Tuesday, August 18, 2015

கடற்கரை – அன்றும் இன்றும்



                                                              
கோடை விடுமுறையில் வெளியூருக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேர்ந்து விட்டதில் என் மனைவி பாரதிக்கு வருத்தம் கலந்த கோபம். நான் என்ன செய்வது? அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை; விடுமுறை கிடைத்தவுடன் ரெயிலில் டிக்கட் கிடைக்கவில்லை! எல்.கே.ஜி. அட்மிஷன் கிடைப்பது, மெடிக்கல் காலேஜ் சீட் கிடைப்பது – இவற்றைப்போல் ரெயில் டிக்கெட் கிடைப்பது அதிகக் கடினமாயிற்றே!

வெளியூர் என்று நாங்கள் போக விரும்பிய ஊரை வெளியூராகவும் கருதமுடியாது. நானும் என் மனைவியிம் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்பின் பார்த்திராத இருவரும் கல்லூரிப் படிப்பிற்காக சென்னைக்கு வந்து, எப்படியோ அறிமுகமாகி, ஒருவரை ஒருவர் விரும்பி, அவள் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்து, இப்போது என் வேலையினால் சென்னையிலேயே தங்கிவிட்டவர்கள்.

ஆகையினால் எங்களின் வருடாந்திர சுற்றுலா என்பது எங்களின் பூர்வீக ஊருக்குப் போவதுதான்! திருச்சிக்கு சென்றதும் நான் என் வீட்டிலேயும், பாரதி அவள் வீட்டிலேயும் தங்கி விடுவோம். குழந்தைகளோ - (வருணா 8 வயது, தருண் 4 வயது) – இருதரப்பு தாத்தா பாட்டிகளின் ஆசைக்கேற்ப கால்பந்தைப் போல் உதைபட்டுக்கொண்டிருப்பர்.

இந்த வருடம் கால்பந்தாட்டம் நடைபெறாமல் போனதில் பெரியோர்களுக்கு வருத்தம். எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியே! ஏதோ, எங்களின் பூர்வீகம் கொடைக்கானலாகவோ, ஊட்டி மலைக்கிராமங்களாகவோ இருந்திருந்தால் நன்றாகவிருக்கும். திருச்சி வெயிலில் வறுக்கப்படுவதற்கும், சென்னை புழுக்கத்தில் வதங்கப்படுவதற்குமிடையே என்ன பெரிய வித்தியாசம்?

சில நாட்கள் எப்படியோ ஓடிவிட்டாலும், கோடை விடுமுறைக்கு எங்கும் போகவில்லையா?’ என்கின்ற அக்கறை மிகுந்த அக்கம்பக்க விசாரிப்புகளால் மனமுடைந்த பாரதி என்னிடம் சண்டையிடலானாள்.

“என்னங்க? இப்படியே வீட்டுல கிடக்குறதுக்கா விடுமுறை கொடுத்தாங்க? என்னால வெளிய தலை காட்ட முடியல. அவமானமா இருக்கு. நாம எங்கேயாவது போயே ஆகணும்!”

“எங்க போவது? அதான் யோசிட்டுப் பாத்துட்டோம்ல. அது மட்டுமில்லாம, அடிக்கிற வெயிலுக்கு ஏசியில படுத்துக் கிடப்பது சுகமா இருக்கு.”

“அது சரி. உங்கள கேட்டா குட்டையில கிடக்கிற எருமை மாடு கூட சந்தோஷமா இருக்குன்னு சொல்லுவீங்க!”

“இல்லைன்னு சொல்றீயா? என் காலேஜ் காலத்துல, இதோ இங்கிருந்து கொஞ்ச தூரத்திலேயே பாசி பிடிச்ச குட்டை இருந்தது. வெயில் நேரத்துல எருமை மாடுகள் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்துக்கிட்டே போவேன். அதுவும் அதுங்க தலைய மட்டும் வெளியே நீட்டிக்கிட்டு, அப்படியே சொக்கிப் போய்....”

“ஐயோ நிறுத்துங்க. எருமை மாடு கதையைப் பேசிக்கிட்டு... விட்டா ஸ்கூல் டைம்ல பாத்த பன்றிகளைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவீங்க! எருமையும், பன்றியும் உங்க கண்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு நான் என்னிக்காவது தெரிஞ்சுருக்கேனா? (!!)”

இப்படித்தான், அவள் அறியாமல் சில சமயங்களில் பேசிவிடும் வார்த்தைகளைக் கேட்டுவிட்டால் சிரிப்பு பீரிட்டு வந்துவிடும். சிரித்துவிட்டாலோ கதை தீர்ந்தது. பத்து ஈசல் பூச்சிகளை உயிருடன் வாயினுள் அடக்கி வைத்துக்கொண்டு, ஒன்றுமே நடவாது இருப்பதைப் போல் நடிக்க வேண்டும்.

“சண்டை வேண்டாம். எங்கே போகலாம்னு நீயே சொல்லு.”

பாரதியின் முகத்தில் உற்சாகம் வந்துவிட்டது. “தூரமா போக முடியாது. ரெண்டு, மூணு நாளைக்குப் போற மாதிரி எங்கேயாவது போகலாமா?”

“இரண்டு நாட்களுக்கு எங்கே போவது? ம்... பேசாம, இங்கேயே ஏதாவதொரு தீம் பார்க்குக்கு போகலாமா?”

“தீம் பார்க்கா? ஐயாவுக்கு மனசுல என்ன நினைப்பு? அங்கே போனா ஆகுற செலவுக்கு வெளிநாட்டுக்கே போயிட்டு வந்துடலாம்.”

அவள் நகைச்சுவைக்கு சிரிப்பதுபோல் ஏதோ செய்தேன்.

“இல்லைன்னா, ரெண்டு நாளைக்கு சினிமா, வெளியில சாப்பாடு... மறுபடியும் சினிமா... இப்படியே பொழுதைக் கழிப்போமா?”

“பணத்தை வீணடிக்காம நல்ல யோசனையா சொல்ல மாட்டீங்களா?”

எங்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் தருண் குறுக்கிட்டான்.

“அப்பா, பீச்சுக்குப் போகலாம்.”

எனக்குப் பிடித்திருந்தது. ”சூப்பர். இது நல்ல யோசனை. எல்லோரும் கிளம்பி பீச்சுக்குப் போகலாம்.”

மனைவியிடமிருந்து நான் எதிர்பார்த்த எதிர்ப்பு வராமலிருந்தது ஆச்சரியமாகவிருந்தது.

“ஆமாம். பீச்சுக்காவது போகலாம். அதுமட்டுமில்லாம...” அவளின் பார்வையை மெல்லிய அன்புடன் என்மேல் பரவவிட்டு, குழந்தைகளுக்குக் கேட்காத தணிந்த குரலில், “அந்தக் காலத்துல நீங்க என் கிட்ட பேசின அன்பான காதல் வார்த்தைகளை மறுபடியும் கேட்கணும் போலிருக்கு!”

என் நுண்ணறிவு அப்போதே எச்சரித்திருக்கவேண்டும். அதுவும் பழங்கால காதல் நாட்களில் மூழ்கிவிட்டது போலும்; அபாய மணியை அடிக்கத் தவறிவிட்டது.

பிள்ளைகளைத் தயார் செய்து, மின்விளக்குகளும் மின்விசிறிகளும் அணைக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்து, சமையல் எரிவாயு வால்வை மூடிவிட்டோமா என களேபரம் செய்து... ஒருவழியாக வீட்டின் கதவைப் பூட்டினேன். பூட்டை மூன்று முறை இழுத்துப் பார்த்தேன். அப்போதிலிருந்தே தொடங்கியது வினை;

“போதும், எவ்வளவு தடவை இழுத்துப் பாப்பீங்க?”

இரும்மா, நல்லா பாத்துக்குறேன்.விலையுயர்ந்த பூட்டு. 1500 ரூபாய் இருக்கும்.”

“அதுவும் சரிதான்... உள்ளே இருக்குற பொருட்களை விட இந்தப் பூட்டுதான் விலை ஜாஸ்தின்னு நினைக்குறேன். இன்னும் பத்து முறை இழுத்துப் பாருங்க...”

சரி, சரி வா...” எனக் கூறிக்கொண்டே அவர்களை அழைத்துச் சென்றேன். நான்கு பேர் என்பதால் மோட்டார் சைக்கிள் எடுக்க முடியாது. பீச்சுக்குப் போக இரு பேருந்துகள் மாறவேண்டும். குஷியில் குழந்தைகள் மறுப்பு ஏதும் சொல்லவில்லை.

கடற்கரையை அடந்தோம். மாலை நேரத்துக் கதிரவன் ஒளிக்கதிர்களால் அப்பிரம்மாண்டமான பிரதேசத்தை பிரகாசிக்கச் செய்தான். கடற் காற்று தழுவியதால் வெப்பம் கடுமையாகத் தோன்றவில்லை.

கடலுக்கு அருகில் செல்லாமல், மணலிலே உட்கார்ந்துகொண்டோம். குழந்தைகளை விளையாடச் சொல்லிவிட்டு, அன்பு ததும்பும் பார்வையுடன் என்னை கவனித்துக்கொண்டிருந்தாள் என் மனைவி.

“என்னம்மா? பார்வையெல்லாம் பலமாயிருக்கு?”

“சும்மாதான்... அந்தக் காலத்தை நினைச்சுப் பார்த்தேன். நாம காதலிக்கும்போது அடிக்கடி கடற்கரைக்கு வருவோமில்ல?”

“ஆமாம். கழுத கெட்டா குட்டிச்சுவரு. நாம வேற எங்க போகமுடியும்?”

முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, கண்களை அகல விரித்தபடியே கேட்டாள்.

“அப்போதெல்லாம் என்கிட்ட எவ்வளவு அன்பா பேசுவீங்க! என்னைப் பத்தி கவிதையெல்லாம் எழுதுனீங்க. ஞாபகமிருக்கா?”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “சீ... அதையெல்லாம் ஞாபகப்படுத்தாதே! உன்னை வெச்சு கவிதை எழுதுனதை நினைச்சா வெக்கமா இருக்கு!”

“அப்படின்னா? என்னைப் பத்தி கவிதை எழுதுனது உங்களுக்கு வெக்கக்கேடா?”

“சே, சே... அப்படியில்லை. என்ன சொல்ல வரேன்னா... ஹேய், அங்கே பையனைப் பாரு.”

“மழுப்புற வேலையே வேணாம். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.”

கிடைத்த இடைவெளியில் பதிலைப் பிடித்துவிட்டேன்.

“என் கவிதைகளை நினைச்சா வெக்கமா இருக்குன்னு சொன்னேன். ஒரு நல்ல கவிஞன் உன்னைப் பாத்திருந்தான்னா, அற்புதமான கவிதைகள் தமிழுக்குக் கிடைச்சிருக்கும்.”

ம்கூம்... சமாளிக்காதீங்க. எங்க, இப்ப என்னைப் பத்தி ஒரு கவிதை சொல்லுங்க.”

என்னம்மா, கல்யாணம் நடந்து இவ்வளவு வருஷமாச்சு. இப்ப போய் கவிதை சொல்லுன்னா...”

சிவக்கத் தொடங்கிய அவள் முகத்தைப் பார்த்ததும்,

“இரு... இரு... யோசிக்கிறேன்...ம்...”

அவளை உற்றுப் பார்த்தேன். கடற்காற்றில் கலைந்த முடிகளை ஒரு கையால் ஒதுக்கி சரி செய்தவள், அழகாகத்தான் இருந்தாள்.

“தோணிடுச்சு... இதோ”

       இதயத்தின் இனிய இசையே
   
        காற்றில் அலையும்
   
        உன் முடிகளின்
   
        அசைவும்
   
        ஏழு ஸ்வரங்களில்தான் இசைக்கின்றன!


“எப்படியிருக்கு?”

வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டவள், கைவிரலால் மணலைக் கிளறி, சிறு கல்லை எடுத்து என் மீது செல்லமாக வீசினாள்.

“நல்லாயிருக்கு” என்று மட்டும் சொன்னாள்.

அப்பாடா, தப்பித்தேன்.

மாலை நேரச் சூரியன் பாரதியின் பொன்னிறத்தை மேலும் மிளிரச் செய்தான்.

“அப்போதெல்லாம் என் பின்னாடியே அலைவீங்க, ஞாபகமிருக்கா? ஒரே ஒரு பார்வைக்காகக் காத்துக் கிடப்பீங்களே! ஒரு நாள் உங்களைப் பாத்து சிரிச்சுட்டேன்னதுக்காகவே என்ன ஆட்டம் போட்டீங்க! எல்லாம் சரின்னு சொல்ற வரைக்கும்தான். அப்புறம் ஐயாவுக்காக நான்தான் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.”

“பாரதி, சும்மா சொல்லாதே. என்னிக்காவது ஒரு நாள் நான் லேட்டா வந்திருப்பேனா?”

கடலின் திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள். நான் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.
“எவ்வளவு காலம் ஓடிப்போச்சு. உங்கள நம்பி, காதலிச்சு, அலஞ்சு திரிஞ்சு, வீட்டில சண்டை போட்டு, கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சு... கனவு மாதிரி இருக்கு.”

“நீ சொல்றதும் சரிதான். கல்யாணத்துக்குத்தான் கஷ்டப்பட்டுட்டோம். அதுவும் உங்கப்பாவை சம்மதிக்க வெக்குறதுக்குள்ள போதும்னு ஆயிடுச்சு.”

“என் அப்பாவைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க. உங்க வேலை அப்போ சரியில்லை. அதனாலதான் வேணாம்னு சொன்னாரு.”

“ஏம்மா? இப்பவும் நான் அதே வேலையிலதானே இருக்கேன்!”

“வந்து... நான் கஷ்டப்பட்டு எங்கப்பாவை சம்மதிக்க வெச்சேன். என் கல்யாணத்துக்கு என்னென்னவோ திட்டமெல்லாம் வெச்சிருந்தாரு.”

விரல்களால் மணலைக் கோலமிட்டாள்.

“உங்களத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னப்ப ரொம்பவே ஆடிப் போயிட்டார். சம்மதம் வாங்குறதுக்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். ஆனா, கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பிறகு அவர்தானே எல்லா வேலையையும் செஞ்சாரு. உங்க வீட்டிலே என்ன வேலை செஞ்சாங்க?”

“அதுவும் சரிதான். நிறைய வேலை பார்த்தார்.”

அவளுக்கு உற்சாகம் திடீரென்று பீரிட்டுக் கொண்டு வந்துவிட்டது.

“என்னங்க, என் அப்பாவுக்கு பரிசா ஏதாவது செய்யணுங்க.”

“செய்யலாம், செய்யலாம்.”

“சுரத்தே இல்லாம பேசறீங்க? கண்டிப்பா ஏதாவது செஞ்சே ஆகணும். என்ன செய்யலாம், சொல்லுங்க?”

“என்ன செய்யலாம்? பேசாம அவருக்கு ஒரு... ஓங்கி மண்டையில ஒரு கொட்டு வைக்கறேன், பாரு!”

அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றவள், “என்ன சொன்னீங்க?”

“பின்னே பாரு அந்த மடையனை... டேய், ஏண்டா அக்கா மேல கல்லை தூக்கி எறிஞ்சே?”

“அக்காதாம்பா முதல்ல மண்ணை வீசுச்சு...”

வருணா அவள் தரப்பு நியாயத்தை சொன்னாள். “ஏம்பா, அம்மா மட்டும் உன் மேல கல்லை தூக்கி போடல?”

“கடவுளே, இரண்டு பேரும் வாங்க இங்க...”

“மாட்டோம். நீங்க கூட்டிட்டு வர்றதே என்னிக்கோ ஒரு தடவை. விளையாடிட்டுத்தான் வருவோம்.”

இரைய முயன்ற என்னை பாரதி தடுத்தாள். “விளையாடட்டும் விடுங்க. நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருப்போம்.”

“இன்னும் என்னம்மா இருக்கு பேச?”
பெண்களுக்கே உரித்தான, மூக்கை விடைத்துக்கொண்டு நோக்கும் பார்வையுடன், பொய்க் கோபத்தில் சிணுங்கினாள். “அப்போல்லாம் போகணும்னு சொன்னா, கையைப் பிடிச்சி, இழுத்து வெச்சி, கெஞ்சாத குறையா பேசுவீங்க. இப்போ என்ன?”

கொஞ்சிப் பேசித்தான் வழிக்கு கொண்டு வரவேண்டுமென்பது தெளிவானதால் நான், “என் கண்ணே, காதலிக்கும்பொழுது விட்டுப் பிரிவதற்கு யாருக்குதான் மனசு வரும்? நீ கிளம்பிப் போயிட்டபிறகு நான் என்ன சுவரு கிட்டயா பேச முடியும்? இப்போதான் நமக்கு கல்யாணமாயிடுச்சே! நான் எப்போ வேணுமின்னாலும் சுவர் கிட்ட பேச முடியும்! சீ... உளறுகிறேன் பாரு. நீ இப்போ என்கூடவே இருக்குறதுனால நான் எப்போ வேணும்னாலும் பேசலாம்; அதாவது நீ பேசிக்கிட்டிருக்காத நேரத்தில.... என்ன சொல்ல வர்றன்னா... சுண்டல் சாப்பிடுவோமா?”

என்னை கூர்ந்த பார்வையால் மேய்ந்தாள். “சரி”

தூரத்தில் சென்று கொண்டிருந்த சுண்டல் விற்கும் பையனை கைதட்டி அழைத்தேன். “சுண்டல், இங்க வா...”

எங்கள் குழந்தைகளும் ஓடிவந்துவிட்டனர்.

“அப்பா, எனக்கு முறுக்கு வேணும்.”

“முறுக்கெல்லாம் வேணாம்டா. எண்ணெய் பலகாரம்.”

மகன் அடம் பிடித்தான். “இல்ல, முறுக்குதான் வேணும். பாட்டி அனுப்பிச்ச முறுக்கெல்லாம் கடிக்கவே முடியலே.”

சுண்டல் பையன் குறுக்கிட்டான். “சார், எங்க முறுக்கு அப்படியிருக்காது. சும்மா, வெண்ணெய் மாதிரி கரையும். பக்குவமா சுட்ட முறுக்கு, சார்.”

என் இதயத் துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. பின்னே! பாட்டி என்று தருண் குறிப்பிட்டது என் மாமியாரை! பாரதியைப் பொருத்தமட்டில் அவள் அம்மாவின் சமையல் திருச்சியிலேயே பெயர் பெற்றது. அதனால்தானோ என்னவோ, திண்பண்டங்கள் திருச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிக்கடி சென்னைக்கு அனுப்பப்பட்டுவிடும்.

தலையைத் திருப்பி பாரதியைப் பார்க்க எனக்கு சற்றும் துணிவில்லை. சமாளித்தேன். “சரி, சரி. ரொம்ப பேசாதே. இரண்டு முறுக்கும், நாலு சுண்டலும் கொடு.”

பணத்தைக் கொடுத்துவிட்டு, ஒன்றுமே தெரியாதவன் போல் பாரதியைப் பார்த்து புன்னகைத்து சுண்டல் பொட்டலத்தை நீட்டினேன். என் கண்களைப் பார்த்துக்கொண்டே அவள், “ஏன்? நீங்க முறுக்கு வாங்கிக்கல?”

நானா வலையில் வீழ்வேன்!

“இதெல்லாம் சாப்பிட்டா வயிறு என்ன ஆகுறது? வீட்டுக்குப் போய் சாப்பிடுவேன். இந்தா சுண்டல்... எடுத்துக்க.”

இன்பச்சுற்றுலா அவளுக்கு அலுப்பையும், எரிச்சலையும் தரத் தொடங்கிவிட்டதை உணர்ந்தேன்.

“ம்... இப்பவும் சுண்டல்தானா? காதலிச்ச காலத்தில இருந்து இப்போ வரை நீங்க மாறவில்லை.”

“காதலுக்கு அழகே கடற்கரையும், சுண்டலுந்தாம்மா. இந்தக் காலத்துலேயும் பாரு. காஃபி ஷாப்புக்கும், ஷாப்பிங் மாலுக்குமா அலையுறாங்க. அங்கே என்ன இருக்கு? வெறும் தண்டச் செலவுதானே! அதுலேயா அன்பு வளரும்? முகத்தைப் பார்த்து பேசறது கூடக் கிடையாது. நல்ல வேளை. நாமெல்லாம் அப்போவே காதலிச்சுட்டோம்! நம்ம மொத்தக் காதல் செலவும் இன்னைக்கு ஒருமுறை காஃபி ஷாப்புக்கு போகுறதை விட குறைவாத்தான் இருக்கும்.”

நடக்காத ஒன்றை, அது நடந்தால் எப்படியிருக்கும் என்கின்ற கற்பனை ஆராய்ச்சியில் இறங்கி, அவ்வாராய்ச்சி முடிவுகளை வைத்து குத்துச் சண்டை போடுவதில் என் மனைவிக்கு நிகர் அவள்தான்!

“ஓஹோ, அப்படின்னா இந்தக் காலத்துல நாம காதலிச்சிருந்தா, நீங்க என்னை எங்க கூட்டிட்டுப் போயிருப்பீங்க?”

“ஏன்? இதே பீச்சுக்குதான்.”

“அப்புறமென்ன அந்தக் காலத்துலேயே லவ் பண்ணிட்டோம்னு ஒரு பெருமை?”

மூக்கில் விழுந்த இந்த நேர் குத்தில் நான் நிலை குலைந்துவிட்டேன். சீக்கிரமாக இடத்தைக் காலி செய்யவேண்டும். இல்லையெனில் தேர்ந்த குத்துச் சண்டை வீரனின் இடது, வலது குத்துக்களைப் போன்று, காலச்சக்கிரம் முன்னும், பின்னும் சுழன்று என்னை நாக் அவுட் செய்துவிடும்!

“நேரமாகுதம்மா.... குளிருது பார்”, கால்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியபடியே எழுந்தேன். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கூப்பிட்டேன்.

“வாடா போகலாம். ரொம்ப நேரமாச்சு.”

“அப்பா, எனக்கு அந்தக் காத்தாடி வேணும்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். காத்தாடி பீச்சுக் காத்துலதான் பறக்கும். வீட்டுல எல்லாம் பறக்காது.”

உதடுகளைச் சுழித்தபடியே அழுவதற்கு மகன் தயாரானான்.

“அழாதேடா. சாப்பிட ஏதாவது வாங்கித் தரேன்.”

“எனக்கு மக்காச்சோளம் வேணும்.”

“வாங்கித் தரேன், வா. போவோமா?”

காற்றில் படபடத்த புடவைத் தலைப்பை ஒரு கையால் பற்றி, இரு கைகளையும் சேர்த்துக்கட்டி என்னை முறைத்தாள். “அப்போ? அவ்வளவுதானா உங்க சுற்றுலா’? ஒரு சுண்டலும், மக்காச்சோளமும்?”

எனக்கு விளங்கவில்லை. “வேறென்னம்மா எதிர்பார்த்தே?”

“ஆமாம். எதிர்பார்த்ததுதான் தப்பு. இத்தனை நாள் கழிச்சு, நாம பழகின, தினமும் சந்திச்சிக்கிட்டிருந்த இடத்துக்கு வந்திருக்கோம். அன்பா, முன்ன மாதிரி, நாலு வார்த்தைகள் பேசுவீங்கன்னு நினைச்சது தப்புதான்!”

வாக்கியத்தின் அர்த்தம் பிடிபடாமல் குழந்தைகள் நின்றிருந்தனர். சற்று தூரத்தில் தெரிந்த சோளக்கடைக்கு இருவரையும் துரத்தினேன். பின்னாலேயே நானும் பாரதியும் மெதுவாக நடந்தோம்.

“பாரதி, ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கோம். கூட குழந்தைங்க வேற.... அதனாலதான்! அடுத்த முறை வரும்போது பாரு என் திறமையை! முழுநேரமும் காதல் வசனம்தான். எனக்கா வரலேன்னா கூட ஏதாவது புத்தகத்தைப் படிச்சாவது மனப்பாடம் செஞ்சுட்டு வர்றேன்.”

நல்லவேளையாக என் வீர முழக்கத்தின் கடைசி வரியை அவள் கவனிக்கத் தவறிவிட்டாள்.

“சீக்கிரம் வாங்க... அதுங்களை கடைக்காரன் ஏமாத்திவிடப் போறான். நமக்குன்னு புதுசா சுட்டு வாங்கணும்.”

கடையை அடைந்தோம். பாரதி, “இந்தாப்பா, புதுசா சுட்டுக் கொடு... தீஞ்சுப் போகக் கூடாது... பசங்களுக்கு மசாலா போடாதே...”

அவளை மகிழ்விக்கவேண்டுமென்று பாராட்டுதல்களைத் தெளித்தேன். “வாவ்... உனக்கு எல்லாம் தெரியுதே!”

சோளத்தைப் பார்த்துக்கொண்டே, பெருமையுடன் சொல்லிக்கொண்டாள். “ஆமாம், என் அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க!”

“அவங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இதென்ன கேள்வி? அவங்கள ஏமாத்தவே முடியாது. அவங்க வாங்கும்போது கரெக்டா சொல்லி வாங்குவாங்க...”

“வாங்கும்போதா? எங்க திருச்சி பீச்சுலயா?”

குளிர்ந்த கடற்காற்று மூளையை மழுங்கச் செய்துவிட்டது போலும்! பெரிய தவறை செய்துவிட்டேன். சற்றே பயத்துடன் பாரதியை ஏறிட்டுப் பார்த்தேன். சோளம் சுடும் இடத்திலிருந்து வரும் தீக்கதிர்களுக்கும், அவள் பார்வையின் பொறிகளுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. மருண்டு விட்டேன்.

“ஹி.. ஹி.. சும்மா கிண்டலுக்கு..”

இந்தப் பேச்செல்லாம் அவள் காதுகளில் விழவேயில்லை. மகனை இழுத்துக்கொண்டு போனாள். “கூட்டிட்டு வந்துட்டார், பெரிய வெளிநாட்டு டூர்! ஒரு சுண்டலுக்கும், சோளத்துக்கும் வாயப் பொளந்து கிட்டா இங்க வந்தேன்... வாடா போகலாம்...”

கடைக்காரப் பையன் இந்தக் களேபரத்தை பார்த்துவிட்டு கேட்டான். “ஏன் சார் அம்மா கோவிச்சுக்கிட்டுப் போறாங்க? எந்த பீச்சுலேயும் எங்க கடை மாதிரி வராது.”

“திருச்சி பீச்சை விடவா?, என்று அப்பாவியாக என் மகள் வினவினாள்.

“திருச்சியா? அங்க எப்போ சார் பீச் போட்டாங்க?”

என்னால் முடியவில்லை. பணத்தைக் கொடுத்துவிட்டு, மகளைத் தூக்கிக் கொண்டு கோபத்துடன் நடந்து கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்றேன். (ஓடினேன்). சாலையை அடைந்து அவள் நிற்பதற்கும், நான் அவள் அருகில் போவதற்கும் சரியாகவிருந்தது.

வாயைத் திறக்கவே துணிவில்லாமல் நின்றவன், சில நொடித்துளிகள் கழிந்தவுடன், “ஆட்டோவில் போகலாமா?” என்றேன். குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க, “சரி, சரி” என்று சொன்னார்கள்.

“ஆட்டோ”, எனக் கூப்பிட்டேன். வந்து நின்ற ஆட்டோ ஓட்டுனர் ஞாயமான தொகையைவிட ஐம்பது ரூபாய் அதிகம் கேட்டாலும், பேரம் பேசும் மனநிலையில் யாருமே அங்கு இல்லாததால், மறுபேச்சு இன்றி ஏறி உட்கார்ந்தோம்.

