Thursday, November 21, 2019

தேர்வுகளும் தலையெழுத்தும்..


என்ன செய்வது? என் தலையெழுத்து தினமும் கனவுகள் காண்பது. கனவில் வருவதை உங்களிடம் சொல்லாவிடில் தலை வெடித்து விடும் போலிருக்கிறது.

கீழே எழுதியுள்ள நிகழ்வு முழுதும் கற்பனை. அதுவும் கனவில் வந்த கற்பனைகள். இதில் ஏதாவது உலகத்தில் இருப்பதை பிரதிபலிப்பதை போலிருந்தால், அது முழுக்க முழுக்க தற்செயலே! எனக்கு அதில் பங்கில்லை.

'நாடோடி மன்னன்' திரைப்படத்தை பார்த்திருகிறீர்களா! அதில் புது மன்னன் இட்ட கட்டளைகளை ஒருவர் மக்களுக்கும், பிரபுக்களுக்கும் படித்துக் காட்டுவார். அது போலவே, என் கனவிலும் ஒருவர் படித்துக்காட்டினார். 

"இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் - நம்முடைய புதிய மன்னர் சில சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை சீர்படுத்தவும், செம்மை படுத்தவும், எதிர்காலத் தூண்களை வலுப்படுத்தவும் (Building Strong, Basement weak என்று இருக்க கூடாதல்லவா) இந்த திருத்தங்கள் உதவும் என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். 

இதன்படி,

ஏற்கனவே அறிவித்தது போல், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு, மன்னிக்கவும், மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அளவில் பொது தேர்வும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய அளவில் பொது தேர்வும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிய அளவில் பொது தேர்வும், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அகில உலக அளவில் பொது தேர்வும் நடத்தப்படும். இப்படி செய்தால்தான் நம் நாட்டு மாணவர்களுக்கு அறிவு வரும் (மன்னிக்கவும்) வளரும் என்று நமது கல்வியாளர்கள் உறுதிபட, தலையில் அடித்து சத்தியம் செய்வதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே கல்வியாளர்கள் தனியே பயிற்சி வகுப்புகள் எடுப்பதினால், இந்த முடிவின் மூலம் பொருளாதாரமும் வளரும் என்பது அவர்களின் கருத்து.

(கூட்டத்தில் யாரோ ஒருவன், ' அப்போது கல்லூரிக்கு' என்று கத்த அறிவிப்பாளன். 'யாரடா அவன்? அறிவுகெட்ட பயல். இத்தனை தடைகளை தாண்டுவது மனித சாத்தியமா? அதனால், கல்லூரி படிப்பு முழுதும் பணம் கொடுத்து சேர்ந்து கொள்ளும் வகையில் மாறிவிடும்.)

நிற்க.

"இந்த சீர்திருத்தங்களை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. "

"இனிமேல் அரசு பணிகளும் தேர்வுக்குள் தள்ளிவிடப்படும். அரசு பணியில் சேர்வது மட்டுமல்லாமல், சேர்ந்த பின்னும், தேர்வுகள் நடத்தப்படும்."(கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது). 

"அதாவது, குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது ஒரு பணி முடிந்தவுடனோ அவருக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். உதாரணத்திற்கு, காவலதிகாரி ஒரு வழக்கை திறம்படி முடித்தவுடன் பாராட்டு சான்றிதழ் வலது கையிலும், தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இடது கையிலும் வழங்கப்படும். உலகத் தரத்தில் அவர் எங்கிருக்கிறார் என்பதிற்கான புரிதலாக அது கருதப்படும். அதே சமயத்தில் அவர் வழக்கை கையாள்வதற்காகவும், நீதிக்காக பட்ட அனைத்து துன்பங்களும் (கஷ்டங்களும்) மறக்கப்படும். தேர்வில் அவர் எடுக்கும் மதிப்பெண்களே அவரின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும்." 

"இதே போன்று நீதியரசர்களும், அரசு மருத்துவர்களும், அரசின் மற்ற எல்லா முக்கியத் துறையினரும் தேர்வுகளுக்கு உள்ளாவர்."

"நீதியரசர் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியவுடன் ஒரு தேர்வு நடத்தப்படும். மருத்துவர் ஒரு உயிரைக் காப்பாற்றிய பின்னும் ஒரு தேர்வு நடத்தப்படும்."

"ஆனால் அறிவுபூர்வமான சிந்தனையாக, ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செயல் முறை தேர்வு நடத்தப்படாது. நீங்களே யோசியுங்கள் - மருத்துவருக்கு செயல் முறை தேர்வு வைத்தால், அவர் மறுபடியும் அதே நோயாளியைப் பிடித்து மற்றுமொருமுறை அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அதனால், அரசு ஊழியர்களுக்கு செயல்முறை தேர்வு இருக்காது என்பதை கருணையுடன் அறிவிக்கிறோம்."

"உலகத்தர உயர்த்தலுக்கு சில விதிவிலக்கல்களும் உண்டு. முதற்கண், கல்வியாளர்கள். இவர்கள்தான் இந்த உலகத்தர 'புத்துணர்ச்சியூட்டலுக்கு 'உரிமையாளர்கள். இவர்களே இவர்களுக்கான கேள்வித்தாளை தயார் செய்து, இவர்களே அக்கேள்விகளுக்கும் பதிலளித்தால், ஏதாவதொரு நூற்றாண்டில் அது தவறாக கருதப்படுமென்பதால் அவர்களுக்கு தேர்வுகள் கிடையாது. கல்வியாளர்கள் தற்போது இருக்கும் அறிவுடனேயே இருக்கக்கடவர்."

"இரண்டாவதாக அரசியல்வாதிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு எந்த தரம்வாய்ந்த (அல்லது தரம் கெட்ட) அளவில் தொடங்குவது என்பது புரியாத புதிராகவும், கல்வியாளர்களையே யோசிக்க வைப்பதினாலும், தற்போதைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது." 

"இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளினால் நம்முடைய வருங்காலத் தூண்கள் (அதாவது குழந்தைகள்) உலகத் தரம் வாய்ந்த தூண்களாய், எங்கேயும் நகராமல், எதையும் சிந்திக்காமல்,  யாரையோ சுமந்து கொண்டிருக்கும் கற்தூண்களாய் நிற்பர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்."

"இத்துடன் இக்கனவு முடிகிறது."

அவன் சொன்னால் என் கனவு முடிந்து விடுமா? அது தொடர்ந்தது. ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டேன். தொட்டிலின் அருகே சென்று பார்த்தால்... அந்தக் குழந்தை நான்தான்!!

இங்கேதான் என் கனவு நிறைவு பெற்றது.

திடுக்கிட்டு எழுந்தேன். உடல் முழுதும் வேர்த்துக் கொட்டியது. சில வினாடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மனம் வேதனையில் துடித்தது. நரகம் என்பார்களே, அது இந்த வேதனைதானோ!

மெதுவாக தன்னிலைக்கு வந்தேன். இதயம் ஆறுதல் சொன்னது. நீ அப்பருவத்தைக் கடந்துவிட்டாய். உனக்கில்லை இனி அந்த வேதனை!

ஆனால் என் கனவு போலவே நடந்து விட்டால்... கடவுளே! உன்னை விட்டால் யாருமில்லை அந்தத் தளிர்களை காப்பாற்ற...

*********************************************************

ரா. பாரத்ராம்
21/11/2019 
















No comments:

Post a Comment