடியாது. அந்த சிறுவனின் வேதனை நமது கண்களுக்கானதல்ல, அந்தக் கொடிய வேதனை இறைவனின் கண்களுக்கு.
  
அதிகாரி பயந்துவிட்டார். "ஒண்ணுமில்லப்பா, உன் அப்பா அம்மா பெரு சொல்லுன்னுதான் கேட்டேன்."

பின் வரிசையிலிருந்த ஒரு சிறுவன் எழுந்து சொன்னான். "ஐயா, அவன் அனாதை. விடுதியிலிருந்து வந்தவன். அவனுக்கு அப்பா அம்மாவெல்லாம் தெரியாது."

அந்த அதிகாரிக்கு என்ன சொல்வது, செய்வது ஒன்றுமே தெரியவில்லை. "ஆழாத, அழாதப்பா..நாம யாருமே அனாதையில்ல..." என்பது போன்ற அபத்தமான வார்த்தைகளை முணுமுணுத்துவிட்டு சென்று விட்டார்.

ஆசிரியர் கண்ணனை மரத்தடிக்கு போய் விளையாடி என்று சொல்லிவிட்டு கேசவனையும் கூட அனுப்பினார். இருவரும் வெளியே சென்று மரத்தடியில் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கேசவனுக்கும் அதே கேள்விக்கு என்ன பதிலிருக்கிறது?

மாலையில் திரும்பி வரும்போது கண்ணன், "கேசவா, தாத்தாகிட்ட போய் எல்லாத்தையும் சொல்லி அழணும் போல இருக்குடா."

"சே...வேண்டாம்டா. பாவம். தாத்தா ரொம்ப வருத்தப்படுவாரு. விட்டுத்தள்ளு. நாளைக்கு லீவுதானே. நல்லா விளையாடினா எல்லாம் சரியாயிடும்." 

கண்ணனுக்கு அந்த மோசமான நாள் இன்னமும் முடியவில்லை. விடுதிக்கு சென்று, கை, கால் கழுவிவிட்டு தாத்தாவை பார்க்க சென்றான். தாத்தாவை எங்கும் காணோம். கடைசியில் சமையல் செய்துகொண்டிருந்த ஆயாவிடம் சென்று, "ஆலு ஆயா, தாத்தா எங்க?" என்று கேட்டான்.

"அதை ஏன்பா கேக்குற. இன்னிக்கு ஒரே ரகள. அவரு மகனுங்க வந்து அவர இழுத்திட்டு போயிட்டாங்க."

அருகிலிருந்த இன்னொருவள் பேசினாள். "என்னமோ சொத்துக்கு இவரு கோர்ட்டுக்கு வரணுமாமே."

"அதுக்கு? அந்தக் கிழம் இவ்ளோ நாளா மாடு மாதிரி வேலை செஞ்சுக்கிட்டுருந்ததே...அப்போ எங்க போனாங்க இவனுங்க?"

அதற்கு மேல் கண்ணன் அங்கு நிற்கவில்லை. அவன் படுக்கும் இடத்திற்கு அருகிலிருந்த ஜன்னலிடம் வந்தான். வெளியே தாத்தா நட்டு வைத்த செடிகளும், அவர் பாசம் வைத்திருந்த மரங்களும் சோகமாக இருந்தன. தாத்தாவை இன்மேல் பார்க்க முடியாது என்பது அவனுக்கு சொல்லொண்ணா வருத்தத்தை தந்தது.
*****************************

சிறுவர்கள் வளர்ந்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இருவருக்கும் அவரவர் எந்தத் தொழிலைப் பயில வேண்டும் என்பதில் தெளிவு வந்துவிட்டது. 

கேசவன் தையற்காரனாக வேண்டுமென்பதை முடிவு செய்துவிட்டான். 
"கண்ணா, புது புது டிசைனா, தைக்கிறதுக்கு எனக்கு ஆசை. ஏதாவது ஒரு இடத்தில், ப்ளாட்ஃபார்மா இருந்தா கூட பரவாயில்ல. கொஞ்சம் சம்பாதிச்சிட்டு பெரிய கடைங்கள்ள கூட வேல கேக்கலாம். ஏன், இன்னும் பணம் வந்துதுன்னா நானே ஒரு சின்ன கடைய போட்டிடுவேன். இதுதான் எனக்கு ஆசை."

கண்ணன் யோசித்தான். அவனிடம் பாசம் வைத்திருந்த ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். "கண்ணா, நீ பொறுப்பானவனா இருக்க. பொறுமைசாலியாகவும் இருக்குற. எனக்கு ஒரு எலெக்ட்ரிகல் கடை முதலாளிய தெரியும். நல்ல மனுஷன். நான் சொல்றேன். உன்ன கடையில சேத்துப்பார்."

"கேசவா, பத்தாவது முடிச்சவுடனே எலெக்ட்ரிகல் டிப்ளோமா முடிச்சிட்டு, எலெக்ட்ரீஷியனா போக போறேன். உன்ன மாதிரிதான். எப்படியாவது முன்னேறி ஒரு கடைய வெச்சுட்டேன்னா, நம்மள மாதிரி பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து வேல கொடுக்கலாம்."

பள்ளிக்காலத்தில் இவர்கள் நினைத்ததை செய்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஏனென்றால் இவர்கள் வெறும் வார்த்தைகளை நம்புகிறவர்களல்ல. வாழ்க்கையின் கடின பாடமான உழைப்பை பயின்றவர்கள்.

பாகம் 3 

******************************************
நன்றியுடன்,
ரா.பாரத்ராம்
03/05/2020

6 comments:

  1. This is a nice and interesting story. Waiting to read 3rd part.

    ReplyDelete
  2. ஒரு அனாதைச் சிறுவனின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கையை நன்கு உணர முடிகிறது.வர்ணணைகள் மிகவும் நன்றாக உள்ளன.இறுதிப் பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. கண்ணீரை வரவழைக்கும் கதை. அற்புதமான வர்ணனைகள் . நல்ல சுபமான முடிவு. கண்ணன் வாழ்வில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete