அது
ஒரு அழகான காடு. மிருகங்களும்,
பறவைகளும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. காட்டிற்கு மகாராஜாவான சிங்கம்
நல்ல முறையாக ஆண்டு வந்தது.
அக்காட்டிலே, “நரி தந்திரன்” என்பவன் வசித்து வந்தான்.
தந்திரத்தாலேயே மற்றவர்களை ஏமாற்றி வாழ்க்கையை ஓட்டினான். அவனுக்கு இரு நண்பர்கள்; ஒருவர் பெயர் “கரடி முழுச் சோம்பேறி”, மற்றொருவன் “ஓநாய்
பாட்டுக்காரன்”. இவர்களில் “கரடி முழு சோம்பேறி” நரிக்கு நெருங்கிய நண்பன். வேலை
செய்யாமலேயே தின்று தூங்கி வழிபவன், “ஓநாய் பாட்டுக்காரன்”
நல்லவன். அவனுக்கு பாட்டு பாடுவதென்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் வயிறு
நிறைந்துவிட்டாலோ, கேட்கவே வேண்டாம்;
காடு முழுவதும் அவன் பாட்டு எதிரொலிக்கும்.
ஒரு
நாள் காலைப் பொழுது அருமையாக இருந்தது. யாரை ஏமாற்றலாம் எனத் திரிந்த நரிக்குக்
கண்ணில் பட்டது ஒரு பெரிய தேன்கூடு. தேனீக்கள் கூட்டங்கூட்டமாய், சுறுசுறுப்பாய் தேனை சேகரிக்கும் வேலையை
செய்துகொண்டிருந்தன. தேன் கூட்டைப் பார்த்த நரிக்கோ வாயில் எச்சில் ஊறியது. எப்படியாவது
தேனைக் குடித்திட்ட வேண்டும் என முடிவு செய்தது. ஆனால் தேன் கூடு
உயரத்திலிருந்தது. நரிக்கு எட்டாது. என்ன செய்வது? “நரி
தந்திரனுக்கு” ஒரு திட்டம் தோன்றியது.
முதலில்
அது “கரடி முழுச்சோம்பேறி” வீட்டிற்குப் போனது. எப்போதும்போல் சோம்பேறி தூங்கி
வழிந்து, கனவில் மிதந்து கொண்டிருந்தது.
“கரடியாரே, எழுந்திருங்கள். உங்கள் காலைப் பசிக்கு
அருமையான உணவு கண்டுப்பிடித்து விட்டேன்” என நரி குரலெழுப்பியது.
தூக்கம்
கலைந்த கரடி, “அப்படியா? எங்கே? ரொம்ப வேலையாயிருக்குமோ?” என்றது.
“ஒரு
வேலையுமில்லை. என்னுடன் ஓடி வாருங்கள்.”
நரி
தந்திரன் கரடியாரை அழைத்துச் சென்று தேன் கூட்டைக் காண்பித்தது.
கரடியாரோ, “ம்... அருமையான தேன் கூடுதான்! ஆனால்
தேனீக்கள் சுற்றுகின்றனவே! அவை கொட்டி விடுமே!” என்றது.
“அந்தக்
கவலையே உமக்கு வேண்டாம். நான் அதற்கும் வழி செய்கிறேன். நீர் இங்கேயே ஒளிந்து
கொண்டிரும்” எனக் கூறி விட்டு நரி “ஓநாய் பாட்டுக்காரன்” வீட்டிற்கு விரைந்தது.
“பாட்டுக்காரரே, சுகமா?”
“வாரும்
தந்திரரே! நான் நலம். இன்று என்ன பாடுவது என்பதைப் பற்றி யோசித்துக்
கொண்டிருக்கின்றேன். சுதியும்,
ஜதியும் இணைந்து வரவேண்டுமே என்பதுதான் யோசனை.”
“ஓ, அதை விடும். இன்று உம்முடைய பாட்டைக் கேட்க
ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது” என்றது நரி.
ஓநாய்க்கு
ஆச்சரியம். இதுவரை அது கூட்டத்தின் முன் பாடியதேயில்லை.
“அப்படியா, யார் அவர்கள்?”
“வேறு
யாருமில்லை. என் நண்பர்களான தேனீக் கூட்டம்தான். வாரும். பாட்டுக் கச்சேரி சபைக்கு
கூட்டிக்கொண்டு போகின்றேன்.”
ஓநாயும்
மிகுந்த மகிழ்ச்சியுடன் நரியைப் பின் தொடர்ந்தது. நரி ஓநாயை ஒரு பெரிய பாறைக்குப்
பின்னால் அழைத்துச் சென்றது. அப்பாறையின் மீது அமர்ந்து பார்த்தால் காட்டின் ஒரு
பெரிய சரிவு கண்ணுக்குத் தெரியும்.
“வா, என்னருமை ஓநாயே... இங்கேயே அமர்ந்திரு.
நான் ஓடிப்போய் உன் பாட்டைக் கேட்க ஏங்கியிருக்கும் தேனீக் கூட்டத்தை இங்கே கூட்டி
வருவேன்.”
ஓநாய்
மேடையில் அமர்ந்து கொண்டு குரலை சரிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நரி ஓடோடி
தேன் கூடு இருக்கும் மரத்தருகில் சென்றது.
“காலை
வணக்கம் தேனீக்களே... அருமையான காலைப் பொழுது!” என்று வணக்கம் சொன்னது நரி.
தேனீக்கள்
மொத்தமாக பதில் முகமன் கூறின – “காலை வணக்கம் நரியாரே! எங்களுக்கு வேலை அதிகம்.
