Wednesday, July 7, 2021

கனவே.. கொல்லாமல் போய்விடு (பகுதி 1)


வந்தனம்...என் கதையைப் படிப்பதற்கு மிக்க நன்றி. ஒரு நிபந்தனை: இரைச்சலும், சந்தடியும் மிக்க பகலாக இருந்தால் இதைப் படிக்க வேண்டாம். உங்களைச் சுற்றி யாரேனும் இருந்தால் படிக்க வேண்டாம். கவனம் இதிலேயே இருப்பது அவசியம். மென்மையான, அமைதியான இரவில் படித்தால் உங்களுக்கும் கொஞ்சம் புரியலாம். மெல்லிய குளிரால் நரம்புகள் கிளர்ந்தெழுந்து, பகலின் செய்கைகளும், பேச்சுகளும் மறந்து, மனம் எங்கெங்கோ அலைந்து, செய்வதை மறுத்தும், செய்யாததற்கு ஏங்கியும்...மனிதன் தானும் ஒரு விலங்கு என்று உணரும் நேரம் - இரவு. என் கதையைப் படிக்க அதுவே நல்ல சமயம்!  


முதலிலேயே சொல்லி விடுகிறேன் – நான் புரிந்துகொள்வதற்கு சுலபமானவன் இல்லை. என்னைப் புரிந்து கொள்ள நீங்களும் என்னைப் போலவே சிந்திக்கவேண்டும். என் எண்ணங்கள், கனவுகள், வலிகள், கோபம், ஆத்திரம், துன்பம், செயல்கள்...இத்தியாதி, இத்தியாதி – உங்களுக்கும் இருந்திருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சமயத்தில் வரவேண்டும்...நீங்கள் அப்படியில்லையென மறுக்கிறீர்களா?  பரவாயில்லை.  படியுங்கள்; நிதானமாகப் படியுங்கள். வாழ்வில் பல உண்மைகளே பொய்களாகவும், சில பொய்களே உண்மைகளாகவும் இருக்கக் காண்பீர்.   

என் பெயர் கேசவன். நான் ஒரு சாதாரணமான மனிதன். நீங்கள் என்னை எங்கு வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம். ரயில் நிலையத்தில், பஸ் ஸ்டாண்டில், மேம்பாலத்தில்,  நடை பாதையில், அரசு அலுவலகங்களில், ரேஷன் கடைகளில் - சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், எந்த மனிதக் கூட்டத்திலும் என்னைப் பார்த்திருக்கலாம். சராசரி தமிழனின் உருவம், நிறம், உயரம், முகம்.. இலவசமாக எதைக் கொடுத்தாலும் வாங்குவதற்கு வரிசையில் முண்டியடிக்கும் நடுத்தர வர்க்கத்தவன். யார் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் விடியலில் எங்கள் ஒண்டிக்குடித்தன குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் நாள் முழுவதும் வேலையே ஓடாமல், தண்ணீர் நாளையாவது வருமா என்று கிடந்து கவலைப்படும் மனமுடையவன். `

வருடத்துக்கு இரு முறை குடும்பத்துக்கு - நான், மனைவி மற்றும் என் குழந்தை - புத்தாடை வாங்குபவன். மாதத்துக்கு ஒரு முறை நமது சிங்காரச் சென்னையின் ஒரே பெரும் சுற்றுலாத்தலமான மெரினா பீச்சுக்கு – இலவசமாகப் பார்க்கலாம் என்பதால் - குடும்பத்தை அழைத்துச் சென்று சுண்டல் வாங்கித் தருபவன். ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்தில் கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு பணத்துக்கு என்ன செய்வது என்று கவலைப்படுபவன். பஸ்ஸில் ஏறிவிட்டால் அடுத்த நிறுத்தம் வருவதற்குள் டிக்கட் வாங்கிட வேண்டும் என்று அவசரப்படுபவன், காக்கி உடையில் யாரைப் பார்த்தாலும், போலீஸாக இருக்குமோ என்று மரியாதை கொடுப்பவன்.

ஆக, என்னைப் பற்றி விசேஷமாக சொல்ல ஏதுமில்லை...இருந்தாலும் நான் உங்களில் பலரை விட மாறுபட்டவன். எப்படி? வருகிறேன், பொறுங்கள்! என்ன அவசரம்? அதை உடனே சொல்லிவிட்டால் நீங்கள் படிப்பதை நிறுத்தி விட்டு ஓடிவிடலாம்! பயப்படுவீர்களா?... வெறுப்பீர்களா?... ஒதுக்கி வைத்து விடுவீர்களா? அல்லது என்னை 'அங்கே' கொண்டு சென்றுவிடுவீர்களா?... எங்கே என்று இப்போது யோசனை செய்யாதீர்கள்! நான் முழுவதும் முடித்த பிறகு யோசிக்கலாம்! ஏனெனில் எங்கே என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை. நான் உங்களிடம் இதையெல்லாம் சொல்லத் தொடங்கியதே, நான் எங்கே போகவேண்டும் என்று தீர்மானிப்பதற்கோ? அப்படியும் இருக்கும்! உங்களால் உதவ முடியுமா? அது சரி, முதலில் நீங்களும் என்னைப் போலில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்?

உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க இஷ்டமில்லை. உங்களில் இருந்து நான் எப்படி மாறுபட்டவன் என்பதைச்  சொல்லிவிடுகிறேன்......என் மனதிற்கு, 'பெண்களைக் கொல்வது' பிடிக்கிறது'. மீண்டும் ஒரு முறை படியுங்கள். எனக்கு அல்ல...'என் மனதிற்கு'!! அதுவும் சமீப காலமாகத்தான் இந்த உணர்வு என்னை ஆட்டிப் படைக்கிறது. என் மனம் என்று நான் அறியும் 'என் எண்ணங்கள்' பொதுவாக என் கட்டுக்குள்தான் இருக்கின்றன. ஆனால் சில நேரங்களில் ஒரு இன்பமயமான ஊற்று மனதின் அடியாழத்தில் இருந்து இனிமையான் இசையுடன் சேர்ந்து வெளிவருகிறது! பீறிட்டு வருகிறது! அது என்னைப் பெண்களைக் கொல்லச் சொல்கிறது. குறிப்பிட்ட பெண்ணை அல்ல; யாராக இருந்தாலும் சரி. அப்போது என் முன் இருப்பவள் என்னால் சாக வேண்டும். அதுவும் எப்படி சாக வேண்டும்? கேளுங்கள்...

மெதுவாக...கொஞ்சம் கொஞ்சமாக.. துடித்து...அந்தப் பெண்மை அடங்குவதைப் பார்த்து ரசிக்க விருப்பம். அந்த மெல்லிய உடலில் எங்கோ ஒரு இடத்தில் கீறி இரத்தம் பொங்குவதைக் காண வேண்டும். கூர்மையான ஆயுதத்தைப் பட்டு போன்ற தோலில் வைத்து, மெதுவாக அழுத்தி...பெண்மையின் மென்மை ஆயுதத்தின் கூர்மைக்கு இடம் கொடுத்து விலக, எங்கெங்கோ தட்டுப்படும் நரம்புகள் தெறிக்க, பெயர் தெரியாத ஏதேதோ உள்ளுறுப்புகள் கிழிய...அந்த உயிர் பிரிவதைப் பார்க்க வேண்டும். அழகிய பெண்ணின் அலறல் என் காதுகளுக்கு 'ஓபரா ஹால்' சங்கீதம்.. ரத்த வெள்ளத்தில் அவள் உடல் பின்னே சரிந்து விழும் நேரத்தில்; அடர் காட்டின் நடுவே சுற்றிலும் உயர்ந்த மரங்கள் சூழ, சூரியனின் ஒளிச் சிதறல்கள் மழையைப் போல ஆங்காங்கே பொழிய..இளம்குளிரில்...தனிமை...பசுமை... அங்கே நின்று, அமைதியை, இயற்கையை ரசிப்பது போன்ற உணர்வு என்னைத் தழுவும். உலகை விட்டுப் பிரிகிறோம் என்று தெளிவாகும் போது அந்தப் பெண்ணின் கண்களில் பரவும் பீதி, பிறகு பயம் மறைந்து என் மேல் வரும் வெறுப்பு கலந்த கோபம், இனி ஒன்றும் செய்ய இயலாது, எல்லாம் முடிந்துவிட்ட்து என்பது புரிந்து, உடல் தளர்ந்து, கால்கள் மடிந்து, கைகள் தட்டுப்படுவதையெல்லாம் பிடிக்க முயன்று, அழகு, அறிவு, பாசம், பொறுப்பு, நடிப்பு, அகங்காரம், அழுத்தம், துரோகம் என்ற அவள் குணங்கள் விலகத் தொடங்கி, கடைசியில் எல்லாம் முடிந்து - அவள் என்பது அதுவாகி - கீழே விழுந்து கிடக்கும் 'அதைப்' பார்க்கப் பிடிக்கும்.

பொறுங்கள். என்னைப் பார்த்துப் பயப்படாதீர்கள். நேற்றுவரை நான் எந்தக் கொலையும் செய்யவில்லை. நாளையும் செய்வேனா என்பதும் நிச்சயமில்லை. 'இன்ப ஊற்று' பெருக்கும்போது தான் அந்த எண்ணம் வ்ருகிறது. முன்பு எப்போதோ ஒரு முறை வந்த ஊற்று இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. ஊற்றின் பிரவாகத்தினால் பொங்கும் நீரில் அடித்து செல்லப்படும்போது, என் பலத்தை சேர்த்து, எப்படியோ மூச்சை இழுத்து, கழுத்தை மேலே கொண்டு வந்து வெள்ளத்தில் இருந்து தப்ப முடிகிறது. எவ்வளவு நாட்களுக்கு எனக்கு பலம் இருக்கும் என்று தெரியவில்லை. பலம் குறைந்து விட்டால் என்ன செய்யப் போகிறேன் எனப் பயமாக உள்ளது......

