இன்று வெயில்
அதிகமாக இல்லாவிடினும், ஒரே புழுக்கமாக இருக்கிறது. கம்பெனி ஏ/சி காரில் இருந்து
இறங்கியவுடனேயே சட்டைக்குள் வேர்க்கத் தொடங்கி விட்டது. ஐதராபாத் புகைவண்டி
நிலையத்தின் வாசலிலும், உள்ளே செல்லும் வழியிலும் எப்போதும் போல் கூட்டம்
மண்டியது. கம்பெனி கார் ஓட்டுனரிடம் “நீ போகலாம்” என்று சொல்லிவிட்டு நிலையத்துக்குள் நுழைந்தேன்.
சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்கு அதற்குள் வந்துவிட்டது. இரண்டாம் வகுப்பு ஏ/சி கம்பார்ட்மெண்டை அடைந்து, இருக்கையை கண்டுபிடுத்து, என் சிறிய பெட்டியை அடியில் தள்ளி, எப்போதும் போடும் பூட்டால் பூட்டி பத்திரபடுத்திவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். சுற்றும் முற்றும் என் பார்வையை சுழல விட்டேன். ஆட்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். வண்டி புறப்பட இன்னும் நேரம் இருக்கிறதே!
வண்டி புறப்படும்
நேரத்திற்கு முன்பே இருக்கையில் அமர்ந்துவிட்டால் மனதுக்கு தானாகவே ஒரு குதூகலம்
வந்து விடுகிறது. வெளியே, அங்கும் இங்கும் அலையும் மனிதர்களை வேடிக்கை
பார்த்துக்கொண்டும், பலப் பல கற்பனைகளை செய்து கொண்டும் நடுநடுவே என் வீட்டுக்
கவலைகளை நினைவுபடுத்திக் கொண்டும் (என் கற்பனைப் பறவைகள் அதிக உயரம் சென்று விடாமல் பார்த்துக் கொள்வதற்காக) அமர்ந்திருந்தேன்.
அலுவலகக் காரணங்களுக்காக
மாதம் ஒரு முறையாவது ஐதராபாதுக்கு, சென்னையிலிருந்து வந்து போக
வேண்டியுள்ளது. எப்போதும் தனியாகவே பயணிப்பதால், என் கற்பனைப் பறவைகள்தான் எனக்கு
வழித் துணை! பலதரப்பட்ட, வெவ்வேறு வகையான மனிதர்களைப் பார்த்து –
அவர்கள் என்ன பணியில் இருக்கக் கூடும்? முகபாவங்களை வைத்து - என்ன காரணங்களுக்காக பிரயாணம்
செய்கிறார்கள் என்பதை யூகிக்க முயன்றேன். அதிலும் அவர்களின் பொருளாதார நிலைமை
என்னை விட உயர்ந்ததாக இருக்குமா அல்லது தாழ்ந்ததாக இருக்குமா என்ற யூகத்துக்கு
எப்போதுமே முன்னுரிமை அதிகம். இதைத் தெரிவதால் என்ன ஆகப்போகிறது என்கிறீர்களா!
அந்த ஒரு நாளில் நான் என்னைவிட பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் உள்ளவர்களை
அதிகமாக பார்த்துவிட்டால் ஏதோ ஒரு நிம்மதி! அந்தச் ‘சிறப்பு வாய்ந்த’ நாட்களில் அருமையான கொட்டாவியுடன் நல்ல தூக்கம்
வருகிறது! அதோ பாருங்கள்! அந்தக் கிராமத்தானை; பலவண்ண உடைகள் அணிந்து காய்ந்த
முகத்துடன் இருக்கும் இரு குழந்தைகளும், இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இவள்தான்
தாயாக இருக்க முடியும் எனச் சுலபமாக
கண்டுகொள்ளக் கூடிய தோற்றத்துடன் இருந்த மனைவியும் பின்தொடர, அவன் பொதுப் பெட்டியை
தேடி அலைந்து கொண்டிருக்கிறான். எங்கள் இருவர் நிலைகளுக்கும் ஒருவருக்கொருவர் ‘ஏதோ
வகையில்’ தொடர்பு இருந்தும் கூட “...ம்ம்ம்.. ஏழைகள் இந்த நாட்டில் எப்போதுதான்
முன்னேறுவார்களோ” என்று என் மனம் இரக்கப்பட்டுக்கொண்டிருந்தது!
என் இரக்க சிந்தனை
தடைபடும் வகையில், சக பிரயாணிகள் இருவர், ஏறக்குறைய ஒரே நேரத்தில் நுழைந்தனர்.
ஒருவர் நடுத்தர வயதினர்! என்னைப் போலவே அடிக்கடிப் பிரயாணம் செய்பவராக
இருக்கக்கூடும்; அவர் கைப் பெட்டியை அடியில் வைத்துவிட்டு, மிகச் சிறிய ஒரு
புன்னகையை ‘என் பக்கம் வீசிவிட்டு’ வைத்திருந்த புத்தகத்தை பிரித்து உடனே அதில் ஆழ்ந்தார். அந்தப்
பிரயாணத்தின் முடிவு வரை, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்
அக்கறை கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவரை விடுங்கள்! அடுத்த பிரயாணியைக் கவனிப்போம். அவன்தான் நம் கதாநாயகன்! முப்பது
வயதைத் தொட்டிருப்பான். அவனிடம் இருந்த பெட்டியை – சரியாகச் சொல்லவேண்டுமானால்,
பணம் படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கக் கூடிய பெட்டியை – இருக்கைக்கு கீழே
அலட்சியமாகத் தள்ளினான். அதில் கீறல்கள் விழுந்தாலும் எனக்குக் கவலையில்லை என்பது
போல இருந்தது அவன் செய்கை. அந்த விலையுயர்ந்த பெட்டிக்கு சகோதர, சகோதரிகள் அவனிடம்
நிறைய இருக்கும் போல! அவன் உடைகள், காலணிகளைப் பற்றியோ சொல்லவே தேவையில்லை. அவன்
பணக்காரனில்லை என்று சொல்ல – ஏன் எண்ணக் கூட தைரியம் இருப்பவர்கள் முன்னே வரலாம்
என்று சவால் விடுக்கக் கூடிய அளவிற்குத் தன்னம்பிக்கை உள்ளவையாகத் தெரிந்தன. எங்களை
அந்த இளைஞன் பார்த்த பார்வையில் நட்பு எண்ணம சிறிதுமில்லை. நாங்கள் அவனுடன்
சேர்ந்து பயணிக்க தகுதி உடையவர்கள்தானா என்பதை ஆராயும் ஒரு பார்வையை சுழல
விட்டான். ஏதோ எங்களை ‘அங்கீகரித்தற்குப்’ பிறகு ஒரே தாவலில் அவனுடைய மேல் இருக்கைக்குத் தாவினான். உடனே
தன் கையில் வைத்திருந்த ‘லேப்டாப்பை’ திறந்து அதனுள் ஆழ்ந்துவிட்டான். எங்களுடன் எவ்விதமான
பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்கின்ற சீரிய எண்ணம் தெளிவாகப்
புரிந்தது.
இது எல்லாமே சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. நானும் என் முகத்தை திருப்பி
வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடர்ந்தேன். வண்டி
புறப்பட இன்னும் சில நிமிடங்களே இருந்தன. என் கம்பார்ட்மென்ட்டும் ஏறக்குறைய
நிறைந்து விட்டது. அப்போதுதான் அந்தப் பெரியவரைக் கண்டேன். அவர் மகன் அவரை ரெயில்
படிகளில் ஏற்றிவிட்டு தானும் பின்னே
வந்தான். இருக்கைகளை தேடியபடியே வந்த அவன் நேராக எங்கள் அருகில் வந்து நின்றான். அவருடைய
பெட்டியை என் இருக்கைக்கு கீழே தள்ளி, என் எதிரே கீழ் இருக்கையில், அதாவது நம்
கதாநாயகனின் இருக்கைக்குக் கீழே அவரை அமரச் செய்தான். அந்தப் பெரியவரை வசதியாக அமர
செய்வதில் அவர் மகன் காட்டிய உண்மையான அக்கறை நன்கு புலப்பட்டது. அந்தப் பெரியவர்
இது போன்ற ஏ/சி கம்பார்ட்மன்ட்டில் பயணம் செய்ததில்லை என்பதும் தெளிவாக எனக்குப்
புரிந்தது.