நாங்கள் உழைக்க வேண்டும். உழைப்போம் உழைப்போம்” என்றன.
“நீங்கள்
சொல்வது சரி. ஆனால் உங்களுக்கு சற்று ஓய்வு தேவையோ? நல்ல பாட்டுக்கள் கேட்க விருப்பமோ? சற்று நேர
ஓய்வும், பாட்டும் உங்களை மேலும் உற்சாகப்படுத்துமே!
உங்களுக்காக பாட ஓநாயார் விரும்புகின்றார். அவர் குரலை வேறு யார்தான் கேட்பார் - உங்களைப்
போன்ற நல்லவர்களும், உழைப்பாளிகளையும் தவிர.”
தேனீக்கள்
ஓநாய்க்காக பரிதாபப்பட்டன. “அப்படியே செய்வோம். கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போம்.
கொஞ்சம் பாட்டுக் கேட்போம். வாருங்கள் போவோம்!”
தேனீக்கள்
நரி சொன்ன இடத்திற்கு கூட்டமாய் பறந்து சென்றன.
தேனீக்கள்
அங்கிருந்து சென்றதும், நரி அவசர
அவசரமாய் கரடியை வெளியே வருமாறு அழைத்தது. “வாருங்கள்,
இதுதான் சமயம். தேன் கூட்டைப் பிரிப்போம். தேனைக் குடிப்போம்” என்றது.
கரடியும்
வெளியே வந்து, தேன் கூட்டை
மரத்திலிருந்து இறக்க முயன்றது. அந்தோ பாவம். கூட்டிற்குள் ராணீ தேனி
அமர்ந்திருந்தது. சற்றே தலையை வெளியே நீட்டி, ஆச்சரியப்
பார்வையுடன் கரடியையும், நரியையும் பார்த்தது. கூட்டைப்
பிரிக்க முயல்கிறார்கள் என்பது புரிந்தவுடன் அதற்கு கோபம் வந்தது. “என்ன செய்ய
நினைக்கிறீர்கள்?” எனக் கோபத்துடன் கேட்டது.
ராணீ
தேனீயின் நீண்ட கொடுக்கைப் பார்த்தவுடன் நரிக்கு நடுக்கம் வந்துவிட்டது. அதை
வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஹீ, ஹீ, ஒன்றுமில்லை. சும்மாதான். கொஞ்சம் தேனை ருசி
பார்க்கலாம் என்று...” என இளித்தது.
ராணீ
தேனீக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. “என்ன? நாங்கள் பாடுபட்டு சேர்த்த தேனையா? ஒவ்வொரு மலராகச்
சென்று, துளித்துளியாக சேர்த்த தேனையா?
எப்படி இதை எடுக்க உங்களுக்கு துணிவு வரலாம்? எங்கள்
கொடுக்குகளை மறந்துவிட்டீர்களா? என் கூட்டத்தை எங்கே
துரத்திவிட்டீர்கள்?”
“ஹீ, ஹீ, ஓநாய் அது
பாடுவதை தேனீக்கள் கேட்க விரும்புகிறது எனப் பொய் சொல்லி அனுப்பிவிட்டோம்...”
“மிகவும்
மோசம். மிகவும் மோசம். ஒருமுறை மன்னிக்கிறேன். மற்றொருமுறை இதுபோல் செய்யாதீர்கள்”
என சொல்லிவிட்டு, பெரும் கொடுக்கை ஆட்டியபடியே
ராணீ கூட்டினுள் சென்றுவிட்டது.
நரியும், கரடியும் தங்கள் செய்கைக்காக வெட்கப்பட்டன.
இனிமேல் வேலை செய்தே சாப்பிடுவதென்று முடிவு செய்துவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டன.
இதே
நேரத்தில் பாட்டுக் கச்சேரியை ரசித்து விட்டு கூட்டுக்கு திரும்பி வந்த தேனீக்களுக்கு
ராணீ தேனி நடந்ததைக் கூறியது. தேனீக்கள் ஏமாந்துவிட்டதை நினைத்து வருந்தினாலும், ராணீ தேனீக்கு ஒரு கோரிக்கை வைத்தன. அதாவது, பாட்டுக்கார ஓநாயின் கச்சேரி மிகவும் நன்றாயிருந்தது, அந்தப் பாட்டுக்காரனுக்கு கொஞ்சம் தேன் கொடுத்தால் குரல் இன்னமும் இனிக்கும்
என்றன. ராணீயும் சம்மதித்தது.
கச்சேரி
முடித்த களைப்பு இருந்தாலும் ஓநாய் மிகுந்த மனநிறைவுடன் இருந்தது. இன்றுதான் அதனுடைய
முதல் கச்சேரி அரங்கேறியது என்ற மகிழ்ச்சிதான் காரணம். அப்போது அதன் வீட்டிற்கு வந்த
சிறு தேனீக்கூட்டம் கொஞ்சம் தேனைக் கொண்டு வந்தன. இனிமேல், தினமும் ஒரு துளி தேனை சுவைத்து வந்தால் குரல்
நன்கு மேம்படும் என்றும் தெரிவித்தன.. அவற்றிற்கு நன்றி கூறிய ஓநாய் அவ்வாறே நடந்து
கொள்வதாய் உறுதிகூறியது.
திறமையை
வளர்த்துக்கொள்ள தினமும் உழைத்த அந்த ஓநாய் அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல பாட்டுக்காரனென்று
புகழ் பெற்றுவிட்டது.
No comments:
Post a Comment