மன்னிக்கவும்; இப்படியே நான் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுக்கு ஒன்றும் புரியாது. எல்லாக் கதைகளையையும் போல ஒழுங்காக வருகிறேன். நேற்று வரை நடந்ததை முதலில் சொல்கிறேன்! ஏனென்றால் இன்று...வேண்டாம். அப்புறம் சொல்கிறேன்.   

என்னைப் பற்றி சில விஷயங்களை முன்பே சொல்லிவிட்டேன். மற்றவற்றையும் கேளுங்கள்: தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் யாரும் இல்லாதவன். தனியார் கம்பெனியில் குமாஸ்தாவுக்கு மேலே...ஆஃபிசர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் செய்யும் வேலைகள் குமாஸ்தாவுக்கும் கீழே... ஃபைல்களை க்ளியர் செய்வது மட்டுமல்ல, தேவையென்றால் சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்துக்கு, வங்கிகளுக்கு, அண்ணா சாலையிலிருக்கும் தபால் நிலையத்திற்கு என்று எல்லா இடங்களுக்கும் ஓடுவதற்கு, கூரியர் செய்வதற்கு, அலுவலகத்துக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க, சில நேரங்களில் மேனஜர் வீட்டு வரி கட்ட என்று எல்லாமே....கிட்டத்தட்ட பதினைந்து வருடம் நேர்மையான சேவை... வேறு வேலை தெரியாது. 'வெளியே போ' என்று சொல்லி விட்டால் நடுத் தெருதான் என்ற பயம் பிடித்து ஆட்டுவதால் எந்த வேலையை, யார் சொன்னாலும் செய்வதற்கு மறுக்காத - உங்களில் சிலரைப் போன்றவன். 'சம்பளத்தை இன்னும் கொஞ்சம் கூட்டிதான் கேளுங்களேன்' என்று என் மனைவி மாதாமாதம் முதல் தேதியன்று கெஞ்சினாலும் மேனேஜரைப் பார்த்தாலே இந்த விஷயத்தை 'அம்னீஷியா' போன்று மறந்து விடுகிறேன். எங்கே இதைக் கேட்கப் போய் இருப்பதும் போய்விடுமோ என்ற பயம்தான் காரணம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுக்கு கணவர்கள் மேல் ஒரு பெருமிதம். தன் கணவன் இல்லையென்றால் அந்த அலுவலகமே மூடிவிடும் என்பது போல். உண்மை யாருக்குத் தெரிகிறது?

என் மனைவி, கௌரி....வாழ்விலே அந்த ஒரு விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன். ஒரு ஏக்கமிகு தனிமை இரவில், விண்ணிலிருந்து என் மடியில் விழுந்த தாரகை. நல்ல அழகி. அமைதியானவள். படித்தவள். ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வந்தவள்; அதனால் குடும்பக் கஷ்ட நஷ்டங்கள் அறிந்தவள். எனக்கு ஏதோ ஒரு வகையில் தூரத்து சொந்தம். ஒரு திருமண நிகழ்ச்சியில் அவளைப் பார்த்து, கண்டதும் காதலில் விழுந்தேன். எப்படியாவது அவள் என் வசமாக வேண்டுமென, என் தாய் வழி மாமனிடம் விருப்பத்தைச் சொன்னேன். சம்மதிக்கமாட்டாள் என்றுதான் நினைத்திருந்தேன்; வாழ்க்கையில் ஒரே ஒரு முறை அதிர்ஷ்டத்தின் பார்வை என் மீது வீசியது. காரியங்கள் கட கடவென்று நடந்து, சொர்க்கத்தினால் நிச்சயிக்கப்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் அவள் என்னுடையவளானாள். குறைந்த மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் தலைவிதிக்கு ஆளானாலும் பொறுமையாக சமாளித்துக் கொண்டிருப்பவள். இரண்டு வயது முடிந்து விட்ட ஒரு பெண் குழந்தை, எங்களின் அன்பு வாழ்க்கைக்கு கடவுள் கொடுத்த பரிசு. 

எல்லாம் நன்றாக இருந்தாலும் ஒரே ஒரு நெருடல். அது என்னவென்பதைப் பின்பு சொல்கிறேன்.

நாங்கள் வசித்து வருவது கூட்டுக் குடித்தன குடியிருப்பில். எங்களைத் தவிர நான்கு  குடும்பங்கள் அங்கிருந்தன. எல்லோரிடமும் எங்களுக்கு நல்ல பெயர். முடிந்தவரை ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அந்த நான்கில் ஒரு குடும்பம் எங்களுக்கு கொஞ்சம் நெருக்கம். இரண்டே பேர். ஆனந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். ஆனால் என்னை விட எவ்வளவோ தேவலை. வருமானம் அதிகம். போனஸ் வாங்குபவன். அதனால் அவனால் மோட்டார் சைக்கிள் வைத்துக் கொள்ள முடிகிறது. அடிக்கடி வெளியே செல்ல முடிகிறது. மனைவிக்கு புதுப்புது காட்டன் புடவைகள் வாங்க முடிகிறது. அவன் மனைவி – மேனகாவும் நல்லவள்தான். ஆனால் கொஞ்சம் காசுப் பித்து. மாதக்கடைசியில் அவளிடம் கையேந்த முடியாது. அவளுக்கே உரித்தான காரணங்களைச் சொல்லி அனுப்பிவிடுவாள். மற்றபடி எல்லா உதவிகளும் செய்ய தயங்க மாட்டாள்.

மேனகா அழகிதான்; ஆனால் என் மனைவி போல் இல்லை – அது என்னவோ, வாழ்வில் கௌரியை விட வேறு யாரும் என் கண்களுக்கு அழகாகத் தெரிவதில்லை. சற்றே கவனியுங்கள்; இங்கே ஒன்றைச் சொல்லி விடுவது உத்தமம்; ‘மேனகா என்னை பார்க்கும் பார்வை சரியில்லை! பெண்களின் கண்களைப் பார்த்து அர்த்தத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு நான் சமர்த்தனும் இல்லை; பார்வைகளின் பரிச்சியமும் இல்லை. இருந்தும் எனக்கே தெரிகிறது; மேனகாவின் பார்வையில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. எதற்கோ என்னை அழைக்கிறது. எங்கே ஏதாவது பேச வந்துவிடுமோ என்ற பயத்தால், அவளுடன் தனித்து இருக்கும் தருணங்களை நான் தவிர்த்துவிடுவேன்.

பிரச்சினை இதுவல்ல. நான் முதலில் சொல்ல வந்ததை சொல்கிறேன். என்ன சொல்ல நினைத்தேன்? ஆமாமாம்..என் மனதின் எண்ணங்களும், இசை வெள்ளங்களும், இன்ப ஊற்றுகளும்! என் மனதில் தோன்றும் அந்த இன்பப் பெருக்கு எப்போது முதலில் வந்தது? ஞாபகத்தில் வருகிறது;

ஒரு வருடம் முன்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். பேய் மழை பெய்ததால் அலுவலகத்தை விட்டு சற்று முன்பாகவே கிளம்பினேன். அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்திற்கு என்னுடன் எப்போதும் வரும் என் நண்பன் இளங்கோ, “கொஞ்ச நேரம் இருடா..நானும் வர்ரேன் என்று சொன்னான். “நீ இப்படித்தான்டா சொல்லுவே..ஆனா லேட் பண்ணுவே..நான் கிளம்பறேன் என்று பதிலளித்து நான் வெளியே வந்துவிட்டேன்.

சென்னையில் அபூர்வமாகப் பெய்யும் மழை; இரண்டு மணி நேரமாக வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. சற்று நனைந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். தெரிந்தவர் யாருமில்லை. தனிமை வந்துவிடின் அங்கு கற்பனையின் துணை இல்லாமல் போகுமா! இளமையும், கற்பனையும், குளிரும், மழையும்...பேரின்பங்கள் மறந்து போக சிற்றின்பங்களின் நினைவு வாட்டத் தொடங்கியது.

மேகங்கள் பொழிந்து தள்ளிய வெகு மழையின் நீர்த்துளிகள் சாலையின் மேல் பட்டு மத்தாப்பைப் போல் தெறிப்பது என் அன்பு மனைவியின் கலகலத்த சிரிப்பை நினைவுப்படுத்தின. அவளின் விரிந்த கண்களும், மலர்ந்த புன்னகையும் இன்னும் ஏதேதோ நினைவுகளும் என் மனக்கண்ணில் வந்து நிற்க, இளமையின் முறுக்கு குளிரின் சிலிர்ப்பால் கனவுகளில் மிதக்கத் தொடங்கியது.

என் மனைவியின் நினைவு என்னைக் குதூகலப்படுத்த, சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனும் ஆர்வம் உந்தித்தள்ளியது. காக்க வைக்காமல் பேருந்தும் வந்துவிட்டது.

அந்த நேரத்துக்குப் பேருந்தில் கூட்டம் அதிகம்தான். பலர் அலுவலகத்தை விட்டு சீக்கிரமே கிளம்பிவிட்டார்கள் போலும்! உள்ளே நுழைந்து, ஓரமாக நின்றேன். அப்போது அங்கே கண்ட ஒரு காட்சி என் மனதில் அப்படியே பதிந்து விட்ட்து. என் மனைவியைப் போன்ற உருவம் கொண்ட ஒருவளைக் கண்டேன். அதே உயரம், அதே உடல்வாகு. நிறம் மட்டும் குறைவு...மாநிறம்...ஆச்சரியம் என்னவென்றால் அவள் கௌரியிடம் இருப்பது போன்ற ஒரு புடவையை அணிந்திருந்தாள். அதனால்தான் அந்தக் காட்சி என் நினைவில் பதிந்துவிட்ட்து போலும். அவளைக் கண்கொட்டாமல் பார்த்தேன். அவளுக்கும் என் கௌரிக்கும் இருக்கும் ஒற்றுமையையும், வித்தியாசத்தையும் எண்ணிப் பார்த்து, என் அதிர்ஷ்டத்தை வியந்தேன்! என் மனம் அந்த நினைவுகளில் முழுமையாக ஆழ்ந்தது.   

பேருந்து பாதி தூரம் கடந்திருக்குமா? இல்லை, நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதா? இஙகுதான்..இங்கேதான்...எனக்கு சரியாக நினைவில்லை. ஒரு வலி என்னுள் பிரவேசித்து, என்னை ஆட்கொண்டு, அப்படியே என்னைப் பிசைந்தது. அந்த வலி எப்போது ஏற்பட்ட்து? அது என்ன வலியா? நரம்புகளின் கோளாறா? மூளையின் வெடிப்பா?...அது என்ன.. எவ்வளவுதான் நினைவுபடுத்திப் பார்த்தாலும் ஒன்றுமே விளங்குவதில்லை. ஏதோ ஒன்று என் மனதை முழுதாக ஆக்கிரமப்படுத்திக் கொண்டது.

எனக்கு நினைவு தப்பிவிட்டது.

எப்போது என் நினைவு தப்பியது? தெரியவில்லை...அது சுத்தமாக ஞாபகமில்லை!

எங்கும் வெற்றிடம்...என்னை எனக்குள் நான் பார்த்தேன்! சிவந்த பாதை...பொங்கி வழியும் ஓட்டங்கள்! அந்த ஓட்டங்களின் முதல் புள்ளியாக நான்! தலை சுற்ற சுற்ற நான் கதறுகிறேன்! மூச்சு இரைத்தது. மேலும் இரைப்பு... எங்கே சுவாசங்கள் நின்றுவிடுமோ! வேண்டாம், நிறுத்து...இல்லை, இல்லை...சுவாசத்தை நிறுத்தாதே! உச்சங்களின் உச்சம்...வேண்டாம், நிறுத்தினால் நான் இறந்துவிடுவேன்! கதறலின் சத்தம் என் காதைக் கிழிப்பது போலிருந்தது.

ஆனால் திடீரென என் எண்ணங்கள் ஒருமுகப்பட்டன. எல்லாம் தெளிவாகின. பளீரென வெளிச்சம். கேட்டிராத இன்பமிகு இசை காதுகளில் நிறைந்தது. ஆனால், உள்ளத்தின் கீழிருந்து பீரிட்டெழுந்த ஒரே எண்ணம்; அவளைக் கொல்ல வேண்டும். என் கண் முன்னால் இருக்கும் அவளைக் கொல்ல வேண்டும்! எதற்காக என்று கேட்காதே! அவள் பெண்ணாகப்பட்டவள்! அவள் கொல்லப்பட வேண்டியவள். அவளின் உயிர் முக்கியமில்லை...இந்தப் பரந்த, அழகிய, இன்பமான உலகுக்கு இவள் தேவையில்லை...அவளின் மென்மை சிதைக்கப்பட்டால்தான் ஊற்றும், வெறியும் அடங்கும்.

நான் வேகமாக அவளை நெருங்க முயன்றேன். எப்படிக் கொல்வது? ஏன், இரு கைகள் போதாதா! என் கைகளின் பலம் கூடுவதை உணர்ந்தேன். என் உடல் முழுதும் என்ன ஒரு அற்புதமான உணர்வு! ஒரு உயிரின் முடிவை நிர்ணயுக்கும் சக்தி  எனக்குள்ளது என்பது என் தோல்விகளின் வலிகளுக்கு மருந்து!   

என் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவளின் அழகிய கழுத்துதான்! என் மனைவியைப் போன்ற சாயலில் இருந்த அவள் சாகவேண்டும்...நகர்ந்தேன்..நெருங்கினேன்... ஆனால் நான் மனிதர்களின் ஊடே நகர முயன்றபோது, ஏதோ மழை வெள்ளத்தின் நீர் பிரவாகத்தினூடே நடந்ததைப் போன்று இருந்தது. நகர்வது கொஞ்சம் கொஞ்சமாகக் கடினமாகிக்கொண்டே போனது. கால்கள் பலமிழந்தன. உடலை அசைக்க முடியவில்லை. ‘சென்று விடு...அருகில் சென்று விடு...எப்படியாவது சென்றுவிடு..நினைத்ததை செய்துவிடு...

அதற்குள்ளாகவே மனதின் ஊற்று அடங்கத்தொடங்கி விட்டது. என் கண்கள் மங்கி விட்டன. என் கைகள் பலமிழந்தன. என் மனது எல்லாவற்றையும் மறந்தது. கால்கள் தானாக நடந்தன. கண்கள் வெற்றிடத்தை பார்த்தன. மூச்சு இரைத்தது. திடீரென நான் இந்த உலகத்தின் ஒரு மனித துளியாக இல்லாமல் போய்விட்டேன். எங்கும் வெறுமையைக் கண்டேன். வெண்மையில் மூழ்கினேன்.

இவ்வளவு விரிவாக உங்களுக்கு சொல்லமுடிந்ததே அதிசயம். ஏனென்றால் அதன் பிறகு எனக்கு எதுவுமே நினைவிலில்லை. பேருந்திலிலிருந்து இறங்கியதும், எங்கள் தெரு வரை வந்ததும் – எதுவுமே நானாகச் செய்யவில்லை. முழு உணர்வு வந்தபொழுது எங்கள் தெருமுனையில் இருந்த கல்லில் உட்கார்ந்திருந்தேன். கால்கள் வலித்தன. தாங்கமுடியாத தலைவலி...எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன்? யார், யார் என்னைப் பார்த்தார்கள்? ஞாபகமில்லை. ஏற்கனவே எனக்கு ஊரில்  பெரிய மரியாதை! இந்த அழகில் நான் இவ்வாறு தெரு ஓரக் கல்லில் அமர்ந்திருந்தால்..!!

வீட்டில் நுழைந்தவுடன் சிறிது நேரத்திற்கு கௌரியிடம் பேசவேயில்லை. அவளிடம் சொன்னால் பயப்படுவாள். என்னை நினைத்து மிரண்டுவிடுவாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் குடும்பக்கஷ்டங்கள், சமையல், குழந்தை. குழந்தைக்கோ, எனக்கோ லேசான ஜுரம் என்றால் கூட கஷாயம் கொடுத்து விட்டு தூங்கும் நேரத்திலெல்லாம் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பவள். மெதுவாக சொல்லவேண்டும். வீணாக அவளை கலவரப்படுத்துவது நன்றாய் இருக்காது! அது மட்டுமல்லாமல் என்ன நடந்தது என்பது எனக்கே பெருங் குழப்பமாய்த்தான் உள்ளது. பிறகு என்னவென்று அவளிடம் சொல்வது?    

ஆனாலும் அவளுக்கு என் சோர்வு தெரிந்துவிட்டது. “ஏன் சோர்வாய் இருக்கீங்க?

“ஒண்ணும் இல்லம்மா..லேசாத் தலைவலி

“தலைவலியா? கஷாயம் தரட்டுமா? டாக்டருக்கு போவோமா?

“சேச்சே, அதெல்லாம் தேவையில்லை. கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும்.

“மழையில நனஞ்சீங்களா?

“கொஞ்சம் நனைஞ்சேன்! ஆனால் அதனால ஒண்ணும் இல்ல. இது சாதாரணத் தலைவலிதான்!

பேச்சை மாற்ற முயன்றேன்!

“நான் இன்னிக்கு ஆபீசிலிருந்து சீக்கிரமே கிளம்பிட்டேன். வேலை ஒண்ணுமில்ல. மழையைப் பாத்தவுடனே உன் ஞாபகம் வந்திருச்சி, என் கண்ணே. ஆசை, ஆசையாக  கிளம்பிட்டேன்

கௌரியின் அழகிய முகத்தில் கவலை படரத் தொடங்கியது. அவளின் கண்கள் என் கண்களை உற்று நோக்கின.

“அப்படீன்னா, ஏன் இவ்வளவு நேரம்? எங்கே போயிருந்தீங்க?

அச்சச்சோ, மாட்டிக்கொண்டேனோ?

“என் நண்பன் ஒருத்தனை வழியிலே பார்த்தேன்! அவன்கூட நின்னு பேசிக்கிட்டுருந்தேன்.  அப்படியே நேரமாயிடிச்சு!”

அவள் கண்கள் இன்னும் என் முகத்தை விட்டு விலகவில்லை.

“உண்மையைத்தானே சொல்றீங்க?

ஆனந்த ஊற்றின் சிறு துளி என்னுள்ளே தெறித்தது. என்னருமை கௌரி! உணர்ந்து கொள். பொய்யும் உண்மையும் ஒருவரது மனதைப் பொறுத்தது! நான் சொல்லும் உண்மை உனக்கு பொய்யாகவும், நீ சொல்லும் உண்மை எனக்கு பொய்யாகவும் இருக்கலாம். இந்த மனிதக் கூட்டமே அப்படித்தானே!

“பின்னே, நான் உன்கிட்டே எப்போவாச்சும் பொய் பேசியிருக்கேனா?

அவளின் சந்தேகம் போனதாகத் தெரியவில்லை. நம் உடலுக்கோ, மனதுக்கோ ஏதோ கோளாறு என்றால் பெண்களின் உள்ளுணர்வு அதை எப்படியோ  உணர்ந்துகொள்ளும். அவளிடம் மேலே எதுவும் உளறாமல் தப்பித்துக் கொண்டேன். ஆனால் படுத்தவுடன் உறக்கமில்லாமல் போனது.

என்னதான் நடந்தது? ஏன் இப்படி நடந்தது? இன்று வந்த குரூர எண்ணங்கள் எனக்கு எப்பொழுதும்  தோன்றியதேயில்லையே! உயிர்களைத் துன்பப்படுத்தும் மனதா இது? தெரு நாய் நொண்டினால் கூட பார்க்கச் சகியாத மனமாயிற்றே!

கௌரிக்கும் உறக்கம் வரவில்லை. என் பக்கம் புரண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு ஏதாவது ஒன்றென்றால் அவள் என்னதான் செய்வாள், ஆதரவு அற்றவள்! குழந்தையின்  நிலையும், அவளின் நிலையும் எவ்வளவு மோசமாகப் போய்விடும்! பாவம்! எனக்கோ, எங்கே மறுபடியும் என் நினைவு தப்புமோ என்று பயமாக இருந்தது. நல்ல வேளை! அப்படியெதுவும் நடக்கவில்லை.

மறுநாள் காலை, காபியை ஆற்றிக் கொடுத்தபடியே கௌரி என்னிடம்,

“நீங்க இன்னிக்கு ஆபீஸ் போகணுமா? வீட்டில ஓய்வா இருக்கலாமே என்றாள்.

“இல்ல கௌரி. எனக்குத் தலைவலியெல்லாம் சரியாப் போச்சு. பலமெல்லாம் வந்திடுச்சி, பாக்கிறியா?...ஒரு தட்டாமாலை சுற்றி அவளைக் கீழே இறக்கினேன்! கௌரிக்கு நம்பிக்கையும், நிம்மதியும் வந்ததாகத் தெரிந்தது. பையில் தைலத்தை போட்டு அனுப்பினாள். எப்போது போல் நேரத்திற்கு கிளம்பினேன். மனம் உற்சாகமாகவே இருந்தது.

எங்கள் போர்ஷன்தான் கடைசி. அடுத்த கதவைத் தாண்டி, தெருவிற்கு போவதற்குமுன் எதிர்க் கோணத்திலிருந்த கடைசிப் போர்ஷன் பக்கம் என் கண் சென்றது. வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்தபடியே, மேனகா கதவு வாயிலில் நின்றிருந்தாள். ஒ! அந்தப் பெரிய கண்கள்! அவை சொல்லும் அர்த்தம் என்ன? வேண்டாம்! அந்தக் கண்களைப் பார்க்காதே! அவளைப் பார்க்காதே! அவள் என்னிடம் பேசக் கூடாது. நான் நெறியான வாழ்க்கையை வாழும் குடும்பத்தை உடையவன். பிறழாதே மனமே...உண்மைகள் பொய்யாகட்டும்...நல்லவனாக இரு!

சட்டென்று நடையின் வேகத்தை அதிகரித்து அவளின் பார்வையில் இருந்து தப்பித்து, தெருவிற்குள் சென்றுவிட்டேன். மனது அசை போட்டுக் கொண்டிருந்தது; எண்ணக்  கோர்வைகளின் முடிச்சுகளில் எங்கோ ஏதோ ஓர் முடிச்சு தளருகின்றது. சரி செய்யாவிடில் எல்லா எண்ணங்களும் விழுந்துவிடும்.  

அலுவலகத்தில் என்னுடைய கவலைகளை மறந்தேன். நண்பனிடத்தில் என் பிரச்சினையைப் பற்றி  பேசலாமா என் நினைத்துப் பிறகு அதைக் கைவிட்டேன். முதலாவதாக, எனக்கு நேர்ந்தது யாருக்கும் புரியாது. அடுத்து, அவர்கள் என்னை ‘வேறு விதமாக எடுத்துக் கொள்ளக்கூடும். டாக்டரிடம் செல்லலாமா? வேண்டாம்! அவர் ஏதாவது சொல்ல! பயமாயிருந்தது.

ஓரிரு நாட்களுக்குப் பின் நடந்ததை மறந்தே போய்விட்டேன். எவ்விதமான தொல்லைகளும் இல்லை. அன்று நடந்தது கனவைப் போன்றே இருந்தது. கனவாகவே இருக்குமோ என்று நான் சில நேரங்களில் குழம்பியது உண்டு. ஆனால் அது கனவல்ல என்பதை அறியும் விதமாக நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின.

சில மாதங்களுக்கு கடந்துவிட்டன. நேற்றுஆபீசிற்கு கிளம்புமுன் மனிவியிடம், “கௌரி, சாயங்காலம்  சீக்கிரம் வந்து விடுகிறேன். பீச்சுக்குப் போகலாம், தயாராக இரு எனச் சொல்லிவிட்டு கிளம்பினேன். கனவிலும் எதிர்பார்க்கவில்லை; எனக்கு நேரப் போகும் சம்பவங்களையும், வரப் போகும் துன்பங்களையும்!

நேற்றென்று பார்த்து வேலை அதிகமாக இருந்தது. கிளார்க் ஒருவன் மெடிக்கல் லீவ். அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு பைல் அவன் டேபிளில் தங்கிவிட்டது. அதை நான் பார்த்து முடிக்க வேண்டியதாகி விட்டது. மேனேஜர் ரூமில் சில மராமத்து வேலைகள். அதில், வழக்கம் போல கோளாறுபடிகள்...கான்ட்ராக்டரை வரவைத்து சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்னுடைய வேலைகளும் தங்கிவிட்டன. அவற்றையும் முடித்துப்போக மேனேஜர் சொல்லிவிட்டார். இவையெல்லாம் போதாதென்று முக்கியமான ஸ்பீட் போஸ்ட் ஒன்று பெங்களூருக்குப் போய்ச் சேரவில்லை. அதைப் பற்றி தபால் நிலையத்துக்குப் போய் விசாரிக்கவேண்டும். எல்லா வேலைகளும் என் தலையில் விழுந்தன.

மனைவியுடன் வெளியே போவதை நினைத்துப் பார்த்து வேலைகளை துரிதமாக முடிப்பதில் என் கவனம் முழுதும் இருந்தது. இளங்கோ “வாடா...டீ, காபி சாப்பிட்டிட்டு வரலாம் என்று அழைத்தபோது கூட நான் அசையவில்லை. வெகுநாட்களுக்குப் பின் கௌரியுடன் கழிக்கப்போகும் ஒரு நல்ல மாலைப் பொழுது. அதைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. சீக்கிரம் வேலைகளை முடிக்க வேண்டும்!

எல்லாம் முடிந்தது; இன்னும் தபால் நிலைய வேலை மட்டும்தான் மீதம். அங்கிருந்து அப்படியே வீட்டுக்கு சென்று விடலாம். அவசர அவசரமாக என் பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன். சீக்கிரம் வேலையை முடித்து விட வேண்டும். பட படவென்று மனம் அடித்துக்கொண்டது. என் அதிர்ஷ்டத்தை பாருங்கள்; கௌண்டரில் இருந்த இளைஞன் ஐந்து நிமிடங்களுக்குள் பிரச்சினையை தீர்த்துவிட்டான். ஸ்பீட் போஸ்ட் பெங்களூர் வட்டார தபால் நிலையத்திலேயே தங்கிவிட்டது. மறுநாள் கண்டிப்பாக டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்ற உறுதிமொழி தரப்பட்டவுடன், அந்த தகவலை உடனடியாக மேனேஜருக்கு சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு, பஸ் ஸ்டாண்டை அடைந்தேன். கும்பல் அதிகமில்லை. தெருவோர சுவற்றில் சாய்ந்தது போன்று உட்கார்ந்தேன்.  

குதூகலம்...மனம் எங்கும் குதூகலம்...மற்றுமொரு இனிய மாலைப் பொழுது என் வாழ்க்கையில் இன்று காத்திருக்கிறது. என் மனைவி...கௌரி...அழகு பெட்டகம்...என் வாழ்க்கையின் ஒரே அதிர்ஷ்டம்...துயரங்களுக்கேல்லாம் மருந்து...சீக்கிரம்...சீக்கிரம் நான் வீட்டிற்குப் போக வேண்டும்.  

அப்போதுதான் நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மலர் கூட்டம்  போன்ற பெண்களில் அவள்தான் அழகி. நல்ல நிறம். உயரத்திற்கு ஏற்ற உடல் வாகு, உடலுக்கு ஏற்ற அலங்காரம். அங்கிருந்தவர்களை வென்றுவிட்ட பெருமிதத் தோற்றம். கௌரியும்தான் அழகு. அவள் என்ன இப்படியா உடை உடுத்துகிறாள்? இவள் ஒரு முறை என்னைப் பார்த்து அலட்சியத்துடன் திரும்பிவிட்டாள். இவள் கிடக்கிறாள்! நான் வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும். ஆனால் இந்தப் பெண் இன்னும் ஏன் கார் வாங்கவில்லை? என்னிடம் நிறையப் பணமிருந்தால், இவளின் அழகில் மயங்கி, நானே இவளுக்கு கார் வாங்கிக் கொடுத்திருப்பேனோ? சிரிப்புதான் வருகிறது. கார் இருந்தால் வீட்டுக்கு சீக்கிரம் சென்றிருப்பேனே! சீக்கிரம்...வாங்கினால் வேகமாகப் போகும் கார்தான் வாங்குவேன்! வேகம்...வேகம்...காற்றில் தலை முடி பறக்கும் வேகம்...முடிகளினிடையே கை விரல்களை நுழைத்து காதலுடன் கோதி விடுவதைப் போன்று காற்று செய்யும் மாயஜாலம்! இல்லை, நான் என்ன செய்வேன் தெரியுமா? என்னுடைய காரில், அதோ அந்தத் தெருவிலிருந்து வேகமாகத் திரும்பி நேரே இந்தப் பெண்ணை நோக்கி வருவேன்! அடிபடப்போகிறோம் என்றப் பயத்தால் அழகை மறந்து, திமிரை மறந்து, அலங்காரத்தை மறந்து, கண்கள் விரிந்து, அகங்காரம் குலைந்து...ஆவென்று அலறி...இடித்த வேகத்தில், காதுகள் செவிடுபட எலும்புகள் நொறுங்கித் தெறிக்க....

திடீரென என் மனதினுள் இன்னிசை ஒலிக்கத் தொடங்கியது. எங்கோ தூரத்தில் கேட்கும் வயலின் சங்கீதம்...பத்து...இருபது...ஐம்பது...நூறு வயலின்கள்...ஒன்றாக இணைந்து...மலை உச்சியில் இருந்து கேட்கிறேன்! பள்ளத்தில் இருந்து ஆரம்பிக்கும் ஒலி, சங்கீதம் எழும்ப, எழும்ப...மேலே சென்று, வானத்தை வியாபித்து...விஸ்தாரமான, அற்புதமான ஒலி...கண்களை மூடி என்னை மறந்தேன்! இசையின் நுட்பங்கள் கேள்விகளாயின. ஒலியின் ஏற்றத்தாழ்வுகள்! முதலில் எதுவும் புலப்படவில்லை. பின்பு மெதுவாகத் தெளியத் தொடங்கின. மெல்ல மெல்ல அர்த்தம் புரிந்தது. எல்லாமே சங்கீதம்தான்! பார்த்ததும், கேட்டதும்...நிகழ்ந்ததும், கற்பனையும்...முதலில் இன்பங்களும் பிறகு வலிகளும்...!

படாரென என் கண்கள் திறந்தன. மனதினுள் ஒரே எண்ணம்; இவளைக் கொல்ல வேண்டும்! எப்படியாவது! கொன்று விடு. இவளின் பிம்பம் அழிய வேண்டும்! வாழத் தகுந்தவள் அல்ல. பெண்ணென்றால் கௌரியைப் போன்று இருக்க வேண்டும். இவளெல்லாம் யார்? புற அழகால் அடுத்தவனை வசியப்படுத்துவதே இவள் வாழ்க்கையின் நோக்கம். சீ...வலி, துன்பம் இதெல்லாம் என்னவென்று இவளுக்குத் தெரியுமா? நேர்மையாக, நல்லவனாக வாழவேண்டும் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்கள் இவளைப் பொருத்தவரை கேவலமான பிறவிகள்! அப்படி நினைக்க விடலாமா? கொன்று விடு! என்னவானாலும் என்னைக் கேவலமாக நினைக்கும் பெண்ணைக் கொன்றுவிடு! உயிர் அடங்கும்முன், என்னருமை இவளுக்குப் புரிந்துவிட வேண்டும்!

அற்புத இசை என் காதுகளைக் நிறைத்தது. அதைத் தவிர எனக்கு வேறு எதுவுமே கேட்கவில்லை. கைகள் முறுக்கேறி விட்டன. நான் மெதுவாக அவளை நோக்கி நகர்ந்தேன். ஆனால் அதற்குள், எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த அவளின் கண்கள் என்னைக் கவனித்து விட்டன. முதலில் புரியாத குழப்பமிருந்தாலும், கண்கள் முறைத்துக் கொண்டு, வெறியுடன் என்னுடல் அவளை நோக்கு நகர்ந்தது அவளுக்கு அபாயத்தை உணர்த்தி விட்டது போலும்! அந்தப் பெரிய மனிதக் கும்பலின் நடுவே, காது செவிடாகும் இரைச்சலின் நடுவே, எங்களின் கண்கள் மட்டும் தனி மொழியைப் பேசின.

‘என்னருமை அழகியே, இதோ காண்பாய்...வலி என்றால் என்னவென்று! இளமை அழியும். உன் செருக்கும், நீ செய்யும் மோசடியும் அடங்கும். ஆனால், அதற்கு முன்னேயே...இல்லை இல்லை, இப்போதே நீ சாகப் போகிறாய்! அடங்கி விடுவாய்...

கத்துவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் கத்தவில்லை; பயத்தால் முட்டாள்தனமாக நடந்து கொண்டாள். நிறுத்தத்தை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள். நான் பின் தொடர்ந்தேன். இரண்டு, மூன்று முறை திரும்பி என்னைப் பார்த்தவள், நடையின் வேகத்தைக் கூட்டினாள். பத்தடி தூரத்திலேயே நானும் நடந்தேன். ‘ஓடு, ஓடு...தப்பிக்க முடியாது. இன்றோடு அழிந்தாய்...

ஒரு கல்லூரி மாணவியர் கூட்டம் எங்கள் இருவருக்கும் நடுவினிலே வந்துவிட்டது. அவர்களை விலக்கித் தள்ள முயன்றேன். “ஹலோ, கொஞ்சம் பாத்துப் போறீங்களா?”, ஒரு மாணவி சீறினாள். ‘பொறு கண்ணே! உன்னிடம் அப்புறம் வருகிறேன். முதலில் அவள்.

கிடைத்த வாய்ப்பினால் முன்னே சென்றுவிட்ட அவள், சரேலென்று அருக்கிலிருந்த சிறிய தெருவுக்குள் நுழைந்து விட்டாள். ‘அடப் பாவமே! இப்படியா மாட்டுவாய்?ஓடு என் அன்பே! நானும் அந்தத் தெருவிற்குள் போய்விட்டேன். பரபரப்பான பிரதான சாலையை ஒட்டி இப்படி ஒரு சந்து இருக்குமென்று கற்பனையில் கூட எதிர்பார்க்கவில்லை. இரு புறமும் மரங்கள். ஒரு சந்தடியில்லை. சத்தம் கேட்டு யாராவது வருவதற்குள், இவளைக் கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு சென்று டீ குடித்துக் கொண்டிருக்கலாம்! அவ்வளவு தனிமை!  ‘அட அசட்டுப் பெண்ணே!

வேகமாக நடந்தவள், மறுபடியும் என்னை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு, லேசாக ஓட ஆரம்பித்தாள். என் நடையும் ஓட்டமாக மாறியது. விடப்போவதில்லை... வெறி ஏறிக்கொண்டே போனது. ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது அழகுக்காகப் போடப்பட்டிருந்த கையடக்க கம்பி வேல்கள் கண்ணில் பட்டன. ஓட்டத்தை நிறுத்தி, முழு பலத்தை வைத்து அவற்றில் ஒன்றை வெளியே உருவினேன். இதோ முடிந்துவிடும்! அந்த சிறு வேலுடன் வேகமாக ஓடினேன். ஒரே செருகு...உன் வாழ்க்கை முடிந்துவிடும். அதோ, அந்த மஞ்சள் நிற வயிற்றில் இருந்து பொங்கப்போகும் ரத்தம், இந்தத் தெரு முழுவதையும் சிகப்பாக்கப் போகிறது. அந்தச் சிகப்புதான் என் சந்தோஷம்.

எங்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளி குறைய, குறைய, அலறல் சத்தம் அதிகமானது. இடது கையை நீட்டியபடி ஓடினேன். கார்மேகத்தைப் போல் பறந்து, அலைந்த அவள் தலைமுடி என் கைக்கு மிக அருகில் வந்துவிட்டது. அந்தக் காட்சியை நீங்கள் கண்டிருக்கவேண்டும்! கனவில் தோன்றும் காட்சியைப் போல, அந்த இருண்ட வீதியில் பச்சை மரங்கள் மட்டும் இன்னும் விழித்திருப்பதால் மெலிய பசுமை பரவிக் கிடக்க, தனிமையில்...முழுத் தனிமையில் அவள் ஓட, அடித்து வீசிய காற்றில் அவள் அணிந்திருந்த ஆடைகள் படபடக்க, கழுத்தில் அணிந்திருந்த மேலாடை சுடுநீரின் ஆவியைப் போல் மேலெழுந்து இறக்கையை விரித்துப் பறக்க, ஆஹா...என்ன ஒரு காட்சி...ஆடைகள் போகட்டும் கண்ணே! அவையெல்லாம் நீ போடும் வேஷங்கள்! துரோகங்கள் விலகட்டும்! உன் ரத்தம் வழியும்போது மாயைகளும் வழியட்டும். உன் ரத்தமே ஆடையாக மாறட்டும்!

ஆனால், அப்போதுதானா என் உடல் தளரவேண்டும்! என் வெறியும், உடல் வலுவும் குறைந்தன. என்னால் அவ்வளவு வேகமாக ஓட முடியவில்லை. என் கண்ணை எதோ மறைப்பது போன்று இருந்தது. ஒரு கணம் நின்று விட்டேன். தலை கிர்ரென்று சுழன்றது. மயக்கம் வந்து விடும் போல் இருந்தது. சமாளித்து, கண்ணைத் திறந்து பார்த்தால் அவள் தென்படவில்லை. எங்கோ ஓடிவிட்டாள். ஏதாவது வீட்டிற்குள் ஒடி மறைந்திருபபாளோ! சண்டாளி...  

என்ன ஒரு தோல்வி! கையில் இருந்த சிறிய வேலைத் தூக்கி எறிந்தவன், உடனே என் நிலையை உணர்ந்தேன். கையில் ஆயுதத்துடன் வெறி கொண்டு நான் துரத்தியதை யாராவது பார்த்திருந்தால்? ‘ஐயோ, அங்கு நிற்கக் கூடாது. உடனே தப்பிக்க வேண்டும். திரும்பி ஓட ஆரம்பித்தேன். என்னை யாரும் பார்த்துவிட்டார்களோ என்ற பயம் பிடுங்கித் தின்றது. எப்படியாவது பிரதான சாலையை அடைய வேண்டும் என்று இன்னும் வேகமாக ஓடினேன்! மூச்சு இறைக்க ஆரம்பித்தது. கண்கள் இருண்டன. நினைவுகள் சுழன்றன. பஸ் ஸ்டாப்பில மூச்சிரைக்க வந்து, முன்பு இருந்தது போன்று அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றேன்.

தலைவலி அதிகமாக இருந்ததால் சற்று நேரம் எதுவும் விளங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை திரும்பியது. வேர்த்து தொப்பலாக நனைந்த உடல், மேலும் கீழுமாக வாங்கிய மூச்சு, தளர்ந்து போன ஆடைகள் - என்னை அக்கோலத்தில் யார் பார்த்திருந்தாலும் மிரண்டிருப்பார்கள். என் நல்ல காலம். யாரும் பார்த்ததாக தெரியவில்லை. வேர்வைக் குளியலில் நான் இருந்தாலும், சென்னையில் வேர்வைக்கா பஞ்சம்? 

என்னைப் பார்த்தவுடன் கௌரிக்கு தெரிந்து விட்டது. 

"உங்களுக்கு உடம்பு சரியில்லையா?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..கொஞ்சம் உடம்பு வலி அவ்வளவுதான்."

கௌரி அதை நம்பியதாகத் தெரியவில்லை. "நாளை நாம் மருத்துவரிடம் செல்லலாம்."

"வேண்டாம்மா.."

"நான் சொல்றத கேக்க போறீங்களா, இல்லையா? எனக்கு உடம்பு சரியில்லையென்றால் நீங்க சும்மா இருப்பீங்களா?"

அதற்கு மேல் அவளிடம் பேச எனக்கு மனம் ஒப்பவில்லை. அப்படியே நான் மறுத்தாலும் அவள் விட மாட்டாள்.

நேற்று மாலையேகௌரி என்னை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றாள். எங்கள் வருமானத்திற்கு ஏற்ற மருத்துவமனையானாலும், டாக்டர் நல்ல அனுபவம் வாய்ந்தவர்.

அப்போதுதான் எனக்கு பயம் தொடங்கியது. டாக்டர் என் மனதில் உள்ள எண்ணங்களையும், அதன் ஆணைகளையும் கண்டுபிடித்துவிடுவாரோ? ஐயோ..கௌரியால் அதை எப்படி தாங்க முடியும்? அட மடையனே, ஏதாவது சொல்லி தப்பித்திருக்கலாமே. உன்னால் என்னதான் உருப்படியாக செய்ய முடியும்?" 

ஒவ்வொரு நிமிடமும் மரண பயத்துடன் கழிந்தது. திகில் ஆட்கொண்டது. புயல் வேகத்தில் எண்ணங்கள் சுழன்றன. 

'இது எல்லாமே கனவாக இருக்க வேண்டும். எனக்கு ஒன்றுமில்லை. என் மனைவிக்கு கையாலாகதாகாவனாக இருந்து நான் தந்த துன்பங்கள் போதும்.  அவளின் உலகம் நான்தான். என் மன நிலையில் கோளாறு என்று மருத்துவர் சொல்லிவிடக் கூடாது.' 

'சே! என்ன எண்ணமிது? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இருந்தாலும் கனவு சீக்கிரம் கலைய வேண்டும்.'

டாக்டர் சற்றே வயதானவராக இருந்தார். 

"வாங்க. யாருக்கு என்ன உடம்புக்கு?"

கௌரியால் தான் பேச முடிந்தது.

"இவர் என் கணவர் டாக்டர். இவருக்குதான்.."

"சார், நீங்க வந்து பக்கத்துல உக்காருங்க. சொல்லுங்க. என்ன பண்ணுது?"

நான் எதுவும் பேசவில்லை.

"அவருக்கு கொஞ்ச நாளா அடிக்கடி தலை வலிக்குதுன்னு சொல்றார், டாக்டர்."

"எவ்வளவு நாளா?"

"இரண்டு மூன்று மாசங்களா இருக்கும், டாக்டர்"

"எப்பப்போ வருது. அம்மா, நீங்க இருங்க. சார், நீங்க சொல்லுங்க"

"அது வந்து டாக்டர்...."

"பரவாயில்லை...சொல்லுங்க சார். நீங்க சரியா சொன்னாதானே என்னன்னு புரிஞ்சுக்க முடியும்?"

"சில சமயங்கள்ல கொஞ்சம் குழப்பமான எண்ணங்கள் வருது. அதுக்கப்புறம்தான் தலைவலி வருது."

"வேலையுல டென்ஷன் ஜாஸ்த்தியா?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, டாக்டர்."

மருத்துவரும் அடிப்படை பரிசோதனைகளை செய்து முடித்தார்.

"சமீபத்துல மெடிகல் செக்கப் பண்ணீங்களா?"

"ஆறு மாசத்துக்கு முன்னாடி அலுவலகத்துல எல்லோருக்கும் பண்ணாங்க. அப்போ எனக்கு எல்லாமே நார்மலாகத்தான் இருந்துது."

"அந்த ரிசல்ட் இருக்கா?"

கொடுத்தாள். டாக்டர் முழுவதுமாக அதை பார்த்தார். 

"ஆமாம். எல்லாம் ஓகே தான்."

மருத்துவர் நிமிர்ந்து உட்கார்ந்து என்னை பார்த்து, "உங்களுக்கு என்னென்ன எண்ணங்கள் வருகின்றன? எப்போது வருகின்றன? சரியா சொல்ல முடியுமா?"

டாக்டரின் கண்கள் அகன்றதையும், அவர் சாய்ந்து உட்கார்ந்து கேட்க தயாரானவுடன் எனக்கு புரிந்து விட்டது. பிரச்சினையை கண்டுபிடிக்க முயல்கிறார். கௌரி அங்கு இல்லையென்றால் எழுந்து வெளியே போயிருக்கலாம். இப்போதோ அது இயலாது. மறைக்க வேண்டும். முடிந்தவரை... அந்த கொடூர, இனிய கனவுகளை... எனக்கு மட்டுமே புரிய வேண்டிய, நான் செய்ய வேண்டிய கடமைகளை வேறு ஒருவரிடம் சொல்ல முடியாது. அந்த இனிய இசையை இவர் எப்படி புரிந்து கொள்வார். அது என்ன சினிமா பாட்டா? 

மூளையில் நுழைந்து, நரம்புகளில் இசைந்து, உடலின் எல்லா தசை நார்களுக்கும் அந்த இசை தரும் அசுர பலம், என்னை முழுமையாக வசீகரித்து கடமையில் வழி நடத்தும் இசையை புரிந்து கொள்ள இவரால் முடியுமா? வேண்டாம். மறைத்துவிடு. நிறங்களுக்கா வர்ணம் பூசத்தெரியாது!

"அடிக்கடியெல்லாம் வர்றதில்லை டாக்டர். வேலை அதிகமாயிருந்து, சரியா சாப்பிடமாயிருந்தா வரும். அது கூட எப்பவுமே இல்லை. சில சமயங்கள்லதான். கொஞ்சம் தலை சுத்துற மாதிரி... கொஞ்ச நேரம் மயக்கமா இருக்கும். அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு தலைவலி இருக்கும். "

நான் முழு உண்மையையும் கூறவில்லை என்பது டாக்டருக்கு தெரிந்தது போலிருந்தது. 

"எவ்வளவு நேரத்துக்கு அப்படியிருக்கும்?"

"சும்மா...ரெண்டு, மூணு நிமிஷம்தான்."

"பக்கத்தில இருக்குறவங்க கவனிக்க மாட்டாங்களா?"

அசட்டு சிரிப்புடன், "இல்லை. யாருக்கும் தெரியாது." என்றேன்.

"வேற எங்கேயாவது வலி வருமா?"

"இல்லை."

"சின்ன வயசுல இப்படி நடந்த மாதிரி ஞாபகம் இருக்கா?"

"இல்லைங்க டாக்டர். இது எல்லாம் டென்ஷன் தான் காரணம்."

"வேலையை தவிர வேறு ஏதாவது சம்பந்தபடுத்த முடியுதா?"

நான் யோசிப்பது போல் மௌனமாகவிருந்தேன்.

"சொல்லுங்க சார்."

"இல்லைங்க டாக்டர். அப்படியெல்லாம் எதுவும் இருந்ததில்லை."

"நல்லா தூங்கறீங்களா?"

"ம்...அதிலெல்லாம் கஷ்டமில்லை."