சென்னை நகரின் வாகன நெரிசல்களையும், கடைமுகப்புகளின் அலங்கார விளக்குகளையும் பார்த்துக்கொண்டே சென்றபோது, வண்ணங்களின் மாறுதல்களுக்கேற்ப, மனதில் எண்ணங்கள் ஓடின. ஒரே இடத்திற்கு வெவ்வேறு காலகட்டங்களில் செல்லும்பொழுது எவ்வளவு வித்தியாசங்களை உணர முடிகிறது. காலம் வெறுமனே கடந்து போவதில்லை. சில நினைவுகளை மறந்தும், சில நினைவுகளை அழியாமல் வைத்தும் செல்கிறது. இனிமையான நினைவுகள் நிலைத்து நிற்பதில் என்ன தவறு? பாரதியைக் குறை சொல்ல முடியாது. அந்த பசும் காதல் நினைவுகள் என்றென்றும் அவள் மனதில் நிலைபெற்றுவிட்டன. அவளைப் பொறுத்தவரையில் அந்த நினைவுகளுக்கு வயதாவதில்லை. அந்த நினைவுகளை இளமையாக வைத்திருப்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். ஆமாம், காதல் காலத்திற்கு அப்பாற்பட்டது.

ஆனாலும் ஏன் மனதில் ஏதோ நிரடிற்று. இவ்வளவு தெளிவுடனும், ஆக்க பூர்வமான முடிவுகளுடனும் என்னுடைய நாட்கள் நிறைவு பெறுவதில்லை. இருந்தாலும் என் மனவோட்டம் நிற்கவில்லை.

என் மனது திறந்து வைத்த ஜன்னல் போலும்! உள்ளே நுழைந்த எண்ணங்கள் அங்கேயே தங்காமல் மற்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதற்காக வெளியேறிவிட்டன. ஆனால் பாரதியின் மனதிலோ, முன்பின் அறியாத ஒருவனிடம் அன்பு செலுத்தி, எதிர்காலத்தையே அவனிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வாய்ந்த, அந்த அருமையான எண்ணங்கள் உள்ளேயே தங்கி பூட்டிவிடப்பட்டன!

பூட்டு...! சற்றே தயக்கத்துடன் கால்சட்டைப் பையைத் தடவினேன். வீட்டு சாவியைக் காணவில்லை!!

ஐயோ! எங்கே விழுந்திருக்கும்? மணலில் உட்காரும்போதா? எழுந்த போதா? சுண்டலுக்குப் பணம் கொடுத்த போதா? அல்லது சோளக் கடையில் இளித்துக் கொண்டிருந்த போதா?

இதயத் துடிப்பு எகிறி, சென்னை மாநகரின் மிக உயரிய இடத்தில் ஏறி நின்று கொண்டிருந்தது. ஏதோ... காஃபி ஷாப்பிலும், ஷாப்பிங் மாலிலும் செலவு செய்து விட்டு, அதன்பின் பூட்டை உடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாலும் பரவாயில்லை. வெறும் சுண்டலையும், மக்காச் சோளத்தை கண்ணில் காட்டியும், அதை விட மோசமாக - பசுமையான ஞாபகங்களை சிதைத்து விட்டு, ஆயிரத்து ஐநூறு ரூபாய் பூட்டை உடைக்க வேண்டும் என்கின்ற உண்மையை சொல்லப்போனால்? என்ன நடக்கப்போகின்றதோ!

வீட்டை அடைவதற்கு எவ்வளவு தாமதமாகின்றதோ அவ்வளவு நல்லது என வேண்டிக்கொண்டேன்.




**********************************************************************
ரா. பாரத்ராம்.

5 comments:

  1. Very nice Bharath. Brought out the problems faced by a middle class family man very realistically. Enjoyed reading it.

    ReplyDelete
  2. நகைச்சுவை கதையாக வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் முக்கியமான வாழ்க்கை உளவியலை கூறுகிறது. இயல்பான கதை ஓட்டம். மிக அருமை.

    ReplyDelete