அவரை உட்கார வைத்தபின் அவர் மகன் அவரை நோக்கி, “அப்பா, நல்ல வசதியா இருக்கா” என்று கேட்டான்.
“வசதியா இருக்குப்பா. ரயில் புறப்படப்போகுது. நீ பத்திரமா இறங்கிடுப்பா” என்றார் அந்த
முதியவர்.
“அதெல்லாம் இறங்கிடுவேன். இங்க பாருங்க, இந்த கவரில் பழம் வெச்சிருக்கேன்.
ராத்திரி பசிச்சுதுனா சாப்பிடுங்க. சீக்கிரம் தூங்கிடுங்க. சென்னைதான் கடைசி,
அதனால ஒன்றும் கவலை வேண்டாம். சென்ட்ரலிலிருந்து வீட்டுக்குப் போயிடுவீங்க, இல்ல”?
“போயிடுவேம்பா. நீ சீக்கிரம் இறங்கிடு. குழந்தைகளை நல்லாப் பாத்துக்கோ”
“சரி” என்ற அவன் எங்கள் மூவரையும் பார்த்துவிட்டு, அதில்
நான்தான் நல்லவன் என்று முடிவு செய்து என்னருகில் வந்தான். “சார், வயசானவர்.
ஏதாவது உதவி கேட்டால் கொஞ்சம் தயவு செஞ்சு பாத்துக்கோங்க” என்றான். நானும்
மெலிதான புன்னகையோடு தலையசைத்தேன். மறுபடியும் அந்தப் பெரியவரிடம் சொல்லிக்
கொண்டபின் அவன் இறங்கிச் சென்றுவிட்டான். வண்டியும் உடனே புறப்படலாயிற்று.
முழு இரவை ரயிலில கழிக்க வேண்டுமே என்ற கவலை என்னைப் பீடித்தது. பயணச் சீட்டு
பரிசோதகர் வந்து சென்ற பின் நானும் என் மேல் இருக்கைக்கு ஏறிவிட்டேன். என்னுடன்
சேர்ந்து எப்போதும் பயணிக்கும் ஓர் ஆங்கில நாவலை, முந்திய பயணத்தில் விட்ட இடத்திலிருந்து
படிக்க ஆரம்பித்தேன். அவ்வப்பொழுது அந்தப் பெரியவரை நோட்டமிட்டேன். ‘பணக்காரச்
சூழ்நிலை’ பயணத்திற்கு தன்னை ஆட்படுத்திக் கொள்வதற்கு அவர் இன்னும்
முயன்று கொண்டிருந்தார். ஆனால் அதில் தோல்வியடைந்தால் அவர் பெரிதாக
எடுத்துக்கொண்டிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.
இப்படியே எல்லாம் நன்றாக முடிந்திருந்தால் நான் இதை எழுதியே இருக்கமாட்டேன். ஆனால்
இரவு அப்படியே முடியவில்லை!
இரவு உணவுக்கு ஆர்டர் எடுக்கும் ரயில் பணியாள் வந்தான். என்னைப் பார்த்ததும்
சிரிப்புடன் “என்ன சார், வழக்கமான ஆர்டர் தானே?” என்று கேட்டான்.
அந்த ரயிலில் அடிக்கடி நான் பிரயாணிப்பதாலும், அவனுக்கு சற்று தாராளமாக டிப்ஸ்
கொடுப்பதாலும்தான் இந்த நட்புறவு! இந்தக் கேள்வியாலும், சிரிப்பாலும் நான்
திடீரென்று அங்கு ஒரு முக்கியஸ்தனாகி விட்டேன்.