டாக்டர் சிறிது நேரம் என்னைப் பார்த்திருந்து விட்டு மருந்து எழுதித் தர ஆரம்பித்தார். மருந்து சீட்டை என் மனைவியிடம் கொடுத்துவிட்டு, "இந்தாங்கம்மா. டென்ஷன் குறைவதற்கும், தூக்கத்திற்கும் மாத்திரை எழுதிக் கொடுதிருக்கிறேன். தினமும் கொடுங்க. எனக்கு தெரிந்த ஒரு நரம்பியல் மருத்துவருக்கு ஒரு லெட்டர் தருகிறேன். மறுபடியும் இது போல் நடந்தால் அவரை பாருங்கள்."

"டாக்டர், இவருக்கு ஒண்ணுமில்லையே?"

"ஒண்ணுமிருக்காதும்மா. சில சமயங்களில டென்ஷன் அதிகமா இருக்கும்போதோ, கவலையோட அதிர்ச்சி சேர்ந்து வரும்போதோ இப்படி நடக்கலாம். ரிலாக்ஸா இருந்தாலே போதும். அப்ப்டியும் திரும்ப வந்தால் நான் சொன்ன நரம்பியல் டாக்டர் வேற டெஸ்ட் செஞ்சுட்டு மருந்து தருவார். பயப்படாதீங்க."

வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், என் கைகளைப் பற்றிக்கொண்ட கௌரி, என்னை உற்றுப்பார்த்துக்கொண்டே வந்தாள். அவள் கண்கள் என் கண்களில் எதையோ தேடின. 

"டென்ஷன்னா எங்கிட்ட சொல்லமாட்டீங்களா? அதிர்ச்சின்னு டாக்டர் சொல்றாரே, அப்படி என்ன நடந்தது?"

"அட, அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. இந்த டாக்டருங்களே இப்படித்தான். பணம் பிடுங்குவதற்காக ஏதாவது சொல்வார்கள். நீ ஒண்ணும் கவலப்படாதே."

வீடிற்கு வந்தவுடன் சிறிது நேரம் தூங்கிவிட்டேன். எழுந்தவுடன் கவலைகள் மறந்து புத்துணர்வோடு இருந்தேன். டீ குடித்தால் நன்றாயிருக்கும் என தோன்றியது. கௌரியைக் காணவில்லை. வெளியில் சென்று பார்த்தேன். கிணற்றடியில் ஆனந்திடம் அவள் கவலைகளை சொல்லிக்கொண்டிருந்தாள். 

என்னைப் பார்த்தவுடன் ஆனந்த்,

"வாங்க சார். இப்போ எப்படியிருக்கீங்க? உங்க மனைவி ரொம்ப கவலையோட இருக்காங்க."

"அவ எப்பவுமே இப்படித்தான் சார். தேவையில்லாம கவலைப்படுவா."

"அவங்க திருப்திக்காக ஒரு முறை ஸ்பஷலிஸ்ட் டாக்டரை பார்க்கலாமே?"

"அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல சார். நம்ம வசதிக்கு அதெல்லாம் சரிப்படாது."

"என்னங்க சார், இப்படி சொல்றீங்க? காசு தேவைன்னா சொல்லுங்க. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம். உடம்பு தானே முக்கியம்."

நான் மெதுவாக சிரித்துக்கொண்டே, "தேவையில்லை சார். அவங்க பயமுறுத்தலுக்கெல்லாம் நாம ஓட முடியுமா? பாத்துக்கலாம். கௌரி, வாம்மா. டீ போட்டுக்கொடு."

என் வீட்டுப்பக்கம் திரும்பும்போது ஏதோ ஒரு நெருடல். நான் பார்த்த அல்லது பார்க்கத்தவறிய ஒன்று. எங்கே!

தலையை சற்றே திருப்பி, கண்களின் ஓரப்பார்வையால் பார்த்தேன். ஆம்! சன்னலின் ஓரத்தில் தெரிந்த அந்தப் பெரிய இரண்டு விழிகள். பெண்ணின் கண்கள் பேசும் மொழியினால், எனக்கு சொன்ன வார்த்தைகள், 

"அன்பனே, பார். சூழ்ந்திருக்கும் காம மேகங்களைப் பார். அந்தக் காமத்தின் வெம்மை உனக்கு உறுத்தவில்லையா? அதோ, அங்கே, கிணற்றடியில் நான் உனக்கு விரித்திருக்கும் வலையினைப் பார். பார்க்காதது போல் போகாதே! அந்த நடிப்பெல்லாம் எங்களுக்கு தான் கை வந்த கலை. உன்னால் முடியாது. வா. வந்துவிடு. நீ செய்ய வேண்டியதை செய்துவிடு. தப்பிக்க முயலாதே. நான் உனக்குள் உள்ளேன் என்பதை மறவாதே!"

ஓ. பெண்களின் கண்களால் ஒரு ஜென்மத்தின் கதையை ஒரு நொடியில் சொல்லிவிட முடிகிறது. வேண்டாம். எனது கண்களை திருப்பிவிட்டு வீடிற்குள் நுழைந்தேன். படுக்கையிலே படுத்தேன். 

தேநீர் கொண்டுவந்த கௌரி பதறிப்போனாள். "என்னங்க? என்ன ஆச்சு? ஏதாவது பண்ணுதா?"

"ஒண்ணுமில்ல கௌரி. டீ வேண்டாம். நீ போ."

"இப்போதானே கேட்டீங்க?"

எரிச்சலில் சிறிய கோபத்தில் கத்திவிட்டேன். "வேண்டாம்னு சொல்றேன்ல!"

கௌரியின் முகம் மாறிவிட்டது. நான் அவ்வாறு அவளிடம் கத்தியது இல்லை. முதலில் வெளிறிப்போன அவள் முகம் பிறகு சிவக்கத் தொடங்கியது. என் கோபத்தை புரிந்து கொண்ட அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

என்ன முட்டாள்தனம். கௌரி எனக்கு கிடைத்த வரம். அவளை திட்டிவிட்டேனே என்று உள்ளுக்குள் அழத்தொடங்கினேன். இரவு எவ்வாறோ கழிந்து விட்டது. அவள் எவ்வளவு நேரம் தூங்கினாள் என்பது எனக்குத் தெரியாது.

இன்று காலை கௌரிதான் என்னை எழுப்பினாள். "ஐய்யோ! என்னம்மா இவ்ளோ நேரமாயிடுச்சே! ஆஃபிசிக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சே" என்றேன்.

"நீங்க ஆஃபிசுக்கு போக வேண்டாம். வீட்டுல ரெஸ்ட்  எடுங்க"

எனக்கும் அது சரியென்றே பட்டது.

"என்னங்க, இட்லி செஞ்சிருக்கேன். மூடி இருக்குது பாருங்க. போட்டு சாப்பிடுங்க. நான் பையனை ஸ்கூலில் விட்டிட்டு வந்துடுரேன்."

"சரிம்மா. நீ போயிட்டு வா."

பல் விளக்கிவிட்டு, முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தேன். சாப்பிட பிடிக்கவில்லை. கிணற்றடியில் வந்து நின்று கொண்டு, அண்ணாந்து மரத்திலிருந்த காக்கைகளை பார்த்து கொண்டு நின்றேன். 'காக்கைகளுக்கு என்ன கவலை. ஒவ்வொரு நாளும் உணவு மட்டும் கிடத்து விட்டால் போதும். நம்மைப் போன்றா? நமக்கு உணவு மட்டுமா பிரச்சினை? ஆயிரத்தெட்டு தொல்லைகள். அதுவும் என் வாழ்க்கையிலோ? ஆயிரம் போதாது போலும்.'

எண்ண ஓட்டங்களில் மூழ்கியிருந்தவன், காற்றில் மிதந்து வந்த மல்லிகை மணத்தை நுணற முதலில் தவறினாலும் இரு நொடிகளில் என் நாசி எனக்கு தெரியப்படுத்தியது. மல்லிகை வாசம், என் அருகில்!

திரும்பியவன் அவளைக் கண்டேன். மேனகா. மூன்று அல்லது நாங்கு அடிகள்தான் எங்களுக்குள் இடைவெளி. என் கைகளில் இரத்தம் கூடுதலாக பாயத்தொடங்கியது.

"உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன்."

"என்ன சொல்றீங்க?"

"நான் உங்களையும் பார்த்தேன்."

"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..."

"இங்க வேணாம். வீட்டுக்குள்ள போயிடலாம்."

இதயம் படபடக்க அவள் பின்னே சென்றேன்.

வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமையலறை. இந்த அமைப்பில்தான் அங்குள்ள அனைத்து வீடுகளும். 

வரவேற்பறையில் நுழைந்தவுடன் அங்கிருந்த ஒரு நாற்காலியை காட்டி மேனகா, "இங்க உக்காருங்க" என்று சொன்னாள்.

"பரவாயில்லை. சொல்லுங்க" என்றேன்.

"உக்காருங்க சார். அவர் வர கொஞ்சம் நேரமாகும்"

அந்த நொடியிலிருந்தே என் மனதிலும், உடலிலும் இனம் புரியாத மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. ரத்த ஓட்டம் அதிகமானது. எண்ணங்கள் அதி வேகமாக சுழலத்தொடங்கின.

நான் நினைத்தேன். 'இல்லை. இவள் அதைப் பற்றி பேசக்கூடாது. நான் ஒழுக்கமானவன். எனக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. இதெல்லாம் வெளியே தெரிந்தால் சந்தி சிரித்துவிடும். அதை நான் எப்படி சகிக்க முடியும்?'