இது போன்ற சூழ்நிலைகளுக்காகவே நாம் பொதுவாக வைத்திருக்கும் பெருமிதப் புன்னகை என்
முகத்தில் தவழ்ந்தது. சுற்றிலும் கண்ணோட்டியவன் அப்போதுதான் உணர்ந்தேன்! எனக்குக்
கிடைத்த அந்த முக்கியத்துவம் நம் கதாநாயகனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஒரு
சாதாரணப் பணியாள் அவனை முதலில் கவனிக்கவில்லை என்பது ஏற்கனவே அவனை
ஆத்திரமூட்டியிருந்தது. இந்த அழகில் நான் முக்கியத்துவம் பெறுவது அவனால் சகித்துக்
கொள்ள முடியவில்லை!
ரயில் பணியாள் மற்ற இருவரையும் கேட்டுவிட்டு அவனிடம் வரும்வரை துடிப்புடன்
காத்திருந்தான். “என்ன வேண்டும், சார்”, என்று கேட்டதுதான் தாமதம்; “என்னென்ன இருக்கின்றது” என்று
ஆங்கிலத்தில், கோபத்துடன் கேட்டான். அந்தப் பணியாளும், தன தொழில் தர்மத்தின்படி
பொறுமையுடன் அடுக்கத் தொடங்கினான்: “சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, மீல்ஸ்,
சப்பாத்தி குருமா...” நம் கதாநாயகன் இடைமறித்து, சப்பாத்தி குருமாவைத்
தேர்ந்தெடுத்தான். கூடவே சில கேள்விகளும் (ஆங்கிலத்தில்) விழுந்தன: “சப்பாத்தி
நன்றாக இருக்குமா?, குருமா நன்றாக இல்லாவிடில் பணம் தர மாட்டேன், சூடாக
இல்லையென்றால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்பது போல! பணியாளும்
அவன் கேட்டதற்கெல்லாம் “ஆமாம்” என்றோ “சரி” என்றோ சொல்லி விட்டு நகர்ந்து விட்டான்.
ரயில் ஓடிக்கொண்டிருந்தது. நானும் என் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நடுத்தர வயதினர், அவர் கொண்டு வந்திருந்த எதோ ஒன்றை சாப்பிட்டுவிட்டு, படுத்து
தூங்குவதற்கு ‘நான் எப்போது வேண்டுமானாலும் தயார்’ என்பதை மறைமுகமாக
உணர்த்திக் கொண்டிருந்தார். கீழே பார்த்தேன். அந்தப் பெரியவர் ஒரு பொட்டலத்தைப்
பிரித்து, அதிலிருந்த இரண்டு இட்டிலிகளை (வீட்டில் செய்து கொடுத்திருக்க வேண்டும்)
பொறுமையாக சாப்பிட்டு முடித்து, குப்பையை எங்கே போடுவது – ஜன்னல் வழியே தூக்கி
எறிய முடியாதே – என்று பார்த்தார். பணக்காரர்களின் இடத்தில் குப்பையை அழகான பையில்
கட்டி வைத்துக் கொள்ளலாமே தவிர தூக்கி எறிய இயலாது! அதிலும் கட்டுவதின் நேர்த்தியை
பொறுத்து உங்களின் நாகரிக முதிர்ச்சி வெளிப்படும் என்பதால் தீவிர கவனத்தை செலுத்த
வேண்டியுருக்கும். பெரியவரோ யோசித்து விட்டு அவர் கையில் இருந்த, ஏதோ ஒரு
துணிக்கடை கொடுத்த, பையிலேயே போட்டுக் கொண்டார்.
பிறகு வந்தது வினை! ரயில்வே பணியாள் என்னுடைய உணவை (இரண்டு சிக்கன்
பிரியாணிகளை) கொடுத்து விட்டு நான் கொடுத்த பணத்தையும் (டிப்ஸ் உட்பட) சிரிப்புடன்
வாங்கிக் கொண்டு கையிலிருந்த மற்றப போட்டலங்களுடன் அங்கிருந்து நகரத் தொடங்கினான்.
இது நம் கதாநாயகனை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது! அவனுடைய மதிப்பிற்கும்,
கௌரவத்திற்கும் அவனுக்கல்லவா முதலில் வந்திருக்க வேண்டும்!
“ஹலோ, என்னுடையது எங்கே?” என அவன் கேட்கத் தலைப்படும்போது, பணியாள் “இதோ, எடுத்து
வருகிறேன், சார்” என்றபடி சென்று விட்டான். இது எரிகிற தீயில் எண்ணையை
ஊற்றியது போலாகிவிட்டது. உண்மையிலேயே நான் பயந்து விட்டேன். அவன் முகம் உர்ர்
என்று மாறிவிட்டது. அப்போது அது, தன் ‘ஏரியாவுக்கு’ வந்துவிட்ட நாயை
இன்னொரு நாய், உர்ர் என்று உறுமியபடி பாய்வதற்கு தயாராவதை நினைவு படுத்தியது. எப்போது
வேண்டுமானாலும் ‘நாய் பாயும்’ என்பது நிச்சயம். இந்த சங்கடத்திலிருந்து நான் எப்படி
தப்பிப்பேன் என்று கணக்கு போடலானேன். ஐயகோ, இந்த நாயின் (நான்) நிலைமை இன்னும் மோசம்: குலைக்கவும்
முடியாது, அங்கிருந்து ஓடவும் முடியாது!!
மற்ற இருவருக்கும் இந்த ‘குற்றச் சம்பவத்தில்’ பங்கில்லை. அதனால்
அவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. நான் மட்டுமே திடீர் எதிர்வாதியாக மாறிவிட்டதால்,
அவசர அவசரமாக பிரியாணி பொட்டலங்களை காலி செய்ய ஆரம்பித்தேன்; சீக்கிரமே சாட்சிகளை
கலைத்து விட வேண்டும் என்பது போல!
பத்து நிமிடத்திற்குள் கதாநாயகனின் சப்பாத்தியும் வந்து சேர்ந்தது; அவன் சுய
கௌரவத்தை நிலை நாட்ட வேண்டிய நேரமும் வந்துவிட்டது. அவன் ஆங்கிலத்தில்
திட்டினாலும், பணியாள் பொறுமையாக தமிழில் பதில் சொன்னான். இதோ அந்த உரையாடல்:
“ஏன் எனக்குத் தாமதமாக எடுத்து வருகிறாய்?”
“தாமதம் இல்லை சார், சொல்லியிருந்தபடியே ஏழரை மணிக்கெல்லாம் எடுத்து வந்து
விட்டேன்”
“இல்லை. தாமதம்தான்! மற்றவர்களுக்கெல்லாம் முதலில் கொடுத்துவிட்டு எனக்கு
மட்டும் ஏன் லேட்?”
“சார், நான் வரிசையாக கொடுத்து வருகிறேன்”
“என்ன வரிசை”, இரைந்தான் ஹீரோ. “இவருக்கு முதலில் கொடுத்தை நான்
பார்க்கவில்லை என்று நினைக்கிறாயா?”
“அதுவா சார்! தட்டில் வெஜ், நான்- வெஜ் இரண்டும் ஒன்றாக இருந்தால் புகார் வருது.
அதனால், முதலில் நான்-வெஜ் கொடுத்து விட்டு அப்புறம்தான் வெஜிடேரியன்”.
வெறி பிடித்த நாயை கல்லால் மிரட்டியது போல் இது அவனை மேலும் உசுப்பேற்றியது!
“ஏன்? வெஜிடேரியன்னா கேவலமா? எங்களுக்கு முதலில் தரவேண்டியது தானே?” ஐ வான்ட் டு
கம்ப்ளைன்ட் டு ரயில்வே ஜெனரல் மேனேஜர்”
“சார், நான் என் வேலையைத்தான் செய்யறேன். என் மேல கோபப்பட்டு என்ன சார் ஆகப் போகுது”
“முடியாது. நான் கம்ப்ளைன்ட் கொடுத்தே தீருவேன்!”
அந்தோ பாவம்! கதாநாயகன் தன எல்லையை மீறி விட்டான். பணியாள் அவனை மிக
நிதானமாகப் பார்த்து “ தாராளமாக செய்யுங்க. உங்க இஷ்டம்!”....சென்று
விட்டான்.