மேனகா என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். என் செவிகளில் எதுவும் விழவில்லை. அவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் வார்த்தைகளை விட அவளின் கண்களே அதிகம் பேசின. அந்த கண்கள் எனக்கு அறிவித்த காமத்தின் வெளிப்பாடுகள், விவரிப்புகள்... இதை விடவா வார்த்தைகள் உணர்த்த முடியும்?

அப்போது அவள் சொன்னது காதிலும் கேட்டது.

"நான் உங்க கிட்ட ரொம்ப நாளா பேசணும்னு பாத்துக்கிட்டுருந்தேன். நான் ஒரு பெண். இதை எப்படி வெளிப்படைய்யா சொல்றதுன்னு குழப்பம் வேற. இன்னிக்கு அவரும் இல்ல. நீங்களும் வீட்டில் இருந்தீங்க. அதான்..."

ஒரு அடி முன்னே வந்தவள், தலையை குனிந்து கொண்டு, "நீங்க என்ன சொல்றீங்க? இதை எப்படி ரகசியமாகவே வெச்சுக்க..."

அதற்கு மேல் என் காதில் மௌனமே நிரம்பியது. சீ... எப்பேற்பட்டவள் நீ...என்னிடமே சொல்கிறாயா? என் கௌரிக்கு தெரிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும்?

மெதுவாக இசை ஒலிக்க தொடங்கியது. இனிமையான இசை. இந்த உலகின் கேவலங்களை காதில் கேட்காமல் செய்யும் இசை. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த அது ஒலியைக் கூட்டியது. 

என் மனதில் எங்கோ ஓரிடத்தில் 'வேண்டாம்' என்று கெஞ்சினாலும் அந்த எண்ணம் ஓரிரு நொடிகளில் காணாமல் போனது.

அவள் என் முகத்தில் வந்திருந்த மாற்றத்தை பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க எனக்கு வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போனது. 

அப்போதுதான் அண்ணாந்து என் முகத்தை பார்த்த அவள், என்  முகத்தில் தெரிந்திருக்கும் வெறுப்பையும், கோபத்தையும், மிருகத்தை போன்ற வெறியையும் உணர்ந்தாள். 

என் பற்களின் ஊடே வார்த்தைகளை கோபத்தில் பாம்பை போன்று சீறினேன். 

'ஏய், தரங்கெட்டவளே...என்னிடம் இப்படி பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என்னை என்னவென்று நினைத்தாய்? உன்னை போல நினைத்தாயோ? என்ன செய்கிறேன், பார்.'

இதுவரை மெலிதாக இருந்த இசை இப்போது என் காதுகள் செவிடாகும் போல உரக்க ஒலித்தது. அதிலும் கூட்டாக இசைக்கப்பட்ட வயலின் வாத்தியங்களின் ஓசை எனக்கு சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லியது.

'இவள் சிக்கிவிட்டாள். உன் உண்மையை பார்த்து விட்டாள். கொன்றுவிடு.'

அதற்குள் மேனகா ஒரு அடி பின் வாங்கியது போலிருந்தது. முன்னே தாவி இடது கையால் அவள் கழுத்தைப் பிடித்தேன். இரு கைகளால் என் இடது கையை பிடித்தவள், அந்த பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள். அப்படியே அவளை தள்ளிக்கொண்டு சமயலறைக்குள் வந்துவிட்டேன். சங்கு கழுத்தாம்! தோல்தான் மெலிது. ஆனால் உள்ளிருக்கும் வார்த்தைகள்?

திமிறியவளை வலது கையால் ஓங்கி அறைந்தேன். வேளியே விழுந்த திரவம் அவள் எச்சிலா அல்லது ரத்தமா? 

கீழே விழாமல் இருக்க அவள் கைகள் ஏதோ நீச்சல் அடிப்பது போல் அலைந்தன. 

'இல்லை கண்ணே! நீ மூழ்கப் போகிறாய். கேடு கெட்ட அசிங்கங்களும் உன்னோடு மூழ்கட்டும்!

அவ்வளவுதான். இசை என்னை செவிடாக்கியது. அப்போது என் கண்ணில் அங்கிருந்த கத்தி தெரிந்தது. வலது கையால் கத்தியை எடுத்தேன். பாதி அணைத்தாற் போல் அவளைப் பிடித்து கத்தியில் அவளின் பொன்னிற வயிற்றில் குத்தினேன். இல்லை...இல்லை...குத்து சரியாக விழவில்லை. வயிற்றை உரசிக் கொண்டு போய்விட்டது போலும். அவள் தலையை மேலே உயர்த்தி என்னை பார்க்குமாறு செய்தேன். 

கத்துவாள் என்று நினைத்தேன். அவள் கத்தவில்லை. அந்த பெரிய விழிகளால் என்னை ஏக்கத்துடன் பார்த்தாள். 

"இந்த சமயத்திலும் ஏக்கமாடி உனக்கு" அவள் காதில் கிசுகிசுத்தவாறே, இம்முறை சரியாக அவள் நடுவயிற்றில் ஓங்கி குத்தினேன். குத்தியபின் அவ்ள் கண்களை பார்த்த போது அது ஏக்க பார்வை அல்ல, எதையோ, எங்கோ இழந்த பார்வையாகவும் எனக்கு பட்டது. ஆனால் எனக்கு இரக்கம் சிறிது கூட வரவில்லை. 

அவள் சரிந்து கீழே விழுந்தாள். அவள் அணிந்திருந்த வெளிர் மஞ்சள் நிற புடவை கொஞ்சம் கொஞ்சமாக சிகப்பாக மாறத்தொடங்கியது. அழுக்கு சிகப்பான ரத்தம் சிறிய குளமாக தேங்க ஆரம்பித்தது. இரு கைகைளையும் விரித்து விழுந்து கிடந்த மேனகாவிடம் எந்த அசைவுமில்லை. அவள் இறந்துவிட்டாள்!

நான் கொலை செய்துவிட்டேன். என்ன ஒரு குரூரமான கொலை!! என் கண்களின் முன்னே ஆயிரம் மின்னல்கள் பளிச்சிட்டன. வெறி தணியத்தொடங்கியது. இசையின் ஒலி அடங்க அடங்க நான் சுயநினைவுக்கு வந்தேன்.

பயத்தால் நடுங்கியவன் அதுவும் புரியாமல் எங்கள் வீட்டுக்குள் ஓடி வந்தேன். வீட்டினுள் இருந்த என் கௌரி, "எங்க போயிறிந்தீங்க..." என்று சொல்லி முடிப்பதற்குள் என் நிலையை புரிந்து கொண்டவள் என்னங்க ஆச்சு என்று கூறியபடியே என் பின்னே ஓடி வந்தவள் நான் படுக்கையில் விழுவதைப் பார்த்து பதறிவிட்டாள். 

"கொலை...கொலை...ஆ..."

"என்னங்க சொல்றீங்க?"

"நான் கொலை பண்ணிட்டேன், கௌரி." 

"என்னங்க...என்னங்க..இங்க பாருங்க..."

"நான் கொலை..."

என்னை கட்டி அணைத்தவள், "பதறாம என்னன்னு சொல்லுங்க. நீங்க அப்படியெல்லாம் பண்ணமாட்டீங்க..."

அவளின் அணைப்பில் ஆசுவாசமடைந்தவன் அழுது கொண்டே நடந்ததை எடுத்துரைத்தேன். 

"அவ்வளவுதானா! எப்பவும் போல இதுவும் கனவாக இருக்கும்.:

"இல்ல கௌரி... இது கனவு இல்லை. நல்லாத் தெரியும்.."

"சரி. நீங்க இப்படியே படுத்திருங்க. நான் போய் பாத்துட்டு வரேன். எங்கேயும் போகாதீங்க."

அவள் இதை நம்பவில்லை என்று எனக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் அதை உண்மையிலேயே செய்துவிட்டேன் என்பதில் எனக்கு எந்த குழப்பமுமில்லை.

பத்து நிமிடமா, அரை மணி நேரமா..எனக்கு தெரியவில்லை. திரும்பி வந்த கௌரியின் முகம் பேயறைந்த சாயலில் இருந்தது. வெளிறிப் போயிருந்தாள்.

"என்னங்க, இப்படி ஒரு தப்பை பண்ணிட்டீங்களே!நான் என்ன செய்வேன்."

கதறி அழ முயற்சித்தவள் சுதாரித்துக்கொண்டு, "நீங்க உடனே வெளிய போயிடுங்க. இப்போ வெளிய யாருமில்ல. கவலைப்படாதீங்க. போயிட்டு ரெண்டு இல்ல மூணு மணி நேரம் கழிச்சு வாங்க. நீங்க இப்போ இங்க இல்லன்னு எல்லோரும் நினைக்கணும். ஆஃபிசிலிருந்து வர மாதிரி வாங்க. போங்க. சீக்கிரம்."

அவளின் திட்டம் எனக்கு புரிந்தது. கொலை நடந்த நேரத்தில் நான் இங்கில்லை. எப்போதும் போல் அலுவலகம் போயிருக்கிறேன். 

வாரி சுருட்டிக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் வெளியே ஓடிவிட்டேன். எங்கே போவது என்று தெரியாமல் ஏதோ பேருந்தி ஏறி ஏதோ இடத்தில் இறங்கி அங்கிருந்த பூங்காவில், மர நிழலில் படுத்தவன் அப்படியே உறங்கிவிட்டேன்.

******************


ரா. பாரத்ராம்.
21/05/2021

No comments:

Post a Comment