ஹீரோ இண்டர்வெல்லில் தோற்றுப் போனான்!
இங்கு நடந்தவை எதைப் பற்றியும் அக்கறை காட்டாத அந்த நடுத்தர வயதினர் இதற்குள்
உறக்கத்திற்கே சென்று விட்டார். முதியவர் இன்னும் தூங்கவில்லை. அவர் என்ன
செய்கிறார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
ஹீரோவால் தோல்வியைக் காண்பித்துக் கொள்ள முடியாதே! இந்தியாவில் வாழ்ந்தால்
இப்படித்தான் ஆகும் என்பது போல் அவன் சலித்துக் கொண்டான். அந்த சலிப்பை பகிர்ந்து
கொள்ள எங்களுக்கு தகுதியில்லை என்பதால் அவன் சலிப்பு பன்மடங்கு அதிகரித்து
விட்டது. உடனடியாக இந்த சலிப்பை எங்கள் மீதான வெறுப்பாக மாற்றுவது அவனது
லட்சியமாகிவிட்டது. சாப்பிட்டு முடித்தவுடன் அவன் கைப் பேசியை உபயோகிக்கத்
தொடங்கலானான். இந்த நாட்டின் மீதும், இந்த நாட்டில் வாழும் கையாலாகாதவர்களின்
மீதும் அவனுக்கு இருக்கும் வெறுப்பையும் – அதை விட மேலாக அவனைப் போன்ற
முன்னேறியவர்களைப் பார்த்தும் இன்னும் இந்த நாடு மாறவில்லையே என்கின்ற சலிப்பையும்
யாருடனாவது பேசித் தொலைக்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது போலும்!
எனக்கு இந்தி புரியாது என்று நினைத்திருக்கலாம் அல்லது புரிந்தாலும்
கவலையில்லை என்று முடிவு செய்திருக்கலாம். யாரிடமோ உரக்க இந்தியில் பேசத்
தொடங்கினான்.
“ஆங்...ரயிலில்தான் இருக்கேன்....வசதியா? ஹா..ஹா... இந்த நாட்டில் என்னதான் பணம் கொடுத்தாலும் வசதியும் தரமும்
இருக்காது.........நீ வேற! பேசக்கூடத் தகுதியில்லை.....அதிலும் ஒரு கிழம்!
.முன்னப் பின்ன ஏ/சி யைப் பார்த்திராது. சுத்தப் பட்டிக்காடு.........பேசறதா!..கூட
சேந்துப் போறதே பெரிய விஷயம்.....லஞ்சம...ஊழல்.. சாப்பாடு
தர்றவன் கூட டிப்ஸ் தர்ரவனுக்குதான் முதலில் கொடுக்குறானுங்க!......அட ஆமாம்.
படிச்சவன் மாதிரிதான் இருக்கானுங்க, நாகரிகம் கொஞ்சமும் இல்ல.....!”
இப்படியே சென்று கொண்டிருந்தது அவன் பேச்சு. பேசியதில் சில என்னை நேரடியாகத்
தாக்கினாலும் அவனுடன் சண்டை போட எனக்கு மனமில்லை. பேச்சு நிற்கவுமில்லை. பத்து
மணி, பதினொன்று மணியைத் தாண்டி பனிரெண்டு
வரை நீண்டது. ஒன்பது மணிக்கு மேல் மற்றவர்களுக்குத் தொல்லை தரக்கூடாது என்ற ரயில்
சட்டம் அவனுக்குத் தெரியவில்லை போலும். அப்படியே தெரிந்திருந்தாலும் ‘எங்களுக்காக’ அதைக்
கடைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம அவனுக்குத் துளியும் இருந்திராது.
எப்படியிருந்தாலும், அவனுடைய தாலாட்டுப் பேச்சிலேயே (!!) நான் தூங்கி
விட்டேன். நள்ளிரவு தாண்டி ஒருமுறை கழிவறைக்கு செல்வதற்காக எழுந்தேன்.
கம்பார்ட்மென்ட் முழுதும் அமைதி. கழிவறைக்கு சென்று விட்டுத் திரும்பி வந்து என்
இருக்கைக்கு ஏறும் போதுதான் அந்தக் கொடுமையை கண்டேன். ஒவ்வொரு இருக்கைக்கான
கம்பளியை வைக்கும்போது, அந்த முதியவரின் கம்பளியை தவறுதலாக நம் கதாநாயகனின்
இடத்தில் வைத்துவிட்டார்கள் போலும்! அவனோ கால்களை வைத்துக் கொள்வதற்கு ஒரு கம்பளியும்,
தன் மேல் போர்த்திக் கொள்ள மற்றொரு கம்பளியும் உபயோகப்படுத்தியிருந்தான்.
சற்றே அதிர்ச்சியுடன் கீழே பார்த்தேன். அந்தப் பெரியவர் குளிருக்கு சாதாரண
போர்வையைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார். கம்பளி இருந்தால் அவருக்கு நல்ல
வசதியாக இருந்திருக்கும். மேலே இருப்பதில் ஒன்று அவருக்கு உரியது அல்லவா? என்ன
துரோகம் இது! எங்களையெல்லாம் ஏளனப்படுத்தி, கேவலமாகப் பேசி தான் உயர்ந்தவன் என்று சட்ட
நியாயங்களை அவ்வளவு அடாவடியாக வெளிப்படுத்தியவன் எப்பேர்ப்பட்ட அநியாயம்
செய்திருக்கிறான். ஒரு கம்பளி அந்த முதியவருடையது என்பது நிச்சயம் அவனுக்குத்
தெரிந்திருக்கும். என்ன அகங்காரம்!
அப்போதே அவனை எழுப்பி சண்டை போட தோன்றியது. என்றாலும், என் உடலில் ஷத்ரிய
ரத்தம் ஓடவில்லை என்பதாலும், சரி, பெரியவர் தூங்கி விட்டார், நாம் ஏன் குரல்
எழுப்பவேண்டும் என்று என் மனசாட்சி சமாதானத் தூது அனுப்பியதாலும் நான் எதுவும்
சொல்லாமல் படுத்துவிட்டேன். சற்று நேரம் கவலையாக இருந்தது. பின்பு உறக்கம் என்னைத்
தழுவிவிட்டது.
நான் கண் விழிக்கும்போது சென்னையை நெருங்கிவிட்டோம். விடிந்தும் விட்டது.
முதியவர் தெளிவான முகத்துடன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நடுத்தர வயதினர்
அங்கு இல்லவே இல்லை. நான் சென்று முகம் கழுவி விட்டு, என் இருக்கைக்கு திரும்பி
வந்து அமர்ந்தேன். பெரியவர் என் கண்களை நேராகப் பார்த்து சிரித்தார். அவருக்கு
நேர்ந்த கொடுமையைப் பற்றி பேசவேண்டும் என்று எனக்கிருந்தாலும், மேலே இருக்கும்
‘ஏவுகணை’ பாயுமோ என்ற பயத்தால் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
சிறிது நேரத்துக்குப் பின் ‘ஏவுகணை’ எழுந்து கழிவறை பக்கம் சென்றது. என்னால்
இதற்கு மேலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
“ஐயா, நீங்க என்னை மன்னிக்கணும்!”
அவர் வியப்புடன், “மன்னிப்பா? எதற்கு தம்பி?”
“நான் தூங்கும்முன் கவனிக்கவில்லை. பாருங்கள். ஒவ்வொருவருக்கும் கம்பளி உண்டு.
ஆனால் மேலே இருந்த அவர் உங்களுடையதையும் எடுத்துக் கொண்டுவிட்டார். இது தெரியாமல்
நடந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் அப்போதே பார்த்து
கேட்டிருக்கவேண்டும். பாவம்! நீங்கள் கஷ்டப்பட்டிருப்பீர்கள்!”
அவர் சிரித்தார். “அப்படி எல்லாம் ஒண்ணும் கஷ்டமில்லை, தம்பி”.
“ஆனாலும் அது உங்களுக்கு சொந்தமானது. நீங்களும் காசு கொடுத்திருக்கிறீர்கள். இது
ஒரு வகையான திருட்டு”.
அவர் என்னை சாந்தப்படுத்தும் வகையில் பார்த்தார். மெதுவாகச் சொன்னார்: “தம்பி,
அது என்னுடையது என்று எனக்குத் தெரியாது என நினைக்கிறீர்களா?”
நான் வியப்படைந்தேன். “ஐயா, அப்போ நீங்க ஏன் அதை அவரிடம் இருந்து கேட்டு வாங்கவில்லை?”
அதே புன்சிரிப்புடன் அவர் தொடர்ந்தார்:
“தம்பி, அதை நான் அவருக்காகத்தான் விட்டு விட்டேன். இதில் கோபப்பட என்ன
இருக்கிறது? எங்கள் தலைமுறையில் நாங்கள் சாதாரணமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.
இந்த வசதிகள் அப்போது எங்களிடம் இல்லை; இவை எங்களுக்குத் தேவைப்படவுமில்லை. எளிமையாக
நாங்கள் வாழ்ந்தாலும் இன்று உங்களுக்கு இருக்கும் வசதிகளை உருவாக்க நாங்கள்
பாடுபட்டோம். நீங்கள் காணும் இந்த உலகத்தின் முன்னேற்றத்திற்கு எங்களின் உழைப்பு,
தியாகம் இவற்றின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. இன்றுள்ள வசதிகளை எங்கள் வாழ்க்கையில்
காண்போமா என்பது எங்களுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அதைப் பற்றி நாங்கள்
கவலைப்படவுமில்லை. ஏனென்றால் நாங்கள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தோம்! உங்களின்
நல்லுலகம்தான் எங்கள் கனவாக இருந்தது.
நான் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். சிறிய பெருமூச்சுக்குப் பின்
அவர் தொடர்ந்தார்.
“ஆனால் இதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது. உங்களுக்கான உலகத்தை
உருவாக்குவதில் நாங்கள் இன்பம் கண்டோம். எங்கள் கனவெல்லாம் உங்களின் இன்ப வாழ்வை
எண்ணியே இருந்தது. ஆனால் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? உங்கள் குழந்தைகளின்
எதிர்காலத்தைப் பற்றியும், நீங்கள் அவர்களுக்கு என்ன விட்டுச் செல்கிறீர்கள்
என்பதைப் பற்றியும் நீங்கள் யோசிக்கிறீர்களா? வீண் பகட்டு உங்கள் கண்களை
மறைக்கிறது. யோசியுங்கள்! உங்கள் குழந்தையின் இன்பத்திற்காக, புன்னகைக்காக எந்த
எளிமையை, தியாகத்தை கடைப்பிடிக்கிறீர்கள்?”
கவலை அவர் முகத்தில் படர்ந்தாலும், மெல்லிய சிரிப்பு மறையவில்லை. “ஆம், அடுத்த
தலைமுறையின் நலனுக்காக மனிதன் விரும்பி மேற்கொள்ளும் எளிமையும், தியாகமும் என்
காலத்திலேயே ஒழிந்து விடுமோ என்று கவலையாக இருக்கிறது”.
சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு, “மன்னிக்கவும்” என்று மட்டும்
சொல்லிவிட்டு அவர் தன பெட்டியை எடுப்பதில் முனைந்துவிட்டார். ரயிலும்
சென்ட்ரலுக்குள் நுழைந்து விட்டது. அவர் சொன்னதைப் பற்றியே
யோசித்துக்கொண்டிருந்ததால் பயணிகள் இறங்கத் தொடங்கியதை நான் கவனிக்கவில்லை. சுதாரித்துக்கொண்டு,
என் பெட்டியை எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினேன். நம் கதாநாயகன், அவன்
பெட்டியை தூக்கிச் செல்வதற்காக போர்ட்டருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். சற்று
நடந்தவுடன், முன்னே தூரத்தில் அந்தப் பெரியவரைக் கண்டேன். ஒரு கையில் பெட்டியை
வைத்திருந்தாலும் உறுதியான, ஆனால் நிதானமான நடையுடன் சென்று கொண்டிருந்தார்.
ரா. பாரத்ராம்.